Thursday, February 28, 2019

மறைக்கப்பட்ட இந்தியா !!!!



 படித்ததில் பிடித்தது

 மறைக்கப்பட்ட இந்தியா,எஸ் ராமகிருஷ்ணன் விகடன் பிரசுரம்.

          எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் ஒரு தேர்ந்த எழுத்தாளர், நல்ல பேச்சாளர். அவருடைய எழுத்து, படிக்கும் வாசகர்களுக்கு வெறும் பொழுதுபோக்குத்தரும் எழுத்தல்ல. மாறாக அறிவுக்களஞ்சியங்களை அள்ளித்தருபவை. அதற்காக அவர் செய்யும் உழைப்பு அபாரம். நூறு நூல்களைப் படிக்கும் அளவுக்கான விஷயங்கள் அவருடைய ஒரு புத்தகத்தில் இருக்கும். ஏனென்றால் அத்தனை புத்தகங்களையும் அவர் படித்து அதன் சாராம்சத்தை நமக்குத்  தருவார். அப்படி எழுதப்பட்ட ஒரு புத்தகம்தான், "மறைக்கப்பட்ட இந்தியா". நமது நாட்டைப்பற்றியும் அதன் வரலாற்றில் மறைந்துபோன , மறைக்கப்பட்ட விஷயங்களை மட்டுமே ஆராய்ச்சி செய்தால் கூட நமக்கு இந்த ஒரு ஜென்மம் போதாது.

எஸ் ராமகிருஷ்ணன்
          இந்தப் புத்தகம் கட்டுரைகளாக விகடனில் வந்தபோது, எப்படியும் முழுப் புத்தகமாய் வரும்போது படித்துக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டதை மறக்காமல் விகடன் அலுவலகம் சென்று  வாங்கிய பல புத்தகங்களில் இதுவும் ஒன்று.
          இந்தப்புத்தகத்தை நீங்கள் வாங்கிப்படிக்க வேண்டும் என்ற விதத்தில் இதில் படித்த சில விஷயங்களை இப்பகுதியில் கோடிட்டுக் காட்ட விழைகிறேன்.
1.   நீண்ட மீசையுடன் பார்த்த யுவான் சுவாங்கின் மீசையில்லாத படத்தைப் பார்த்தேன். சீனாவில் இருந்து வந்த அவர் நாலாந்தா பல்கலைக் கழகத்தில் போதித்து குப்தர் காலத்தில் 100 கிராமங்களை பரிசாகப் பெற்றிருக்கிறார்.
2.   ரபீந்திரநாத் தாகூர் 1911ல் எழுதிய நமது தேசிய கீதம் அவர் எழுதிய முழுப் பாடலில் ஒரு பத்தி மட்டும்தான். அதோடு பங்களாதேஷின் தேசீய கீதத்தையும் அவர்தான் எழுதியிருக்கிறார். (அமர் ஷோனார் பாங்க்ளா). 1919ல் மார்கரட் கசின் (யாரோட கசின்னு கேட்காதீங்க பாஸ்) போட்ட மெட்டுதான் இன்னும் பாடப்படும் மெட்டு நேதாஜியின் INA-வில் பாடப்பட்டது. இதற்கு தன் பேன்டு (Band) மூலம் இசையமைத்து தங்கப்பதக்கம் பெற்றார் கேப்டன் ராம்சிங்.
3.   ஆனால் 1947ல் சுதந்திரம் வாங்கிய இரவில் பாடப்பட்டது, மகாகவி இக்பால் எழுதிய, "சாரே ஜஹான் கி அச்சா" என்ற பாடல் மற்றும் பக்கிம் சட்டர்ஜி இயற்றிய "வந்தே மாதரம்" பாடல்தான்.
4.   தேசியக் கொடி பிறந்த கதையினையும் அதற்கு முன்னால் பயன்படுத்தப்பட்ட பல்வேறு கொடிகளைப் பற்றியும் சுவைபட விளக்குகிறார்.
5.   டெல்லியின் கிராண்ட் டிரங்க் ரோடு முதன்முதலில் சந்திரகுப்த மெளரியர் காலத்தில் உருவாக்கப்பட்டு இன்றுவரை பயன்பாட்டில் இருக்கிறது. இந்த விவரங்கள் கிரேக்க தூதுவர் ‘மெகஸ்தனிஸ்’ எழுதிய ‘இண்டிகா’ என்ற நூலில் காணப்படுகிறது. அதே போல தமிழகத்தில் நீண்ட நெடிய ராஜபாதை அமைத்தவர் ராணி மங்கம்மாவாம். அதன் வழியில் பயணிகள் தங்கிச் செல்ல பல சத்திரங்களையும் அமைத்திருக்கிறார்.
6.   அழிந்துபோன டாக்கா மஸ்லின் பற்றி பல தகவல்களைச் சொல்லுகிறார். முழு ஆடையும் மோதிரத்திற்குள் நுழையும் அளவுக்கு மென்மையாக இருக்குமாம். அதுமட்டுமல்ல பத்து முழம் சேலை ஒரு தீப்பெட்டிக்குள் அடங்கி விடுமாம். நம்முடைய துணிகள்  ஆயிரம் ஆண்டுகள் முன்னமே வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. அதுபோலவே ஆரணி மஸ்லின் என்று ஆந்திராவின் மசூலிப்பட்டணத்தில் உருவாக்கப்பட்டதாம். மசூலிப் பட்டினத்தில் உருவானதால் தான் அதன் பெயர் மஸ்லின் என்று ஆனதாம். பிரிட்டிஷ் ஆட்சியில் இதற்கெல்லாம் முடிவு கட்டப்பட்டது.
7.   ராஜாராம் மோகன்ராய் தோற்றுவித்த பிரம்ம சமாஜத்தின் முக்கிய கொள்கைகளாக, மூடநம்பிக்கை ஒழிப்பு, ஒன்றே குலம், பெண்கல்வி, விதவை மறுமணம், பால்ய விவாகம் ஒழித்தல், சம வேலைவாய்ப்பு, சம ஊதியம் மற்றும் தேசிய உணர்வை ஊட்டுதல் என பல முற்போக்கு சிந்தனைகள் இருந்திருக்கின்றன. அது இன்னும் வளர்ந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். இன்னும் நியூயார்க்கில் கூட பிரம்ம சமாஜம் இருக்கிறது. அவர்களின் கொள்கைகள் இன்னும் அப்படியே இருக்கின்றனவா என்று தெரியவில்லை.
8.   1942ல் வெள்ளையனே வெளியேறு மற்றும் த்துழையாமை இயக்கத்தை காந்தி துவங்கியபோது, காந்தி, கஸ்தூரிபாய், நேரு ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தமிழ்நாட்டில் காமராஜர், கக்கன், ம.பொ.சி ஆகியோர் கைது செய்யப்பட்டு உணவில் சிறுநீரைக் கலந்து கொடுத்தனர் என்பதை வாசிக்கும் போது உள்ளம் கொதித்தது.
9.   ஜொராஷ்ட்டிரிய மதத்தை ஃபாலோ செய்யும் பார்சிகள்  எப்படி ஈரானிலிருந்து இந்தியா வந்து செட்டில் ஆனார்கள் என்பதை பல தகவல்களோடு விளக்குகிறார். பார்சிகளில் முக்கிய பிரமுகர்களைப் பற்றித் தெரிந்து ஆச்சரியப்பட்டேன். தாதாபாய் நெளரோஜி, ஹோமிபாபா, ஜூபின் மேத்தா, பில்ட் மார்ஷல் சாம் மானெக்சா,  டாட்டா மற்றும் கோத்ரெஜ்  ஆகியோர் அவர்களுள் சிலர். இப்பொழுது தெரிகிறது பார்சிகள் எப்படி முன்னேறியுள்ளனர் என்று.
10.                நேதாஜி வீரர்களில் 25 பேருக்கு ஜப்பானில் பயிற்சி அளிக்கப்பட்டது புதுச்செய்தி. நேதாஜியின் மறைவு இன்றுவரை புதிராகவே இருக்கிறது.
11.                தாகூர் தன் சொந்த செலவில் ஆரம்பித்த  சாந்திநிகேதன் இப்போது விஸ்வபாரதி பல்கலைக்கழகமாக விரிவடைந்திருக்கிறது. அமர்த்திபா சென், சத்யஜித்ரே, இந்திராகாந்தி ஆகியோர் அதில் படித்து வெளியே வந்த பிரபலங்களில் சிலர்.
12.                இண்டிகோ என்று சொல்லப்படும் நீலவண்ணம் உருவாக்க அந்தக்காலத்தில் பதினாறு லட்சம் ஏக்கரில் அவுரித்தோட்டம் அமைத்து வெள்ளையர்கள் கொள்ளை லாபம் சம்பாதித்தனர். அதில் வேலை செய்த விவசாயிகளை கொத்தடிமைகள் போல நடத்தினர். அதுமட்டுமல்லாமல் ஆறுலட்சம் ஏக்கரில் அபினிச்செடிகள் பயிரிட்டு உலக முழுதும் ஏற்றுமதி செய்தார்கள். குறிப்பாக அதனால் சைனாவில் நடந்த ஓப்பியம் போர் உங்களுக்கு நினைவிருக்கும் இதனை எதிர்த்துப் போராடி பெற்ற வெற்றியே காந்திக்குக் கிடைத்த முதல் வெற்றி.
13.                யுவான் சுவாங், பாஹியான் போல பல ரஷ்ய யாத்திரிகர்களும் இந்தியாவுக்கு வந்தது புதுச் செய்தி.
14.                பிரிட்டிஷ் காலத்தில் மணமகன்களைத் தேடி, கப்பல் நிறைய பெண்கள் வந்து இந்தியாவில் இறங்கினார்களாம்.பிரிட்டிஷ் அரசே அவர்களுக்கு வருடத்திற்கு 30 பவுண்டு கொடுத்ததாம், பெரும்பாலானோர் தங்கள் ஜோடிகளைத் தேர்ந்தெடுத்துவிட, மற்றவர் இங்கிலாந்துக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.
15.                கற்கால கல் ஆயுதங்கள் சென்னை அருகில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. அவர்களின் வயது 5 லட்சம் ஆண்டுகள். கல்தோன்றா மண் தோன்றாக் காலத்தில் பிறந்தது தமிழினம் என்பது சரிதான்.
       ஆச்சரியப்படுமளவுக்கு நமக்குத் தெரியாத பல விஷயங்களை அலசி ஆராய்ந்து சுருக்கமாக இந்நூலில் வடித்துள்ளார்.தவிர நாம் படிக்க வேண்டிய பல புத்தகங்களை நமக்கு பரிந்துரையும் செய்திருக்கிறார். அதுதான் சொன்னேனே. அதையெல்லாம் படிக்க ஒரு ஆயுள் போதவே போதாது. ஆனால்குறைந்த பட்சம் இந்தப் புத்தகத்தையாவது  படிக்கலாம்.
முற்றும்

Monday, February 25, 2019


வன தெய்வங்கள் கூடும் கும்பக்கரை அருவி !!!!!!!!
வேர்களைத்தேடி பகுதி 35
இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும். 
http://paradesiatnewyork.blogspot.com/2019/01/blog-post_22.html
நன்றி தினகரன்

கும்பக்கரை அருவி என்பது ஒரு மறைந்திருக்கும் அதிசயம் (Hidden surprise) என்று சொல்லலாம். ஏனென்றால் நிறையப்பேருக்கு இப்படி ஒரு அருவி இருப்பது தெரியாது. உள்ளூர்க்காரர்களுக்கு மட்டும்தான் தெரியும். குறிப்பாக தேவதானப்பட்டி, அதனருகிலுள்ள சிற்றூர்கள் மற்றும் பெரியகுளம் ஆகிய இடங்களிலிருப்பவர்களுக்கு மட்டுமே இது தெரியும். மஞ்சளாறு அணையும் அப்படித்தான். வைகை அணை போல எல்லோருக்கும் தெரியாது. வைகை அணை எல்லாருக்கும் தெரிந்தது எப்படியென்றால் இங்கு மாட்டுக்காரவேலன் என்ற படத்திற்காக எம்ஜியார் அவர்களின் படப்பிடிப்பு நடந்ததற்குப்பிறகுதான். அதே போல கும்பக்கரை தங்கையா படம் வந்த பின் தான் இப்படி ஒரு இடம் இருப்பது பலருக்கு தெரிய வந்தது . கும்பக்கரை அருவி என்பது குற்றாலம், சுருளி போன்றவை போன்று பெரிய அருவியில்லை யென்றாலும், சின்னக் குற்றாலம் என்று அழைக்கப்படும் அளவுக்கு அழகான இயற்கைச் சூழலில் அமைந்த ஒன்று. ஒரு நாள் பிக்னிக்கிற்கு மிகவும் ஏற்ற இடம்.
நன்றி தினகரன்

தேவதானப்பட்டியிலிருந்து பெரியகுளம் போகும் வழியில் கூட்டுரோட்டில் இறங்கி சில கிலோமீட்டர்கள் நடந்தால் சற்றே  உயரமான மலையில் இந்த இரட்டை அருவிகள் இருக்கின்றன. பெரியகுளத்திலிருந்து குறிப்பிட்ட நேரங்களில் டவுன் பஸ்ஸும் இருக்கிறது. ஆனால் நிறைய இல்லை. ஒரு நாளில் இரண்டு மூன்று முறை மட்டும்தான் போகும். தேவதானப்பட்டியிலிருந்து ஓரிரு முறை மட்டும் மாட்டு வண்டியில் போயிருக்கிறேன். காரிலும் சில முறை போயிருக்கிறோம். ஆனால் நடந்து போனது மிகவும் சிறந்த அனுபவம். வனப்பகுதி நெருங்க நெருங்க வெயில் அடிக்காத வண்ணம் இருபுறங்களிலும் மரங்கள் கூரையமைத்திருக்க, ஒரு பெரிய குகைக்குள் செல்வது போலிருக்கும். அதோடு கோடைகாலத்தில் போகும் போது இருபுறமும் உள்ள மாமரங்களில் காயும் பழமுமாகத்  தொங்கும். பறித்தால் கேட்பதற்கு ஆளில்லை அங்கு. சில இடங்களில் தோப்புக்கு வெளியே விற்பார்கள். வாங்கி  உண்டு கொண்டே நடக்கலாம். இருபுறமும் தென்னந்தோப்புகளும் அதிகம். இங்கு கிடைக்கும் இளநீர்கள் மிகவும் சுவை வாய்ந்தவை.
நன்றி தினகரன்

இன்னும் காட்டுக்குள் நுழைந்து மேலேறிச் சென்றால் திடீரென்று ஒரு வெட்டவெளி வரும். பெரும் பாறைகளால் சூழப்பட்ட இடத்தில் சிலுசிலுவென்ற  தென்றல் வீச, சலசல வென்று கொட்டுகிறது கும்பக்கரை  அருவி. சுற்றிலும் பார்த்தால் மேற்குத் தொடர்ச்சி மலை சூழ்ந்து பச்சைப்பசேலென்று  நெஞ்சை நிமிர்த்தி நிற்கிறது. சலசலவென்று ஓடும் தண்ணீரில் ஒரு காலை வைத்தால் குளுகுளு வென்று குளிர்ச்சி உச்சந்தலை வரைக்கும் ஏறுகிறது. தெளிந்த நீரில் சிறுசிறு மீன்கள் தெரிய, காலில் மொய்த்து அவை கிச்சுக்கிச்சு மூட்டுகிறது.கும்பக்கரை பற்றிய மேலும் சில தகவல்களை இப்போது பார்க்கலாம்.( நன்றி தினகரன்)
 கொடைக்கானல் மலையில் இருந்து உருவாகும் நீரூற்று மலையடிவாரத்தை அடைகிறது. இப்பகுதியிலுள்ள மாட்சிநாயக்கன், வீரபுத்திரன், வைரவன், பூதநாட்சி, செழும்புநாட்சி, சோத்துமாயன், சின்ன அண்ணன், கருப்பணசாமி ஆகிய வன தெய்வங்கள் இங்குள்ள கரையில் கும்பலாகக் கூடுமாம். அதனால் இது கும்பல்கரை என்று முன்னர் அழைக்கப்பட்டதாம். இந்த கும்பல்கரையே இன்று கும்பக்கரை என்று மருவியதாக இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
 இயற்கையாகவே உருவாகியுள்ள இந்த நீர்வீழ்ச்சியைச் சுற்றிலும் எழும் பறவைகளின்  குரல்கள் சுற்றுலாப் பயணிகளை வரவேற்கும் விதமாக உள்ளது. இந்த கும்பக்கரை நீர்வீழ்ச்சி இரண்டு அடுக்குகளையுடையது. 400 மீ உயரத்திலிருந்து விழும் இந்த அருவியின் நீர், அதனைச் சுற்றியுள்ள பாறைகளில் விழுகிறது. இந்த நீர்வீழ்ச்சிக்கு அருகில் ஒரு முருகப் பெருமான் சிலையும் உள்ளது. 
நன்றி தினகரன்

இந்த நீர்வீழ்ச்சிக்கு செல்வதற்கு ஒரு உள்ளூர் வழிகாட்டியை அமர்த்திக் கொள்ளும் பட்சத்தில், பாறைகளில் வழுக்குதல் மற்றும் பிற ஆபத்துகளிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும். வருடத்தில் அனைத்து  நாட்களிலும் சென்று வர தகுந்த சுற்றுலாத் தலமான கும்பக்கரை நீர்வீழ்ச்சி உள்ளது. இங்கு கோடைகாலங்களில் நீர்வரத்து அதிகமாக இருக்கும். கொடைக்கானல் பகுதியில் தோன்றி பல இடங்களைக் கடந்து கும்பக்கரை அருவியாக வருகிறது. இந்த அருவியில் பாண்டிய மன்னர்களின் தலவிருட்சமான மருதமரங்கள் அதிகமாக உள்ளது என கூறப்படுகிறது.  மருதமரங்களின் வேர்களை தாண்டி  இந்த அருவி வருவதால் மூலிகை குணமுடையது. இதனால்அருவியில் குளித்தால் வாதநோய் உண்டாகாது என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ளது. 
இந்த அருவியின் அருகே வனதெய்வக் கோயில்கள் உள்ளன. பூம்பறையாண்டி வைரன், கிண்டன், கிடாயன் உள்ளிட்ட வனதெய்வங்கள் இந்த கும்பகரை அருவியில் இருப்பதாக மக்களால் நம்பப்படுகிறது. இந்த அருவியில் வேறு எங்கும் இல்லாத அளவிற்கு கஜம் என அழைக்கப்படும் இடங்கள் அதிக உள்ளன. அந்த கஜங்கள் அதனுடைய வடிவமைப்பிற்கு ஏற்றவாறு உள்ளது. அண்டா கஜம், யானை கஜம், குதிரை கஜம் என பல கஜங்கள் உள்ளன. இதில் யானை கஜம் பகுதி மிகவும் ஆபத்தான பகுதி என வனத்துறையினர் தெரிவிக்கின்றனர். 
நன்றி தினகரன்

ஆண்டுதோறும் நீர் வற்றாமல் இந்த அருவியில் தண்ணீர் வருவது சிறப்பான ஒன்றாகும். இந்த அருவி வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு உள்ள நீர்வீழ்ச்சிகளுக்கு பல கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த கும்பக்கரை அருவியில் தங்கும் விடுதிகளோ, உணவகங்களோ இல்லை.
வனப்பகுதிக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் பாலிதீன் பயன்படுத்தக் கூடாது. சோப்பு, ஷாம்பு, எண்ணெய் வகைகளை உபயோகப்படுத்தக் கூடாது. மது பானங்களை கொண்டு செல்லக்கூடாது என்பது உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளை வனத்துறையினர் விதித்துள்ளனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு போதிய அடிப்படை வசதிகள் மற்றும் போதிய பாதுகாப்பு வழங்கினால் சுற்றுலா வரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. 

மேற்புறத்தில் ஒரு சிறிய அருவி இருக்கிறது. பாறையில் வழுக்காமல் கீழிறங்கினால் மேலிருக்கும் நீர் மேலும் வேகமெடுத்து கொட்டத்துவங்குகிறது. அங்கே குளித்து எழுந்தால் தலைமுடி பஞ்சு ஆகி உடலின் நஞ்சு அனைத்தும் நீங்கி கபகபவென்று பசிக்கும். கட்டுச் சோறு இல்லையென்றால் நீங்கள் காலி. என் வீட்டுக்கு நண்பர்களோ உறவினர்களோ வந்தால் முதலில் வைகை அணை, அப்புறம் மஞ்சளாறு, பின்னர் கும்பக்கரை மற்றும்  காமாட்சியம்மன் கோவில் நிச்சயம் பார்க்க வேண்டிய லிஸ்ட்டில் இடம்பெறுபவை.
தொடரும்




Thursday, February 7, 2019

தீவிரவாதப்படையில் சேர்க்கப்பட்ட ஐந்து வயது பெண் !!!!!!!!!


பார்த்ததில் பிடித்தது   
 ஃபர்ஸ்ட் தே கில்டு மை ஃபாதர்
            First they killed my Father

          
நெட் பிலிக்சில்  கிடைத்த  இன்னொரு அற்புதப்படம் இது. அமெரிக்காவுக்கும் வியட்நாமுக்கும் முடிவில்லாத உக்கிரப் போர் நடந்து கொண்டிருந்தது. கொரில்லாப்போரை எந்த ராணுவம் வெல்ல முடியும்? இருபுறமும் கடுமையான சேதம். அதே சமயத்தில் பக்கத்து நாடான கம்போடியாவில் ஒரு கம்யூனிய தீவிரவாத இயக்கமான கெமர் ரூஜ்-ன் (Khmer Rouge) போல் பாட்டின் (Pol pot)  படைகள் நாட்டை ஆக்கிரமிக்க துடித்துக் கொண்டிருந்தனர். கம்போடியாவின் ஜனநாயக அரசுக்குச்சாதகமாக அமெரிக்க ராணுவம் உதவிவந்தது.
Pol Pot
          இதற்கிடையில் வியட்நாமின் போரை நிறுத்த அமெரிக்காவில் பல போராட்டங்கள் நடத்த இந்த முடிவில்லாத போரை அப்போது அதிபராக இருந்த லிண்டன் ஜான்சன்  நிறுத்தி ராணுவத்தை தாய் நாட்டுக்கு வரவழைத்தார். அதே சமயத்தில் கம்போடியாவில் இருந்த அமெரிக்கப்படையும் வாபஸ் பெற்றதோடு தன்னுடைய கான்சுலேட்டையும் காலி செய்தது.
Loung ung
          அதன்பின் அரசுப் படைகள், கெமர் ரூஜின் தாக்குதலுக்கு தாக்குப்  பிடிக்க முடியாது ஒளிந்து ஓடினர். இது நடந்தது 1975ல். இந்தப் போராட்டத்தில் சிக்கிக் கொண்ட ஐந்துவயது இளம் பெண் தான் பட்ட கஷ்டங்களை பின்னாளில் 2000ல் ஒரு புத்தகமாக எழுதி வெளியிட்டார்.  அவர் பெயர் லுங் உங் (Loung ung) அப்புத்தகத்தின் பெயர்தான் "First they killed my Father?" அந்தக் கதைதான் 2017ல் திரைப்படமாக எடுக்கப்பட்டது.

          தீவிரவாதிகளின் ராணுவம் ஃபுனோம் பென் (Phnom Penh) என்ற கம்போடியாவின் தலை நகரில் நுழைவதிலிருந்து படம் துவங்குகிறது. அந்த ஐந்து வயதுச் சிறுமி கம்போடிய அரசின் ராணுவ உயர் அதிகாரியான ஒருவரின் ஐந்து குழந்தைகளின் கடைசிக் குழந்தை. ராணுவ கேப்டன் என்பதால் தீவிரவாத ராணுவம் நிச்சயம் சுட்டுக் கொன்றுவிடும் என்பதால் தன் அடையாளங்களையும் பாஸ்போர்ட்டையும் நீக்கிவிடுகிறான்.
          தீவிரவாத ராணுவம், யாரும் நகருள் வாழக்கூடாது எல்லோருக்கும் பொதுவான விவசாயத்தில் ஈடுபட்டு பலனை பகிர்ந்து உண்ண வேண்டும் என்ற நினைப்பில் நகர் வாழ் மக்கள் அனைவரையும் வெளியேற்றுகிறார்கள். தங்கள் சொத்து  சுகமிழந்த மக்கள் அப்படியே நடந்தே வெளியேறுகிறார்கள். போகிற வழியிலேயே பசியினாலும் தொத்து வியாதியாலும் பலர் இறந்துவிடுகின்றனர். ஒரு முகாமில் அடைக்கப்படும் அவர்கள், பகலில் கடுமையான வேலை செய்தாலும் சரியான உணவு இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள். ஏனென்றால் விளைச்சல் முழுவதும் தீவிரவாதிகளின் படைகளுக்கே சென்று விடுகின்றன.
          முகாமில் எப்படியோ தந்தையைப் பற்றி அறிந்து கொண்ட தீவிரவாதிகள் அவரைக் கொன்றுவிடுகின்றனர். மற்ற பிள்ளைகளைக் காப்பாற்ற அவளின் தாய் முடிவெடுத்து அவர்களை வெவ்வேறு திசைகளில் அனுப்பிவிடுகிறாள். அதில் 5 வயதுப் பெண்ணாகிய அவளும் 9 வயது பெண்ணான அவள் அக்காவையும் படையில் சேர்த்து கடுமையான பயிற்சியில் ஈடுபடுத்துகிறார்கள்.
          இறுதியில் மீண்டும் வியட்நாம் ராணுவம் உள்ளே நுழைந்து தீவிரவாத இயக்கத்துடன் போர் புரிகிறது. அதற்குள் கெமர் ரூஜ் இயக்கத்தின் தவறான கொள்கைகளால் 20  லட்சம் பேர் மடிந்து போயினர். இதில் யார் யார் தப்பித்தார்கள்? இந்தக் குழந்தை எப்படித்தப்பித்தது? தன்னுடைய சகோதர சகோதரர்களை கண்டுபிடித்ததா என்பதை சின்னத்திரையில் காண்க.

          இதனை இயக்கியது ஏஞ்சலினா ஜோலி என்ற ஏஞ்சல் என்பது படம் முடிந்து வந்த டைட்டிலைப் பார்த்துத்தான் தெரிந்து கொண்டேன். இது நெட்பிலிக்சின் ஒரிஜினல் படம். கம்போடிய மொழியில் தயாரிக்கப்பட்ட இந்தப்படத்தில் ஏஞ்சலினா கம்போடிய நடிகர்களை மட்டுமே நடிக்க வைத்திருக்கிறார். அதோடு இந்தச் சமயத்தில் சிக்கி உயிர் பிழைத்த பலரையும் அவர்களுடைய குழந்தைகளையும் இப்படத்தில் பயன்படுத்தியிருக்கிறார். கம்போடியாவில் ரிலீஸ் செய்யப்பட இந்தப்படம் மிகவும்  தத்ரூபமாக எடுக்கப்பட்டிருக்கிறது. சில சமயங்களில் திரைப்படமா அல்லது டாக்குமென்டரியா என்று சந்தேகம் வருமளவிற்கு படம் இருக்கிறது.

          குறிப்பாக அந்த ஐந்து வயதுக் குழந்தையாக நடித்த பெண் தன் உணர்ச்சிகளை இயல்பாகப் காட்டி லைக்ஸ்களை அள்ளிக் குவிக்கிறார். அந்தக் குழந்தைக்காகவும் ஏஞ்சலினாவுக்காகவும் இப்படத்தை அவசியம் பார்க்க வேண்டும்
-முற்றும்.
முக்கிய அறிவிப்பு: 

அலுவலகப்  பணி நிமித்தமாக மெக்ஸிகோவில் உள்ள குவடாலாஹாராவுக்கு  செல்வதால் வரும் வாரத்தில் (பெப்ருவரி 9 முதல் 16 வரை )  பதிவுகள் எதுவும் வராது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் .உங்களின்  தொடர்ந்த ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றிகள்

Tuesday, February 5, 2019

சிவாஜிக்குப்பாடிய எஸ் பி பி !!!!



இளையராஜா 75 பிறந்த நாள் சிறப்புப் பதிவு
எழுபதுகளில் இளையராஜா பாடல் எண்: 42
எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்

          இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்
https://paradesiatnewyork.blogspot.com/2018/12/blog-post.html

பட்டாக்கத்தி பைரவன் (LOL) என்ற படத்திற்காக 1979ல் இளையராஜா இசையமைத்து வெளிவந்த பாடல் இது.
நடிகர் திலகம் நடித்து வெளிவந்த இந்தப் பாடலில் அவர் டூயட் பாடி நடித்த இந்தப்பாடலைக் கேளுங்கள்.

 நடிகர் திலகத்தின் நடிப்பு எனக்கு மிகவும் பிடித்ததுதான். அவருடைய பழைய படங்களை ஒரு காலத்தில் தேடித் தேடி போய் பார்த்து அழுதுவிட்டு வந்திருக்கிறேன். ஆனாலும் நீண்ட காலத்திற்குப்பிறகு இந்தப் பாடலின் வீடியோவைப் பார்க்கும் போது அதுவும் டூயட் பாடலைப் பார்க்கும்போது கொஞ்சம் ஓவர் என்று தோன்றியது. ஆனால் பாடல் மிகவும் காதுக்கினிய மெல்லிசைப் பாடல்.
இசையமைப்பு:

பாடலின் முன்னிசையாக கிடாரின் நிரடலில் இசையால் பேச ஆரம்பிக்கிறார்  இளையராஜா. அந்த பாஷை விளங்காத ஓசையில் ஒளிந்து  கண்களை மூடிக் கேட்டால், வயலின் குழுமம் அப்படியே ஆர்ப்பரித்து, ஆரவாரித்து இசைக்க, புல்லாங்குழல் இசை வந்து தழுவிச் செல்ல, டிரம்ஸ் இசை கூட்ட, ஆண்குரலில் "எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்”. பல்லவி இனிதே முடிந்து முதல் BGM ல்  வயலினும், கீபோர்டும் கேள்விகேட்டு பதில் சொல்லி களைத்துப் போன ஒரு நொடியில் பெண்குரலில் "ஹா என்ற ஹம்மிங்குடன் தொடங்கி "நான் காண்பது" என்று ஆரம்பிக்கிறது. இரண்டாவது  BGM -ல் கீபோர்டு, வயலின், கிடார், புல்லாங்குழல் ஆகியவை புதுமையாக இணைந்து விளையாட, திறமையான இசைக் கலைஞர்கள் உட்கார்ந்து ஜாம் செய்து முடிக்க இரண்டாவது சரணம் முடிய ஆண்குரலில் அதே ஹம்மிங்குடன் ஆரம்பித்து, “கல்லானவன்”, என்று ஆரம்பித்து மறுபடியும் பல்லவி பாடி பாடல் நிறைவு பெறுகிறது. ரயில் பயணம், பைக் அல்லது சைக்கிள் பயணம், அல்லது ஜாக்கிங் ஆகியவற்றின் போது பாடுவதற்குப் பொருத்தமான பாடல் இது.
            இந்தப் பாடலைக் கேட்கும்போது இளையராஜாவின் இன்னொரு பாடலான "ஓ மானே மானே மானே உன்னைத்தானே", என்ற பாடல் ஞாபகத்திற்கு வருகிறது. இந்தப்பல்லவியையும் அந்தப் பாடலின் சரணத்தையும் சேர்த்து பாடிப்பாருங்கள். அப்படியே பொருந்தும். இப்படி இளையராஜா இசையில் நிறைய இரட்டைப் பாடல்கள் இருக்கின்றன. இளையராஜாவின் பாடலில் அவருடைய சொந்தப் பாடல்களின் சாயல் தெரிவதில் வியப்பேதுமில்லை. விவகாரம் என்பது மற்றவரின் பாடலின் சாயலில் தெரிந்தால்தானே.
பாடலின் வரிகள்:
எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்
இங்கேதான் கண்டேன் பொன் வண்ணங்கள்
என் வாழ்க்கை வானில்
நிலாவே நிலாவே..

ஹா
நான் காண்பது....உன் கோலமே
அங்கும்...
இங்கும்....
எங்கும்....!
என் நெஞ்சிலே.... உன் எண்ணமே
அன்றும்....
இன்றும்....
என்றும்...
உள்ளத்தில் தேவன்
உள்ளே என் ஜீவன்
நீ....நீ......நீ......!


ஹா
கல்லானவன் பூவாகிறேன்
கண்ணே உன்னை எண்ணி
பூவாசமும் பொன்மஞ்சமும்
என்றோ எங்கோ ராஜா
எதற்காக வாழ்ந்தேன்
உனக்காக வாழ்வேன்
நான்...
நீ.....
நாம்..
            

     
       பாடலை எழுதியவர் கவியரசு கண்ணதாசன் அவர்கள். கவிஞரின்  பொன்வரிகள் என்று ஒன்றும் சொல்லமுடியவில்லை. ஆனாலும் பாடலின் சந்தத்திற்கு எழுதுவதில் அவருக்கு இணை அவரே. வரிகள் முழுவதும் அப்படியே இசையில் உட்கார்கின்றன. "கண்ணே உன்னை எண்ணி கல்லானவன் பூவாகிறேன்" என்று சொன்னதில் கவிஞர் எட்டிப்பார்க்கிறார். அதே போல் “பூவாசமும் பொன் மஞ்சமும்”, என்று சொல்லும்போது திருமணததையும் முதலிரவையும் சுட்டிக்காட்டும்போது ஆஹா இது கண்ணதாசன் என்று தோன்றுகிறது.
பாடலைப்பாடியவர்கள்:

SPB with Ilayaraja 
சிவாஜிக்கு SPB பாலுவின் குரலும் நன்றாகவே இருக்கிறது. SPB க்கு ஜோடியாக ஜானகி கேட்கவே வேண்டாம். இருவரும் பிச்சு உதறியிருக்கிறார்கள். இது ஒரு மாதிரியான எதிரொலிப்பாடல் என்பதால் பாடுவது கொஞ்சம் சிரமம். ஆனால் இருவருமே அநாயசமாக பாடி அசத்தியிருக்கிறார்கள். இளையராஜாவின் புதிது புதிதான முயற்சியுள்ள பாடல்களில் இதுவும் ஒன்று என்று சொல்லலாம்.
இளையராஜா இசையால் ( மட்டும்) இன்னும் அதிகம் பேசவேண்டும் என விரும்பும் ஒரு ரசிகனின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் .
தொடரும்

Thursday, January 24, 2019

மானம் காத்த முல்லைத்தீவு மன்னன் !!!!!!!!!!


படித்ததில் பிடித்தது

பாயும் புலி பண்டாரக வன்னியன்

 கலைஞர் மு.கருணாநிதி ராக்ஃபோர்ட் பப்ளிகேஷன்ஸ், சென்னை.

Add caption
கலைஞர் கருணாநிதி எழுதிய இந்தப் புதினத்தை பாதி படித்துக் கொண்டு இருக்கும்போதுதான் கலைஞர் அவர்கள் தன் நீண்ட நெடிய வாழ்க்கைப் பயணத்தை முடித்துக் கொண்டார். தென்பாண்டிச் சிங்கம், ரோமாபுரிப்பாண்டியன், பொன்னர் சங்கர் போன்ற அவர் எழுதிய வரலாற்று நவீனங்களில் ஒன்றுதான் பாயும்புலி பண்டாரக வன்னியன்.
முல்லைத்தீவில் உள்ள  பண்டாரக வன்னியன் சிலை

கலைஞர் கருணாநிதியை எனக்குப் பிடிக்கும். பெரியார் வழியில் அண்ணாவிடம் பெற்ற அவருடைய சுயமரியாதைக் கொள்கை, சமூக நீதியில் பற்று, மதச் சார்பின்மை, பெண்கள் முன்னேற்றம் ஆகியவை அவரின் ஆகச்சிறந்த கொள்கைகள். அதே போல அவருடைய பேச்சு, நகைச்சுவை ஆற்றல், எழுச்சியூட்டும் திரைப்பட வசனங்கள் ஆகியவை எல்லோரையும்  கவருபவை. முரசொலியில் “தம்பிக்கு எழுதிய கடிதங்கள்” என்ற பகுதியைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். நெஞ்சுக்கு நீதி இலக்கியத்தரம் வாய்ந்த அரசியல் வரலாறு.
ஆனால் அவரின் கவிதைகள் மற்றும் வரலாற்று நவீனங்கள் கல்கியின் வரலாற்றுக் காவியங்களான பொன்னியின் செல்வன் மற்றும் சிவகாமியின் சபதம் ஆகியவற்றுக்கு ஒப்பிட முடியாது. கல்கிக்கு அடுத்த படியாக வரலாற்று நவீனங்கள் எழுதிப் புகழ்பெற்ற சாண்டில்யன் கூட ஒரு படி கீழேதான். அதற்கும் அடுத்தபடிதான் கருணாநிதியின் "பாயும் புலி பண்டாரக வன்னியன்".
இந்த நாவல் இலங்கையில் முதன் முதலில் ஆங்கிலேயருக்கு சுதந்திரக் குரல் எழுப்பிய "குலசேகரம் வைரமுத்து" என்ற பண்டாரக வன்னியன் என்ற அரசனின் வாழ்க்கையைக் கருவாகக் கொண்டது.
விக்ரமராஜசிங்கன்
இவன் இலங்கையின் தமிழர் பகுதியான முல்லைத்தீவை ஆண்டு வந்தவன். ஆங்கிலேயர் கொழும்புப் பகுதியை போர்த்துக் கீசியரை வென்று ஆக்ரமித்ததில் இருந்து இலங்கையின் மற்ற பகுதிகளையும் தங்களது ஆளுகையில் கொண்டுவர முயன்றனர். அவர்களுக்கு தீராத தலைவலியாக இருந்தது முல்லைத்தீவும் கண்டியும். இவ்விரண்டுமே சுதந்திர பகுதிகளாக இருந்ததோடு இதனை ஆண்டு கொண்டிருந்தவர்கள் பண்டார வன்னியன் மற்றும் விக்ரம ராஜசிங்கன் என்ற ஒரு தமிழ் மன்னர்கள். இருவரும் நெருங்கிய நண்பர்கள். விக்ரம ராஜசிங்கன் மதுரை நாயக்க மன்னர்களின் பரம்பரையில்  பிறந்தவன். இவன் கண்டியை ஆண்ட ராஜாதி ராஜ சிங்காவின் மகன். ராஜசிங்காவின் 2 மனைவிகளுக்கு  பிறந்த கண்ணுச்சாமி, முத்துச்சாமி என்பவர்கள் பதவிக்கு போட்டி போட்டதில் கண்ணுச்சாமிக்கு பதவி கிடைத்தது. இந்தக் கண்ணுச்சாமியின் பட்டப்பெயர்தான் விக்ரமராஜசிங்கன்.
பதவி கிடைக்காத வெறுப்பில் முத்துச்சாமி ஆங்கிலேயருடன் சேர்த்து காட்டிக் கொடுத்து வீணாய்ப்போனான்.
இந்த மாதிரி மிகவும் அறியப்படாத சில வரலாற்று நிகழ்வுகளை இந்தப்புத்தகம் மூலம் அறிந்து கொள்ள முடியும்.
பண்டாரக வன்னியின், கட்டபொம்மனின் தம்பி ஊமைத்துரை மற்றும் மருது பாண்டியர்களோடு தொடர்பில் இருந்தவன், மாவீரன். ஒரு சிறிய பகுதியை ஆண்டாலும் உயிருக்குத் துணிந்து மானமே பெரிது, அடிமை வாழ்வு வாழ்வதற்குப் பதில் உயிரைக் கொடுக்கலாம் என்று நினைத்து வாழ்ந்தவன். இளவயதிலேயே ஆங்கிலேயரை எதிர்த்து போரில் வீர சொர்க்கம் அடைந்தவன்.
ஊமைத்துரை வெள்ளையத்தேவனின் தூதுவனாக, சுந்தரலிங்கம் என்பவன் முல்லைத்தீவுக்கு வருவதில் கதை ஆரம்பிக்கிறது. அங்கேயுள்ள வற்றாப்பனை  கண்ணகி கோவிலில் நடக்கும் விசாகத்திருவிழாவிற்கு சுந்தரலிங்கம் வந்து சேருகிறார்.
மேலும் பல வரலாற்றுப் பாத்திரங்களான காக்கை வன்னியன், பிலிமதளா, பியசீலி, குருவிச்சி நாச்சி, பேட்ஜ், மெக்டோவல் ஆகியோரை கதைக்களத்தில் பயன்படுத்தியிருக்கிறார்.
கண்டி, கொழும்பு, முல்லைத்தீவு, வற்றாப்பனை, கரிக்கட்டு மூலை ஆகிய ஊர்களும் கதையில் வருகின்றன.
வரலாற்று நிகழ்வுகளை சுவைபடச் சொன்னது மட்டுமல்லாது எழுத்தில் கொஞ்சம் காமரசம் தூக்கலாகவே இருக்கிறது. ஆனாலும் வேண்டுமென்று திணித்தது போல்  தெரியவில்லை.
எழுத்து நடை கதைவசனம் போல் இருக்கிறது.  கலைஞரின் சிறப்பம்சமான அடுக்கு மொழி நடை, கவிதை நடை,  உரைநடையிலும் வெளிப்படுவது சிறப்பம்சம்.
குரங்கு சிரங்கு, வாடகை வனிதை, விழிகளில் கசியும் விஷம் போன்ற  சொல்லாடல்களை மிகவும் ரசித்தேன்.
எனக்கென்னவோ கலைஞர் சிறிது அவசரகதியில் எழுதினாரோ என்றும் தோன்றுகிறது. நிதானமாக ஒருவேளை எழுதியிருந்தால் சிறந்த கலைப்படைப்பாக உருவாகியிருக்க வாய்ப்பிருக்கிறது.
ஆனாலும் அவருக்கிருந்த வேலைப்பளுவில் பலதளங்களிலும் செயலாற்றியது வியப்பைத் தருகிறது.
கலைஞரின் உரைநடை, இலங்கையின் வரலாறு போன்றவற்றை விரும்புபவர்கள் இந்த நாவலைப் படித்து மகிழலாம்.
முற்றும்

முக்கிய அறிவிப்பு: 

அலுவலகப்  பணி  நிமித்தமாக  மெக்ஸிகோ சிட்டிக்கு செல்வதால் வரும் வாரத்தில் (ஜனவரி 28 முதல் பெப்ருவரி 1 வரை )  பதிவுகள் எதுவும் வராது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் .உங்களின்  தொடர்ந்த ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றிகள் .

Tuesday, January 22, 2019

ராமனாக வாழ்ந்து அனுமாரான குரங்கு !!!!!!




வேர்களைத்தேடி பகுதி 34
இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும். 
https://paradesiatnewyork.blogspot.com/2018/11/blog-post_26.html

தேவதானப்பட்டியில் பொதுவாக குரங்குகள் இல்லை. இதை இங்கு நான் சொல்லும்போது என்னைப்போன்று அங்கிருந்த குரங்குகளைப் பற்றிச் சொல்லவில்லை. ஆனால் தேவதானப்பட்டி,  வனப்பகுதிகளின் பக்கத்தில் இருப்பதால் மான், நரி, குரங்கு, கழுதைப்புலி, சிறுத்தை, முயல், பன்றி, காட்டெருமை , கேளையாடு, ஓநாய் போன்ற பல மிருகங்கள் பக்கத்து வனங்களில் இருந்தன. மஞ்சளாறு வனம், முருகமலை, கும்பக்கரை மலைப்பகுதி, கொடைக்கானல், காட்ரோடு என்ற பல பகுதிகளில்  அவை இருந்தன.
கூட்டமாக வாழும் குரங்கு, யானை ஆகியவற்றில் சில கட்டுப்பாடுகள் இருக்குமாம். அவற்றை மீறுபவைகளுக்கு தண்டனை என்னவென்றால் கூட்டத்திலிருந்து தனித்து விடப்படுமாம். அப்படி தனிமைப் படுத்தப்பட்ட ஒற்றை யானை எப்போதும் கோபமாக இருக்கும் . குரங்கும் அப்படித்தான்.
அப்படி ஒரு குரங்கு துரத்தப்பட்ட நிலையிலோ அல்லது வழி தவறியோ தேவதானப்பட்டிக்கு வந்து சேர்ந்தது. ஆனால் அது கோபமாக இருக்கவில்லை, யாருக்கும் பயப்படவுமில்லை, யாரையும் பயமுறுத்தவும் இல்லை. அப்படி சகஜமாக எல்லோருடனும் பழகி கலந்துவிட்டது. அதற்குப் பொருத்தமாக யாரோ ராமன் என்ற பெயரும் சூட்டினார்கள். இந்தப் பெயரைக் கேட்டதும் மூன்றாம் பிறையில் 'ஆடுறா ராமா ஆடுறா ராமா' என்ற காட்சி உங்களுக்கு வரத்தவறினால் நீங்கள் அந்தப்படத்தை இதுவரையில் பார்க்கவில்லை  என்ற மாபெரும் குற்றத்தைச் செய்திருக்கிறீர்கள்.
தேவதானப்பட்டி மெயின்ட்ரோட்டில் காவல் நிலையம் அருகிலிருந்த பிள்ளையார் கோவிலிலும் அதன் எதிரே இருந்த அரச மரத்தடியிலும் தான் அதன் வாசம். முதலில் அதனைப் பார்த்துத் தயக்கமும் பயமும் அடைந்த என்னை மாதிரி சிறுவர்களும் அப்புறம் அதனிடம் பழகி விட்டோம். பிள்ளையார் கோவிலில் கிடைக்கும் தேங்காய், வாழைப்பழம், பிரசாதம் என்று உணவுக்கு எந்தப்பஞ்சமும் இல்லாமல் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக ராமன் வளர்ந்து வந்தான். பெயர் ராமன் என்று வைத்ததால் அது ஆண் குரங்குதான் என்று தெள்ளத் தெளிவாக உங்களுக்குத் தெரிந்திருக்கும் என நினைக்கிறேன். ஹிஹி.
Thanks Reutrs
கோவிலில் பூஜை புனஸ்காரங்கள் இல்லாத சமயத்தில் பசி எடுத்தால் பெட்டிக்கடைக்குச் செல்வான்,  நிற்பான். கடைக்காரர் உடனே ஒரு வாழைப்பழத்தை தாரிலிருந்து பிய்த்துத்தருவார். அதனை நன்றியுடன் வாங்கிக் கொண்டு நகர்ந்து விடுவான்.  முறுக்கு  போன்ற எந்த தின்பண்டங்கள் கொடுத்தாலும் தட்ட மாட்டான் .அதோடு எவர் கையில் இருப்பதையும்  தட்டிப்பறிக்கமாட்டான் , ஒருபோதும் திருடவும் மாட்டான் . பசியெடுத்தால் தவிர இப்படி கடைக்குப் போவதில்லை. திரும்பத்திரும்ப ஒரே கடைக்கும்   போவதில்லை என அவனுக்கு சில நல்ல பழக்கங்களும் இருந்தன. கடைக்காரர்களும் அன்புடனே கவனித்தார்கள்.
பெயர் ராமன் என்றும் ராமனுக்கு உதவிய அனுமான் என்றும் கதைகள் சொன்னாலும், இந்த ராமனுக்கு பிள்ளையார், முத்தாளம்மன், கொண்டைத்தாத்தா, கிருஷ்ணன் மற்றும் அய்யப்பன் என்ற எந்த வித்தியாசமும் இல்லை. பெட்டிக்கடை வைத்திருக்கும் முஸ்லிம்  கடைகளிலும் அவனுக்கு அன்பும் அனுசரணையும் உண்டு. எங்கள் கிறித்தவ ஆலயத்திற்கும் ஓரிறு முறை வந்து தலை காட்டியிருக்கிறான்.
எனவே அவனுக்கு ராமன் என்ற பெயர் மட்டுமல்ல ரஹீம் மற்றும் ராபர்ட் என்று எந்தப்பெயர் வைத்தாலும் பொருத்தம் தான். மிருகங்களுக்கு ஏது சாதியும் சமயமும் எல்லாம். எல்லோருடனும் பிரியமுடனே பழகி வந்தான்.
சில சமயங்களில் அவனுக்கு யாராவது நாமம் போடுவது உண்டு. அது அவனுக்கு அழகாகவும் பொருத்தமாகவும் இருந்தது. அவன் சாதுவாகவே இருந்து எல்லோரின் அன்பைப் பெற்றவனானான்.
வாழைப்பழம் மட்டுமல்ல அந்தந்த சீசனுக்குத் தகுந்தாற்போல் கொய்யாப்பழம், மாங்கனி, சப்போட்டா,  பிளம்ஸ் என்று பல பழங்கள் அவனுக்கு கிடைக்கும்.  மேலும் வேர்க்கடலை, கப்பக்கிழங்கு, சர்க்கரை வள்ளி போன்றவையும் அவனுக்கு விருப்பமான உணவுகள் தான். இதுதவிர அவனுக்கு யாரோ காப்பி வாங்கிக்  கொடுக்க அதனையும் பழகிவிட்டான். அவனுக்கென்று சிரட்டைகளை ரெடி பண்ணி டீக்கடைகளில் வைத்திருப்பார்கள். பதமாக ஆற்றித்தருவார்கள். அதனை அவன் நன்கு உட்கார்ந்து ருசி பார்த்து உறிஞ்சிக்குடிக்கும் அழகே தனிதான். யாரோ அவனுக்கு சட்டை தைத்தும் போட்டுவிட்டார்கள். அவன் அழகு அதனால் கூடிப்போனது.
Thanks Google 
           
இது தவிர யாரோ சில மோசக்காரர்கள் அவனுக்கு சாராயத்தை பழக்கிக் கொடுத்துவிட்டார்கள். அதிலிருந்து மாலையானால் கொஞ்சம் மயக்கத்துடன் சுருண்டு படுத்துவிடுவான். நாங்கள் கூட  உடம்பு சரியில்லை யென நினைத்தோம் . ஆனால் இந்த விஷயம் பல நாட்கள் கழித்துத்தான் எங்களுக்குத் தெரிந்தது. ஓரிருமுறை பீடி குடித்தும் பார்த்திருக்கிறேன் . இப்படி நல்ல குணங்களுடன் இருந்த குரங்கை சில மானிட மிருகங்கள் மாற்றி விட்டன .
இப்படி ஊர் மக்களோடு ஒன்றாக இணைத்து அவன் வாழ்க்கை ஓடிக் கொண்டிருந்த போதுதான் அந்த சம்பவம் நிகழ்ந்தது.
இரவில் கண்மண் தெரியாமல் வந்த லாரியொன்றில் அடிபட்டுச் செத்துப்போனான் ராமன் . குடி மயக்கத்தில் லாரியில் அடிபட்டிருக்கலாம் என்றும் சிலர் சொன்னார்கள்.
ஊரெங்கும்  இதே பேச்சு, ஊரே சோகமாகி விட்டது.  அதன்பின்னர் கிருஷ்ணன் கோவில் மக்கள் அதனை நன்கு அலங்கரித்து பொதுமக்களின் பார்வைக்கு வைத்து சிறிய பாடை ஒன்று செய்து ஊர்வலமாக எடுத்துச் சென்று குளக்கரையில் இருந்த அய்யப்பன் கோவிலின் எதிரே புதைத்தார்கள். மூன்றாம் நாள் பால் கூட ஊற்றினார்கள் என்று கேள்விப்பட்டேன்.
சிறிது நாட்கள் கழித்து ஊரில் எல்லோரிடமும் வசூல் செய்து சதுரமாக இடுப்பளவு உயரத்தில் ஒரு கல்லறையையும் கட்டி இப்போது அதனை வழிபடுகிறார்கள்.
அய்யப்பன் கோவில் முன்னால் அந்த அனுமார் கோவில் இன்னும் இருக்கிறது. நீங்கள் தேவதானப்பட்டிக்குப்போனால் அங்கு இந்தக்கோவிலைப்  பார்க்கலாம். ராமனை இன்று நினைத்தாலும் கண்கள் குளமாகிவிடுகிறது.
 அடுத்த வாரம் வாருங்கள் கும்பக்கரைக்குப் போவோம்.

-தொடரும்.

Thursday, January 17, 2019

அமெரிக்காவில் தமிழ் பாரம்பரியம் வளர்கிறதா? தேய்கிறதா?

தமிழ் பாரம்பரியம் அமெரிக்காவில் வளர்கிறதா? தேய்கிறதா?

               பொங்கல் திருநாளை முன்னிட்டு அமெரிக்காவின் முதல் தமிழ் தொலைக்காட்சியான tamerica.tv யில்   சிறப்பு பட்டிமன்றம்  நடந்தது .வாஷிங்டன் பகுதி தமிழ்ச்சங்கத்தின் முன்னாள் தலைவர் அகத்தியன் பெனடிக்ட் அவர்கள் தலைமையில் நடந்த பட்டிமன்றத்தில் அடியேன் கலந்து கொண்டு பேசினேன் .
 தமிழ் பாரம்பரியம் அமெரிக்காவில் வளர்கிறதா? தேய்கிறதா?  என்ற தலைப்பில்  நடந்த இந்த நிகழ்ச்சியை கீழே உள்ள லிங்கில் காணலாம் .