Monday, December 19, 2016

எம்ஜியாரை வீழ்த்திய கலைவாணர் !!!!!!!!!


படித்ததில் பிடித்தது:- நான் ஏன் பிறந்தேன் பகுதி 3

இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்.

http://paradesiatnewyork.blogspot.com/2016/11/blog-post.html


[34.jpg]

கலைவாணர் என்று மரியாதையுடன் அழைக்கப்பட்ட என்.எஸ் கிருஷ்ணன் அவர்களிடம் மிகுந்த மரியாதையும் நட்பும் வைத்திருந்தார் எம்ஜியார் என்பது புத்தகத்தின் பல பகுதிகளில் வெளிப்படுகிறது. எம்ஜியார், அவருடன் தன் மூத்த சகோதரன் போல் பழகினார். ஆனால் அவர் மீது நெருக்கமான
 நட்பு கொள்ளும்முன் அவரை வெறுத்து அவரோடு சண்டை  போட்ட அனுபவத்தையும் எம்ஜியார் விளக்குகிறார்.

கலைவாணர் ஒரு இடத்தில் இருந்தால் அந்த இடத்தில் கிண்டலும் கேலியுமாக கலகலப்புக்குப் பஞ்சம் இருக்காதாம். எனவே அவரைச் சுற்றி எப்பொழுதும் பலர் இருப்பர். ஒரு சமயம்  படப்பிடிப்பு சமயத்தில் வழக்கம் போல் அந்த இடத்தை தன் நகைச்சுவை உணர்வால் சிரிப்பை வரவழைத்துக் கொண்டு இருந்தார். அந்த சமயம் எம்ஜியார் குஸ்திப் பயிற்சி செய்துகொண்டிருக்க அதனைப் பார்த்தும் கலைவாணர் ஏதோ கிண்டல் செய்ய எல்லோரும் கொல்லென்று சிரித்துவிட்டனர்.

அதனைப் பார்த்து அவமானமும் கோபமும் அடைந்த எம்ஜியார் கலைவாணரைப் பார்த்து "என்னை கேலி செய்கிறீர்களே என்னுடன் குஸ்திக்கு வரமுடியுமா? என்று கேட்க, அங்கிருந்த அனைவரும் திடுக்கிட்டு விட்டனர்.

உடற்பயிற்சியாலும், குத்துச் சண்டை, குஸ்தி, கத்திச் சண்டை,குதிரையேற்றம்  ஆகிய பலவித கலைகளில் நன்கு பயிற்சி பெற்ற இளைஞரான எம்ஜியார், ஒல்லியான தேகத்துடன் ஒடிசலா இருந்த என் எஸ் கே வை சண்டைக்கு கூப்பிட்டது கூட இருந்தவர்களைக் கோபப்படுத்தியது.

Image result for MGR and NS Krishnan

கலைவாணராவது எம்ஜியாரை எதிர்கொள்வதாவது என்று நினைத்து, கூட இருந்தவர்கள் சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால் யாரும் எதிர்பாராமல் கலைவாணர் அந்த சவாலை ஏற்றுக் கொள்கிறார். ஆச்சரியப்பட்ட அனைவரும் கலைவாணர் நிச்சயம் தோற்றுவிடுவார். படாத இடத்தில் அடி பட்டுவிட்டால் என்ன செய்வது என்று பதறி அவரைத் தடுக்க முயன்றனர். 

ஆனால் கலைவாணர் அதை எதையும் பொருட்படுத்தாது, குஸ்தி மைதானத்துக்கு நகர்ந்தார். அதனைப் பார்த்த எம்ஜியார் "என்னையா கேலி செய்தாய், உனக்கு நல்ல பாடம்கற்றுக் கொடுப்பேன்" என்று மனதில் நினைத்துக்கொண்டு கோதாவில் இறங்கினார்.

கலைவாணரின் ஒல்லி உருவம் மெதுவாக எந்தப் பதட்டமும் இல்லாமல் மைதானத்தில் இறங்கி, எம்ஜியார் சற்றும் எதிர்பார்க்காதபடி பாய்ந்து எம்ஜியாரின் இரு தொடைகளையும் பிடித்து வாரி விட தன் பேலன்ஸை இழந்த எம்ஜியார் அப்படியே மைதானத்தில் விழுந்தார். கலைவாணர் சிரித்துக் கொண்டே எம்ஜியாருக்குக் கைகொடுத்து தூக்கிவிட்டார்.

கூட இருந்தவர்களுக்கு என்ன நடந்ததென்று புரிந்து கொள்ள கொஞ்சம் நேரமானது.

அதில் எம்ஜியார் பாடம் கற்றுக் கொண்டார். பார்வைக்கு பலமில்லாதவர்கள், எளியவர்கள் என்று ஏளனமாக நினைத்தால் நிச்சயம் தோல்விதான். அதோடு யாரையும் எளியவர் என்று நினைத்து எள்ளி நடையாடினால் முடிவு இப்படித்தான் இருக்கும்.

இதில் எம்ஜியார் விழுந்து தோற்றது எனக்கு ஆச்சரியமில்லை. ஆனால் அதனை தன் வாழ்க்கை சரிதத்தில் கொஞ்சம் கூட வெட்கப்படாமலும், மறைக்க வேண்டும் என்று எண்ணாமலும் அப்படியே எழுதியதுதான் ஆச்சரியம். எம்ஜியார் மறைந்தும் இன்னும் கூட ஆச்சரியப்படுத்துகிறவர்தான்.

அதன் பின்னர் கலைவாணர் எம்ஜியாருக்கு மிகவும் நெருக்கமானவர் ஆகிவிடுகிறார். பல நேரங்களில் அவருடைய ஆலோசனைகள் எம்ஜியாருக்கு உதவுகிறது.

அதுமட்டுமல்லாமல் கதர் உடுத்தி காந்திய வழியில் காங்கிரஸ் பேரியக்கத்திலிருந்த எம்ஜியாரை திசை திருப்பி திராவிட இயக்கத்தில் ஈடுபாட்டை ஏற்படுத்தியவரும் கலைவாணர்தான்.
Image result for MGR and NS Krishnan


 சுயமரியாதை இயக்கத்தை அறிமுகப்படுத்தியதோடு விடுதலை பத்திரிக்கையை படிக்கக் கொடுத்து பின் பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோரை அறிமுகப்படுத்தியவரும் அவரே.

இனி எம்ஜியாரின் சொந்த வரிகளில் கலைவாணரைப்பற்றி :

சக்கரம் வைத்த காலணிகளைக் கட்டிக்கொண்டு மாணவர்கள் சறுக்கி விளையாடுகின்றார்களே, இதை 'நவீன விக்கிரமாதித்தன்படத்தில் சக்கரக் காலணியைக் காலில் அணிந்து செய்து காட்டியவர் கலைவாணர் அவர்கள். எத்தனை முறை கீழே விழுந்திருப்பார்! முழங்காலில்தான் எத்தனை காயங்கள்?

கொட்டாங்கச்சி வீணையில் வாசிக்க வேண்டிய வேடமா? உடனே அதைப் பழகுவார்; புல்லாங்குழல் வாசிக்க வேண்டுமா, அவரால் ஒரு பாட்டாவது சரியாக வாசிக்க முடியும். ஆர்மோனியம் வாசிப்பார்; தபேலா, மிருதங்கம் வாசிப்பார். கஞ்சிரா? தெரியும். மோர்சிங்? அதையும் வாசிப்பார். வீண் பழி ஏற்று, சிறைச்சாலைக்குச் சென்று, வெளியே வரும்போது, கச்சேரி செய்யும் அளவிற்குச் சாதகம் செய்து, சங்கீத ஞானம் பெற்றிருந்தார் கலைவாணர் அவர்கள்.

குஸ்தியா? தெரியும். சடுகுடு விளையாட்டா? தெரியும். சிலம்பமா? தெரியும். நடனமா? தெரியும். கதை எழுத வேண்டுமா? எழுதுவார். உரையாடல்? அவருடைய பாத்திரங்கள் பெரும்பாலானவற்றுக்கு அவர்தான் உரையாடல், கதை எல்லாம்.

கவிஞர்கள் இவரை அச்சுறுத்த முடியாது. கொஞ்சம் தாமதமானால் போதும்... இலக்கண விதிகள் வழுவாமல் இவரே அழகான கவிதை புனைவார். இவருடைய பாடல்களெல்லாம் இவரே பாடியதுதான். இயக்குநர் இல்லாவிட்டாலும் கவலையில்லை. இவரே இயக்குநராகி வேலையை முடித்துவிடுவார்.

அறிவுப் பெரியவர்கள் யாராயினும் சரி; அவர் எந்த அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்று கவனிக்க மாட்டார். இவருடைய மரியாதை அவர்களுக்குத்தான் முதலில் கிடைக்கும்! தமிழ் மீது இவருக்கு இருந்த பக்தி (ஆமாம், பக்தியேதான்!) அளவிற்கடங்காதது!''

கலைவாணர் தன் தனித்திறமையால் புகழ்பெற்று இருந்தாலும் எல்லோரிடத்திலும் அன்பும் கனிவும் கொண்டும் விளங்கினார். அப்படிப்பட்டவர்கள் தான் நீண்ட நாட்கள் வாழ்வதில்லையே.

பின் குறிப்பு : இந்தியா போய் வந்து, உடனே இஸ்ரவேல் நாட்டிற்கு புனிதப்பயணம் முடித்து வந்ததால் பதிவுகளுக்கு நீண்ட இடை வெளி ஆகிப்போனது .இதோ உங்களை மீண்டும் சந்திக்க வந்து விட்டேன்.நீங்கள் மிஸ் பன்னீர்களோ என்னவோ, நான் உங்களை மிகவும் மிஸ் பண்ணேன். மிஸ் பண்ணேன் என்பது என் மிஸ்ஸஸ் மேல் சத்தியம் .அதற்குள் நாட்டிலும்  வீட்டிலும் நிறைய நல்லதும் கெட்டதும் நடந்து விட்டன . தொடர்ந்து பேசலாம் .நன்றி .


5 comments:

  1. ஆமாம். கண்டிப்பாக மிஸ்டரை மிஸ் செய்தோம் :)

    ReplyDelete
    Replies
    1. கொஞ்சம் விட்டால் ஆங்கிலத்திலேயும் கவிதை எழுதி அசத்துவீர்கள் போல தெரிகிறதே , நன்றி பாஸ்கர்.

      Delete
  2. நல்ல பாடத்தை கற்றுக் கொடுத்துள்ளார்...!

    ReplyDelete
  3. Welcome Back.
    Expecting another 25 of posts of Israel Visit like China Tour.

    ReplyDelete
    Replies
    1. Dear Allen, I was waiting for at least one person to express their interest.I will do it after " Ilangayil Paradesi"

      Delete