Thursday, January 28, 2021

பண்டிகைகள் காட்டும் உறவுகள் !!!

 நண்பர்களே ஏற்கனவே நான் அறிவித்தபடி கடந்த சனிக்கிழமை ஜனவரி 23அன்று , நியூ ஜெர்சியில் செயல்படும் தமிழ் அவை சார்பாக நடந்த கருத்தரங்கத்தில் அடியேன் கலந்து கொண்டு பண்டிகைகள் காட்டும் உறவுகள்  என்ற தலைப்பில் பேசினேன் .அதன் சினைப்பை கீழே கொடுத்திருக்கிறேன் .கேட்டு உங்கள் கருத்துகளை பின்னூட்டமிடுங்கள் .நன்றி .

                  https://www.facebook.com/103716554963097/videos/2489469564680351


சிறப்பு அழைப்பிதழ் 

அன்பார்ந்த நியூ யார்க் தமிழ்ச் சங்கத்தின் ஆதரவாளர்களே

 

வணக்கம்

 

நமது சங்கத்தின் பொன்விழாக் கொண்டாட்டங்களின் அங்கமாகதமிழர் திருநாளாம் பொங்கல் விழாவினைக் கொண்டாட இருக்கிறோம்

 

இவ்விழாவில்இளையோர் பங்குபெறும் ஆடல்பாடல்நகைச்சுவை நாடகம்இலக்கியக்குழு சார்பாக நடுவர் கவிமாமணி இலந்தை ராமசாமி அவர்கள் தலைமையில் பொங்கல் சிறப்பு பட்டிமன்றம், 

மகாகவி திரு ஈரோடு தமிழன்பன் அவர்களின் சிறப்புரை மற்றும் பல சுவையான நிகழ்வுகள் நடக்கவுள்ளன



நாள்சனிக்கிழமை ஜனவரி 30, 2021 காலை 10 மணி முதல் நண்பகல் 2 மணி வரை 

இணையம் வழியாக.(www.youtube.com/nytsponvizha)

 

Facebook è  https://facebook.com/newyorktamilsangam

 

இப்பொங்கல் கொண்டாட்ட நிகழ்வுகளைதாங்கள் தங்கள் உற்றார் உறவினர் மற்றும் நண்பர்களுடன் பகிர்ந்து கண்டுகளிக்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்

 

மேலும் விவரங்களுக்கு கீழே இணைக்கப்பட்டுள்ள அழைப்பிதழைக் காணவும்.

 

நன்றி

அன்புடன்,

ஆல்ஃபிரட் தியாகராஜன் 

தலைவர்

இலக்கியக்குழு 

நியூ யார்க் தமிழ்ச் சங்கம்

 

 



image.png



Monday, January 25, 2021

“ஆல்ஃபி என் நிலத்தைக்காணோம்”

பரதேசியின் வாகனங்கள் - பகுதி-4

இதன் முந்தைய பதிவைப்படிக்க இங்கே சுட்டவும்

https://paradesiatnewyork.blogspot.com/2021/01/blog-post_18.html



"சார் முதல்லயே சொல்லக் கூடாதா? போங்க போங்க”

“ஐயாவிடம் எதும் சொல்லாதீங்க"ஒரு சின்ன சல்யூட் அடித்து  வழியனுப்பினார். நீ வா என்ற ஒருமையும், தம்பி என்று விளித்தலும் மாறிப்போனதை கவனித்திருப்பீர்கள்.

அன்று நடந்ததை நஸீரிடம் சொன்னேன்.

 "முதல்ல உன் முகத்தை பாக்கியராஜ் மாதிரி வைப்பதை மாத்து. ஒரு கூலிங் கிளாஸ் வாங்கிக்க, நல்லா நிமிர்ந்து ஒரு கெத்தா வாப்பா யாரும் உன்னை ஓரங்கட்ட மாட்டாங்க."

"சார் டி.வி.எஸ் சேம்ப்புக்கு நீங்க சொல்றதெல்லாம் ரொம்பவே ஓவர். ஆமாம் உண்மையிலேயே யாராவது இப்படி பொய் சொன்னா தப்பித்தவறி போலீஸ் செக் பண்ணா என்ன ஆவது". 

 "அப்படி நடக்க வாய்ப்பே இல்லை. ஏன்னா போலீஸ்ல புரோட்டோ கால், ஹையரார்க்கி ரொம்ப முக்கியம். மேலதிகாரிங்க கீழே உள்ளவர்களை வாடா போடான்னு சொல்றதும், கெட்ட வார்த்தையில் திட்டறதும் ரொம்ப சாதாரணம். இது மாதிரி சின்னக்கேஸுகளுக்கு  அப்படிச் செக் பண்ண மாட்டாங்க. அதோடு அவங்களும் பொய்யோ உண்மையோ என்ற சந்தேகம் இருந்தாலும் ஒருவேளை உண்மையா இருந்தா என்ன செய்வதுன்னு நினைச்சுத்தான் சும்மா விட்டுருவாங்க. ஆனா அதுக்கும் மேல உன்ட்டதான் தப்பு இல்லையே. சும்மா ஏதாவது தேறுமாதான்னு தான் உன்னைப்பிடிக்கிறாங்க. அதனால நீ சொல்றத நம்பி உன்னைவிடறதத்தவிர வேறொன்றும் வழியில்லை அவர்களுக்கு"

நன்றாகப்புரிந்தது எனக்கு இது நடந்தது 88-90 களில் இப்போதும் இது ஒர்க் அவுட்டாகுமான்னு தெரியல அதனால இதெல்லாம் இப்போது டிரை பண்ணாதீங்க நண்பர்களே.

இப்படியே போய்க் கொண்டிருக்கும்போது , நான் வேலை பார்த்த இன்ட்டர் கிராப்ட்டின் பகுதியான ஸ்டிச் கிராப்ட்டின் டைரக்டர் சுசில் பெர்ஷாத் என்னைக் கூப்பிட்டிருந்தார். இந்த குடும்பத்தைப்பற்றி சிறிது சொல்லிவிடுகிறேன்.

 


 

இன்டர்கிராப்ட் மற்றும் ஸ்டிச்கிராப்ட் நிறுவனங்களின் முதலாளிகள் மல்ஹோத்ரா குடும்பத்தினர். இதன் தலைவர் ரவி மல்ஹோத்ரா. எப்பொழுதும் காட்டன் அல்லது லினன் துணியில் வெள்ளை பேண்டும் வெள்ளை சட்டையும் அணிவார். இவர் வருகிறார் என்றாலே தொழிற்சாலை முழுவதும் அமைதியாகிவிடும். பயமல்ல மரியாதை. இந்த மாபெரும் சாம்ராஜ்யத்தை கட்டியமைத்தவர் இவர். இவருடைய தம்பி ராஜேஸ் மல்ஹோத்ரா. இவர் கொஞ்சம் ஜாலி டைப். ரவி ஆரம்பித்த இன்னொரு நிறுவனத்தின் MD. இவர்களின் தலைமை அலுவலகம் தம்புச் செட்டி தெருவில் இருந்தது. ஆடை ஏற்றுமதி நிறுவனமான இதன் தொழிற்சாலைகளின் ஒரு யூனிட் தம்பிச்செட்டி தெருவிலும் 2 யூனிட்கள் பழைய பிராட்வேயின் அருகிலிருந்த மினர்வா  தியேட்டரின் அருகிலிருந்த டேவிட்சன் தெருவிலும், இன்னொரு பெரிய யூனிட் பாலவாக்கத்தில் இருந்தன. இதில் யூனிட் 1 மற்றும் யூனிட் 3க்கு நான் மனித வள அதிகாரி. இந்த இரண்டு இடத்திலும் எனக்கு அலுவலகம் உண்டு. ரவி மல்ஹோத்ரா ஒரு ரேஸ் பிரியர். இவரிடம் ரோல்ஸ் ராய்ஸ் முதற்கொண்டு பல கார்கள் இருந்தன. சென்னை சென்டாஃப்  சாலையிலிருக்கும் இவர்கள் வீட்டிற்கு நான் சென்றபோது நானே எண்ணிப்பார்த்ததில் சுமார் 30 கார்கள் வீட்டின் வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்தன. எப்போதாவது நானும் கார் வாங்குவேன்  என்று நினைத்துக்கொண்டேன் .

இவர்களின் செல்லத்தங்கையை மணந்தவர்தான் சுசில் பெர்ஷாத் அவரும் இதில் ஒரு இயக்குநர் . என்னுடைய நேர் முதலாளி. மிகவும் கோபக்காரர் ஆனால் மிகவும் நல்லவர்.

ஒரு நாள் டென்ஷனுடன் அலுவலகம் வந்தவர் என்னைக் கூப்பிட்டனுப்பினார்.

“ஆல்ஃபி என்  நிலத்தைக்காணோம்”

“என்ன சார் சொல்லறீங்க”

" நம் நிலத்தில் ஏதோ ஆக்கிரமிப்பு நடந்துள்ளது"

"நீங்கள் டெல்லிக்கு அல்லவா போயிருந்தீர்கள்"

"ஆமா டெல்லியிருந்து வரும் வழியில் பார்த்தேன்"

"ஏர்போர்ட்டிலிருந்து நேரே நிலத்திற்குப் போனீர்களா?"

"இல்லையப்பா பிளேனில் இருந்து பார்த்தேன்"

எனக்கு நம்பமுடியவில்லை. சிரிப்பாக வந்தது. அடக்கிக் கொண்டே கேட்டேன்.

விமானத்திலிருந்து பார்த்தால் எப்படி நம்ம நிலம் என்று தெரியும்?

ஆர் யு ஸ்யுர் ?”

"நூறு சதவீதம் நான் பார்த்தது உண்மை"

"சரி நான் என்ன செய்ய வேண்டும்"

"நீ உடனே போய்ப்பார் நாளைக்கே போய்ப்பார். காலையில் வீட்டுக்கு வந்து டாக்குமென்ட் காப்பியை வாங்கிக் கொள்"

திருப்பெரும்புதூரில் இருங்காட்டுக்கோட்டை ரேஸ் கோர்ஸ் அருகிலுள்ள வளர்புரம் என்ற கிராமத்தில் இருந்தது அந்த நிலம். எப்படிப் போய்க் கண்டுபிடிப்பது என்று திகைப்பாக இருந்தது. இருந்தாலும் முதலாளி சொல்லிவிட்டார் என்பதால், காலையில் கிளம்பி அவர்கள் வீட்டுக்குச் சென்று நிலப்பத்திரங்களின் நகலை வாங்கிக் கொண்டு என்னுடைய டி.வி.எஸ் சேம்பில் மெதுவாகக் கிளம்பிப் போய்சசேர்ந்தேன்.

வளர்புரம் கிராமத்தின் அதிகாரியைப் பார்த்த போது கர்ணத்தைப் பார்க்கச் சொன்னார். அவர் வீட்டைத் தேடிக் கண்டுபிடித்த போது உள்ளிருந்து ஆஜானு பாகனாக ஆறு அடி உயரத்தில் கருத்த உடலில் இடுப்பில் வெறும் வேட்டியுடன் ஒருவர் வந்தார். அறுபது வயதிருக்கும். கர்ணம் இருக்கிறாரா என்ற கேள்வியைக் கேட்டவுடன் விறுவிறுவென்று வெளியே வந்து மூலைக்கு போனார். எனக்கு ஒண்ணும் புரியவில்லை.

பிறகுதான் தெரிந்தது. அவர் வாயிலிருந்த வெற்றிலை எச்சிலைத்துப்புவதற்கு மூலைக்குச் சென்றார் என்று.

“வாங்க சார் நான்தான் கர்ணம்" என்றார். நான் எதிர்பார்க்கவே யில்லை. வந்த விவரத்தைச் சொன்னேன்.

அப்புறம் திண்ணையில் உட்கார்ந்துடாக்குமென்ட்டைப்  பார்த்தார்.

"அடேய் பரதேசி என்னடா பரதேசியின் வாகனங்கள்" னு தலைப்புப் போட்டுட்டு கதையை எங்கேயோ கொண்டுட்டு போற"

"அட மண்டு மகேந்திரா கொஞ்சம் பொறுமையாக் கேளு"

வெளியே போகும்போதாவது சட்டையைப் போடுவார்னு நினைச்சேன். ஆனா, ஒரு துண்டைத்தோளில் போட்டுட்டு வினோபாஜி மாதிரி டயர் செருப்பைப்போட்டுவிட்டு கர்ணம் கிளம்பினார். வண்டி எங்க நிறுத்தியிருக்கீங்கன்னு கேட்க நான் டி.வி.எஸ் சேம்ப்பை காண்பிக்கவும், “கார் கொண்டு வரலயான்னு”, கேட்டுட்டு விடுவிடுவென நடக்க ஆரம்பித்தார். அவர் பின்னால் நான் ஓடினேன் - தொடரும்.



Friday, January 22, 2021

சிறப்பு அழைப்பிதழ்

 அன்பு நண்பர்களே ,

நியூயார்க் தமிழ்ச்சங்கத்தின் இலக்கியக் குழுத்தலைவராக அடியேன்   தேர்ந்தெடுக்கப்பட்டு , வெள்ளி தோறும் இலக்கிய உலா நிகழ்ச்சிகளை நடத்திக்கொண்டிருக்கிறோம் .அந்த வரிசையில் இன்று மாலை ( சனவரி  22, 2021)கிழக்கு நேரம் ஒன்பது மணிக்கு முனைவர் மகா சுந்தர் அவர்கள் பேசுகிறார்.அதன் விவரங்களை கீழே காண்க .



அடுத்து , நாளை சனிக்கிழமை நியூ ஜெர்சியில் இயங்கும் தமிழ் அவை நடத்தும் கருத்தரங்கத்தில் அடியேன் கலந்து கொண்டு "பண்டிகைகள் காட்டும் உறவுகள்: என்ற தலைப்பில் பேசுகிறேன்.இது சனவரி 23 , 2021 கிழக்கு நேரம் காலை  10 மணிக்கு நடைபெறுகிறது .





இந்த இரண்டு நிகழ்வுகளிலும் கலந்து கொள்ளும்படி அன்பாய்  அழைக்கிறேன் .

நியூயார்க் தமிழ்ச்சங்க இலக்கிய  குழு நிகழ்வுகளில் நீங்கள் பங்கு பெற விரும்பினால் , என்னுடைய ஈமெய்லுக்கு தொடர்பு கொள்ளவும் 

alfred_rajsek@yahoo.com 

உங்கள் பரதேசி 



Monday, January 18, 2021

டி ஐ ஜி என் மாமா!

பரதேசியின் வாகனங்கள் பகுதி-3



                   இதன் முந்தைய பதிவைப்படிக்க இங்கே சுட்டவும்
https://paradesiatnewyork.blogspot.com/2021/01/blog-post.html

தொடர்ந்து இரண்டு நாள் மாட்டியதால், மூன்றாவது நாள் மிகுந்த டென்ஷனில் இருந்தேன். ஆனால் அன்றைய நாள் சிக்னல் இருந்ததால் யாரையும் பார்க்காமல் நேராக ஓட்டி வந்து விட்டேன். அடுத்த நாளும் ஒரு நிகழ்வும் நடக்கவில்லை. ஒரு வாரம் இப்படிக் கழிந்தது.

ஆனால் அதன்பின் வந்த அடுத்த வாரத்தின் முதல் நாளில் அதே போல் வந்து கொண்டிருக்கும் போது மறந்து போய் அங்கிருந்த போலீஸ்காரரை கண்ணுக்கு கண் பார்த்துவிட்டேன். வழியை மறித்து ஓரங்கட்டச் சொன்னார். எனக்கு கண்மண் தெரியாமல் கோபம் வந்துவிட்டது. உடனே நீங்க நினைக்கிறது போல எதுவும் நடக்கவில்லை. "சார் டெய்லி இதே தொல்லையாப்போச்சு, எனக்கு வண்டியும் வேணாம் ஒண்ணும் வேணாம்னு" அவரிடம் சொல்லிட்டு , ஆனால் கையில் சாவியையும் வைத்துக் கொண்டு விடுவிடென்று எதிர்த்திசையில் நடந்தேன். அதிர்ந்து போன போலீஸ்காரர் என் பின்னால் ஓடி வந்து, "தம்பி கோபப்படாதே வண்டியை  எடுத்துட்டுப்போ, எல்லாம் உங்க பாதுகாப்புக்காகத்தான் இதையெல்லாம் செய்யறோம்”னு சொன்னதைக் கேட்டவுடன் எனக்குக் கோபம் போய்  சிரிப்பு  வந்துவிட்டது. சிரிப்பை அடக்கிக் கொண்டே வண்டியை எடுத்துக்கொண்டு அலுவலகம் போனேன். நான் உள்ளே நுழையும்போது, வெளியில் 

புரொடக்சன் மேனேஜர் நஸீர் வந்து கொண்டிருந்தார். "எங்க போன, உன்னைத்தேடினோம், பிரஸ்ஸிங் செக்சனில் ஒரு பிரச்சனை, என்னன்னு போய்ப்பாத்துட்டு என்ட்ட சொல்லு”ன்னு சொன்னார்.

அதுக்கப்புறம் மதியம் லஞ்சுக்குப் பிறகு, அவரைப் பார்க்கும் போது, "என்னப்பா எப்பவும் எல்லோருக்கும் முன்னால வந்துருவ, என்னாச்சு அடிக்கடி லேட்டா வர்றயே? என்ன பிரச்சனை"ன்னு கேட்டார். தினமும் எனக்கு நடக்கும் பிரச்னைகளை அவரிடம்  சொன்னேன். அப்ப அவர் பலமாகச் சிரித்துவிட்டு, அத சால்வ் பண்றதுக்கு ஒரு ஐடியா கொடுத்தார்.

 "சார் இது வொர்க் அவுட் ஆகுமா? அவங்க செக் பண்ணா என்னாகும்?”

"ஒண்ணும் ஆகாது, அவங்க நிச்சயமா செக் பண்ணமாட்டாங்க”,ன்னு சொன்னார். நானும் அத அடுத்த நாள் டிரை பண்ணேன்.

அன்னிக்குப் பிடிச்சா என்ன சொல்றதுன்னு மனசுக்குள் பிராக்டிஸ் பண்ணேன். ஆனாலும் கொஞ்சம் உதறலாத்தான் இருந்துச்சு. அவங்க அசோஸியேஷன்ல பேசி இப்படி தினம் ஒரு இளிச்ச வாயன் வாரான் , அவனிடம் முடிந்த அளவுக்கு கறக்கச்சொல்லி சர்குலர்  அனுப்பிருப்பாய்ங்க போலருக்கு .நெத்தியில் எனக்குத்தெரியாத ஒன்றை அவர்கள் படிப்பது போல எனக்கு சந்தேகமாக இருந்தது  அதே மாதிரி என்னைப் பாத்ததும் போலீஸ்காரர் என்னை ஓரம் கட்டச்சொன்னார். நானும் அவர்ட்ட போய், "சார் என்ட்ட லைசென்ஸ் RC புக், ரிஜிஸ்ட்ரேஷன் எல்லாம் கரெக்டா இருக்கு. ஸ்பீடும் ஸ்லோவாத்தான் வந்தேன். ஆனாலும் தினம் பிடிக்கிறீங்க. இந்தச் சின்ன விஷயத்துக்கெல்லாம் அவரை தொந்தரவு பண்ணவேணாம்னு நினைச்சேன். ஆனால் வேற வழியில்லை, அவர்ட்ட சொல்ல வேண்டியதுதான்."




அவர் தெனாவட்டாக சிரித்துக் கொண்டு, "யார்பா அவர்" என்று கேட்டார். "இருங்க வர்ரேன்”,னு சொல்லிட்டு, பாக்கெட்டில் இருந்து, பேப்பர், பேனாவை எடுத்து அவருடைய நேம் பேட்ஜ்,  பார்த்து அவருடைய பேரையும் நம்பரையும் எழுதினேன்.

"என்னப்பா சொல்ற?”, சிறிது குரல் மாறியது.

"எந்த ஸ்டேஷன் சார் நீங்க?

"யாருப்பா அவர்"

"அலெக்சாண்டார், டிஜிபி"

அவர் கொஞ்சம் கலவரமாகி, "அவரை உனக்கு எப்படித்தெரியும்"

“அவர் என்னோட அங்கிள்

“உங்க பேர்?” மரியாதை கூடியது.

“என்னோட பேர் ஆல்ஃபிரட்”

 இரண்டு பெரும் இங்கிலீஸ் பேர்னால அந்தப் போலீஸ்காரர் ரொம்பப்  பயந்து போய்,

"சார் முன்னால சொல்லக்கூடாதா" வண்டியை எடுத்துட்டு போங்க சார்" மரியாதை ரொம்ப கூடிப் போனது.

நான் சிரிப்பை அடக்கிக் கொண்டு கொஞ்சம் கெத்தாகவே வண்டியை எடுத்துட்டுப் போனேன். போய் நஸீர் சார்ட்ட சொல்லி, ரெண்டு பேரும் நல்லாச் சிரித்தோம்.

அதுக்குள்ள நானும் வண்டி ஓட்டறதுல கொஞ்சம் தேறி, ஓரமாய் ஓட்டாமல் ரோட்டின் நடுவில் ஓட்ட ஆரம்பிச்சேன். ஓரிரு முறை அவர் பேரை யூஸ் பண்ணேன். ஓரிரு முறை என்னை வழியில் பார்த்த அதே போலீஸ்காரர் மெல்லிய ஒரு சல்யூட் வைத்ததாக ஞாபகம்.

அதுக்குள்ள எனக்கு ரொம்ப வேண்டியவர் சந்திரசேகர் என்பவர் சென்னையின் வடபழனி பகுதியின் அஸிஸ்டண்ட்  கமிசனராகப் பதவியேற்றதால் எனக்கு தெனாவட்டு மேலும் கூடிப்போனது.  

இந்த சந்திரசேகர் என்னுடைய முதுகலை வகுப்புத் தோழியின் சகோதரர். இவரை நான் படிக்கும் போதிருந்தே நன்றாகத் தெரியும். சமீபத்தில்தான் DIG ரேங்கில் ஓய்வு பெற்றார் இன்னும் சொல்லப்போனால் இவருடைய மனைவிதான் தமிழச்சி தங்கப் பாண்டியன், தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர். இவர்களுக்கு கலைஞர் தலைமையில் மதுரை லட்சுமி சுந்தரம் ஹாலில் நடந்த திருமணத்தில் நானும் கலந்து கொண்டேன்.  இன்னும் கூடுதல் தகவல் என்னவென்றால் சுமதி என்ற தமிழச்சி தங்கப்பாண்டியனின் இளைய சகோதரர்தான் தங்கம் தென்னரசு, தமிழக கல்வித்துறை அமைச்சராக இருந்தவர். இவர்கள்  குடும்பம் முழுவதும் எனக்கு நெருக்கமானவர்கள்.

 

கொஞ்சம் நாட்கள் எந்த பிரச்சனையில்லாமல் வண்டி ஓடியது. எந்த வண்டின்னு கேட்டீங்கன்னா இரண்டு வண்டியும்தான் ஒன்று வாழ்க்கை வண்டி மற்றொன்று என்னுடைய வாகனமான கிரே கலர் டிவிஎஸ் சேம்ப். அதில் ஏறி ஓட்டும்போது ஒரு சேம்பியன் போலத் தோன்றவில்லை என்றாலும், சென்னையின் சாலைகளை எல்லா முறைகளிலும் அறிமுகப்படுத்திய வண்டி அதுதான்.

கொஞ்சம் இடைவெளிவிட்டு மறுபடியுமாக அதே இடத்தில் ஓரங்கட்டப்பட்டேன். இப்போது கொஞ்சம் தைரியம் அதிகமாகி விட்டது.

"என்ன சார் எதுக்கு நிறுத்தச் சொல்றீங்க “

"தம்பி லைசென்ஸ், RC Book எல்லாம் எடு"

"அதான் எதுக்குன்னு கேட்டேன்?"

"தம்பி மேலிடத்து உத்தரவு, எல்லாத்தையும் செக் பண்றோம்".

"சார் நானும் மேலிடம் தான் என் மேல ஏதாவது தப்பிருந்தா சொல்லுங்க. இந்தாங்க லைசென்ஸ் RC புக் எல்லாம், நல்லாப்பாருங்க"

"தம்பி ஸ்பீடு"

"சார் உங்களுக்கே நல்லாத்தெரியும் நான் மிக மெதுவாத்தான் வந்தேன். நாங்கல்லாம் நல்ல குடும்பம் சார். அப்படி அடாவடியாக ஓவர் ஸ்பீட் போகமாட்டேன்.

"என்ன தம்பி மேலிடம்ற, யாருப்பா நீ"

"சந்திரசேகர் தெரியுமா?"

“யாருப்பா அவர்”

"சந்திரசேகர் ஐபிஎஸ், வடபழனி ஏ.சி"

"ஆமா ஐயாவைத் தெரியும் ஆனா நீங்க"

"நான் ராஜசேகர் சந்திர சேகரோட தம்பி"

அப்புறம் நடந்ததை அடுத்த பகுதியில் சொல்றேன்.    

 

தொடரும்

 

Thursday, January 14, 2021

நியூயார்க்கில் பொங்கல் -2021

 


பொங்கலும் வந்தாச்சு

தையும் பொறந்தாச்சு !

 

இன்று காலையில்

ஓட் கஞ்சியை  கொதிக்க விட்டு

பொங்கலோ பொங்கல்னு சொன்னேன் !.

 

என்  செய்வேன்

திங்க

பொங்கலும்  இல்லை

கடிக்க

கரும்பும் இல்லை

பொங்கலுக்கு லீவுமில்லை

போட்டுப்பாக்க  புதுசும் இல்லை !

 

வாழ்த்து மட்டும்

வாட்ஸாப் பூரா கொட்டுது

ஆனால்

வலி தீர இன்னும்

வழியில்லையே !

 

தமிழ்ச்சங்க விழா வரும்

தரமான பொங்கல் தரும்னு நினைச்சேன்

அதுவும் ஆன்லைனாம்

அம்புட்டும் ஜூம் லைனாம்!


கொரானாவும் போகலை

கொடுமைச்சாவும் நிக்கலை

புதுசு  புதுசா வரு து

தினுசு தினுசு  கொல்லுது! 

 

கடைக்கும் போகமுடியலை

கவசத்தையும் கழட்ட முடியலை!

 

தடுப்பூசி வந்தாச்சு ஆனா

நமக்கு வர

நாலஞ்சு  மாசம் ஆகுமாம் !

 

டிரம்ப் போயி

பைடன் வந்தாச்சு

வேலை கிடைக்குமா

வெளிச்சம் வீசுமா ?

 

ரெண்டா பிரிஞ்சு நிக்குது ஜனநாயகம்

ஒண்ணா சேர்க்குமா புது பைடன் நாயகம் !

 

இந்தியாவில்

கார்போரேட்டுகளின் ஆட்சி

கனவுகளைச்சிதைக்குது

விவசாயி ஓலம் காதுல கேக்கலை

விவசாயி சாவு இன்னும் நிக்கலை


 தமிழகத்தில்

அரசியல் சத்தம்

அதிகமா கேக்குது

ஆட்சிக்கு யாரு வரதுன்னு

அடிதடி பேச்சு நடக்குது

 

இப்ப

பல தடவை  வருவாங்க

பாசத்தை காட்டுவாங்க

பரிசுகளும் கொட்டுவாங்க

 

வாங்கி வைத்துக்கொண்டு

வாக்குப்போடும்போது

நோக்கப்படி போடுங்க

 

கேட்ட பணம் கிடைச்சாலும்

ஓட்டை மட்டும் விக்காதீங்க

சன்மானம் கிடைத்தாலும்

தன்மானத்தை

தாரை வாத்திடாதீங்க

 

தை பிறந்தாச்சு

வழியும் பிறக்கும்

நம்புவோம்

எஞ்சியிருப்பது

நம்பிக்கை மட்டும்தானே

 

பொங்கல் நல்வாழ்த்துகள்

அன்புடன்

உங்கள் பரதேசி

ஆல் ஃபிரட் தியாகராஜன்

 

அன்பு நண்பர்களே பொன்விழாக்கண்ட  நியூயார்க் தமிழ்ச் சங்கத்தின் இலக்கியக்குழுத்தலைவராக பொறுப்பேற்று இருக்கிறேன் ,வெள்ளிதோறும் இலக்கிய உலாக்களை நடத்தத்துவங்கியிருக்கிறோம்.  அனைத்தும் ஆன்லைன் என்பதால் உங்கள் ஆதரவை வேண்டுகிறேன் , நன்றி .




Monday, January 11, 2021

லஞ்ச் காசும் லஞ்சக் காசும் !

பரதேசியின் வாகனங்கள் பகுதி -2

இதன் முந்தைய பதிவைப்படிக்க இங்கே சுட்டவும்

https://paradesiatnewyork.blogspot.com/2021/01/1.html

 



இதுவரை நான் வளர்ந்த ஊரான தேவதானப்பட்டியில் ஒரு நாள் கூட ஓட்டாத என் சைக்கிள் வாகனத்தை, பக்கத்து ஊரான பெரியகுளம், படித்த ஊரான மதுரை,(ஆனால் படித்து முடித்த பின்தான்) முதல் வேலை கிடைத்த சாட்சியாபுரம், சிவகாசி, 2-ஆவது வேலை செய்த வேப்பனப்பள்ளி, கிருஷ்ணகிரி, அதன் பின் சென்னையில் செய்த இரு வேலைகள் என சைக்கிள் வாகனம் கைகொடுத்தது, மன்னிக்க கால் கொடுத்தது. என் வாழ்க்கை உருண்டோட சக்கரம் கொடுத்தது என்றும் சொல்லலாம்.

சென்னையில் முதல் வேலை மாமாவின் கன்ஸ்ட்ரக்சன்  கம்பெனியில் சூப்பர்வைசர். இரண்டாவது வேலை அரசினர் மருத்துவ மனையோடு இணைந்திருந்த சைக்கியாட்ரிக் டிபார்ட்மென்ட்டல் நடந்த ICMR (Indian Council of Medical  Research) நடத்திய பிராஜெக்ட்டில் டேட்டா கலெக்ஷன் வேலை. இது WHO  என்ற வேர்ல்ட் ஹெல்த் ஆர்கனைசேஷன் நிதியில் நடந்தது. கீழ்ப்பாக் கார்டனில் என் மாமா வீட்டில் தங்கியிருந்த போது தான் இந்த இரண்டு வேலை, செய்தேன். பின்னர் மனிதவளமேம்பாட்டு வேலைகளில் இருந்த ஆர்வம் காரணமாக அதனைவிட்டுவிட்டு இன்ட்டர் கிராப்ட்டில் சேர்ந்தேன். மாமா வீட்டிலிருந்து  சைக்கிளில் வந்து ஆற்காடு  சாலையில் நிறுத்தி வைத்துவிட்டு, அங்கிருந்து நேராக ஒரு பஸ்ஸில் பாரிமுனை சென்று, என் அலுவலகத்திற்கு நடந்து சென்றுவிடுவேன். என்னுடைய அலுவலகம் ஆர்மேனியின் தெருவிலும் இன்னொரு யூனிட் பிராட்வே அருகில் இருந்த டேவிட்சன் தெருவில் மினர்வா தியேட்டர் அருகிலும் இருந்தது.  இந்த இரண்டு அலுவலகங்கிலும் எனக்கு  இருக்கைகள்  உண்டு . இங்கு  வேலை செய்த ஆண்டு 1988 முதல் 1992 வரை .

பேச்சிலர் வாழ்க்கை தொடர்ந்த போது என் அம்மா, "தம்பி உனக்கு ஒரு ஸ்கூட்டர் வாங்கிக்கோயேன்" என்று சொன்னார்கள். "ஸ்கூட்டரா அது வேண்டாம்மா, அது எனக்குப் பிடிக்காது" என்றேன். "அப்ப உனக்குப்பிடித்த ஏதாவது ஒன்றை வாங்கிக்கொள் ,நான் பணம் தருகிறேன்." என்று சொன்னார்கள்.

சிறு வயதில் புல்லட் எனக்குப் பிடித்திருந்தாலும் அதனை ஓட்டும் அளவுக்கு மனதில் தைரியமில்லை, உடலில் வலுவுமில்லை என நினைத்து முதலில் TVS போன்ற மொபெட் வாங்கலாம் என முடிவு செய்தேன். ஷோ ரூமுக்குச் சென்றபோது TVS 50 ஐ விட புதிதாக வந்திருந்த TVS சேம்ப் பார்க்க நன்றாக இருந்தது. அப்போது பாரிமுனையில்    இருந்த "இன்ட்டர்கிராப்ஃட் செளத் எக்ஸ்போர்ட்ஸ்" என்ற கம்பெனியில் மனிதவளத்துறையில் "பெர்சனல் (Personnel) ஆஃபிசராக சேர்ந்த சமயம்.   

என் மகன் ஒரு ஆஃபிசரா(?) ஆயிட்டான்ற ஒரு சந்தோஷத்தில் எங்கம்மா எனக்கு ஒரு வண்டி வாங்கிக் கொடுக்க ஆசைப்பட்டாங்க. 

.




டி.வி. எஸ் சேம்ப் ஒரு நல்ல வண்டி. குறைந்த செலவு, பார்க்கவும் நன்றாகத்தான் இருக்கும். டி.வி.எஸ் சேம்ப் வாங்கியவுடன் வீட்டிலிருந்தே வண்டியை ஓட்டிக் கொண்டு பூந்தமல்லி சாலை வழியாக நேராகச் சென்று, சென்ட்ரல் ஸ்டேஷன் தாண்டிச் சென்று அப்படியே பாரிமுனை செல்வது என் வழக்கம். மிக மெதுவாகத்தான் செல்வேன். அதாவது மிகமிக மெதுவாகத்தான் செல்வேன். இடதுபுற ஓரம்தான் செல்வேன். ஆரம்பத்தில் சில சைக்கிள்காரர்கள் என்னை முந்திச் சென்றிருக்கிறார்கள். ஏன்  சில சமயம் நடந்து போகிறவர்கள் கூட கடந்து போயிருக்கிறார்கள். அதனைப்பற்றி யெல்லாம் கவலைப்படாமல் நான் பாட்டுக்கு தேமேன்னு ஓட்டிச் சென்ற முதல் நாள் சென்ட்ரல் ஸ்டேஷனைத் தாண்டும் போதுஒரு டிராஃபிக் போலீஸ் வழிமறித்தார். லைசென்ஸ், RC புக் எல்லாம் செக் செய்தபின், "எவ்வளவு பணம் வச்சிருக்க?" என்றார்.

“எதுக்கு சார்?”

“ஃபைன் கட்டறதுக்கு?”

“எதுக்கு  ஃபைன் சார்?”

"எப்பா ஸ்பீடா வந்துட்டு எதுக்கு ஃபைன்னு கேக்கிற"

"என்னாது ஸ்பீடா வந்தேனா? நடக்கிறவன் கூட என்னை முந்திப் போனான், என்ன சார் சொல்றீங்க?"

"சரி சரி வளவளன்னு பேசாதே, சார்ஜன்ட்ட போனா நூறு ரூபாய்க்கு மேல ஆகும்".

"என்ன சார் நான் ஸ்பீடா போகவேயில்லியே"

"சரி, இருக்கறத கொடுத்துட்டு போ"

பாக்கெட்டில் கையில் விட்டால் லஞ்ச்சுக்கு வச்சிருந்த 10 ரூபாய் பணம் இருந்தது, லேசாக வெளியே தெரிந்தவுடன் அதனைப்பறித்துக் கொண்டு "போ தம்பி, பாத்துப்போ" என்று சொன்னார், அந்தத் திறமையான, நியாயமான, நேர்மையான போலீஸ்காரர். இது என் முதல் நாள் அனுபவம். வழிப்பறிக் கொள்ளை என்பது இதுதானோ? நானும் நொந்து கொண்டே சிறிது தூரம் உருட்டிக் கொண்டு போய், அப்புறம் மெதுவாக ஏறி ஓட்டிக் கொண்டு ஒரு மணி நேரம்  தாமதமாய்ப் போய்ச் சேர்ந்தேன். அன்னைக்கு சனிக்கிழமை.

அடுத்த வாரம் திங்கட் கிழமை இன்னும் கொஞ்சம் சீக்கிரமாய்க் கிளம்பினேன். சென்ட்ரல் நெருங்கியவுடன் சிறிது பதற்றமாக இருந்தது. மூளையில் உதித்த பதற்றம் முதலில் என் கண்களுக்கு டிரான்ஸ்பர் ஆக, பிறகு அங்கிருந்து வந்து அதன் மூலம் நான் பிடித்திருந்த ஹேண்டில் பாருக்கு வந்து, அங்கிருந்து சக்கரங்களுக்கு வந்து, அதன் பின் வண்டி, நான் இரண்டும் இலேசாக நடுங்க ஆரம்பித்தோம். ஓட்டிக் கொண்டு சென்றாலும் உருட்டிக் கொண்டு செல்வதைப் போல்தான் தெரிந்தது.

மீண்டும் அதே இடம். ஆனால் வேறொரு போலீஸ்காரர் நிறுத்தினார். உடனே வண்டியின் சாவியை எடுத்துக்  கொண்டார்.

"லைசென்ஸ் RC புக் எடுப்பா" மறுபடியுமா? என்று நினைத்துக் கொண்டு எடுத்துக் கொடுத்தேன்.

"புது லைசன்ஸா"

"ஆமா சார்"

"பார்த்து வரணும்"

"சரி சார்"

"எவ்வளவு வச்சிருக்க?"

"எதுக்கு சார்?"

"இல்ல சார்ஜன்ட்ட போனா ஃபைன் எகிறும்".

"எதுக்கு சார் ஃபைன்?"

"என்னப்பா தம்பி தெரியாதமாதிரி கேக்குற, ரெட் லைட்ல வந்தியே"

"இல்லியே சார் நான் கிரீன்லதான் வந்தேன், அதுவும் ரொம்ப   மெதுவா வந்தேன்"

"சரி சரி ஒரு அம்பது ரூபாவைக் கொடுத்துட்டு நகரு"

"சார் நேத்தே கொடுத்திட்டேன்?

 என்னப்பா கதை விட்ர, யார்ட்ட கொடுத்த    எதுக்கு கொடுத்த  ?"

"நான் 10 கிலோ மீட்டர் ஸ்பீட்ல வந்ததை ஓவர்ஸ்பீட்ன்னு ஒரு போலீஸ்காரர் சொல்லி என்னோட லஞ்ச் காசைப் லஞ்ச காசாய்ப்  புடிங்கிட்டார். நேத்து கடன் வாங்கி லஞ்ச் சாப்பிட்டேன்".

"யாருப்பா அவர்? சரி அத விடு, காலைவெயில் கடுமையாய் இருக்கு, பக்கத்து கடையில ஒரு கூல் டிரிங்ஸ் வாங்கிக் கொடுத்துட்டு போ", நான் நடக்கத்தொடங்க, “தம்பி கொஞ்சம் நில்லு எத்தனைன்னு கேட்காமயே போற”தலைகளை எண்ணிவிட்டு “மொத்தம் ஏழு வாங்கிட்டு வா”.

எனக்குத்தூக்கி வாரிப்போட்டது

"சார் என்ட்ட அவ்வளவு காசில்ல"

"சரி எவ்வளவு இருக்கு?”

எல்லாப் பாக்கெட்லயும் செக் செஞ்சு, "சார் இவ்வளவுதான் இருக்கு”, என்று ஒரு 2 ரூபாய் நோட்டை எடுத்துக் காட்டினேன்.

"பரவாயில்லை”, என்று சொல்லிவிட்டு ஆனால் அந்த 2 ரூபாயையம் புடுங்கிவிட்டுத்தான் சாவியைக் கொடுத்தார்.

அடுத்த நாள் என்ன நடந்ததுன்னு, அடுத்த பகுதியில் சொல்கிறேன்.

- தொடரும்.