Monday, August 21, 2017

கண்டி புத்தர் கோவிலைத்தாக்கிய விடுதலைப்புலிகள் !!!!!!!!!!

இலங்கையில் பரதேசி -20
இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்.
http://paradesiatnewyork.blogspot.com/2017/07/blog-post_24.html

Related image
JVP Leaders
1998ல் விடுதலைப்புலிகள் புனிதப் பற்கோவிலைத் தாக்கினார்கள் என்று சொன்னேன். ஆனால் அதற்கு முன்னமே 1989ல் JVP என்று சுருக்கமாக அழைக்கப்படும் "ஜனதா விமுக்தி பெரமுனா" என்ற அமைப்பு இதனைத் தாக்கியதாம். இந்த அமைப்பு யாரென்றால், இது ஒரு மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்த ஒன்று. ML  என்றாலே சில நக்ஸல்பாரி இயக்கங்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருப்பவர்கள் அல்லது தீவிரமாக இயங்குபவர்கள் என்று உங்களுக்குத் தெரியும். இவர்களுடைய நோக்கம் சமத்துவ சமுதாயம் அமைய வேண்டும் என்று இருந்தாலும், இவர்களுடைய வழிமுறைகள் எல்லோரும் ஏற்றுக் கொள்ளக் கூடியவை அல்ல. அதோடு வன்முறைப்பாதை என்பது எப்போதும் முடிவில் நல்ல பயனை ஈட்டாது.
1989-ஆம் ஆண்டு ஃபெப்ரவரி 8ஆம் தேதி இந்தத் தாக்குதல் நடந்தது. ஜெ.வி.பி யின் ஆயுதப்புரட்சிப்படை இதனை நடத்தியது.
Related image
IPKF Opertions
80களில் இலங்கையின் வடக்கு மற்றும் தெற்குப் பகுதியில் தமிழ் ஈழம் வேண்டி ஆயுதப்புரட்சி ஏற்பட்டது. விடுதலைப்புலிகள் அமைப்பு தவிர பல்வேறு தமிழர் அமைப்புகள் இதில் ஈடுபட்டு தாக்குதல்களை நடத்தி வந்தன. பொதுச் சொத்துக்கள் சேதமடைந்தன மற்றும் பொதுமக்களும் இதனால் பெரிதும் பாதிப்படைந்தனர். ஒரு கட்டத்தில் தமிழ் விடுதலைக் குழுக்கள் தங்களுக்குள் அடித்துக்கொண்டு ஒருவரை ஒருவர்  அழித்துக்கொண்டதோடு தமிழர் தலைவர்களையும் கொன்று குவித்தனர்.   அச்சமயத்தில் 1987 ஆம் ஆண்டு இந்தியா இதில் தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தி போர் நிறுத்தத்தைக் கொண்டு வந்தது. இதனைக் கண்கானிக்கவும், ஆயுதப் பரவலைத் தடுக்கவும் இலங்கையிடம் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தத்தின்படி, இந்திய அமைதிப்படை (Indian Peacekeeping  Force) இலங்கைக்கு வந்தது. ஆனால் சில காரணங்களால் அத்து  மீறிய இந்திய ராணுவம் அமைதி ஏற்படுத்துவதைத்தவிர மற்ற எல்லாவற்றையும் செய்தது தனிக்கதை. ஒருபக்கம் இது நடந்து கொண்டிருக்கும்போது ஜனதா விமுக்தி  பெரமுனா மற்றும் மற்ற இலங்கை சிங்கள தேசிய அமைப்புகள், இந்திய ராணுவத்தலையீட்டை இலங்கையின் இறையாண்மைக்கு எதிரான செயலாகப்  பார்த்தார்கள். வட தென் பகுதிகளுக்கு முழுவதுமாய் சுதந்திரம் கிடைத்ததுவிடுமோ என்ற  பயமும் அவர்களுக்கு இருந்தது.
Image result for sirimavo bandaranaike
சிரிமாவோ பண்டாரநாயகே
இதே ஜெ.வி.பி தான்  1971- ல் சிரிமாவோ பண்டாரநாயகே ஆட்சியில் இருக்கும்  போது நாட்டை ஆக்கிரமிக்க முயற்சி செய்தது. ஆனால் அது தோல்வியில் முடிந்தது. மீண்டும் ஜெ.வி.பி 1987ல் ஐக்கிய தேசியக்கட்சியின் ஆட்சியை கவிழ்க்க முயன்றது. இப்படி பதற்றம் நிலவிய சமயத்தில் ஜெ.வி.பி யின் புரட்சிப் படைப்பிரிவான “தேச பிரேமி ஜனதா வியாபரயா” என்ற  அமைப்பு அரசு அலுவலகங்கள் மற்றுமின்றி பொதுமக்களின் நிலைகளிலும் பல்வேறு தாக்குதல்களை நடத்தியது. பல பொது இடங்களைத் தாக்கியதோடு, யாரெல்லாம் அரசுக்கு ஆதரவாக இருந்தார்களோ அவர்களும் தாக்கப்பட்டனர். 1989 பிப்ரவரி 8ஆம் தேதி புனிதப்பற்கோவில் தாக்கப்பட்டது. இதே குரூப்தான் 1987ல் பாலே கெலே ராணுவ முகாமையும், 1987ல் போகம் பரா சிறையையும், திகானோ பேங்கையும் தாக்கியது.  
பற்கோவிலைத்தாக்கி புனிதப்பல்லை கவர்ந்து செல்வதாகத் திட்டம்.1700 வருடங்களாக இருக்கும் அந்தப்பல்லை எடுத்துவிட்டால் பொதுமக்களுக்கு அரசுமேல் அதிருப்தி ஏற்படும். அரசால் மக்களை பாதுகாக்க முடியவில்லை என்ற  நினைப்பு தோன்றும், கிளர்ச்சிகளும் ஏற்படும் என்ற எண்ணத்தில் தான் அப்படிச் செய்தார்கள். ஏனென்றால் புனிதப்பல்தான் அதிகாரத்தின் அடையாளமாக இருந்ததை ஏற்கனவே நாம்  பார்த்திருக்கிறோம்.
          ஆனால் அவர்களின் முயற்சி முறியடிக்கப்பட்டது. தாக்குதல் நடத்தியவர் உட்பட 5 பேர் கொல்லப்பட்டனர். ஜே.வி.பி. தாங்கள்  இந்தத் தாக்குதலை நடத்தவில்லை என்று அறிக்கை விட்டாலும் அதனை யாரும் நம்பவில்லை.
இந்தப் புனிதப்பல் அதுவும் அஹிம்சையை போதித்த புத்தரின் பல்லுக்காக எத்தனைபேர் மடிந்திருக்கிறார்கள் இன்னும் மடிந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை நினைத்தால் அதிர்ச்சியாக இருக்கிறது. சரி விடுதலைப்புலிகள் தாக்கிய கதைக்கு வருவோம் .
Image result for jaffna fort
Jaffna Fort
1983ல் வேகம் பெற்ற விடுதலைப்புலிகள் இயக்கம், 2009 வரை அசைக்க முடியாத    மாபெரும் சக்தியாக இருந்தது, கப்பற்படை, விமானப்படை உள்ளடக்கிய முப்படை கொண்ட சக்தியாக இருந்தது. மற்ற தமிழீழ விடுதலைப் படைகள் ஒன்று வீரியம் இழந்து போன அல்லது புலிகளால் அழிக்கப்பட்ட அல்லது வீரம்போய் சோரம் போக, விடுதலைப்புலிகள் அமைப்பு தனிப்பெரும் இயக்கமாக வளர்ந்தது. 1990களில் இந்த உள்நாட்டுப் போர் உச்சக்கட்டத்தில் இருந்தது. வடக்குப்பகுதிகளில் தனி அரசாங்கம் நடத்தும் அளவுக்கு வளர்ந்தனர் விடுதலைபுலிகள். ஆனால் அந்த நிலைக்கு பேரிடியாக இலங்கை ராணுவம் 1995ல் பல ஆண்டுகளாக புலிகள் கைவசம் இருந்த யாழ்ப்பாண வளைகுடாப் பகுதியைப் பிடித்துக் கொண்டது. ஆனால் 1996ல் புலிகள் மீண்டும் பெருந்தாக்குதலை நிகழ்த்தி முல்லைத் தீவுப் பகுதியை பிடித்துக் கொண்டனர். இலங்கை ராணுவத்திற்கு  பெருத்த ஆட்சேதம் ஏற்பட்டது. அதன்பின் 1999ல் இலங்கை ராணுவம் "ஆப்பரேஷன் ஜெயசிக்குரி" என்ற பெயரில் தொடர் தாக்குதல் நடத்தி இழந்த பல பகுதிகளை மீண்டும் வென்றெடுத்தனர். அந்த சமயத்தில்தான் விடுதலைப்புலிகள் பல தற்கொலைத் தாக்குதலை நடத்தியது.
Image result for ltte prabhakaran

1998ல் இலங்கை தன்னுடைய 50 ஆவது சுதந்திர பொன் விழாவைக் கொண்டாட ஆயத்தமானது. கிரேட் பிரிட்டனிடமிருந்து விடுதலை பெற்று 50 ஆண்டுகள் நிறைவு பெற்றதை ஒட்டி அங்கிருந்தே ஒரு சிறப்பு விருந்தினர் வந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்து வேல்ஸ் இளவரசர் சார்லஸை சிறப்பு விருந்தினராக அழைத்தனர். அவரும் வருவதாக ஒப்புக் கொண்டார். அது தவிர இன்னும்  பல வெளிநாட்டு பிரமுகர்களும் விழாவில் கலந்து கொள்ள சம்மதித்தனர்.
மத்திய மலைப்பகுதியில் இருக்கும் கண்டியில் இந்த விழா நடந்தால் நன்றாக இருக்கும் என அரசு நினைத்து அதற்கான ஏற்பாடுகளைச்  செய்தது. பிப்ரவரி 4ஆம் தேதி அந்த விழா நடப்பதாக இருந்தது.
இது இப்படி இருக்க, வருகின்ற வெளிநாட்டுத் தலைவர்கள் இலங்கையில் அமைதி திரும்புகிறது என்று நினைக்கவும் நாடு அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்று காண்பிக்க, ஜனவரி 28ல் நடக்கும்படி யாழ்ப்பாண நகருக்கு தேர்தலை அறிவித்தனர். அதற்கு முன்னால் 16 வருடங்கள் அங்கு தேர்தல் எதுவும் நடைபெறவில்லை. ஆனால் கிளிநொச்சி பகுதியில் கடுமையான போர் நடந்து கொண்டு இருந்தது. அந்த சமயத்தில்தான் விடுதலைப்புலிகள் இந்த புனிதப் பற்கோவிலை அழிக்கும் பெரிய தாக்குதலைத் திட்டமிட்டனர்.

- தொடரும்.


3 comments: