Thursday, February 13, 2014

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் !!!!!!!!!!!!!!!!!


வேலண்டைன் தின சிறப்புப்பதிவு
            “கிண்கிணி கினி கினி” “கிண் கிணி  கினி கினி”. யாரது காலங்காத்தால இசை எழுப்புவது என்று யோசிக்கையில், ஊப்ஸ் அப்போதுதான் ஞாபகம் வந்தது, அது என் மனைவி வாங்கிக் கொடுத்த புதிய சாம்சங் கேலக்சி நோட் 3-யில் வந்த அலாரம் எழுப்பிய நாதம். அட அதுக்குள்ள மணி அஞ்சாயிருச்சா?. ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்த என் மனைவியை எழுப்பாமல், அலுங்காமல் குலுங்காமல் எழுந்து, அவள் போர்வையை சரிசெய்து விட்டு கட்டிலைவிட்டு கீழிறங்கினேன். அன்றைய நாளின் வேலைகள் ஞாபகம் வர, ஒரு பெருமூச்சுடன் காலை ஜெபத்தை சுருக்கமாக முடித்துக் கொண்டு எழுந்து சமையலறைக்குச் சென்றேன்.
        ஸ்டவ்வைப் பற்றவைத்துவிட்டு, நீரைச்சுடவைத்து ஃபோல்ஜெர்ஸ் (Folgers)காப்பித்தூளை போட்டேன். 2% பாலை எடுத்து அடுத்த பர்னரில் வைத்துப் பதமாக காய்ச்சி, காப்பி தயாரித்து "வெட்ஜ்வுட் " (Wedge wood) கப்பில் ஊற்றி சிறிது ஆறவிட்டு (தமான சூட்டில்தான் அவள் குடிப்பாள்) குவிந்து கிடந்த பாத்திரங்களை மடமடவென்று விளக்கிப்போட்டேன்.
        ஃபிரிட்ஜில் இருந்த மாவை எடுத்து வெளியே வைத்து, சிறிது நீர் விட்டுக்கரைத்தேன். ஓ இந்த ஒரு நேரத்திற்குத்தான் வரும், சாயந்திரம் வந்து மாவாட்டி வைக்க வேண்டும் என்று நினைத்து, கேலக்சியில் ஒரு அலாரம் வைத்துக்கொண்டேன்.
        கீழே அவனில் இருந்த இட்லி குக்கரை எடுத்து சிறிது அலசிவிட்டு ஒரே சைசில் வருவது போல் இட்லியை எடுத்து ஊற்றி ஸ்டவ்வில் வைத்தேன். என் மனைவிக்கு இட்லி நல்ல வடிவாக ஓரங்கள் சிதையாமல் இருக்க வேண்டும். அதற்குள் மணி ஆறாகிவிட, ஐயோ அவளை எழுப்ப வேண்டுமே என நினைத்து கப்பில் இருந்த காப்பியின் சூடும் இனிப்பும் சரியாக இருக்கிறதா மறுபடியும் செக்செய்து விட்டு உள்ளே கொண்டுபோனேன்.
        "அம்மா, கண்ணம்மா கொஞ்சம் எழுந்திருக்கியா? மணி ஆறாயிருச்சு."
        நெட்டி முறித்த அவள், ", அம்மா" என்றாள் நடுங்கிப்போன நான்," ஐயோ என்னம்மா என்னாச்சு" என்று பதறினேன் " கெண்டைக்கால் லேசாக  வலிக்கிறது", என்றாள்.
        இதோ, என்று காப்பியைக் கையில் கொடுத்துவிட்டு, ஜண்டு பாமுடன் உள்ளே வந்து, காலை மடியில் வாங்கி சூடு பறக்க ஜண்டு பாமைத் தடவிவிட்டேன். போதும் போதுமென்ற சொல்லுமளவுக்கு கெண்டைக்காலை நீவிவிட்டுக் கொண்டிருக்கும்போது, இட்லிக்குக்கர் விசிலடித்துக் கூப்பிட்டது. “இப்போது வலி தேவலையா?”, என்று கேட்டேன். "காப்பி எப்படியிருந்தது", என்று தயங்கித் தயங்கி கேட்டபோது, “அதான் நல்லா இல்லேன்னா சொல்லி இருப்பேனே, என்று எரிந்து விழுந்தாள். ஆஹா அப்ப நல்லாருக்குன்னு தான் அர்த்தம், அப்பாடா.
காப்பி குடித்தபின்,”இன்னிக்கு என்ன டிபன்?”, என்றபடி மனைவி மெதுவாக எழ, நான் கைத்தாங்கலாக அவளை கீழிறக்கினேன். அப்போதுதான் ஞாபகம் வந்தது, ஐயையோ பிரஸ்ஸில் பேஸ்ட் வைக்க மறந்துட்டேன், பெரிய கோவக்காரி ஆச்சே என்று நினைத்து சடாரென்று பாத்ரூமில் நுழைத்து நீம் பேஸ்ட்டைப் பிதுக்கி, ஓரல்-B​​​​ பிரஸ்ஸில் வைத்துக்கொடுத்தேன்.
                அவள் பாத்ரூமுக்குள் நுழைய, நான் கிச்சனுக்கு ஓடினேன். இட்லிக்கு இன்னொரு விசில் வரட்டும் என்று எண்ணி, தக்காளியை எடுத்து நறுக்கி வைத்துவிட்டு, சிறிது பெரிய வெங்காயத்தையும் நறுக்கி, வாணலியில் எண்ணையிட்டு தளதளவென்று வதக்கி, கொஞ்சம் கடுகு போட்டு நெய்யில் தாளித்து இறக்கினேன். “தக்காளி கொத்சு” மணமணத்தது. முந்தின நாள் வாங்கிய தேங்காயை உடைத்துப்பார்த்தால் அது சரியில்லை. உடனே ஃப்ரீசரைத் திறந்து அவசரத்துக்கு வாங்கி வைத்திருந்த ஃப்ரோஜன் தேங்காய்த்துருவலை எடுத்து பொட்டுக்கடலை சேர்த்து, 2 பச்சை மிளகாய் உப்பு சேர்த்து மிக்சியில் வைத்து அரைத்து, பின்னர் தாளித்து வைத்தேன். ஃப்ரோஜன் தேங்காய்க்கு என்ன சொல்லப்போகிறாளோ? இட்லிக்கு  என் மனைவிக்கு கண்டிப்பாய் ரெண்டு சட்னி வேண்டும் இல்லாவிட்டால் அவளுக்கு கெட்ட கோபம் வந்துவிடும்.
        அற்குள் உள்ளிருந்து சத்தம் கேட்க, விரைவாக பெட்ரூமுக்கு ஓடினேன். "என்னாச்சு ஒனக்கு இன்னிக்கு"என்றாள். "என்ன என்ன" என்று பதறினேன்.“ஏன் என்னோட டிரஸ்யை எடுத்து வைக்கல? லாண்டிரியும் பண்ணல”, என்றாள்.
        ஐயையோ நேத்து ரெண்டு டிவி சீரியலில் உட்கார்ந்ததுல லாண்டரியையும் அவள் டிரெஸ்ஸை அயர்ன் பண்ணவும் மறந்துட்டேன் என அப்பதான் ஞாபகம் வந்தது.
        “நீங்க டிபன் சாப்பிடறதுக்குள்ள ரெடி பண்ணிடறேன்”, என்று கெஞ்சும் குரலில் சொல்லிவிட்டு 4 இட்லியையும் ரெண்டு சட்னியையும் வைத்து ராயல் டவ்ல்டன் (Royal Dautlon)தட்டில் வைத்து கொடுத்தேன் (அவள் சாப்பிடுவதற்கு தனித்தட்டு உண்டு)
        உள்ளே வந்து மடமடவென்று அயர்ன் செய்யும் போது தான் ஞாபகம் வந்தது, ஐயையோ குடிக்க தண்ணீர் வைக்கவில்லை என்று. ஓடிப்போய் தண்ணீரில் ரெண்டு ஐஸ் கட்டிகளைப்போட்டு கொடுத்துவிட்டு, இன்னொரு வாட்டர்போர்டு (Waterford) கிறிஸ்டல் கிளாசில் ஆரஞ்சு ஜூசை வைத்துவிட்டு, நிமிர்ந்த போது, உள்ளே ஏதோ கருகும் வாடை அடித்தது.
        ஐயையோ இன்னிக்கு வீடு ரெண்டாகப்போகுது என்று உள்ளே ஓடினால் அவளுக்கு மிகவும் பிடித்த Forever 21 ஜீன்ஸ் ஓட்டையாகி, புகை வந்து கொண்டிருந்தது.
)))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))       
எரியுது ஜீன்ஸ் எரியுது, என்று பக்கத்தில் படுத்திருந்த மனைவி சத்தம் போட்டாள்.
        "ஏய் ரூத் என்னாச்சு, இன்னுமா எந்திரிக்கல", என்றேன்.  நான் படுத்தபடி கவனித்துக் கொண்டிருக்க, என் மனைவி ஜெபித்துவிட்டு, சமையலறைக்குப்போனாள். கனவு கண்டிருப்பாள் போல. அங்கே இட்லித்தட்டை எடுக்கும் சத்தம் கேட்டது
   பின்குறிப்பு:
        நம் மனைவிகளுக்கு கனவில்தான் இத்தனை சுகபோகம் அமைகிறது. நமக்காக வேலையும் செய்துவிட்டு வீட்டிலும் வந்து சமைத்து 24/7 365 நாளும் லீவு எடுக்காமல் வேலை செய்யும் நம் மனைவிகளை நேசிப்போம், காதலிப்போம்.

வேலண்டைன் தின வாழ்த்துக்கள்+++++++

18 comments:

  1. நல்லா சொன்னீர் ஐயா. நல்லவேளை என் ஆத்துக்காரி இந்த ப்ளாக் பக்கம் வருவதில்லை. இல்லாவிட்டால் உங்கள் நட்பும் எழுத்தும் எனக்கு "சொந்த செலவில் சூனியம்" வைத்து கொண்ட கடை ஆகி இருக்கும். அது சரி. அந்த "Forever 21 Jeans" மனைவி போடுவாங்கோன்னு சொன்னது கற்பனை தானே....

    ReplyDelete
    Replies
    1. "Forever 21 Jeans" அது உண்மைதான்
      அங்குதான் எல்லா சைசும் கிடைக்குமே ..

      Delete
  2. கனவுலதான் முடிப்பேண்டு பாதியிலே முடிவுபண்ணிட்டேன் எனக்கு தெரியுமுல்ல..

    ReplyDelete
    Replies
    1. பின்ன இதை எல்லாம் நனவில் செய்தால் நம்ம கதி?

      Delete
  3. பின்குறிப்பிற்கு ஒரு ஜே...! உண்மை... வீட்டு நிர்வாகம் என்பது பெரிய வேலை...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. தங்களுடைய வருகைக்கும் ஓட்டுக்கும் நன்றி திண்டுக்கல் தனபாலன்.

      Delete
  4. உங்கள் வீட்டில் வேண்டுமானாலும் இதெல்லாம் கனவாக இருக்கலாம். ஆனால் மதுரைத்தமிழன் வீட்டில் இதெல்லாம் நிஜம்

    ReplyDelete
    Replies
    1. பொய் சொன்னாலும் பொருந்தச்சொல்லுங்கோ மதுரைத்தமிழன்,

      Delete

  5. இதை படித்ததும் எனக்கு அழுகை அழுகையா வருது...உங்களையெல்லாம் பார்த்தா பொறாமையா இருக்கு ஹும்ம்ம்ம்ம்ம்ம்

    ReplyDelete
    Replies

    1. இங்குட்டு வாங்க, ஒன்னா சேர்ந்து ஒப்பாரி வைப்போம் .

      Delete
  6. //2% பாலை எடுத்து அடுத்த பர்னரில் வைத்துப் பதமாக காய்ச்சி, காப்பி தயாரித்து "///

    ஓ இன்னும் உங்க வீட்டுல பிரமாணள் ஸ்டைல் காப்பிதானா?

    இங்க நான் எல்லாம் Fat free மில்க்தான் அதுலையும் 80 சதவிகிதம் தண்ணி 20 சதவிகிதம் மில்க். நான் மாத்திரை சாப்பிடும் பொதுமட்டும்தான் தண்ணிர் மிதி நேரம் எல்லாம் இந்த தண்ணி காபிதான் அதுவும் இரவு 1 மணியாணாலும் குஇத்துவிட்டுதான் தூங்க செல்வேன்

    ReplyDelete
    Replies
    1. செத்த எங்காத்துப்பக்கம் வரேளா, காபி போட்டுத்தரேன்,பேஷா இருக்கும்.

      Delete
  7. வணக்கம்
    நீங்கள் சொல்வது உண்மைதான்.... மனைவி அமைவது இறைவன் கொடுத்த வரம்.... பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    தங்களுக்கு இனிய காதலர் தின வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தங்களுடைய வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ரூபன்.

      Delete
  8. மனைவிகளின் தியாகத்தை எழுதி எழுதி புகழ்ந்து தள்ளுவதும் கூட ஒரு வகையான தந்திரம்தான் ஆல்ஃபி சார்.

    ReplyDelete
    Replies
    1. தந்திரமும் மந்திரமும் தானே நம்திறம் , பாம்பின் கால் பாம்பறியும் .
      தங்களுடைய வருகைக்கு நன்றி பிரபா.

      Delete
  9. நீங்கள் இப்படி கனவு கண்டீர்களோ என நினைத்தேன்..... கனவு கண்டது அவங்களா! :))))

    த.ம. +1

    ReplyDelete
  10. நாங்கெல்லாம் கனவுல கூட அப்படியெல்லாம் நினைப்பது இல்லை. தங்களுடைய வருகைக்கு நன்றி வெங்கட் நாகராஜ்.

    ReplyDelete