Thursday, September 12, 2019

மறந்து போன மகாராஜா !!!!!!



பார்த்ததில் பிடித்தது.
தி பிளாக் பிரின்ஸ்
Image result for the black prince movie


          2017-ல் வெளிவந்த இந்தப்படம் நெட்ஃபிலிக்சில் காணக் கிடைத்தது. இந்தியாவின் கோதுமைக் களஞ்சியமான, ஐந்து நதிகள் பாயும் பஞ்சாப் பகுதியின் வரலாறு, மிகவும் சிறப்பானதொன்று.
          பஞ்சாப் என்றதும் முதலில்  நினைவுக்கு வருவது அதன் வீர வரலாறு மற்றும் குரு நானக்சிங் தோற்றுவித்த சீக்கிய மதம். இந்து மற்றும் முஸ்லிம் மதங்களின் நன்மைகளை இணைத்து உருவாக்கப்பட்ட இந்த மதத்தைப் பின்பற்றும் சீக்கிய மக்கள் உலகமெங்கும் வாழ்கின்றனர். தலைநகர் அமிர்தசரசில் இருக்கும் தங்கக் கோவில், விடுதலைப்  போராட்டத்தில் கலந்து கொண்ட லாலா லஜபதி ராய், பகத் சிங் ஆகியோரை மறக்க முடியுமா?. ஜெனரல் டயாரல் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்ட நிகழ்வான ஜாலியன் வாலாபாக் படுகொலை, இந்திய வரலாற்றின் மாறாத வடுவாகும்  . பிரிவினையில் பாதி பாகிஸ்தானுக்குப் போன சோகம், உலகப்புகழ் பெற்ற எழுத்தாளர் குஸ்வந்த்சிங் அவர் எழுதிய டிரைன் டு பாகிஸ்தான். பஞ்சாபின் தலைவர்களான, ஜெயில் சிங், சுர்ஜித்சிங் பர்னாவா மற்றும் சிறந்த பொருளாதார நிபுணரான, இருமுறை பிரதமராக இருந்த மன்மோகன் சிங் ஆகியோர் வரலாற்றில் இடம் பிடித்தவர்கள்.  
Maharaja Ranjith Singh
          பஞ்சாப் வரலாற்றின் ஏட்டை  சற்றே பின்னால் புரட்டினால், பஞ்சாப்பை ஒருங்கிணைத்து ஆண்ட மகாராஜா ரஞ்சித்சிங் வருவார். அவருடைய பரந்து விரிந்த சாம்ராஜ்யம், பஞ்சாப் பகுதி மட்டுமல்லாமல் இன்றைய பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகியவற்றை உள்ளடக்கியது. அதோடு பிரிட்டிஷ்காரர்களால் அசைக்க முடியாத அளவுக்கு பலம் பொருந்தியவராய் இருந்தார். அவருடைய சாம்ராஜ்யம் அவரோடு ஆரம்பித்து அவரோடு முடிந்துபோனது. அவருக்குப்பின் நடந்த வாரிசுப்போட்டியில் பலபேர் அழிந்துபோக எஞ்சியிருந்த ஒரே மகனான மகாராஜா துலிப் சிங் அவருடைய அம்மாவான மகாராணி ஜின்டன் அவர்களின் பெரும் முயற்சியாலும் பிரிட்டிஷாரின் உதவியாலும் முடிசூட்டிக் கொண்டார். அப்போது அவர் ஐந்து வயதான சிறு குழந்தை. அந்த மகாராஜா துலிப்  சிங்கின் சோக வரலாறுதான் “தி பிளாக் பிரின்ஸ்” அவரைப்பற்றி வந்த புத்தகத்தின் விமர்சனத்தை அடியேன் முன்னொரு காலத்தில் பதிவிட்டிருக்கிறேன். 1849ல்  பிரிட்டிஷ் அரசு பஞ்சாபை தன்னுடைய பகுதியில் இணைத்துக்கொண்டு விவரம் தெரியாத  இளவரசனை பிரிட்டிஷ் மருத்துவரான Dr. ஜான் லாகின் என்பவரிடம் ஒப்படைத்தது.  அவருக்கு 15 வயதாகும் போது இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்ட போது அங்கு விக்டோரியா மகாராணியின் அறிமுகம் கிடைக்கிறது. அவரிடமிருந்து ஏராளமான பொக்கிஷங்கள் இங்கிலாந்துக்கு அனுப்பப்படுகின்றன. அதில் மிக உயர்ந்த ஒன்றுதான் கோஷினூர் வைரம்.( https://paradesiatnewyork.blogspot.com/2015/03/blog-post_5.html )
அதிலிருந்து மகாராணிக்கு அந்த இளம் டூலீப் சிங்கிடம் ஒரு கரிசனம் ஏற்பட்டு அன்புடன் நடத்துகிறார். கிழக்கிந்திய கம்பெனியும் அவருக்கு எல்லா வசதிகளையும் செய்து தருகிறது. ஆனால் அவருடைய அம்மா மகாராணி ஜின்டன் இந்தியாவிலேயே வீட்டுச்கிறையில் வைக்கப்படுகிறார் Dr.ஜான்லாகினும் அவருடைய மனைவியும் மகாராஜா டூலீப் சிங்கை தங்கள் மகனாகவே வளர்க்கிறார்கள். ஆனாலும் தன்னுடைய சொந்த நாட்டிற்குத் திரும்ப முயற்சிக்க, அனுமதி மறுக்கப்படுகிறது.
Related image
Maharaja Duleep Singh
          மீதிக்கதையை நீங்களே பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்.   
          சத்தின்தர் சர்டாஜ், டுலீப் சிங்காவும், அமண்டா ரூட் விக்டோரியா மகாராணியாகவும் ஷபானா ஆஸ்மி மகாராணி ஜின்டாவாகவும் நடித்திருக்கிறார்கள் சத்தின்தருக்கு இதுதான் முதல் படம்.
          லாஸ்  ஏஞ்செல்சில் உள்ள ஹாலிவுட்டில் இருக்கும் இந்திய இயக்குநர் கவிராஸ் என்பவர் இயக்கியிருக்கிறார்.
          இந்தியாவிலும் இங்கிலாந்திலும் எடுக்கப்பட்ட இந்தப்படத்தை தயாரித்தவர்கள் பிரில்ஸ்டெய்ன் என்டர்டைன் மென்ட் பார்ட்னர்ஸ். இது ஒரே சமயத்தில் ஆங்கிலத்திலும் இந்தியிலும் எடுக்கப்பட்ட இருமொழிப்படம். பின்னர் பஞ்சாப் மொழியிலும் டப்பிங் செய்யப்பட்டது. ஜார்ஜ் கல்விஸ் என்பவர் இசையமைத்திருக்கிறார்.
          உலகமெங்கிலும் வெளியிடப்பட்டு ஆறுலட்சத்து 33 ஆயிரம் டாலர்கள் வென்றெடுத்த இந்தப்படம், இங்கிலாந்து, இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவில் அதிகம் வரவேற்கப்பட்டது.
          பரபரப்பாக வரலாற்று நிகழ்வுகளைச் சொல்லும்போது மிகவும் மெதுவாகச் சொன்னது சிறிது சலிப்பூட்டியது. திரைக்கதையை இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பாய் அமைத்திருக்கலாம். என்பது என்னுடைய எண்ணம்.
          மற்றபடி இப்படி நம் நாட்டின் வரலாற்று நிகழ்வுகளையொட்டி எடுக்கப்படும் படங்களுக்கு நாம் ஆதரவு அளிப்பது முக்கியமென நினைக்கிறேன்.
          பஞ்சாப் குறிப்பாக மறந்துபோன மகாராஜா டூலிப் சிங்கைப்பற்றி மேலும் அறிய விரும்புபவர்கள் மற்றும் வரலாற்று ஆர்வலர்கள் இதனை கொஞ்சம் பொறுமையோடு கண்டு ரசிக்கலாம்.
- முற்றும்.    

முக்கிய அறிவிப்பு :

நண்பர்களே விடுமுறைப்பயணமாக வரும் செப்டம்பர் 15 முதல் 29 வரை பிரான்ஸ் , ரோம் , மற்றும் இத்தாலியில் உள்ள பாரிஸ், ரோம், வாடிகன், பிளாரென்ஸ் , பைசா , வெனிஸ் ஆகிய நகரங்களுக்கு செல்கிறேன்.அதனால்  பதிவுகள் இரண்டு  வாரங்களுக்கு  வராது .இந்த நகரங்களில்  வாழும் தமிழ் மக்கள் , நண்பர்கள் ஈமெயிலில்  தொடர்பு கொண்டால் சந்திக்கலாம் , நன்றி .
alfred_rajsek@yahoo.com 

Thursday, September 5, 2019

நியூயார்க்கில் பூரான் !


Image result for பூரான்
இன்று காலையில் அதனைப் பார்த்துவிட்டேன். அதுவும் என் வீட்டில், அதுவும் என் படுக்கையறையில், அதுவும் படுக்கையறையில் உள்ள குளியலறையில்,
டேய் மேலே சொல்லு, அதுவும் அதுவும்னு சொல்லி கழுத்தறுக்கிற, இதுல ஃபிளாஷ்பேக் டெக்னிக் வேற நீயெல்லாம் எழுதோணும்  நாங்கெல்லாம்  படிக்கோணும்னு எங்க தலைவிதி”
 “என்னது இது கோயம்புத்தூரில் எனக்கு பெர்சனலா யாரையும் தெரியாதே. யாரெல்லாம் எங்கிருந்தெல்லாம் அட்டாக் பண்ணுவாய்ங்கன்னு தெரியலையே , சரி தொடருவோம்”
Image result for moth
Moth
நியூயார்க்கில் நாங்கள் வாழும் வாழ்க்கை, ஒன்று அதீத குளிர், 30,40ன்னு போகும் அதுக்கு முன்னால மைனஸ்னு போட மறந்துட்டேன். வெயில் காலத்தில் இந்த ஆண்டு 107, 108ன்னு போய் மண்டை காய்ஞ்சிறுச்சு .
எப்படா இந்த குளிர் முடியும்னு காத்திருந்து காத்திருந்து வெயில் வந்தவுடனே, அய்யய்யோ இதுக்கு குளிரே பரவாயில்லைன்னு  தோணுற மாதிரி இருக்கு. இதுல வெய்யில் காலம் வந்தவுடனே ஊர்ல இருக்குற எல்லா பூச்சிகளும், கொசுவும் படை யெடுத்து வந்துரும். பேர் தெரியாத பல பூச்சிகளும், ஊர்வன பறப்பனவும் இதுல அடக்கம். இத்தனைநாள் எங்கதான் இருந்துச்சுகளோ, வெயில் காலம்தானேன்னு ஒரு காத்தாட  ஜன்னலைத்திறக்க முடியாது, கதவைத்திறக்க முடியாது. எல்லாத்துலயும் கவனமா வலையடிச்சு  வச்சிட்டுத்தான் திறப்போம். அப்படியும் சில பூச்சிகளும், கொசுக்களும் உள்ளே வந்துறும், பழங்கள்ள கருப்பு நிறத்தில் சிறுசிறு பழக்கொசு வந்திரும் .பின்னாடி தோட்டம் வேற இருக்கிறதால சில புழுக்களும் பூச்சிகளும் இருக்கும்.
இதுல என் மகள்கள் இருக்காள்களே அய்யய்யோ சின்ன பூச்சியைப் பாத்தாக்கூட அழுது அமர்க்களப்  படுத்திடுவாள்க. இப்போ சமீபத்தில் நடந்ததைச் சொல்றேன்.
Image result for small fruit fly

ஜூலை 4ஐக் கொண்டாட நியூயார்க்கோட தலைநகரம் ஆல்பனிக்குப் போயிருந்தோம். என்ன குழம்புதா , நியூயார்க் சிட்டி வேற ,நியூயார்க் ஸ்டேட் வேற .நியூயார்க் ஸ்டேட்லதான்  நியூயார்க் சிட்டி  இருக்கு. சில இடங்களுக்கு மட்டும்தான் ஊர் பேரும்  ஸ்டேட் பேரும் ஒரே மாதிரி இருக்கும்.உதாரணத்திற்கு  கலிஃபோர்னியா மாநிலத்தில்  கலிஃபோர்னியா  என்ற பெயரில் ஊர் கிடையாது .நியூயார்க் ஸ்டேட்டோட  தலை நகர்தான் ஆல்பனி .இப்ப புரியுதா மக்களே ? 
ஒரு 3 மணி நேரம் டிரைவ். ராத்திரி ஒரு 10.30 மணிக்குப் போய் சேர்ந்தோம். பொண்ணுங்க பெரியவங்க ஆயிட்டாங்கன்னு அவளுக இரண்டு பேருக்கும் தனிரூம். எனக்கும் என் மனைவிக்கும் தனிரூம். செக் இன் பண்ணும்போது தெரிஞ்சது, எதிர்பார்த்தது போலவே இதுவும் குஜராத்தைச் சேர்ந்த மோடிக்குச் சொந்தக்காரங்க நடத்துற ஓட்டல். அதாங்க பட்டேல் வகையறா. ஒரு விதத்தில் ஒரு இந்தியன் நடத்துற ஓட்டல்னு பெருமையா இருந்துச்சு. ரூமுக்குப்போனா சரியா மெய்ன்டெய்ன் பண்ணாம இருந்துச்சு.  பெருமையா நினைச்ச நெனப்பு உடனே அசிங்க நினைப்பா ஆயிப்போச்சு.
என் மனைவி வேற "ஏங்க இங்க மூட்டைப்பூச்சி இருக்குமா?" என்றாள். ஏற்கனவே கடுப்பில் இருந்த நான் "அதெல்லாம் இருக்காது" என்றேன் மேலும் கடுப்புடன், "இந்த பெட்ஷிட்டெல்லாம் துவைச்சதா?" இது ரெண்டாவது கேள்வி. பேசாம இருந்தேன். "இதுக்குத்தான் பெட்ஷீட்டை எடுத்துட்டு வரலாம்னு சொன்னேன்" என முணு முணுத்தாள் "காரில் தலைகாணி வச்சிருக்கேன். எடுத்துட்டு வாங்க" என்றாள். நானும் கீழே போய் எங்க தலையணைகளை எடுத்துட்டு வந்து கொடுத்தேன்.. மணியைப் பார்த்தால் 11.30 ஆயிருச்சு. இதுக்கு மேலே வேற ரூம் போய்த் தேட முடியுமா?
டேய்ஸ் இன் எல்லா இடத்திலயும் நல்லா இருக்குமே. இந்த நாதாரி குஜராத்திக நல்ல ஓட்டலை வாங்கி நாசம் பண்ணிட்டாங்களேன்னு நினைச்சு கோவம் கோவமா வந்துச்சு. ஆனாலும் வெளியே காட்டிக்கல. நேரா என் பொண்ணுங்க ரூமுக்குப் போய் கதவைத்தட்டிக் கேட்டேன். வேற ரூமுக்கு போயிரலாமான்னு. “பரவாயில்ல டாடி இது ஓக்கே தான்”னு சொன்னாங்க. திரும்ப என் ரூமுக்கு வந்து ஒரு குளியில போட்டுட்டு  வந்து படுத்தேன். பெட்ஷீட் மேல ஒரு மாத் இருந்தது. என் மனைவுக்குத் தெரியாம அதை நசுக்கித்தள்ளிவிட்டேன். என் மனைவி ராத்திரி பூராத் தூங்கல. அது எனக்கு எப்படித் தெரியும்னு கேக்கறீங்களா? ஏன்னா நானும் தூங்கல.   ஆனா இரண்டு பேருமே வெளியே காட்டிக்கல, இப்ப தெரியுதுங்களா ஏன் என் மனைவி எங்கேயுமே பயணம் வர்றதில்லன்னு. அவளுக்கு விடுதி பெட்ல படுக்கிறது, பாத்ரூம் போறதெல்லாம் வேற யாரோ ஒருவர் பயன்படுத்தியத யூஸ் பன்ற மாதிரி ஒரு அருவெறுப்பு. பிறகு எப்படி பயணம் போக முடியும். காலைல அவளுக்கு நல்ல ஜுரம். அவளை ரூமில் விட்டுட்டு நாங்க மூணு பெரும் குளிச்சி ரெடியாகி வெளியே கிளம்பினோம். அன்னைக்குத்தான் ஜூலை 4, சுதந்திர தினம். இரவு வாண வேடிக்கையெல்லாம் அமர்க்களமா இருக்கும். நான் வண்டியை ஓட்ட, என் சின்னப்பெண் வழக்கம்போல என் பக்கத்திலயும், பெரிய பெண் பின்னாலையும் உட்கார்ந்திருந்தாங்க. திடிர்னு பின்னாலிருந்த பெரிய பெண் அலற ,நான் திரும்பிப் பார்க்க கார் சிறிது தடுமாறியது. அலறல் அதிகமாக நான் அவசரமாக காரை ஓரங்கட்டி குதித்துப்பின்னால் சென்று காரை சடக்கென்று திறந்தேன். வெளியே பாய்ந்து வந்த பெரியவள் மேலேயும் கீழேயும் குதிக்க, நானும் என் சின்னப்பொண்ணும் என்ன என்ன ஆச்சுன்னு நெனைச்சு திகைச்சுப் போனோம். அதற்குள் பெரியவள் கண்களிலிருந்து கண்ணீர் தண்ணீராய் வடிய உதடுகள் துடித்து அழுதாள்.
வேற ஒண்ணுமில்லங்க, காரின் பின்புறத்தில் ஒரு சிறிய  மிகச்சிறிய வண்டு வந்துருச்சு, அதுக்குத்தான் இவ்வளவு ஆர்ப்பாட்டம். பின்புறத்தில் அந்த வண்டு மயங்கி இருந்தது. அதனை எடுத்து வெளியே விட்டபின் தான் அவளுடைய ஆர்ப்பாட்டம் அடங்குச்சு. இந்தக் கொடுமையை நான் எங்க போய்ச் சொல்ல. நல்லவேளை அவ காரை ஓட்டலை இல்லேன்னா நாங்க மூணுபேரும் ஆக்சிடெண்ட்ல பரலோகம் போயிருப்போம். அதுக்கப்புறம், பெரியவ அவ முடி, முதுகு எல்லாத்தையும் செக்கப் செய்யச்சொல்லி அப்புறம்தான் காரில் ஏறினாள்.
இதுல நான் வீட்டுக்குள்ள பூரானைப் பார்த்தேன்னு தெரிஞ்சது, இவ வீட்டைக் காலி பண்ணிட்டு போயிடுவா. பூரானை பத்தி கூகுள் பண்ணேன். அவை ரொம்பவும் சாதுவானவை நாம் தொந்தரவு செய்யாவிட்டால் பிரச்சனையே இல்லை. அப்படியே கடிச்சாலும் ஒரு 48 மணிநேரத்திற்கு சிவப்புத்தடிப்பு இருந்து அப்புறம் சரியாப்போயிரும் உயிருக்கு ஆபத்து கிடையாது . பூரான் வீட்டுத்தோட்டத்தில் இருந்தாலும் நல்லதுதான்.  பூச்சிகள், மாத்களை அது பிடிச்சுச் சாப்பிடும்னு போட்டிருந்துச்சு.
ஆனாலும் அதப்பாத்ததிலிருந்து எனக்கு உடம்புல ஏதோ ஊர்றமாதிரியே இருந்துச்சு, அதோட எனக்கு கொசு கடிச்சாலே பசு கடிச்சமாதிரி வீங்கிறும்.
பல்லு விளக்கின கையோடு, பாத்ரூமை லேசா திறந்துவச்சிட்டு, லைட்டை ஆஃப் செய்திட்டு கொட்ட கொட்ட முளிச்சிருந்தேன். நல்லவேளை வீட்டில எல்லாரும் ஏற்கனவே வேலைகளுக்குக் கிளம்பிப் போயிட்டாங்க. அரை மணி நேரத்துல ஒரு தடவை வெளியே வந்துச்சு, நான் ஓடிப்போய் அடிக்கறதுக்குள்ள ஓடிப்போய் பதுங்கிருச்சு. இங்கதான் உட்கார்ந்திருக்கேன். என்ன செய்யறதுன்னு தெரியல. எப்ப வெளியே வரும்னு தெரியல ஆஃபிசில் ஏகப்பட்ட வேலையிருக்கு . ஏதாவது யோசனை இருந்தா சொல்லுங்களேன்.
- முற்றும்.