Wednesday, February 19, 2014

காவல் கோட்டமும் அரவானும் !!!!!!!!!!!!!!

காவல் கோட்டம் - சு வெங்கடேசன்.
தமிழினி பதிப்பகம்.


       "மாரத்தான் ஓட்டம்" என்று கேள்விப்பட்டிருப்பீர்கள், பார்த்திருப்பீர்கள். மாரத்தான் வாசிப்பு என்று ஒன்று இருந்தால், என் அனுபவத்தில் "காவல் கோட்டம்" வாசித்த முயற்சிதான் அது. 1050 பக்கங்கள் மிகச்சிறிய எழுத்துக்கள். ஆனால் எந்த இடத்திலும் தொய்வில்லாமல், சோர்வடையச் செய்யாமல் நல்ல ஒரு புத்தகத்தை வாசித்த ஒரு அனுபவம் கிடைத்தது.
       மாரத்தான் வாசிப்பு என்பதைவிட, இந்தப்புத்தகத்தை "மாரத்தான் எழுத்து" என்றுதான் சொல்ல வேண்டும். சு.வெங்கடேசன் அவர்கள் பல மைல்கள் பயணம் செய்து, பல நூறுபேரைச் சந்தித்து, பல்வேறு புத்தகங்களை ஆய்வு செய்து சுமார் 10 வருடங்கள் செலவழித்து எழுதிய புத்தகம் இது. 2011-ன் "சாகித்ய அக்காடெமி" பரிசை இப்புத்தகம் வென்றது என்பது ஒன்றும் ஆச்சரியம் இல்லை. முற்றிலுமாக மதுரையின் வரலாறு சார்ந்தது என்பது இதனைப் படிக்க இன்னொரு காரணம். இரண்டு பெரும் பகுதிகளாகப் பிரிக்கப்பட்ட இந்தப் புத்தகம் முதல் பகுதியில் 'முடியரசு' என்ற தலைப்பிலும் 2ஆவது பகுதி "குடிமக்கள்" என்ற தலைப்பிலும் எழுதப்பட்டிருக்கிறது.
       மாலிக்காபூரின் படையெடுப்போடும் கற்பழிப்புகளோடும் ஆரம்பிக்கிறது இப்புத்தகம். அதன்பின் மதுரைப் பகுதியில் முஸ்லிம் மதம் இயல்பாகப் பரவியது என்பது ச்சு முகமது, விருமாயி ஆத்தா மகள் பாத்திமா என்று சொல்லும்போது விளங்குகிறது.
       அதன் பின்னர் விஜயநகர நிறுவனர் புக்கரின் மகன் குமாரகம்பனின் நாயக்கர் படைகள், ஜீனாகான் ஆட்சியை முறியடித்து, பாண்டியர் ஆட்சியை மீண்டும் நிறுவியது. நாயக்கர் படையின் முன்னே விரைந்து வரும் வேட்டை நாய்களின் படை ஆச்சரியமூட்டியது. 500 ஆண்டுகள் பூட்டிக்கிடந்த மீனாட்சியம்மன் ஆலயமும் திறக்கப்படுகிறது.
       நடுவில் விஜயநகர கதை வருகிறது. மதுரை நாயக்க மன்னர்கள் அங்கிருந்து வந்தவர்கள் ஆதலால் அதன் பின்னனியை அறிவது அவசியமாகிறது. விஜய நகரப் பேரரசின் பெருமைமிகு மன்னர் கிருஷ்ணதேவராயர், ஹரிஹர புக்கர் வழியில் வந்தவரல்ல. அவர்கள் ஆட்சியின் கீழ் சந்திரகிரியை ஆண்ட ஆளுனர் சாளுவ நரசிம்மனின் வழி வந்த புது வம்சமான துளுவ வம்சத்தைச் சேர்ந்தவர்.
       இடையில் மதுரையைப் பிடித்துக் கொண்ட வீரசோழனை விரட்டி தளபதி நாகம நாயக்கரின் படை வந்து வீரசோழனை அப்புறப்படுத்தி தானே அரசாளத்துவங்கினார். அதனைக் கேள்விப்பட்டு ஆத்திரமடையும் கிருஷ்ணதேவராயர், நாகம நாயக்கரின் மகனும் தனக்கு தாம்பூலம் மடித்துக்கொடுக்கும் மெய்க்காப்பாளனான விஸ்வநாதன் தலைமையில் படையை அனுப்புகிறார். மகன் தந்தையை முறியடித்து சிறைப்படுத்தி திருப்பி அனுப்பி ராயரிடம் மன்னிப்பு பெற்றுத்தருகிறான். இந்த விஸ்வநாதனே 'அரவ நாடு' என்று அவர்கள் அழைத்த மதுரைக்கு ஆளுநராக்கப்பட்டார். இவர் வழித்தோன்றல்களே தொடர்ந்து மதுரையை ஆண்டனர். கிருஷ்ணதேவராயருக்குப் பின்னால் விஜய நகரப்பேரரசு நலியத்துவங்க, நாயக்க ஆளுநர்களே அரசர்களாக தொடர்ந்தனர். அவர்கள்  வழி வந்தவர்தான் திருமலை நாயக்கர். தொடர்ந்து பல நாயக்க மன்னர்களுக்கு அமைச்சராக இருந்த அரியநாத முதலிதான் பாளையங்களை உருவாக்கியவர்.  
       ராணி மங்கம்மாள், முத்துவீரப்பன், விஜயரங்க சொக்க நாதன் ஆகியோரோடு நாயக்க ஆட்சி முடிவு பெற்று, ஆற்காடு நவாப் ஆட்சி வருகிறது. பின்னர் வந்த மருத நாயகன் யூசுப்கான் ஆட்சியும் முடிந்து ஆங்கிலேயர் ஆட்சி அமைகிறது.
       இதற்கிடையில் சிறந்த பாளையக்காரர்களான கட்டப்பொம்மன், ஊமைத்துரை, மருதுபாண்டியர் ஆகியோர் ஒழிக்கப்பட்டனர்.
       பிரிட்டிஷ் ஆட்சியின் சமயம் கலெக்டராக இருந்த பிளாக்பர்ன் (Black burn) முடிவின்படி விஸ்வனாத நாயக்கர் கட்டிய மதுரைக்கோட்டை இடித்தொழிக்கப் படுகிறது. இடிப்பதில் பெரும் பங்கு கொண்ட மாரட் மற்றும் பெருமாள் மேஸ்திரி போன்றோர் பெயர்களில் தெருக்கள் உருவாகின. மதுரையில் போலிஸ்படை எப்படி உருவாக்கப் பட்டது என்பதைப்படிக்கும் போது வியப்பு மேலிடுகிறது.
       நாவலின் அடுத்த பகுதியில் கள்ளர் தொழிலிலும், காவல் தொழிலிலும் கொடிகட்டிப் பறந்த தாதனூர் பகுதியைப்பற்றி  வருகிறது .களவையும் காவலையும் ஒழிக்க தொடர்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகளும் அதனால் இறந்துபோன அப்பாவி மக்களையும் பற்றி மிகவும்  விரிவாக கொடுக்கப்பட்டிருக்கிறது.தாதனூரின் களவு ஒழிக்கப்படுவதோடு நாவல் முற்றுப்பெறுகிறது.
       இப்பொழுது நீங்களும் ஒத்துக்கொள்வீர்கள் இது எவ்வளவு பெரிய இமாலய முயற்சியென்பதை. இந்த மாதிரி வரலாறு அல்லது நடந்த நிகழ்சிகளை விவரித்து எடுக்கப்படும் படங்களை டாக்குஃபிக்சன் ( Docufiction) என்பார்கள் . இதனையும் அப்படியே   அழைக்கலாம்.
Add caption
 திரைப்பட இயக்குனரான வசந்தபாலன் இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டில் வெளிவந்த “அரவான்” திரைப்படம் இப்புதினத்தை அடிப்படைக் கதையாகக் கொண்டது.
சு.வெங்கடேசன்
       தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும் விளங்கும் சு.வெங்கடேசன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். அரசியல் வாழ்விலும் உள்ள இவர் மார்க்சியக் கம்யூனிஸ்டு கட்சியின் முழுநேர ஊழியராக உள்ளார். 2006 ஆம் ஆண்டு தமிழக சட்டசபைத் தேர்தலில் திருப்பரங்குன்றம் சட்டசபைத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். தேர்தலில் தோற்றாலும் நாவலில் ஜெயித்திருக்கிறார்.
       வரலாற்றில் ஆர்வமுள்ளவர், குறிப்பாக மதுரைக்காரர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகம் இது.
Old Madurai

       

10 comments:

  1. அருமை. do you have any online site where we can buy this book from our area?

    ReplyDelete
    Replies
    1. https://www.nhm.in/shop/Kizhakku or you can borrow from me Murugesh.

      Delete
  2. வாசிக்க வேண்டும் எனும் ஆவலைத் தூண்டும் விமர்சனம்... நன்றி... சு.வெங்கடேசன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள் உரித்தாகுக திண்டுக்கல் தனபாலன்.

      Delete
  3. அம்மாம் பெரிய நூலைப் பற்றி இம்மாம் சுருக்கமாய் சொன்னாலும் நச் என்றிருக்கிறது !
    த ம 3

    ReplyDelete
  4. உங்கள் கருத்தும்தான். .நன்றிகள் Bagawanjee KA

    ReplyDelete
  5. அருமையான வாசிப்பனுவம். பகிர்ந்து கொண்டதற்க் நன்றி. நானும் படிக்க நினைத்திருக்கும் புத்தகம்.

    ReplyDelete
  6. நன்றி வெங்கட் நாகராஜ்.

    ReplyDelete