Wednesday, January 24, 2018

நியூயார்க்கில் வாழும் எட்டாவது வள்ளல் !!!!!!!!!!!

Image result for bala swaminathan stony brook
Bala and Praba
           ஹார்வர்ட் தமிழ் இருக்கைக்கு நிதி திரட்டும் வண்ணமாக ஜனவரி ஏழாம் தேதி,  நியூயார்க்  , லாங் ஐலண்டில் உள்ள அக்பர் ரெஸ்டாரண்டில் நடைபெற்ற ஒரு மதிய உணவு நிகழ்ச்சியில்( Lunch Banquet) அடியேனும் மனைவியுடன் கலந்துகொண்டேன். தலைக்கு $250  என்ற போதிலும் நான் எதிர்பார்க்காத வண்ணம் நியூயார்க் வாழும் தமிழர்கள் பெருந்திரளாக குடும்பம் குடும்பமாக கலந்து கொண்டனர். 
Image result for bhuvana karunakaran
Bhuvana Karunakaran


இதற்கு பெரு முயற்சி எடுத்தவர்கள் நண்பர் பாலா சுவாமிநாதனும், புவனா கருணாகரன் அவர்களும். அவர்களோடு இணைந்து நியூயார்க் தமிழ்ச்சங்க தலைவர் அரங்கநாதன் , இலங்கைத்தமிழர் சங்கமான முத்தமிழ்  மன்றத்தின் தலைவர் மருத்துவர் நந்தகுமார் , தமிழ்நாடு பவுண்டேஷன் தலைவர் டாக்டர் குப்தா ஆகியோர் கொடுத்த ஆதரவுடன் சிறப்பாக நடந்து முடிந்தது .
தமிழ் இருக்கை


 சிறப்பு  அழைப்பாளர்களாக ஹார்வர்ட் தமிழ் இருக்கையை முன்னெடுத்து அதனை ஒரு உலகத்தமிழர் இயக்கமாக மாற்றிய பெருமை கொண்ட மருத்துவர் சம்பந்தம் , மருத்துவர் ஜானகிராமன், ஹார்வர்ட் தமிழ் பேராசிரியர் ஜானதன் ரிப்ளி ஆகியோர் கலந்து கொண்டனர் .இந்த நிகழ்வு மூலமாக மொத்தம் ஒண்ணே கால் லட்சம் டாலர்கள் சேகரிக்கப்பட்டது .எங்களுடைய இம்மானுவேல் தமிழ் ஆலயம் சார்பாகவும் ஒரு தொகை வழங்கப்பட்டது.
தமிழ் இருக்கை

               ஆனால் அதிசயவண்ணமாக ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டது.அது என்னவென்றால் லாங் ஐலண்டில் இருக்கும் சிறப்பு வாய்ந்த பல்கலைக்கழகமான ஸ்டோனி ப்ரூக்கில் நண்பர் பாலா சுவாமிநாதன் தன் சொந்த செலவில் ஒரு தமிழ் இருக்கையை உருவாக்கி இருக்கிறார் என்பதே அந்தச்செய்தி. இவர் ஏற்கனவே ஹார்வர்ட் தமிழ் இருக்கைக்கு கொடுத்தைப்பற்றி உங்களிடம் சொல்லியிருக்கிறேன் . தன் கொடையால் அரசையும் மிஞ்சிவிட்ட நண்பர் பாலாவுக்கு , அரங்கநாதன் , புவனா முயற்சியில் ஜனவரி 14ஆம் தேதி பொங்கல் தின மாலையில் ஹெரிடேஜ் இந்தியா என்ற உணவகத்தில் ஒரு சர்ப்ரைஸ்  பார்ட்டி கொடுத்தோம் .அதிலும் நண்பர்கள் திரளாய் வந்து பாலாவை பாராட்டு மழையில் நனைய விட்டனர் .அந்தச்சமயத்தில் அடியேன் வாசித்த கவிதையை கீழே கொடுக்கிறேன்    
With Ranga and Bala

மூச்சுக்கொடுத்த ஆண்டவனுக்கும்
பேச்சுக் கொடுத்த  தமிழ் அன்னைக்கும்
வாய்ப்புக் கொடுத்த அவைக்கும்
வணக்கங்கள் பலப்பல

பொங்கல் திருநாளில்
உங்கள் உள்ளத்திலும் இல்லத்திலும்
மகிழ்ச்சி பொங்கட்டும்
பொங்கல் வாழ்த்துக்கள் !!!

அதன் காணொளியைக்காண இங்கே க்ளிக்கவும்




                                                 
                                                  Courtesy: Pastor Johnson Rethinasamy.

பாலாவுக்கு நன்றி சொல்லி
பாடவந்தேன் இந்த பரதேசி !

தட்ட வேண்டிய இடங்களில் தட்டுங்கள் - கைகளைத்தான்,
குட்ட வேண்டிய  இடங்களில் குட்டுங்கள் - மேசையைத்தான்.

சங்கம் வளர்த்த
தங்க மாமதுரையில்
அங்கம் வளர்த்தவன் நான்!
(ஆனால் அவ்வளவாக வளரவில்லை)

ஆனால் பாலாவோ அதே
சங்கம் வளர்த்த
தங்க மாமதுரையில்
அறிவை வளர்த்தவர்
அதுதான்  இப்போது
வளர்ந்து கிளர்ந்து உயர்ந்து
தமிழை வளர்க்கிறது!

தமிழ்ப்பணி செய்வதில்
பாலா ஒரு கெத்து வெட்டு!
ஆனால் இந்தப்
பரதேசி ஒரு வெத்துவேட்டு!

மதுரை மண்ணில் ஒருமுறை
வலம் வந்தாலே
செம்மண் புழுதியும் அப்பிக் கொள்ளும்
செம்மொழித் தமிழும் ஒட்டிக் கொள்ளும் 
- இதில் சிக்கிய ஒருவர்தான் ஜானத்தன் ரிப்ளி

எனில் அங்கேயே
பிறந்து தவழ்ந்து
எழுந்து இருந்து
வளர்ந்து உயர்ந்த
பாலாவை தமிழ் சும்மா விடுமா?

இந்த பாலா யார்?

பள்ளி கொண்ட பெருமாள் சுவாமி
பாருக்கே தெரியும் ஆனால்
பள்ளி கண்ட பெருமாள் சுவாமி
யாருக்குத் தெரியும்? அது நம்ம
பாலா சுவாமிதான்
அவர் பள்ளி கொண்டது திருப்பாற்கடலில்
இவர் பள்ளி கண்டது அட்லாண்டிக் கடலில் (ஸ்டோனி புரூக்  )

முதல் இடை கடைச்சங்கங்கள் தெரியும்
இப்போது அமைந்திருப்பது கடல்ச் சங்கம் இந்தக்
கடற்சங்கத்தை அமைத்த
எட்டாவது வள்ளல்
என் தோழன் பாலா

பாலா ஒரு சிங்கம்
வீறு கொண்டு நடக்கும் சிங்கமல்ல - ஆனால்
நடக்குமிடமெல்லாம் தமிழ் முத்திரை பதிக்கும்  சிங்கம்
மீசை முறுக்கி வீரம் காட்டும் சிங்கமல்ல, தமிழ் மேல்
ஆசை காட்டி விவேகம் வளர்க்கும் சிங்கம்
பெருமை பேசி கர்ஜிக்கும் சிங்க மல்ல
நாக்கை நாசூக்காகக் கடித்து தமிழ் நலன் பேசும் சிங்கம்

பாலா
புகழ் உனக்குப் பிடிக்காது. ஆனால்
புகழுக்கு உன்னை ரொம்பப்பிடிக்கும்.


இப்போது பிரபா பற்றி (பாலாவின் மனைவி)
பிரபாவின் கண்களில் எப்போதும்
ஒரு சிறு மின்னல் மறைந்திருக்கும்
அதில் ஒரு குறு நகை உறைந்திருக்கும்
அது யாரிடமிருந்து யாருக்கு வந்தது?
பாலவிடமிருந்து பிரபாவுக்கா? இல்லை
பிரபாவிடமிருந்து பாலாவுக்கா?

இவரைப் பார்க்கும்போது
அள்ளிக்கொடுக்கும் பாலாவுக்குச்
சொல்லிக் கொடுப்பவர் போலவே தெரிகிறது.

ஆம்
இவரைப் பார்த்தால்
தட்டிக் கேட்பவர் போலத் தெரியவில்லை
தட்டிக் கொடுப்பவர் போல்தான் தெரிகிறது.
பிரபா, இதுதான்
உன் தமிழ் மரபா?

மனைவி அமைவதெல்லாம்
இறைவன் கொடுத்த வரம் என்பர் -ஆனால்
பாலாவுக்குப் பிரபா
அன்னை கொடுத்த வரம்
தமிழ் அன்னை கொடுத்த வரம்!

தமிழ்ச்சங்கம் கண்டவன் பாண்டியன்
தமிழ்ப்பள்ளி கண்ட பாலாவும் பாண்டியன் தான், அதைப்
பாட்டில் சொன்ன பரதேசியும் பாண்டியன் தான்.

பொங்கலின் இனிப்பு போல
உன் வாழ்க்கை என்றும் இனிக்கட்டும்
தமிழின் சிறப்பு போல
உம் வாழ்க்கை என்றென்றும் சிறக்கட்டும்
தையும் பிறந்தது
புது வழிகளும் திறக்கட்டும்
தமிழ் இருக்கைகளும் அமையட்டும்.

ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும்
ஆதவன் மறைவதில்லை
ஆயிரம் மைல்கள் கடந்து வந்தாலும் நம்மில்
அன்னைத் தமிழ் குறைவதில்லை

தமிழால் இணைவோம்
தமிழாய் முனைவோம்
தமிழாய் வாழ்வோம்

வாழிய செந்தமிழ்
வாழ்க நற்றமிழர்
வாழிய பாரத  மணித்திரு நாடு
வாழிய புகுந்த அமெரிக்க நாடும்
நன்றி வணக்கம்





24 comments:

  1. உங்கள் கவிதை அழகு. படித்த‌ விதத்தையும் ரசித்தேன். :‍)

    பத்திரிகையில் இதே விடயத்தை செய்தியாகப் படித்தால், அது வெறும் செய்தி. நீங்கள் முக்கியத்துவம் கொடுக்க‌ வேண்டிய‌ விடயத்தை விளக்கமாக‌ எழுதியிருக்கிறீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் ரசனைக்கு தலை வணங்குகிறேன் சகோதரி இமா .நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் ?

      Delete
    2. :-) தாய்நாடு இலங்கை. கடந்த‌ பதினெட்டு வருடங்களாக‌ வசிப்பது நியூஸிலாந்தில்.

      Delete
    3. ஓ பக்கத்தில் இருந்தால் சந்திக்கலாமே என்று நினைத்தேன் .

      Delete
  2. பாலாவை பாராட்ட வார்தைகளே இல்லை..... அவர் நீடுடி வாழ வாழ்த்துகிறேன்

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்களுக்கு நன்றி மதுரைத்தமிழன் , அவரிடம் சொல்லிவிடுகிறேன்.

      Delete
  3. கவிதை அருமை அனைவர்க்குகும் நன்றி

    ReplyDelete
  4. ஹார்வர்டு இருக்கை அமைப்பதில் புலம் பெயர்ந்த தமிழர்கள் ஆற்றி வரும் பணி மகத்தானது. இவ்வரிய பணியில் திரு.பாலா அவர்கள் ஆற்றிய பங்களிப்புப் பற்றி ஓரளவு தெரிந்து கொள்ள தங்கள் கட்டுரை உதவியது. திரு.பாலா பற்றி தாங்கள் பிரசுரித்துள்ள கவிதையில் காணும் செய்திகள் சற்றும் மிகைப்படுத்தப்படாத உண்மை என்று புரிந்தது. இந்த மதுரை மண்ணின் மைந்தர் வாழ்க வளமுடன் என நானும் வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்களுக்கு நன்றி முத்துசாமி .

      Delete
  5. Kavidhai arumai. Aanaal pattu thalaivarai pugazha pulavar thannai thaaney thazthikkolla vendiyadhillai. Paattu thalaivar indha varthaigalukku mikka thagudhi vaindhavar enbadhil iruveru karuthugal illai.

    ReplyDelete
    Replies
    1. கவிதை பாட்டுத்தலைவனைப்பற்றித்தான் என்பதால் பாட்டு எழுதியவன் இங்கு முக்கியமில்லை சுதாகர்.

      Delete
  6. Belonging to The sixth race of humanity

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. வாழும் வள்ளல்கள் .. தமிழ் என்றும் உங்களை மறவாது

    ReplyDelete
  9. Replies
    1. நன்றி பார்கவ் கேசவன்.

      Delete