Thursday, May 31, 2018

விடுதலைப்புலிகள் செய்த தவறுகள்!


Image result for கொரில்லா by Shoba sakthi
படித்ததில் பிடித்தது
கொரில்லா by ஷோபா சக்தி
கருப்புப் பிரதிகள் சென்னை வெளியீடு
          இந்தியாவுக்கு வரும்போதெல்லாம் புத்தகக் கடைக்கு செல்வது எனது வழக்கமென்பது உங்களுக்குத் தெரியும். கடந்த முறை மதுரை சென்ற போது நண்பர் பேராசிரியர் பிரபாகர் அவர்கள் கூடலழகர் பெருமாள் கோவிலின் சொர்க்க வாசலுக்கு எதிரில் இருக்கும் நற்றிணை புக் சென்டருக்கு அழைத்துச் சென்றார். அங்கு வாங்கிய பல புத்தகங்களுள் ஷோபா சக்தி எழுதிய கொரில்லா என்ற புத்தகம் என்னைக் கவர்ந்தது. அதன் பெயர், கொரில்லா, அதன் ஆசிரியர், அந்தப் புத்தகத்தின் பாக்கெட் சைஸ் அமைப்பு இவை மட்டுமல்லாமல் என்னைப் படிக்கத் தூண்டிய இன்னொரு முக்கிய காரணம் உண்டு. புத்தகத்தின் பின் அட்டையில் சாரு நிவேதிதா எழுதியிருந்த கமெண்ட்.
          பொதுவாக புத்தகத்தைப் பற்றிய நல்ல பதிப்புரைகள் விமர்ச்சனங்களிலிருந்து ஓரிரு வரிகளை எடுத்து பின் பக்கம் போடுவார்கள். ஆனால் சாரு நிவேதிதா எழுதியிருந்தது ஒரு எதிர்மறை கமெண்ட். அவர் எழுதியிருந்தது, "ஈழத்தமிழ் இயக்கத்தை கொச்சைப் படுத்தும் எழுத்து" என்று . இதனை வெளிப்படையாக ஷோபா சக்தி போட்டிருந்தது ஆச்சரியத்தை அளித்தது. அதே சமயத்தில் வாசிக்கவும் தூண்டியது
Image result for கொரில்லா by Shoba sakthi
ஷோபா சக்தி
             பிரான்சு நாட்டில் வாழும் “ஷோபா சக்தி” இலங்கைத் தமிழர். புலம்பெயர்ந்த எழுத்தாளர்களில் குறிப்பிடத்தகுந்தவர். ஷோபா சக்தியின் இயற்பெயர், “அந்தோணிதாசன் யேசுதாசன்”. வேலனைத்தீவு அருகில் உள்ள அல்லைப்பிடி இவரது சொந்த ஊர். தன்னுடைய பதினாறு வயதிலேயே விடுதலைப்புலிகள் இயக்கத்தில் உதவியாளராகச் சேர்ந்தவர். 1984ல்  முழுநேரப் போராளியானார். அவர்களின் கலை இலக்கியக் குழுவில் அநேக வீதி நாடகங்களை நடத்தியிருக்கிறார். 1986ல் விடுதலைப்புலிகளின் செயல்பாடுகள் பிடிக்காமல் வெளியே வந்தாலும் பல கஷ்டங்களை தண்டனைகளை அனுபவித்தார். 1988ல் தனது 19ஆவது வயதில் ஹாங்காங் வந்து அதன்பின் தாய்லாந்து சென்று பின் அங்கிருந்து ஃபிரான்ஸ் சென்று அங்கு அவருக்குப் புகலிடம் கிடைத்தது.
          கொரில்லா, சனதரும போதினி, கறுப்பு, தேசத்துரோகி போன்ற பல புத்தகங்களை எழுதியிருக்கிறார். அவற்றுள் சில ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்ற.
          அது தவிர செங்கடல், தீபன், ரூபா, போன்ற பல திரைப்படங்களிலும்  நடித்திருக்கிறார். “தீபன்” திரைப்படம் நெட்ஃபிலிக்சில் உள்ளது.  இவரைச் சுற்றிச் சர்ச்சைகள் எழுந்தாலும் தனக்கென்று இவர் ஒரு  தனியிடத்தைப் பிடித்திருக்கிறார் என்பதில் சந்தேகமில்லை.
            “கொரில்லா” சோபா சக்தி எழுதிய முதல் நாவல். இது கிட்டத்தட்ட இவரின் சொந்தக்கதை.'கொரில்லா' என்ற புதினம் ஒரு கற்பனை அதாவது Fiction இரு குறிப்பிடப்பட்டியிருக்கிறது. ஆனாலும் இதனை ஆட்டோ ஃபிக்சன்  என்று சொல்லலாம். தன் வாழ்க்கையில் நடந்த சில நிகழ்வுகளைத் தொகுத்து அப்படியே வகுத்துக் கொடுத்திருக்கிறார் என்றே நினைக்கிறேன். ஆனாலும் இதனை ஒரு வரலாற்றுப் பதிவாக எடுத்துக் கொள்ள முடியாதென்றே நினைக்கிறேன்.
          இந்தக் கதையின் முக்கிய அம்சமாக, ஷோபா இதனை யாழ்ப்பாணத்தமிழில் எழுதியிருக்கிறார். நாம் பேசும் தமிழிலிருந்து இது முற்றிலும் வேறுபட்டது. முன்பே நான் இதைச் சொல்லியிருக்கிறேன். '' என்ற எழுத்துக்கு '' என்ற எழுத்தைப் பயன்படுத்துகிறார்கள். உதாரணத்திற்கு சில வார்த்தைகளை கீழே கொடுத்திருக்கிறேன். இது ஆங்கில வார்த்தைகளுக்கு மட்டும் என நினைக்கிறேன்.
1.   டவுண் - ரவுண்
2.   டிப்ஸ் - ரிப்ஸ்
          அதோடு இன்னொரு வித்தியாசம்  என்னவென்றால் நமக்குத் தெரிந்தவரை ஒவ்வொரு அதிகாரத்திற்கும் எண் இருக்கும், ஒவ்வொரு பக்கத்திற்கும் எண் கொடுத்திருப்பது இயல்பு. ஆனால் இந்தப் புத்தகத்தில் ஒவ்வொரு பத்திக்கும் தொடர் என் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஹோபா சக்தி எழுதி நான் படிக்கும் முதல் புத்தகம் இது. அவரின் மற்ற நாவல்களில் இதை எப்படி  அமைத்திருக்கிறார் என்று தெரியவில்லை.
          இந்தக் கதையின் சாராம்சமாக எனக்குத் தெரிந்தது என்னவென்றால் ஒரு இயக்கத்தில் சேர்ந்து உண்மையான தமிழ் உணர்வுடன் விடுதலை எழுச்சியுடன் சேரும் ஒரு போராளி என்னவெல்லாம் கஷ்டத்தை அனுபவிக்கிறான் என்று. பல தகவல்கள் எனக்கு ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் அளித்தன . இந்தப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் சில முரணான விடயங்களை கீழே தருகிறேன்.
1)   ஒரே நோக்கத்துடன் செயல்படும் வெவ்வேறு இயக்கங்கள் ஒருவரை ஒருவர் எதிரிகளாக நினைப்பது.
2)   விலை மதிப்பில்லாத அடிமட்ட தொண்டர்களின் உயிர்களை துச்சமாக மதிப்பது.
3)   மிதவாதத் தலைவர்களை எதிரிகளாகப் பாவித்து கொன்று களைதல்.
4)   இயக்கத்திற்கு பண பொருள் செய்வதால் அவர்கள் செய்யும் அநியாயங்களை கண்டு கொள்ளாமல் விடுதல்.
5)   இயக்கத்திற்கு பொருள் சேர்க்கும் விதத்தில் சமூகவிரோத செயல்களில் ஈடுபடுவது.
6)   இயக்கத்தில் சேரும் ஈடுபடும் உறுப்பினர்களின் குடும்பம் எந்தப் பாதுகாப்பில்லாமல் இருப்பது.
7)   இயக்கத்திலிருந்து வெளியேற அல்லது தப்பிக்க நினைக்கும் உறுப்பினர்களை கொன்றுவிடுவது.
8)   இயக்கத்தின் தலைவர்கள் பெயரைப் பயன்படுத்தி சமூக விரோத செயல்களுக்குத் துணை போவது.
9)   இயக்கத்தின் அடிமட்டத் தொண்டர்களை சுயமரியாதை கொடுக்காமல் அடிமைகளைப் போல் நடத்துவது.
10)               தப்பித்து வெளிநாடு போனவர்களை அங்கேயே சென்று கொல்வது.
11)               சரியான விசாரணை இல்லாமல் உறுப்பினர்களுக்கு கடும் தண்டனை தருவது அல்லது கொல்வது.
12)               இயக்கத்தில் சேரும்  தொண்டர்களுக்கு வரலாற்று ரீதியான வகுப்புகளை எடுக்காமல் வெறும் உடல் ரீதியான மற்றும் ஆயுதப் பயிற்சி மட்டுமே கொடுப்பது. 
          என்ன எழுதி என்ன செய்வது? யாரைத்தான் குற்றம் சொல்வது? ஒரு பெரிய தலைமுறை அழிந்து போனது. இதில் வாழ்ந்தவர் சிலர் வீழ்ந்தவர் பலர். இது ஒரு முடிவில்லாத் தொடர்கதை.
- முற்றும்

           

4 comments:

  1. ஷோபா சக்தியின் கொரில்லா நூலறிமுகம் சிறப்பாக அமைந்துள்ளது. அவசியம் படிக்க வேண்டிய நூலாகக் குறித்துக் கொண்டேன்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சி முத்துச்சாமி .

      Delete
  2. படிக்கவேண்டும் போலவே....

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் ஸ்ரீராம் மிகவும் வித்தியாசமான புத்தகம்

      Delete