Thursday, May 28, 2015

ஓரம்போ ஓரம்போ பரதேசி வண்டி வருது !!!!!!!!!!!! பகுதி 2

احرق دهونك بركوب الدراجات

    இதன் முதல் பகுதியை படிக்க இங்கே சுட்டவும் 
  http://paradesiatnewyork.blogspot.com/2015/05/blog-post_26.html
     
         ஹோம் வார்டன்கள் ரூத்தும், கலைச் செல்வியும் சென்டரை சுத்திக் காண்பித்தார்கள். திரும்பவும் தயாளனிடம் சென்று, வரும் ஜூன் முதல் வாரத்தில் ஜாய்ன் செய்கிறேன் என்று சொல்லிவிட்டு, மீண்டும் பொடி நடையாய் கிளம்ப ரெடியானேன். தயாளன், "திரும்ப நடந்தா போகப் போகிறீர்கள்", என்று கேட்டுவிட்டு "அப்பாத்துரை சாரை கொண்டுபோய் சாட்சியாபுரத்தில் இறக்கி விட்டுவிடு", என்றார். அப்பாத்துரை அங்கு ஆஃபிஸ் அஸிஸ்டண்ட்.  
      சைக்கிளைக் கொண்டு வந்த அப்பாத்துரை, குள்ளமாய் இருந்தார். இவர் எப்படி இந்த உயரமான சைக்கிளை ஓட்டுவார் என்ற யோசனையுடன் கிட்டப்போனேன். "இந்தாங்க சார் ஓட்டுங்க", என்றார் அப்பாத்துரை. திடுக்கிட்ட நான் "இல்லை பரவாயில்லை நீங்களே ஓட்டுங்க, இறக்கிவிட்டுட்டு அப்படியே நீங்க வந்துரலாம்ல", என்றேன். நல்லவேளை அப்பாத்துரை அதற்குமேல் கட்டாயப்படுத்தாமல் ஏறிக்கொண்டு, பின்னால் உட்காரச் சொன்னார். பின்னர் தட்டுத்தடுமாறி பேலன்ஸ் செய்து ஓட்ட ஆரம்பித்தார். என்ன ஆச்சரியம் அவர் சீட்டில் உட்கார்ந்து ஓட்டும்போது அவர் கால் எட்டவேயில்லை. மேலே வரும் பெடலை ஒரு அழுத்து, அது கீழே  போய்விட்டு திரும்ப மேலே வரும்போது இன்னொரு அழுத்து. இப்படித்தான் இருபுறமும் நடந்தது. பார்க்க வேடிக்கையாக இருந்தது.
         காலே எட்டாதவர்களெல்லாம் சைக்கிள் ஓட்டும்போது, நான் கண்டிப்பாய்ப் பழகிவிட வேண்டும் என்று நினைத்துக் கொண்டே தேவதானப்பட்டி வந்து சேர்ந்தேன்.
      வேலை கிடைத்த மகிழ்ச்சியை முழுவதுமாக பகிர்ந்து மகிழ முடியாமல், சைக்கிளை எப்படி பழகப்போகிறேன் என்பதை நினைத்தால் பகீரென்றது. ஒரு புரம் அம்மாவிடம் சண்டை போட்டேன். எல்வின் சென்டருக்கு தினமும் போய் வருவது மட்டுமல்ல, சோஷியல் ஒர்க்கர் என்பதால் பல இடங்களுக்கும் போக வேண்டியதிருக்குமாம். சைக்கிள் தெரியாவிட்டால் இந்த வேலையைச் செய்யவே முடியாது, அது தவிர சைக்கிளுக்கெல்லாம் அப்போதெல்லாம் டிரைவர் கிடைக்காது (டேய் சேகரு அப்ப மட்டுமல்லடா இப்பவும் தான் கிடைக்காது. சைக்கிளுக்கு டிரைவராம், நீயெல்லாம் ஒரு ஆள்னு உனக்கெவன்டா வேலை கொடுத்தான் - வந்துட்டான்டா மகேந்திரன் - எங்கடா தொலைஞ்ச இத்தனை நாள் - அப்படியே போயிருக்கக் கூடாதா?)
     இரவும் பகலும் இதே யோசனையாய் ரெண்டு நாள் கழிந்தது.  தேவதானப்பட்டியில் வெட்கம் இல்லாமல் யாரிடம் போய்க் கேட்பேன் . அன்றைய தினம் ஏதோ வேலையாக தேவதானப்பட்டி வந்த பெரியகுளம் வனராஜ் என் வீட்டுக்கு வந்தார். வனராஜ் அமெரிக்கன் கல்லூரியில் எனக்கு சீனியர் இப்பொழுது "மனிதம்" அமைப்பின் நிறுவனர். "என்னடா ஆல்ஃபி உனக்கு வேலை கிடைச்சிருக்காமே, ஜேம்ஸ் சொன்னான் காங்கிராட்ஸ், எப்ப டிரீட் ?", என்று சொல்லிவிட்டு என் முகத்தைப் பார்த்த வனராஜ், "என்னடா சுரத்தில்லாம இருக்க", என்றார். நான் என் பிரச்சனையைச் சொன்னேன். உள்ளூரில் பழக தயக்கமாய் இருப்பதையும் சொன்னேன். "அடப்பாவி இத்தனை வருஷம்  மறைச்சிட்டியேடா? ஏண்டா இதை முதல்லயே சொல்லல. சரி ஆல்ஃபி கவலையை விடு, டெய்லி பெரியகுளம் வந்துரு நான் கத்துக்கொடுக்கிறேன்", என்றார் சர்வசாதாரணமாக. நான் ஆனந்தக்கண்ணீர் முட்ட அவரைக் கட்டிக் கொண்டேன். "எப்ப வனா ஆரம்பிக்கலாம் ?," என்றேன்.
Vanaraj
"நாளைக்கே  வாடா" என்றார். அவரும் அப்போது வேலை தேடிக் கொண்டிருந்த சமயம். "வனா யார்ட்டயும் சொல்லாதீங்க", என்றேன். புன்னகைத்த வனா, “கவலைப்படாதரா சகோதரா", என்றார்.
     மறுநாள் பக்கத்து டவுனான பெரியகுளத்தில் இருக்கும் வனராஜ் வீட்டுக்குச் சென்றேன். நடுவில் ஓடும் வராக நதியின் தென்கரையில் உயரமான படிகள் வைத்த வீடு. உள்ளிருந்து வந்த வனாவின் தம்பி இன்பராஜ் (இவன் அ.கல்லூரியில் என்னுடைய செட்) தோளில்  படாரென்று தட்டி, "ஏண்டா ஆஃல்பி இன்னுமா சைக்கிள் பழகாம இருக்க ?", என்று அட்டகாசமாய்ச் சிரித்தான். நான் வனாவை முறைத்தேன்.
      அப்போது சமையலறையிலிருந்த வனாவின் அம்மா வந்து என்னை வரவேற்றார்கள். முகம் முழுவதும் ஒரே புன்னகை மயமாய் இருந்தது. ஐயையோ வனா இவர்களிடம் சொல்லிவிட்டாரோ என்று நினைத்தேன். ஆனால் மூச்சு விடவில்லை. கொஞ்ச நேரத்தில் கடைக்குப் போயிருந்த வனாவின் தங்கையும் வந்துவிட, எனக்கு விதிர்விதிர்த்துவிட்டது. "வனா வாங்க சீக்கிரம் போகலாம்", என்று அவசரப்படுத்தினேன்.
      பின்னர் நாங்கள் கிளம்பி, பெரியகுளம் கண்மாய் போகும் வழியிலிருந்த ஒரு கிரவுண்டுக்குப் போனோம்.
         முதன்முதலில் சைக்கிளில்  ஏறி உட்காரும் போது, ஒட்டகத்தின் மேல் உட்காருவது போல் இருந்தது. இரண்டாவது நாளே, கொஞ்சம் பேலன்ஸ் கிடைத்துவிட்டது ஆனால் தைரியம் வரவில்லை. ஏறுவதற்கும் இறங்குவதற்கும் பழக இன்னும் ஒரு நாள் ஆயிற்று. ஆனால் இரண்டுக்குமே ஒரு கல் அல்லது மேடை தேவைப்பட்டது.
        நான்காம் நாளில் வனா, "இன்னக்கி உனக்கு ஒரு டெஸ்ட் இருக்கு", என்றார், கிரவுண்டில் இரண்டு கல்லை எடுத்து இருபுறங்களிலும் வைத்து, “இதுக்கு நடுவில் ஓட்டு", என்றார். எவ்வளவு முயற்சி பண்ணியும் கல்லின் மேல்தான் சைக்கிள் மோதியது இத்தனைக்கும் இரு கல்லுக்கும் நடுவில் நிறைய இடைவெளி இருந்தது. அந்த நாள் முழுவதும் அதற்குப் பழக, கல்லின் இடைவெளியை சுருக்கிக் கொண்டே வந்தார். ஓரளவுக்கு பழகியவுடன், “ஓகேடா       ஆல்ஃபி நாளைக்கு நாம் ரோட்டில் ஓட்டலாம்", என்றார்.

              காலையில் போகும்போது பெரியகுளம் கண்மாய்க்குப் போகும் ரோடு காலியாக இருந்தது. எப்பொழுதாவது மாட்டு வண்டியோ, ஜீப்போ வரும், ஓரம் சென்று இறங்கிவிடுவேன்.  இப்படியே கண்மாய் சென்று சேர்ந்து ரோட்டில் மீண்டும் பழகிவிட்டு, திரும்பினோம். திரும்பும்போது ஆடுமாடுகள் ஊர் திரும்பும் நேரமாதலால், எனக்கு மிகவும் சிரமமாக இருந்தது. தூரத்தில் மாடு அல்லது ஆடைப் பார்த்துவிட்டால் இறங்கிவிடுவேன். உருட்டிச் சென்று, அதனைக்  கடந்தவுடன் கல்லைத்தேடிச் சென்று அதன் மேல் கால் வைத்து ஏறி மீண்டும் ஓட்டுவேன். இருந்தாலும் ஒரு ஆட்டுக்குட்டி , ரெண்டு கன்னுக்குட்டி, ஒரு பசு மாடு , ஒரு எருமை மாடு  ஆகியவற்றை மட்டும் லைட்டாய்   இடித்தேன் .ஒரே ஒரு புல்லுக்கட்டுக்காரியிடம் புட்டத்தில் இடித்து இரெண்டே இரண்டு கெட்ட வார்த்தை  பழகிக்கொண்டேன் .புதிதாய் பழகுகிறேன் என்றால் நம்ப  மறுத்துவிட்டாள் . மற்றபடி சேதாரம் ஒன்றும் இல்லை, விழுப்புண்களும்  இல்லை.
         ஒருவழியாக அந்த கடைசி நாளையும் முடித்துவிட்டு வனா வீட்டுக்கு வந்து சேர்ந்தோம்.
வனாவின் அம்மாவும் தங்கையும் அங்கிருந்தார்கள். "வனா கையெல்லாம் ரொம்ப வலிக்குது" என்றேன். வனாவின் அம்மா, "சைக்கிள் ஓட்டினா கால்தானே வலிக்கும் ?" என்று சொன்னார்கள்.
        அதற்கு வனா சொன்னார், "அம்மா ஓட்டினாத்தானே கால் வலிக்கும், உருட்டிக் கொண்டே இருந்தா கைதானே வலிக்கும்", என்றாரே பார்க்கலாம்.

முற்றும்

6 comments:

  1. ஓரளவு தைரியம் வந்து ஓட்ட ஆரம்பிக்கும் போது, ஒரு சந்தோசம் வரும் பாருங்க... வானத்தில் பறப்பது போல...!

    ReplyDelete
    Replies
    1. சரியாக சொன்னீர்கள் திண்டுக்கல் தனபாலன்.

      Delete
  2. bt உங்க நேர்மை எனக்கு புடிச்சிருக்கு

    ReplyDelete
    Replies
    1. உங்க அன்பு எனக்கு புடிச்சிருக்கு.

      Delete