Thursday, January 24, 2019

மானம் காத்த முல்லைத்தீவு மன்னன் !!!!!!!!!!


படித்ததில் பிடித்தது

பாயும் புலி பண்டாரக வன்னியன்

 கலைஞர் மு.கருணாநிதி ராக்ஃபோர்ட் பப்ளிகேஷன்ஸ், சென்னை.

Add caption
கலைஞர் கருணாநிதி எழுதிய இந்தப் புதினத்தை பாதி படித்துக் கொண்டு இருக்கும்போதுதான் கலைஞர் அவர்கள் தன் நீண்ட நெடிய வாழ்க்கைப் பயணத்தை முடித்துக் கொண்டார். தென்பாண்டிச் சிங்கம், ரோமாபுரிப்பாண்டியன், பொன்னர் சங்கர் போன்ற அவர் எழுதிய வரலாற்று நவீனங்களில் ஒன்றுதான் பாயும்புலி பண்டாரக வன்னியன்.
முல்லைத்தீவில் உள்ள  பண்டாரக வன்னியன் சிலை

கலைஞர் கருணாநிதியை எனக்குப் பிடிக்கும். பெரியார் வழியில் அண்ணாவிடம் பெற்ற அவருடைய சுயமரியாதைக் கொள்கை, சமூக நீதியில் பற்று, மதச் சார்பின்மை, பெண்கள் முன்னேற்றம் ஆகியவை அவரின் ஆகச்சிறந்த கொள்கைகள். அதே போல அவருடைய பேச்சு, நகைச்சுவை ஆற்றல், எழுச்சியூட்டும் திரைப்பட வசனங்கள் ஆகியவை எல்லோரையும்  கவருபவை. முரசொலியில் “தம்பிக்கு எழுதிய கடிதங்கள்” என்ற பகுதியைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். நெஞ்சுக்கு நீதி இலக்கியத்தரம் வாய்ந்த அரசியல் வரலாறு.
ஆனால் அவரின் கவிதைகள் மற்றும் வரலாற்று நவீனங்கள் கல்கியின் வரலாற்றுக் காவியங்களான பொன்னியின் செல்வன் மற்றும் சிவகாமியின் சபதம் ஆகியவற்றுக்கு ஒப்பிட முடியாது. கல்கிக்கு அடுத்த படியாக வரலாற்று நவீனங்கள் எழுதிப் புகழ்பெற்ற சாண்டில்யன் கூட ஒரு படி கீழேதான். அதற்கும் அடுத்தபடிதான் கருணாநிதியின் "பாயும் புலி பண்டாரக வன்னியன்".
இந்த நாவல் இலங்கையில் முதன் முதலில் ஆங்கிலேயருக்கு சுதந்திரக் குரல் எழுப்பிய "குலசேகரம் வைரமுத்து" என்ற பண்டாரக வன்னியன் என்ற அரசனின் வாழ்க்கையைக் கருவாகக் கொண்டது.
விக்ரமராஜசிங்கன்
இவன் இலங்கையின் தமிழர் பகுதியான முல்லைத்தீவை ஆண்டு வந்தவன். ஆங்கிலேயர் கொழும்புப் பகுதியை போர்த்துக் கீசியரை வென்று ஆக்ரமித்ததில் இருந்து இலங்கையின் மற்ற பகுதிகளையும் தங்களது ஆளுகையில் கொண்டுவர முயன்றனர். அவர்களுக்கு தீராத தலைவலியாக இருந்தது முல்லைத்தீவும் கண்டியும். இவ்விரண்டுமே சுதந்திர பகுதிகளாக இருந்ததோடு இதனை ஆண்டு கொண்டிருந்தவர்கள் பண்டார வன்னியன் மற்றும் விக்ரம ராஜசிங்கன் என்ற ஒரு தமிழ் மன்னர்கள். இருவரும் நெருங்கிய நண்பர்கள். விக்ரம ராஜசிங்கன் மதுரை நாயக்க மன்னர்களின் பரம்பரையில்  பிறந்தவன். இவன் கண்டியை ஆண்ட ராஜாதி ராஜ சிங்காவின் மகன். ராஜசிங்காவின் 2 மனைவிகளுக்கு  பிறந்த கண்ணுச்சாமி, முத்துச்சாமி என்பவர்கள் பதவிக்கு போட்டி போட்டதில் கண்ணுச்சாமிக்கு பதவி கிடைத்தது. இந்தக் கண்ணுச்சாமியின் பட்டப்பெயர்தான் விக்ரமராஜசிங்கன்.
பதவி கிடைக்காத வெறுப்பில் முத்துச்சாமி ஆங்கிலேயருடன் சேர்த்து காட்டிக் கொடுத்து வீணாய்ப்போனான்.
இந்த மாதிரி மிகவும் அறியப்படாத சில வரலாற்று நிகழ்வுகளை இந்தப்புத்தகம் மூலம் அறிந்து கொள்ள முடியும்.
பண்டாரக வன்னியின், கட்டபொம்மனின் தம்பி ஊமைத்துரை மற்றும் மருது பாண்டியர்களோடு தொடர்பில் இருந்தவன், மாவீரன். ஒரு சிறிய பகுதியை ஆண்டாலும் உயிருக்குத் துணிந்து மானமே பெரிது, அடிமை வாழ்வு வாழ்வதற்குப் பதில் உயிரைக் கொடுக்கலாம் என்று நினைத்து வாழ்ந்தவன். இளவயதிலேயே ஆங்கிலேயரை எதிர்த்து போரில் வீர சொர்க்கம் அடைந்தவன்.
ஊமைத்துரை வெள்ளையத்தேவனின் தூதுவனாக, சுந்தரலிங்கம் என்பவன் முல்லைத்தீவுக்கு வருவதில் கதை ஆரம்பிக்கிறது. அங்கேயுள்ள வற்றாப்பனை  கண்ணகி கோவிலில் நடக்கும் விசாகத்திருவிழாவிற்கு சுந்தரலிங்கம் வந்து சேருகிறார்.
மேலும் பல வரலாற்றுப் பாத்திரங்களான காக்கை வன்னியன், பிலிமதளா, பியசீலி, குருவிச்சி நாச்சி, பேட்ஜ், மெக்டோவல் ஆகியோரை கதைக்களத்தில் பயன்படுத்தியிருக்கிறார்.
கண்டி, கொழும்பு, முல்லைத்தீவு, வற்றாப்பனை, கரிக்கட்டு மூலை ஆகிய ஊர்களும் கதையில் வருகின்றன.
வரலாற்று நிகழ்வுகளை சுவைபடச் சொன்னது மட்டுமல்லாது எழுத்தில் கொஞ்சம் காமரசம் தூக்கலாகவே இருக்கிறது. ஆனாலும் வேண்டுமென்று திணித்தது போல்  தெரியவில்லை.
எழுத்து நடை கதைவசனம் போல் இருக்கிறது.  கலைஞரின் சிறப்பம்சமான அடுக்கு மொழி நடை, கவிதை நடை,  உரைநடையிலும் வெளிப்படுவது சிறப்பம்சம்.
குரங்கு சிரங்கு, வாடகை வனிதை, விழிகளில் கசியும் விஷம் போன்ற  சொல்லாடல்களை மிகவும் ரசித்தேன்.
எனக்கென்னவோ கலைஞர் சிறிது அவசரகதியில் எழுதினாரோ என்றும் தோன்றுகிறது. நிதானமாக ஒருவேளை எழுதியிருந்தால் சிறந்த கலைப்படைப்பாக உருவாகியிருக்க வாய்ப்பிருக்கிறது.
ஆனாலும் அவருக்கிருந்த வேலைப்பளுவில் பலதளங்களிலும் செயலாற்றியது வியப்பைத் தருகிறது.
கலைஞரின் உரைநடை, இலங்கையின் வரலாறு போன்றவற்றை விரும்புபவர்கள் இந்த நாவலைப் படித்து மகிழலாம்.
முற்றும்

முக்கிய அறிவிப்பு: 

அலுவலகப்  பணி  நிமித்தமாக  மெக்ஸிகோ சிட்டிக்கு செல்வதால் வரும் வாரத்தில் (ஜனவரி 28 முதல் பெப்ருவரி 1 வரை )  பதிவுகள் எதுவும் வராது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் .உங்களின்  தொடர்ந்த ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றிகள் .

2 comments:

  1. ரசனையுடன் பகிர்ந்து கொண்டதை ரசித்தேன்...

    பயணம் சிறக்க வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி திண்டுக்கல் தனபாலன்.

      Delete