தமிழக தேர்தல் 2016 :பகுதி 2
கடந்த நான்கு முறைக்கு மேலாக, ஒவ்வொரு தேர்தலிலும் மாறி
மாறி,
"ஆட்சி செய்யும் அரசுக்கு " எதிரான
மனநிலையில் வாக்களிக்கும் மக்கள் (Ant incumbency) , டாஸ்மாக்கால்
சீரழிந்த குடும்பங்களின் சாபங்கள், சென்னையை மூழ்கடித்த
வெள்ளத்தின் போது அரசின் கையறு நிலை, மக்கள் நலப்
பணியாளர்கள், அரசு ஊழியர்கள், மாற்றுத்
திறனாளிகள் ஆகியோரின் உரிமைக் குரல்களை கண்டுகொள்ளாத அலட்சிய மனோபாவம், பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தீர்ப்பு, ஜெயில் வாசம்,
குமாரசுவாமியின் கணக்குக் குளறுபடி, செயல்படாத
அடிமை அமைச்சர்கள், சரிந்து வரும் உடல் நிலை என
ஜெயலலிதாவுக்கு எதிரான எத்தனையோ காரணிகள் இருந்தும் மயிரிழையில் தப்பித்து தனிப்
பலத்துடன் மீண்டும் ஆட்சியைப் பிடித்த தென்பது ஒரு ஆச்சரியப்படவைக்கும் இமாலய
சாதனைதான். வாழ்த்துக்கள்.
பலம்:
1.
திரைத்துறை மூலம்
அவருக்கு வந்த தனிப்பட்ட புகழ், வசதி
வாய்ப்புகள்.
2.
எம்ஜியார்
அவர்களின் அரசியல்வாரிசாக ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டவர்.
3.
எம்ஜியாரின் புகழ்,
அவர் கொடுத்த இரட்டை இலைச் சின்னம் ஆகியவை இன்னும் மங்காத நிலையில்
இருப்பது.
4.
அதிமுகவை அடுத்த
நிலைக்கு எடுத்துச் சென்ற திறமை.
5.
தனியே தன்னந்தனியே
நின்று நிலைத்து சமாளிக்கும் மன உறுதி.
6.
யாருக்கும்
தலைவணங்காத இரும்பு உள்ளம்.
7.
சட்டென அதிரடி
முடிவுகள் எடுத்து உடனே செயல்படுத்தக்
கூடிய தைரியம்.
8.
முழுக்கட்சியையும்
தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சாதனை.
9.
கருணாநிதி போன்ற
பெரிய சக்தியை எதிர்த்து பலமுறை வென்ற பராக்கிரமம்.
10.
தமிழ்,
ஆங்கிலம், ஹிந்தி, கன்னடம்,
தெலுங்கு போன்ற பன்மொழித் திறமை.
பலவீனங்கள்
:
1.
சுப்ரீம்
கோர்ட்டில் உள்ள வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு.
2.
ஆலோசனை கூற
யாருமில்லா நிலமை
3.
தவறான முடிவுகளை
சடுதியில் எடுத்துப் பின் மாற்றுவது.
4.
யாரும் எளிதில் நெருங்க
முடியா வண்ணம் இரும்புக் கோட்டைக்குள் காணாமல் போவது.
5.
யாரையும்
தன்னிச்சையாக செயல்படவிடாத, தன்மேல் உள்ள
அதிகாரகுவிப்பு.
6.
அதிமுகவில் அடுத்த
நிலைத் தலைவர்கள் இல்லாத நிலைமை, யாரையும்
நம்பமுடியாத நிலை.
7.
எந்தத் தலைவருடனோ
மத்திய அரசுடனோ ஒத்துழைக்காத விரோத மனப்போக்கு.
8.
திமுக என்ன
செய்தாலும் எதிர்க்கும் மனநிலை. உதாரணம் சட்டமன்றக் கட்டிடம்,
அண்ணா நூலகம் ஆகியவை.
9.
தளர்ந்து வரும்
உடல்நிலை.
10.
கூடவே இருக்கும்
சசிகலா குடும்பம்.
என்ன
செய்ய வேண்டும்?
1.
எந்த முடிவானாலும்
நிதானமாக யோசித்து முடிவெடுக்க வேண்டும். எடுத்துவிட்டு அடிக்கடி மாற்றுவது நல்ல
நிர்வாகத்தின் அடையாளம் அல்ல.
2.
வெறும் துதிபாடிகளை
ஒதுக்கி, இரண்டாம் கட்ட தலைவர்களை தேர்ந்தெடுத்து வளர்த்தெடுத்தல்.
3.
ஏராளமாகச்
சேர்ந்திருக்கும் தமிழ்நாட்டுக் கடனை அடைக்க முயற்சி எடுத்தல்.
4.
நாட்டு மக்களோ,
தலைவர்களோ தொழிலதிபர்களோ யாராக இருந்தாலும் எளிதில் சந்திக்கக்
கூடிய தலைவராக உருவெடுத்தல்.
5.
எதிர்க்கட்சிகளை
எதிரிக்கட்சியாக பார்க்காமலிருத்தல்.
6.
சட்டசபையில்
ஆரோக்கியமான விவாதத்திற்கு இடம் கொடுத்து, மக்கள் நலத் திட்டங்களை அமல்படுத்துதல்.
7.
அதிமுக ஜெயித்த
தொகுதிகள் மட்டுமின்றி மற்ற எல்லாத் தொகுதிகளிலும் முன்னேற்றப் பணிகளை
முடுக்கிவிடுதல்.
8.
நாட்டுக்கு இக்கட்டு
வரும் சூழ்நிலையில் எதிர்க்கட்சிகளை அழைத்து ஆலோசித்து முடிவெடுத்தல்.
9.
நதிநீர் இணைப்புத்
திட்டத்தை முதலில் மாநில அளவில் செயல்படுத்தி தமிழகத்தில்
மீண்டும் விவசாய ,பயிர்வளர்ச்சியை உறுதிப்படுத்தல்.
10.
மத்திய அரசோடும்,
அண்டை மாநிலங்களோடும் நட்பு பாராட்டி, தமிழகத்திற்கு
நன்மை பயத்தல்.
ஜெயலலிதாவிடம்
நல்ல மாற்றம் தெரிகிறது. கட்-அவுட்டுகள், இல்லாமல்,
காலில் விழுதல் இல்லாமல், புரட்சித் தலைவி
முழக்கம் இல்லாமல் பதவியேற்றது மிகவும் வரவேற்கத்தக்கது.
முதல்
நாளிலேயே,
500 டாஸ்மாக் கடைகளை அடைத்தது, திறந்திருக்கும்
நேரத்தைக் குறைத்தது, சிறுகுறு விவசாயிகளின் பயிர்க்கடன்
ரத்து ஆகியவை நல்ல ஆரம்ப அறிகுறிகள்.
இந்த
ஐந்துவருடங்கள் உங்கள் கையில். மீண்டுமொருமுறை
வருவீர்களா என்று தெரியாது. மக்களுக்கு நன்மைகள் செய்து மனதில்
மறக்கமுடியாத இடம்பிடிக்க நல்லதொரு வாய்ப்பு, செய்வீர்களா,
செய்வீர்களா.
முற்றும்.







