Monday, October 13, 2014

இளையராஜாவின் ஒரு நாள்!!

எழுபதுகளில் இளையராஜா,பாட்டு-4 ஒரு நாள் உன்னோடு ஒரு நாள்!!
1976-ல் வெளிவந்த "உறவாடும் நெஞ்சம் ", என்ற திரைப்படத்தில் அமைந்த பாடல் இது.முதலில் பாடலைக்கேட்போம்.

இசைக்கோர்வை:
கடிகார சத்தம் டிக் டிக் கென ஆரம்பிக்க,  எந்த இசையும் இல்லாமல் பெண்குரலில் பல்லவி ஆரம்பிக்கிறது.
ஒரு நாள் உன்னோடு நான் 
உறவினில் ஆட
புதுமைகள் காண
காண்போமே எந்நாளும் திருநாள்
என்று முடியும் போது காங்கோஸ் /பேங்கோஸ் டட்டட் டட்டட்டட் என்று ஆரம்பிக்க, ரிதம் கிடார் உற்சாகத்துடன் கார்டு பிடிக்க, மறுபடியும் பல்லவி, “ஒரு நாள் உன்னோடு நான்”, என்று  பாடல் சூடு பிடிக்கிறது.
பல்லவி முடிந்தவுடன் முதலாவது BGM -ல் வயலின் விளையாட்டு ஆரம்பிக்க, கிடார் ரிதம், கீபோர்டு, பேஸ் கிடார் எனக் கலவையாக துடிக்கிறது இசை. அது வயலின் ஒற்றை லீடோடு இழைந்து முடிய முதல் சரணம் ஆரம்பிக்கிறது. ஆண் குரலில், "மஞ்சளின் மகாராணி, குங்குமப் பெருந்தேவி", என ஆரம்பிக்கும்போது டிரிப்பிள் காங்கோ நல்ல தாளம் அமைக்கிறது. சரணத்தின் கடைசி இரண்டு வரி பெண் குரலில் வருகிறது.  
இரண்டாவது BGM -ல் கீபோர்டு இசை, கிடார் கார்டுடன் வந்து முடிய, 2 ஆவது சரணம் பெண்குரலில் "உன்னிடம் நான் கண்ட பெருமைகள் பலவுண்டு”, என்று ஆரம்பிக்க கடைசி இருவரிகள் ஆண்குரலில் முடிகின்றது.
3-ஆவது BGM கீபோர்டு இசையுடன் ஆரம்பித்தாலும் வயலின் விளையாட்டு உச்சஸ்தாயியை எட்டி மீண்டும் தணிய, ஒரு கிடார் கார்டு விழுந்தவுடன், 3ஆவது சரணம் பெண்குரலில் “மங்கல நாண்  வேண்டும்”, என ஆரம்பித்து ஆண்குரலில் முடிகிறது. இறுதியில் ஆண் ஒரு வரி பெண் ஒரு வரியாக மாறி மாறிப்பாட பல்லவியுடன் முடிகிறது பாடல்.  
பாடல் முழுவதும் ஆண்குரல் பெண்குரல் என சரிவிகிதத்தில் அமைக்கப்பட்ட திறமையான டூயட் பாடல் இது.
பாடலின் சூழல்:
காதலில் விழுந்த தலைவனுக்கும் தலைவிக்கும் இடையில் சிறு பிணக்கம், தலைவனின் கோபத்தையும் பிணக்கையும் மாற்ற விழையும் தலைவி வெற்றியும் காண்கிறாள். பின்னர் எதிர்கால மணவாழ்க்கையின் கனவில் முடிகிறது பாடல்.
பாடல் வரிகள்:
Panju Arunachalam
Panchu Arunachalam
வரிகள் எழுதியவர் கவிஞர் பஞ்சு அருணாசலம். கவித்துவம் அதிகம் இல்லாவிட்டாலும் சூழலுக்கேற்ற எளிய வரிகளைத் தந்துள்ளார். மூன்றாவது சரணத்தில் தலைவி தலைவனிடம் தெளிவான கோரிக்கைகளை வைக்கிறாள். “மங்கல நாண் பூண வேண்டும், மகனொன்றும் மகள் ஒன்றுமாக இரண்டு பிள்ளைகள் வேண்டும்”, என்கிறாள். “நீயென்றும் என் காவலாக இருக்க, நான் உன் வாழ்வில் கீதமாக இருப்பேன்”, என்றும் வாக்குறுதி கூறுவதாக பாடல் அமைகிறது. அதற்கு தலைவன், “ஒன்றும் கவலை வேண்டாம், காவியம் போல வாழ்ந்து ஆயிரம் நிலவைப் பார்ப்போம்”, என்று கூறுகிறான். ஆயிரம் நிலவைப் பார்ப்போம் என்றால்  ஆயிரம் மாதங்கள் அதாவது 83 வருடம் இணைந்திருப்போம் என்று அர்த்தம் வருகிறது. அதாவது வாழ்நாள் முழுவதும் என்று அர்த்தம்
குரல்:


இந்த துள்ளலான டூயட் பாடலுக்கு இணைந்த ஆதர்ஷ குரல்கள் SP பாலசுப்ரமணியம் மற்றும் S.ஜானகி. இளையராஜாவின் டியூனை முற்றிலும் புரிந்து கொண்டு அவர் எதிர்பார்ப்பதற்கும் மேலாக கொடுக்க வல்லவர்கள் இருவருமே. அப்புறம் அதன் தரத்தை சொல்லவும் வேண்டுமா? எந்த இடத்தில் இறக்க வேண்டும் எந்த இடத்தில் தாழ்த்தி ஹஸ்கியாக பாடவேண்டும் என்று தெளிவான உச்சரிப்பில் பாடி அசத்தியிருக்கிறார்கள். பாடலின் வெற்றிக்கு இவர்கள் குரலும் முக்கிய காரணம்.

4 comments:

  1. நண்பர் ஆல்பி,

    நல்ல பாடலைத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள். இளையராஜாவின் 80களுக்கு முன்பான பாடல்கள் எல்லாமே பெரும்பாலும் அருமையானவை. நீங்கள் இந்தப் பாடல் உங்களை என்ன செய்தது எழுதியிருக்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர் காரிகன்.இந்தப் பாடல் என்னை என்ன செய்தது இன்னும் யாருக்கு இது பிடித்த பாடல் என்றெல்லாம் எழுத முடியாத நிலை மன்னிக்கவும் .

      Delete
  2. மஞ்சளின் மகாராணி, குங்குமப் பெருந்தேவி, இந்த வரி ஆரம்பிப்பது மிக இனிமையாக இருக்கும். மிக நன்றி. எனக்கு விருப்பமான பாடல்.. நன்றி..

    ReplyDelete
  3. வருகைக்கு நன்றி நண்பா.

    ReplyDelete