Thursday, March 31, 2016

சகாயம் சந்தித்த சவால்கள் !!!!!!!!!!!!!

படித்ததில் பிடித்தது

விகடன் பிரசுரம்
ஜனவரியில் பொங்கலுக்காக நடந்த புத்தகத் திருவிழாவுக்கு செல்ல வாய்ப்புக் கிடைத்தது. மக்களுக்கும் புத்தகங்களுக்கும்  நடுவே முண்டியடித்து மேய்ந்ததில் விகடன் வைத்திருந்த ஸ்டாலில்  கண்ணில் பட்ட சகாயத்தை எட்டி எடுத்தேன் .
கே.ராஜா திருவேங்கடம் எழுதிய இந்தப்புத்தகம் டிசம்பர் 2013ல் முதலில் வெளியிடப்பட்டு, நவம்பர் 2015 ல் ஐந்தாவது பதிப்பாக வெளிவந்துள்ளது .
சகாயம் அவர்களின் சாதனைகளின் முழுத்தொகுப்பு இது இல்லையென்றாலும்  அவரின் சில முயற்சிகளையும் எழுச்சிகளையும்  கோடிட்டுக் காட்டுவதில் இந்தப்புத்தகம் நிச்சயமாக வெற்றி பெற்றிருக்கிறது. இனி படித்து, அதிர்ந்த, ஆச்சரியப்பட்டவைகளின் தொகுப்பு.
சகாயம் அவர்களை நான் சென்னையில் சந்தித்தது எனக்கு ஒரு மறக்க முடியாத நிகழ்வு .அவரின் சந்திப்பு பற்றி நான் எழுதிய பதிவைப்படிக்க இங்கே சுட்டவும் http://paradesiatnewyork.blogspot.com/2016/01/blog-post.html .

1.   P.S. ராகவன் IAS அவர்கள் எழுதியுள்ள முன்னுரையில், பல எதிர்ப்புகளிடையே இந்திய நாட்டின் முன்னேற்றத்திற்காக, சர்தார் வல்லபாய் படேல் அவர்கள் கொண்டுவந்த திட்டம்தான் IAS. ஆனால் அவருடைய நோக்கம் நிறைவேறுகிறதா? என்று கேட்கிறார் .
2.   Transparency International என்ற நடுநிலையான உலக நிறுவனம், ஊழலில் தமிழ்நாட்டுக்கு 2-ஆவது இடம் கொடுத்திருக்கிறது.
3.   பல மாநிலங்களில் வேலை பார்த்த P.S ராகவன் சொல்கிறார், "மெத்தனத்திலும், மக்களிடம் பண்பின்றி நடந்து கொள்வதிலும், பரிவின்மையிலும், தமிழ்நாட்டு நிர்வாகம் ஈரமற்ற இயந்திரமாக செயல்படுகிறது".
4.   ஆசையோடு எடுத்து வந்த மாங்காயை, காவல்காரரிடம் திரும்பக் கொடுத்துவிட்டு வா என்று சொன்ன அம்மாவிடம், உண்மையையும் நேர்மையையும் சகாயம் கற்றுக் கொண்டபோது அவர் வயது ஐந்து.
5.   "என்னிடமுள்ள சத்தியமும் நேர்மையும், சமூகத்தின் மேலுள்ள உண்மையான பரிவால் வந்தவை", என்கிறார் சகாயம்.
6.   புதுக்கோட்டை அருகிலுள்ள பெருஞ்சுனை என்ற குக்கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர் சகாயம்.
7.   கலெக்டர் ஆகவேண்டும் என்று சிறுவயதிலேயே சொலிக்கொடுத்து வளர்த்தவர் அம்மா, அப்பா, அதன்பின் பள்ளி ஆசிரியர் .
8.   புதுக்கோட்டை  கல்லூரியில் BA வரலாறு, லயோலா கல்லூரியில் முதுகலை சமூகப்பணி, சென்னை சட்டக்கல்லூரியில் BL, ஆகியவை சகாயத்தின் படிப்புகள்.
9.   "ஒரு மனிதன் நேர்மையாக இருக்க அவனுடைய குடும்பத்தின் ஒத்துழைப்பும் மிக அவசியம், அப்படி என் மனைவியும், பிள்ளைகளும் பல இன்னல்கள் வந்தாலும் எனக்கு  துணையாக இருப்பது எனக்கு கூடுதல் சக்தியைக் கொடுக்கிறது", என்கிறார் சகாயம்.
10.               வேலைக்குச் சேர்ந்து 13 வருடங்கள் வரை இவருக்கு வங்கிக்கணக்கு  கிடையாது.
11.                சகாயம் சந்தித்த முதல் சவால், அவர் டிஆர்ஓ-ஆக இருக்கும் போது பெப்சி என்ற மாபெரும் பன்னாட்டு நிறுவனத்தைப் பூட்டிப் போட்டது.
12.               தமிழ்நாட்டு மாணவர்களுக்கு நாட்டுத்தலைவர்களை விட நடிகர்களைத்தான் அதிகமாக தெரிந்திருக்கிறது.
13.               பகிரங்கமாக தன் சொத்துப் பட்டியலை வெளியிட்ட முதல் IAS அதிகாரி சகாயம்.
14.               தமிழக முதல்வராக இருந்த கருணாநிதிக்கு எழுதிய கடிதத்தில், " 21 ஆண்டுகால அரசுப் பணியில் எங்காவது சிறு ஊழல் செய்து இருந்தாலோ, ஒரு ரூபாய் லஞ்சம் வாங்கி இருந்தாலோ, என்னைப் பொதுமக்கள் முன்னிலையில் தூக்கில் போடலாம்", என்று எழுதிய நெஞ்சுரம் யாருக்கு வரும்.
15.               கோஆப்டெக்ஸில்  பணிபுரியும் போது "வேட்டி தினம்", தாவணி தினம் கொண்டுவந்து நெசவாளர்களுக்கு உதவினார்.
16.               "நேர்மை என்பது அரசுப்பணியாளர்கள் மட்டுமல்ல, முதல் குடிமகன் தொடங்கி சமூகத்தின் கடைசி மனிதன் வரை கடைபிடிக்க வேண்டிய பண்பு", என்கிறார்.
17.               சகாயம் மதுரையின் கலெக்டராக இருந்தபோது கொண்டுவந்த திட்டம் தான் உழவன் உணவகம்.


தேர்தல் வரும் இந்தச்   சமயத்தில், நம் அரசியல்வியாதிகள் எல்லோரும் இந்தப்புத்தகத்தை ஒரு முறை படித்தால் நன்றாக இருக்கும் .சகாயம் அவர்களை நான் சென்னையில் சந்தித்தது எனக்கு ஒரு மறக்க முடியாத நிகழ்வு .
        நேர்மை வழியில் நடப்பவர்களுக்கு உத்வேகத்தையும், நேர்மை வழியில் நடக்க நினைப்பவர்களுக்கு தூண்டுகோலாகவும் இது அமையும் என்பதில் சந்தேகமில்லை.

முற்றும்

2 comments:

  1. அருமை தகவல்கள்.. நன்றி..

    ReplyDelete
  2. சகாயம் இன்றைய இளைஞர்களுக்கு உத்வேகம்.!

    ReplyDelete