Monday, March 19, 2018

குச்சி ஐஸ் சாப்பிட்டால் அழகாகும் பெண்கள் ?



வேர்களைத்தேடி பகுதி: 10
இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்.
http://paradesiatnewyork.blogspot.com/2018/03/9-httpparadesiatnewyork.html
            அப்போது உதயமானதுதான் "பாஸ்கர் நூல் நிலையம்". என்னுடைய தம்பி பெயரில் நான் ஆரம்பித்தேன். எங்கள் வீட்டில் நல்ல ரோஸ் வுட்டில் கல்லாப் பெட்டி மாதிரி ஒன்று இருந்தது. அதில் இருந்த என்னுடைய பாடப்புத்தகங்களை எடுத்து வேறு இடத்தில் வைத்துவிட்டு அதனையே என் நூலகமாக ஆக்கினேன்.  அந்த நூலகத்தில் மெம்பர் ஆக விரும்புபவர்கள் பழைய அல்லது புதிய முத்து காமிக்ஸ் புத்தகத்தை கொடுக்க வேண்டும்.  ஏதாவது புத்தகத்தைப் படிக்க விரும்பினால் 10 பைசா கொடுக்க வேண்டும். கூடப்படிப்பவர்கள், சீனியர், ஜூனியர் என்று நிறைய நண்பர்கள்  மெம்பர்கள் ஆனார்கள். வெறும் 10 புத்தகங்களை கொண்டு ஆரம்பிக்கப்பட்ட பாஸ்கர் நூல் நிலையம் விரைவில் நூறு புத்தகங்களாக வளர்ந்தது. அதில் கிடைத்த பணம் புதிய புத்தகங்களை வாங்குவதற்கு உதவியது. இதெல்லாமே நான் ஆறாவது படிக்கும் போது நிகழ்ந்தது.
          என் வீட்டுத் திண்ணைதான் நூலக அறை. யாராவது புத்தகம் வாங்க வந்தால், அந்தக் கல்லாப் பெட்டியைத் தூக்கிக் கொண்டு அங்கு வருவேன். ஒரு கட்டத்தில் கல்லாப்பெட்டி நிரம்பிவிட என்னால் தூக்கவும் முடியவில்லை. அப்போதுதான் என் அப்பாவிடம் தயங்கித் தயங்கிக் கேட்க, ஒரு நாள் வெள்ளிக்கிழமை மரக்கடையிலிருந்து  சில கள்ளிப்பெட்டிகளை எடுத்து வந்தார். அடுத்த நாள் நான் எதிர்பார்த்த வண்ணமே ஊமை ஆசாரி வந்தார். எங்கள் வீட்டில் சிறு சிறு மரவேலை ஏதாவது ரிப்பேர் வேலையென்றால் இந்த ஊமை ஆசாரிதான்  வருவார். ஒரே பிரச்சனை அவர் சுத்தியலையும் ஆணியையும் எடுத்தால் சத்தம் வீட்டைப் பிளந்து விடும். ஆனால் அவருக்கு எந்தப் பிரச்சனையுமில்லை காது சுத்தமாகக் கேட்காது.
          “என்ன செய்ய வேண்டும்?”, என்று ஊமை  ஆசாரி சைகையில் கேட்க, எங்கப்பா என்னைக் கை காண்பித்துவிட்டு வெளியே சென்றார். நான் அவருக்கு சிறிய படம் ஒன்று வரைந்து காண்பித்தேன். நான்கு தடுப்புகள் வைத்த ஒரு சிறிய அலமாரி. 4 ½ அடி இருக்கும். அப்போதுள்ள என் உயரம். காதுகள் அடைத்துவிடுமளவிற்கு சத்தம் கேட்டதால் ஒரு கட்டத்தில் நான் தெறித்து வெளியே ஓடிவிட்டேன். பிறகு ஒரு 2 மணிநேரம் கழித்து வந்த போது பார்த்தால் நல்ல ஒரு அலமாரி உருவாகியிருந்தது. இருந்த கள்ளிப்பெட்டிகளை வைத்து செய்த அந்த அலமாரி எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அவர் கையைப் பிடித்து என் மகிழ்ச்சியையும் பாராட்டையும் தெரிவித்துவிட்டு என் புத்தகங்களை அழகாக அடுக்கி வைத்தேன். ஒரே பிரச்சனை என்ன வென்றால் என் நூலக மெம்பர்கள் உள்ளே வந்து தான் புத்தகங்களை எடுக்க முடியும். எங்கள் வீட்டில் பெண்கள் யாருமில்லை என்பதால் அவர்கள் உள்ளே வர என் பெற்றோர் எந்தத் தடையும் விதிக்கவில்லை.
Related image

என் கையிலிருந்து காசு செலவழிக்காமல் பல புதிய புத்தகங்களைப் படிக்கத்தான் இந்த ஐடியா. அது நன்றாகவே வொர்க் அவுட் ஆனது. ஒரு நோட்டு வாங்கி, ஒவ்வொரு புத்தகத்திற்கும் நம்பர் கொடுத்து தலைப்புகளை எழுதி வைத்தேன். புத்தகங்களை படிக்க வாங்குபவர்கள் கையெழுத்திட்டு வாங்கிச் செல்வார்கள்.
புதிய காமிக்ஸ் புத்தகங்கள் வெளிவந்தவுடன் படிப்பதற்கு டிமான்ட் இருக்கும். சில சமயங்களில் ஒரு நாள் டைமும், இரும்புக்கை மாயாவி புத்தகத்திற்கு அரை நாள் டைம் மட்டும்தான் கொடுப்பேன்.புத்தகங்களை பாதுகாப்பதற்கு பைண்டிங் கற்றுக்கொண்டு என்னுடைய புத்தகங்களுக்கு  பண்ணியதோடு நண்பர்களுக்கும் பண்ணிக்கொடுத்தேன்.கொஞ்சம் சில்லரையும் புரண்டது. அதற்கும் புத்தகங்களே வாங்கினேன் .
அப்போது தான் எங்கப்பா எழுதி வெளியிட்டிருந்த சிறுவர் பாடல்கள் புத்தகத்தைப் பார்த்தேன். அதைப் பார்த்தவுடன் கவிதை எழுதும் ஆர்வம் வந்தது. எழுதிப் பார்த்தேன் எனக்குப் பிடித்திருந்தது. சில நண்பர்களும் படித்துவிட்டுப் பாராட்டினார்கள். அப்படியே “நித்திலம்” என்ற பெயரில் ஒரு சிறு கையெழுத்துப் பிரதியும் ஆரம்பித்து அதில் என் மற்றும் என்னுடைய நண்பர்களின் படைப்புகள் வெளிவந்தன.
 இவையெல்லாம் தவிர்த்து நான் நன்றாகவும் படிக்க வேண்டும் என்ற அழுத்தமும் இருந்தது. வாத்தியார் பிள்ளை மக்கு என்று சொல்லிவிடக் கூடாதல்லவா.
பள்ளிக்கு வெளியே பல  தின்பண்டங்கள் விக்கும், மீனாட்சி பாட்டி இரண்டு சாக்குப் பைகளை விரித்து அந்தந்த சீசனுக்கு தகுந்தாற்போல் பண்டங்கள் விற்பார். மாங்காய் சீசனில் கல்லாமை என்று சொல்லக் கூடிய  மாங்காய்கள் விற்கும். அதற்குப் பதமாக தயாரிக்கப்பட்ட உப்புமிளகாய்த் தூளும் இருக்கும். “வா சேகர் இன்னிக்கு மாங்காய் தேங்காச்சில்லு போல் இருக்குது”, என்று அழைக்கும் போது தட்ட முடியாது. புளிக்கவே புளிக்காது. இலேசான துவர்ப்பாக மட்டும் இருக்கும். இப்படி ஒரு காய்க்கு மற்றொன்றை பொருத்தமாகச் சொல்வது எப்போது வந்ததோ தெரியவில்லை. இவை எல்லாவற்றுக்கும் பொருந்துவதில்லை.
‘தேன் போன்ற பலா’ என்பது அடிக்கடி சொல்லப்படும். தேக்கு போன்ற உடல், யானை போல பலம், நரி போலத் தந்திரம் என்று சொல்வதோடு பெண்களுக்கு, மயில், மான், கிளி என்றும் ஆண்களுக்கு புலி, சிங்கம், என்றும் சொல்வதுதான் நமக்கு தெரியுமே.
மீனாட்சி பாட்டி பலாச்சுளைகள், கரும்பு சீசனில் கரும்பு,   கொய்யாப் பழங்கள், கொடைக்கானலிருந்து வரும் பிளம்ஸ் மற்றும் பீச் போன்றவற்றையும் விற்பாள். அவளுக்கு கணவர் உயரமாக ஒரு தாத்தா. பொருட்களை கொள்முதல் செய்து தலைச்சுமையாக கொண்டு வருவது அவர்தான். அதனை அற்புதமாக  மார்க்கெட்டிங்  செய்து விற்பது அந்தப்பாட்டியம்மாள்.
Image result for கல்லாமை மாங்காய்
கல்லாமை மாங்காய்
இதுதவிர சரியாக இன்டர்வெல் சமயத்தில் வாசல்களில் வந்து சேரும் ஐஸ்பெட்டிக்காரர், பெரும்பாலும், சாதா ஐஸ், சேமியா ஐஸ் மற்றும் ஜவ்வரிசி ஐஸ் மட்டும் இவரிடம் இருக்கும். தேவையான கலரைக் கேட்டுப் பெற்றுக் கொள்ளலாம். ஜவ்வு மிட்டாய் மற்றும் ஐஸ் சாப்பிட்டு விட்டு எங்கள் நாக்கு அந்தந்த கலரில் ஆகிவிடும். பச்சைக் கலர்தான் கொஞ்சம் கொடுமையாக இருக்கும். அதிலும் பெண்கள் சிவப்பு ரோஸ் நிற ஐஸ் ப்ரூட்களை சாப்பிட்டு விட்டு வரும்போது லிப்ஸ்டிக் போட்டது போல மிகவும் அழகாகி விடுவார்கள்.
          சிறிது நேரத்திற்கு நாக்கு தடித்து வார்த்தைகள் குழறுவது வேடிக்கையாக இருக்கும்.
மூன்று மாதம் அல்லது நான்கு மாதத்திற்கு ஒரு முறை வரும் பம்பாய் மிட்டாய்க்காரருக்கு நல்ல டிமாண்ட் இருக்கும். அவர்  லாவகமாக பேப்பரை மடித்து அதில் மிட்டாயை போட்டு அப்படியே தருவார். மிகவும் சுவையாக இருக்கும். அதன் பெயர் சோன் பப்டி என்று பின்னால் தான் தெரிய வந்தது.
பள்ளியின் அருகில் ஒரு தகரக் கொட்டகையில் பல பண்டங்களை விற்பவர் பெயர் ‘ஏப்.நடராஜன்’, அந்தப் பெயர் எப்படி வந்தது தெரியுமா?
-தொடரும்.   




6 comments:

  1. நூலக நினைவுகள் அருமை. நானும் செய்திருக்கிறேன். நானும் தென்றல் என்கிற பெயரில் கையெழுத்துப் பத்திரிகை நடத்தி இருக்கிறேன். என் அன்னான் வசந்தம் என்கிற பெயரில் கையெழுத்துப் பத்திரிகை நடத்தினார். உள்ளூர் நூலகத்தில் வைத்து விடுவோம்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஸ்ரீராம் நீங்களும் நானும் ஒரே பாதையில் பயணித்திருக்கிறோம் .

      Delete
  2. Replies
    1. இனிய நினைவுகளில் மூழ்கி முத்துக்குளிப்பது ஒரு பரவச அனுபவம் தனபாலன் .

      Delete
  3. நூலகம் மிக வித்தியாசமான முயற்சி. அதுவும் அந்தக் காலத்திலே. வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி முத்துச்சாமி .

      Delete