Tuesday, September 8, 2015

ஆடி அடங்கும் வாழ்க்கையடா மூன்றடி நிலமே சொந்தமடா !!!!!

Random Photo from Google search , not the same lady .
நேற்று காலையில் வரும்போது அந்த மூதாட்டியை அங்கு காணோம். அனுதினமும் நான் அலுவலகம் செல்லும் போது ஃபாச் புலவர்டில் (Foch Boulevard) அந்த ஆப்பிரிக்க அமெரிக்க அம்மாவைப்பார்ப்பேன். தன் வீட்டில் உள்ள திண்ணையில் அமர்ந்து என்னைப்பார்த்து புன்னகைத்து “குட் மார்னிங்: என்றும் "இஸின்டிட் எ குளோரியஸ் டே", "வாட் எ பியூட்டிஃபுல் மார்னிங்", இட்ஸ் எ பிரைட் டே" என்று சொல்ல நான் பதிலுக்கு "எஸ் இண்டீட்" என்று சொல்லிவிட்டு, "ஹேவ் எ நைஸ் டே", என்று வாழ்த்திவிட்டுச் செல்வேன். இப்படி என் தெருவெங்கும் ரிடையர்டு மக்கள் உட்கார்ந்திருப்பார்கள். அனைவருக்கும் குறைந்தபட்சம் குட்மார்னிங் சொல்வது என் வழக்கம்.
இந்த மூதாட்டியிடம் மட்டும் சில நிமிடங்கள் பேசி விட்டுச் செல்வேன். சில சமயங்களில் பார்த்திருக்கிறேன், அந்த அம்மாவின் மகன் கைத்தாங்கலாக வெளியே கொண்டு வந்து, பொத்தினாற்போல் அந்த சேரில் உட்கார வைப்பார். "என்னுடைய பைபிள் ?" என்று ஞாபகமாகக் கேட்டு, கொண்டு வரச் செய்து தன் மடியில் வைத்துக் கொண்டு தன் இடுங்கிய கண்களால் படிக்க ஆரம்பிக்கும் அந்தம்மா இப்படி எத்தனை நேரம் அமர்ந்திருப்பாள் என்று தெரியாது. ஏனென்றால் மாலையில் நான் வீடு திரும்பும்போது ஒரு முறை கூட பார்த்ததில்லையே. அந்த மூதாட்டிக்கு குறைந்த பட்சம் 90 வயது இருக்கும்.
அமெரிக்கர்களுக்கு இரவு உணவு 6 மணிக்குள் முடிந்துவிடும். எனக்கு வீடு வந்து சேரவே எட்டுமணியாகிவிடுகிறது. அப்புறம் எங்கே உடல் நலத்தைப் பேண முடியும்.
நியூயார்க்கின் சராசரி வயது 92 வயது என்று படித்திருக்கிறேன். இது இங்கு வாழும் என்னைப் போன்ற முதல் தலைமுறை இந்தியர்களுக்கு கண்டிப்பாக பொருந்தாது. நல்லவேளை சாமி தப்பிச்சேன், எதற்கு அத்தனை வயது உயிர் வாழ்ந்து கஷ்டப்படவேண்டும் . இந்தியனாக பிறந்ததில்  இது ஒரு நல்ல அட்வான்டேஜ்.
இன்றும் மிஸ் காக்ஸை காணவில்லை. எனக்கு மனசு என்னவோ போலிருந்தது, வாரத்தில் வேலை நாட்களான திங்கள் முதல் வெள்ளி வரை அனுதினமும் கோடை மற்றும் இலையுதிர்கால சீசன்களில் பலவருடங்களாகப் பார்த்த மூதாட்டியை இன்று பார்க்க முடியவில்லை.
இன்று மாலை வீடு திரும்பும்போது, தற்செயலாகக் கண்ணில்பட்ட மிஸ் காக்ஸின் மகனிடம் விசாரித்தேன். போன சனிக்கிழமை இறந்துபோனதாகச் சொன்னார். இறந்துபோய் நான்கு நாட்கள் ஆகிவிட்டன. ஒன்றுமே தெரியவில்லை.
          இங்கு மரணம் கூட அமைதியாகவே நகர்ந்து விடுகிறது. உறவினர் கூட்டம் இல்லை. ஒப்பாரிச்சத்தமும் இல்லை. இறந்து போன உடலும் கூட இல்லை. மைக் செட் இல்லை. சோகப்பாடல் இல்லை. பாடை இல்லை, தேர் இல்லை, அலங்காரம் இல்லை, சங்கு, சிகண்டி, தாரை தப்பட்டை என்று இறப்பின் எந்தச்சுவடும் இல்லை.
பல வயதானவர்கள் இங்கு தனியாகவே வாழ்கிறார்கள். ஞாயிற்றுக்கிழமை சர்ச்சுக்குப் போவதற்கு மட்டும் வீல்சேர் ஆக்சஸ் உள்ள வண்டியை புக் செய்து சென்றுவிட்டு வருவார்கள். குளிர் காலங்களில் வெளியே கூட வரமுடியாது. இருக்கிறார்களா செத்து விட்டார்களான்னு   கூட தெரியாது.ஆனால் இறந்து போனால் உடல் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பப்படும். உடல் சோதனைகள் முடித்து, உறுப்புகள் தானம் இருந்தால் அதையும் முடித்துவிட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும். அதற்கெல்லாம் செமத்தியாக சார்ஜ் செய்துவிடுவார்கள்.


உடலை வீட்டுக்கு எடுத்து
வர அனுமதியில்லை. உடல் அங்கிருந்து நேராக உறவினர் தேர்ந்தெடுக்கும் ஃபியூனரெல் ஹோம்-க்கு (Funeral Home) எடுத்துச் செல்லப்பட்டு, பிணவறையில் வைக்கப்படும். அந்த மணித்துளியிலிருந்து கட்டணம் ஆரம்பிக்கும்.
அதன்பின் அந்த ஹோம் மேனேஜர் உறவினருடன் உட்கார்ந்து இறுதிச்சடங்கை திட்டமிடுவார். ஒரு முறை sorry சொல்லி ஆரம்பித்துவிட்டு விதவிதமான முறைகளையும் கட்டணங்களையும் அடுக்குவார்.
உடனடியாக செய்ய வேண்டியது, உடல் பதப்படுத்தல் (Embalming). ஒரு நல்ல புகைப்படத்தைக் கொடுத்து நிறம் உடையெல்லாம் மேட்ச் செய்ய வேண்டும். மிகக் கவனமாக நல்லதொரு முக அமைப்பு, நிறம் தெரியும் புகைப்படம் கொடுக்க வேண்டியது அவசியம். இல்லையென்றால் Embalming முடிந்துவரும் உடல் அடையாளமே தெரியாத அளவுக்கு மாறிவிடும்.
Viewing Room
அடுத்தது வியூவிங் (Viewing) திட்டமிட வேண்டும். உறவினர் நண்பர் வந்து இறுதி மரியாதை செய்வதற்கு நேரமும் இடமும் ஒதுக்குதல் தான் இது. வரப்போகும் கூட்டத்தைப் பொறுத்து அந்த ஹோமில் உள்ள பல சைஸ் ரூம்களில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம். எவ்வளவு நேரம் வியூவிங் என்பதையும் எந்த மாதிரி ரீத் வைக்க வேண்டும் என்பதையும் தீர்மானிக்க வேண்டும். ரூம் சைஸ், எவ்வளவு நேரம் என்பதற்கிணங்க கட்டணம் வசூலிப்பார்கள். வியூவிங் நேரம் தவிர மற்ற நேரங்களில் உறவினர் கூட உடலைப் பார்க்க முடியாது.
அதற்கு முன்பதாக பெட்டியை தேர்ந்தெடுக்க வேண்டும். பெட்டி 500 டாலரிலிருந்து 50,000 டாலர் வரை விலையுள்ளதாக இருக்கிறது. அவரவர் வசதி போல தேர்ந்தெடுக்கலாம். பின்னர் புதைப்பதா எரிப்பதா என்பதை முடிவு செய்ய வேண்டும். அதன் பின்னர் புதைக்கும் இடத்தை முடிவு செய்ய வேண்டும். அதற்கு அவர் கேட்டும் முதற்கேள்வி, படுக்க வைப்பதா, நிற்க வைப்பதா என்று? ஏனென்றால் படுக்க வைத்தால் ஆறடி வேண்டும், நிற்க வைத்தால் மூன்றடி போதுமே. ஏனென்றால்  ஒவ்வொரு இன்ச்சுக்கும் விலை உண்டே.
அடப்பாவிகளா ஆடி அடங்கும் வாழ்க்கையில் ஆறடி நிலமும் இங்கு கிடைக்காது போல. இப்ப புரியுதா , தலைப்பில்  ஏன் ஆறடி நிலம் என்பதற்குப்பதிலாக மூன்றடி என்று குறிப்பிட்டேன் என்று.  அதன் பின்னர் எந்த வாகனத்தில் கொண்டு செல்வது என்று முடிவெடுக்க வேண்டும். உடலுடன் செல்ல ஒருவருக்கும் அனுமதியில்லை தனித்தனி வண்டிகளில் பிண ஊர்தியை தொடர்ந்து செல்லலாம். நெருங்கிய உறவினர்கள் கறுப்பு லிமோசனில் வருவார்கள். வசதிக்கேற்ப அதற்கு ஒரு மணி நேரத்திற்கு 500 டாலர் சார்ஜ் செய்வார்கள்.
The%20funeral%20procession%20for%20former%20First%20Lady%20Betty%20Ford%20probably%20had%20a%20police%20escort%2C%20but%20not%20all%20funeral%20processions%20do.%20Here%20are%20tips%20on%20how%20to%20drive%20in%20one.%20%28Robyn%20Beck/Getty%20Images%29

தொடர்ந்து வரும் எல்லா வண்டிகளுக்கும் "Funeral"  என்ற ஸ்டிக்கர் ஓட்டி வரிசையாக ஊர்வலம் செல்லும். அந்தக் கார்கள் எல்லாம் பிளின்ங்கர்ஸ் போட வேண்டும். சாலையில் செல்லும் மற்றக் கார்களுக்கு இது ஃபியூனரெல் என்று தெரிவதற்காக இந்த ஏற்பாடு. இதற்கெல்லாம் குறைந்தபட்சம் 10000 டாலர் ஆகும். அதிகபட்சத்திற்கு கணக்கே இல்லை.

அதன்பின் கல்லறை கட்ட, கட்டடம் கட்ட, நினைவுத்தூண், மார்பிளில் பெயர் வைக்க என்று தனித்தனி செலவுகள் உண்டு. எனக்கு இந்த ஹோமைப்பார்க்கும்போதெல்லாம் ஒரு சந்தேகம்  வரும். இதன் ஒனெர்கள் சாமி கும்பிடும்போது என்ன சொல்லி கும்பிவார்கள் என்று? ” சாமி இந்த மாசம் நல்ல பிசினஸ்  கொடுங்க, இந்த ஏரியாவில் , நிறைய சாவு விழனும்னா ?”
மொத்தத்தில் அமெரிக்காவில் நாங்களெல்லாம் யானையை விட மேலே. இருந்தாலும் பத்தாயிரம் பொன், இறந்தாலும் பத்தாயிரம் பொன்.  நம் வாழ்க்கையை பின்னோக்கிப் பார்த்தால் இதுவரை நான் வாழ்ந்தோமா? என்றே தெரியவில்லை.  
இந்தக் குறுகிய வாழ்க்கையில் எத்தனை சண்டைகள், மனஸ்தாபங்கள், வைராக்கியம், வஞ்சம், பழி வாங்குதல், பிரிதல், முறிதல் நினைத்தால் சிரிப்பு வரவில்லை.
அதன் பின் அந்தப்பக்கம் நடந்ததில் அந்த மூதாட்டியின் வீடும் அதனுள்ளே பொருட்களும் விலைக்கென்று போட்டிருந்தது. உள்ளே  சென்றேன். அந்த எளிய மூதாட்டியின் மிச்சங்கள் ஆங்காங்கே இருந்தன. ஒரு மூலையில் குப்பையோடு குப்பையாக அந்த மூதாட்டியின் பைபிள் கிடந்தது. அதனை எடுத்து "என்ன விலை ?" என்று மகனிடம் கேட்டேன். "இஃப் யு வாண்ட், டேக் இட், இட்ஸ் ஃப்ரீ". என்றார்.  
Leather-bound Bible

அந்த பைபிளை எடுத்துக் கொண்டு வெளியே வந்தேன். அந்த பைபிள் வெகுவாக கனத்தது. என் மனது அதைவிட கனத்தது.

முற்றும்.

17 comments:

  1. என் மனமும் கனத்து விட்டது.. :(
    அன்னாரது ஆன்மா அமைதி கொள்ளட்டும்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கு நன்றி நண்பா.

      Delete
  2. பாட்டியின் ஆத்மா சாந்தியடையட்டும்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கு நன்றி தனிமரம்.

      Delete
  3. Replies
    1. ஆம் கொடுமைதான் பாரதி .

      Delete
  4. ஒரு சிறுகதைக்கு உரிய நடை....

    ReplyDelete
  5. ஐயோ... இவ்வளவு நடைமுறைகள் இருக்கா...?

    ReplyDelete
  6. தலைவரே... பதிவர் சந்திப்பு, வலைப்பதிவர் கையேடு குறித்து...?

    ReplyDelete
    Replies
    1. சிறப்பான முயற்சி , உங்களைசிறப்பான முயற்சி , உங்களைப்போன்றோர் இருப்பதால் தான் , என்னைப்போன்றோர் பதிவராக தொடர முடிகிறது. வரமுடியாமல் போனதில் மிகுந்த வருத்தம் .வெகு தூரத்தில் இருப்பதால் உள்ள வினை

      Delete
  7. panam iruppavarkal ellaa sadangkuklukkum #$ selavu sevrkal sir. illathavarkal nilamai enna?

    arumaiyaana sirukathai sir.
    nalla muyarchi thodarungal.


    ReplyDelete
    Replies
    1. உறவினர்கள்தான் கடனை வாங்கியாவது செய்ய வேண்டும்
      , இல்லாவிடில் அனாதைப்பிணம் ஆகிவிடும்

      Delete
  8. தமிழ் நாட்டிலும் சென்னை போன்ற இடங்களில் நிலைமை இப்போது மாறிவிட்டது.சத்தமிட்டு அழுவது நாகரிகமில்லையாம்.

    பேராசிரியர் மோரி பற்றிய பதிவை இங்கே இனணத்துள்ளேன்.
    http://aarurbass.blogspot.com/2015/09/blog-post.html

    ReplyDelete
  9. மரணம் என்றாலே மனதில் நெருடல்தான். பதிவைப் படித்ததும் மனது கனத்தது. இறந்தவருக்கான சடங்குகள் ரொம்பவும் காஸ்ட்லி போலிருக்கிறது. இல்லாதவர்கள் என்ன பண்ணுவார்களோ?
    உண்மை நிகழ்வு என்றால் சிறுகதை என்று எதற்கு லேபிள் கொடுத்தீர்கள் என்று தெரியவில்லை.

    ReplyDelete
    Replies
    1. புனைவு கலந்த உண்மைப் பதிவு அல்லது உண்மை கலந்த புனைவு என்பதால் சிறுகதை என்றும் குறிப்பிட்டுள்ளேன் .நன்றி தமிழ் இளங்கோ.

      Delete