Thursday, February 28, 2019

மறைக்கப்பட்ட இந்தியா !!!!



 படித்ததில் பிடித்தது

 மறைக்கப்பட்ட இந்தியா,எஸ் ராமகிருஷ்ணன் விகடன் பிரசுரம்.

          எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் ஒரு தேர்ந்த எழுத்தாளர், நல்ல பேச்சாளர். அவருடைய எழுத்து, படிக்கும் வாசகர்களுக்கு வெறும் பொழுதுபோக்குத்தரும் எழுத்தல்ல. மாறாக அறிவுக்களஞ்சியங்களை அள்ளித்தருபவை. அதற்காக அவர் செய்யும் உழைப்பு அபாரம். நூறு நூல்களைப் படிக்கும் அளவுக்கான விஷயங்கள் அவருடைய ஒரு புத்தகத்தில் இருக்கும். ஏனென்றால் அத்தனை புத்தகங்களையும் அவர் படித்து அதன் சாராம்சத்தை நமக்குத்  தருவார். அப்படி எழுதப்பட்ட ஒரு புத்தகம்தான், "மறைக்கப்பட்ட இந்தியா". நமது நாட்டைப்பற்றியும் அதன் வரலாற்றில் மறைந்துபோன , மறைக்கப்பட்ட விஷயங்களை மட்டுமே ஆராய்ச்சி செய்தால் கூட நமக்கு இந்த ஒரு ஜென்மம் போதாது.

எஸ் ராமகிருஷ்ணன்
          இந்தப் புத்தகம் கட்டுரைகளாக விகடனில் வந்தபோது, எப்படியும் முழுப் புத்தகமாய் வரும்போது படித்துக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டதை மறக்காமல் விகடன் அலுவலகம் சென்று  வாங்கிய பல புத்தகங்களில் இதுவும் ஒன்று.
          இந்தப்புத்தகத்தை நீங்கள் வாங்கிப்படிக்க வேண்டும் என்ற விதத்தில் இதில் படித்த சில விஷயங்களை இப்பகுதியில் கோடிட்டுக் காட்ட விழைகிறேன்.
1.   நீண்ட மீசையுடன் பார்த்த யுவான் சுவாங்கின் மீசையில்லாத படத்தைப் பார்த்தேன். சீனாவில் இருந்து வந்த அவர் நாலாந்தா பல்கலைக் கழகத்தில் போதித்து குப்தர் காலத்தில் 100 கிராமங்களை பரிசாகப் பெற்றிருக்கிறார்.
2.   ரபீந்திரநாத் தாகூர் 1911ல் எழுதிய நமது தேசிய கீதம் அவர் எழுதிய முழுப் பாடலில் ஒரு பத்தி மட்டும்தான். அதோடு பங்களாதேஷின் தேசீய கீதத்தையும் அவர்தான் எழுதியிருக்கிறார். (அமர் ஷோனார் பாங்க்ளா). 1919ல் மார்கரட் கசின் (யாரோட கசின்னு கேட்காதீங்க பாஸ்) போட்ட மெட்டுதான் இன்னும் பாடப்படும் மெட்டு நேதாஜியின் INA-வில் பாடப்பட்டது. இதற்கு தன் பேன்டு (Band) மூலம் இசையமைத்து தங்கப்பதக்கம் பெற்றார் கேப்டன் ராம்சிங்.
3.   ஆனால் 1947ல் சுதந்திரம் வாங்கிய இரவில் பாடப்பட்டது, மகாகவி இக்பால் எழுதிய, "சாரே ஜஹான் கி அச்சா" என்ற பாடல் மற்றும் பக்கிம் சட்டர்ஜி இயற்றிய "வந்தே மாதரம்" பாடல்தான்.
4.   தேசியக் கொடி பிறந்த கதையினையும் அதற்கு முன்னால் பயன்படுத்தப்பட்ட பல்வேறு கொடிகளைப் பற்றியும் சுவைபட விளக்குகிறார்.
5.   டெல்லியின் கிராண்ட் டிரங்க் ரோடு முதன்முதலில் சந்திரகுப்த மெளரியர் காலத்தில் உருவாக்கப்பட்டு இன்றுவரை பயன்பாட்டில் இருக்கிறது. இந்த விவரங்கள் கிரேக்க தூதுவர் ‘மெகஸ்தனிஸ்’ எழுதிய ‘இண்டிகா’ என்ற நூலில் காணப்படுகிறது. அதே போல தமிழகத்தில் நீண்ட நெடிய ராஜபாதை அமைத்தவர் ராணி மங்கம்மாவாம். அதன் வழியில் பயணிகள் தங்கிச் செல்ல பல சத்திரங்களையும் அமைத்திருக்கிறார்.
6.   அழிந்துபோன டாக்கா மஸ்லின் பற்றி பல தகவல்களைச் சொல்லுகிறார். முழு ஆடையும் மோதிரத்திற்குள் நுழையும் அளவுக்கு மென்மையாக இருக்குமாம். அதுமட்டுமல்ல பத்து முழம் சேலை ஒரு தீப்பெட்டிக்குள் அடங்கி விடுமாம். நம்முடைய துணிகள்  ஆயிரம் ஆண்டுகள் முன்னமே வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. அதுபோலவே ஆரணி மஸ்லின் என்று ஆந்திராவின் மசூலிப்பட்டணத்தில் உருவாக்கப்பட்டதாம். மசூலிப் பட்டினத்தில் உருவானதால் தான் அதன் பெயர் மஸ்லின் என்று ஆனதாம். பிரிட்டிஷ் ஆட்சியில் இதற்கெல்லாம் முடிவு கட்டப்பட்டது.
7.   ராஜாராம் மோகன்ராய் தோற்றுவித்த பிரம்ம சமாஜத்தின் முக்கிய கொள்கைகளாக, மூடநம்பிக்கை ஒழிப்பு, ஒன்றே குலம், பெண்கல்வி, விதவை மறுமணம், பால்ய விவாகம் ஒழித்தல், சம வேலைவாய்ப்பு, சம ஊதியம் மற்றும் தேசிய உணர்வை ஊட்டுதல் என பல முற்போக்கு சிந்தனைகள் இருந்திருக்கின்றன. அது இன்னும் வளர்ந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். இன்னும் நியூயார்க்கில் கூட பிரம்ம சமாஜம் இருக்கிறது. அவர்களின் கொள்கைகள் இன்னும் அப்படியே இருக்கின்றனவா என்று தெரியவில்லை.
8.   1942ல் வெள்ளையனே வெளியேறு மற்றும் த்துழையாமை இயக்கத்தை காந்தி துவங்கியபோது, காந்தி, கஸ்தூரிபாய், நேரு ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தமிழ்நாட்டில் காமராஜர், கக்கன், ம.பொ.சி ஆகியோர் கைது செய்யப்பட்டு உணவில் சிறுநீரைக் கலந்து கொடுத்தனர் என்பதை வாசிக்கும் போது உள்ளம் கொதித்தது.
9.   ஜொராஷ்ட்டிரிய மதத்தை ஃபாலோ செய்யும் பார்சிகள்  எப்படி ஈரானிலிருந்து இந்தியா வந்து செட்டில் ஆனார்கள் என்பதை பல தகவல்களோடு விளக்குகிறார். பார்சிகளில் முக்கிய பிரமுகர்களைப் பற்றித் தெரிந்து ஆச்சரியப்பட்டேன். தாதாபாய் நெளரோஜி, ஹோமிபாபா, ஜூபின் மேத்தா, பில்ட் மார்ஷல் சாம் மானெக்சா,  டாட்டா மற்றும் கோத்ரெஜ்  ஆகியோர் அவர்களுள் சிலர். இப்பொழுது தெரிகிறது பார்சிகள் எப்படி முன்னேறியுள்ளனர் என்று.
10.                நேதாஜி வீரர்களில் 25 பேருக்கு ஜப்பானில் பயிற்சி அளிக்கப்பட்டது புதுச்செய்தி. நேதாஜியின் மறைவு இன்றுவரை புதிராகவே இருக்கிறது.
11.                தாகூர் தன் சொந்த செலவில் ஆரம்பித்த  சாந்திநிகேதன் இப்போது விஸ்வபாரதி பல்கலைக்கழகமாக விரிவடைந்திருக்கிறது. அமர்த்திபா சென், சத்யஜித்ரே, இந்திராகாந்தி ஆகியோர் அதில் படித்து வெளியே வந்த பிரபலங்களில் சிலர்.
12.                இண்டிகோ என்று சொல்லப்படும் நீலவண்ணம் உருவாக்க அந்தக்காலத்தில் பதினாறு லட்சம் ஏக்கரில் அவுரித்தோட்டம் அமைத்து வெள்ளையர்கள் கொள்ளை லாபம் சம்பாதித்தனர். அதில் வேலை செய்த விவசாயிகளை கொத்தடிமைகள் போல நடத்தினர். அதுமட்டுமல்லாமல் ஆறுலட்சம் ஏக்கரில் அபினிச்செடிகள் பயிரிட்டு உலக முழுதும் ஏற்றுமதி செய்தார்கள். குறிப்பாக அதனால் சைனாவில் நடந்த ஓப்பியம் போர் உங்களுக்கு நினைவிருக்கும் இதனை எதிர்த்துப் போராடி பெற்ற வெற்றியே காந்திக்குக் கிடைத்த முதல் வெற்றி.
13.                யுவான் சுவாங், பாஹியான் போல பல ரஷ்ய யாத்திரிகர்களும் இந்தியாவுக்கு வந்தது புதுச் செய்தி.
14.                பிரிட்டிஷ் காலத்தில் மணமகன்களைத் தேடி, கப்பல் நிறைய பெண்கள் வந்து இந்தியாவில் இறங்கினார்களாம்.பிரிட்டிஷ் அரசே அவர்களுக்கு வருடத்திற்கு 30 பவுண்டு கொடுத்ததாம், பெரும்பாலானோர் தங்கள் ஜோடிகளைத் தேர்ந்தெடுத்துவிட, மற்றவர் இங்கிலாந்துக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.
15.                கற்கால கல் ஆயுதங்கள் சென்னை அருகில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. அவர்களின் வயது 5 லட்சம் ஆண்டுகள். கல்தோன்றா மண் தோன்றாக் காலத்தில் பிறந்தது தமிழினம் என்பது சரிதான்.
       ஆச்சரியப்படுமளவுக்கு நமக்குத் தெரியாத பல விஷயங்களை அலசி ஆராய்ந்து சுருக்கமாக இந்நூலில் வடித்துள்ளார்.தவிர நாம் படிக்க வேண்டிய பல புத்தகங்களை நமக்கு பரிந்துரையும் செய்திருக்கிறார். அதுதான் சொன்னேனே. அதையெல்லாம் படிக்க ஒரு ஆயுள் போதவே போதாது. ஆனால்குறைந்த பட்சம் இந்தப் புத்தகத்தையாவது  படிக்கலாம்.
முற்றும்

Monday, February 25, 2019


வன தெய்வங்கள் கூடும் கும்பக்கரை அருவி !!!!!!!!
வேர்களைத்தேடி பகுதி 35
இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும். 
http://paradesiatnewyork.blogspot.com/2019/01/blog-post_22.html
நன்றி தினகரன்

கும்பக்கரை அருவி என்பது ஒரு மறைந்திருக்கும் அதிசயம் (Hidden surprise) என்று சொல்லலாம். ஏனென்றால் நிறையப்பேருக்கு இப்படி ஒரு அருவி இருப்பது தெரியாது. உள்ளூர்க்காரர்களுக்கு மட்டும்தான் தெரியும். குறிப்பாக தேவதானப்பட்டி, அதனருகிலுள்ள சிற்றூர்கள் மற்றும் பெரியகுளம் ஆகிய இடங்களிலிருப்பவர்களுக்கு மட்டுமே இது தெரியும். மஞ்சளாறு அணையும் அப்படித்தான். வைகை அணை போல எல்லோருக்கும் தெரியாது. வைகை அணை எல்லாருக்கும் தெரிந்தது எப்படியென்றால் இங்கு மாட்டுக்காரவேலன் என்ற படத்திற்காக எம்ஜியார் அவர்களின் படப்பிடிப்பு நடந்ததற்குப்பிறகுதான். அதே போல கும்பக்கரை தங்கையா படம் வந்த பின் தான் இப்படி ஒரு இடம் இருப்பது பலருக்கு தெரிய வந்தது . கும்பக்கரை அருவி என்பது குற்றாலம், சுருளி போன்றவை போன்று பெரிய அருவியில்லை யென்றாலும், சின்னக் குற்றாலம் என்று அழைக்கப்படும் அளவுக்கு அழகான இயற்கைச் சூழலில் அமைந்த ஒன்று. ஒரு நாள் பிக்னிக்கிற்கு மிகவும் ஏற்ற இடம்.
நன்றி தினகரன்

தேவதானப்பட்டியிலிருந்து பெரியகுளம் போகும் வழியில் கூட்டுரோட்டில் இறங்கி சில கிலோமீட்டர்கள் நடந்தால் சற்றே  உயரமான மலையில் இந்த இரட்டை அருவிகள் இருக்கின்றன. பெரியகுளத்திலிருந்து குறிப்பிட்ட நேரங்களில் டவுன் பஸ்ஸும் இருக்கிறது. ஆனால் நிறைய இல்லை. ஒரு நாளில் இரண்டு மூன்று முறை மட்டும்தான் போகும். தேவதானப்பட்டியிலிருந்து ஓரிரு முறை மட்டும் மாட்டு வண்டியில் போயிருக்கிறேன். காரிலும் சில முறை போயிருக்கிறோம். ஆனால் நடந்து போனது மிகவும் சிறந்த அனுபவம். வனப்பகுதி நெருங்க நெருங்க வெயில் அடிக்காத வண்ணம் இருபுறங்களிலும் மரங்கள் கூரையமைத்திருக்க, ஒரு பெரிய குகைக்குள் செல்வது போலிருக்கும். அதோடு கோடைகாலத்தில் போகும் போது இருபுறமும் உள்ள மாமரங்களில் காயும் பழமுமாகத்  தொங்கும். பறித்தால் கேட்பதற்கு ஆளில்லை அங்கு. சில இடங்களில் தோப்புக்கு வெளியே விற்பார்கள். வாங்கி  உண்டு கொண்டே நடக்கலாம். இருபுறமும் தென்னந்தோப்புகளும் அதிகம். இங்கு கிடைக்கும் இளநீர்கள் மிகவும் சுவை வாய்ந்தவை.
நன்றி தினகரன்

இன்னும் காட்டுக்குள் நுழைந்து மேலேறிச் சென்றால் திடீரென்று ஒரு வெட்டவெளி வரும். பெரும் பாறைகளால் சூழப்பட்ட இடத்தில் சிலுசிலுவென்ற  தென்றல் வீச, சலசல வென்று கொட்டுகிறது கும்பக்கரை  அருவி. சுற்றிலும் பார்த்தால் மேற்குத் தொடர்ச்சி மலை சூழ்ந்து பச்சைப்பசேலென்று  நெஞ்சை நிமிர்த்தி நிற்கிறது. சலசலவென்று ஓடும் தண்ணீரில் ஒரு காலை வைத்தால் குளுகுளு வென்று குளிர்ச்சி உச்சந்தலை வரைக்கும் ஏறுகிறது. தெளிந்த நீரில் சிறுசிறு மீன்கள் தெரிய, காலில் மொய்த்து அவை கிச்சுக்கிச்சு மூட்டுகிறது.கும்பக்கரை பற்றிய மேலும் சில தகவல்களை இப்போது பார்க்கலாம்.( நன்றி தினகரன்)
 கொடைக்கானல் மலையில் இருந்து உருவாகும் நீரூற்று மலையடிவாரத்தை அடைகிறது. இப்பகுதியிலுள்ள மாட்சிநாயக்கன், வீரபுத்திரன், வைரவன், பூதநாட்சி, செழும்புநாட்சி, சோத்துமாயன், சின்ன அண்ணன், கருப்பணசாமி ஆகிய வன தெய்வங்கள் இங்குள்ள கரையில் கும்பலாகக் கூடுமாம். அதனால் இது கும்பல்கரை என்று முன்னர் அழைக்கப்பட்டதாம். இந்த கும்பல்கரையே இன்று கும்பக்கரை என்று மருவியதாக இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
 இயற்கையாகவே உருவாகியுள்ள இந்த நீர்வீழ்ச்சியைச் சுற்றிலும் எழும் பறவைகளின்  குரல்கள் சுற்றுலாப் பயணிகளை வரவேற்கும் விதமாக உள்ளது. இந்த கும்பக்கரை நீர்வீழ்ச்சி இரண்டு அடுக்குகளையுடையது. 400 மீ உயரத்திலிருந்து விழும் இந்த அருவியின் நீர், அதனைச் சுற்றியுள்ள பாறைகளில் விழுகிறது. இந்த நீர்வீழ்ச்சிக்கு அருகில் ஒரு முருகப் பெருமான் சிலையும் உள்ளது. 
நன்றி தினகரன்

இந்த நீர்வீழ்ச்சிக்கு செல்வதற்கு ஒரு உள்ளூர் வழிகாட்டியை அமர்த்திக் கொள்ளும் பட்சத்தில், பாறைகளில் வழுக்குதல் மற்றும் பிற ஆபத்துகளிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும். வருடத்தில் அனைத்து  நாட்களிலும் சென்று வர தகுந்த சுற்றுலாத் தலமான கும்பக்கரை நீர்வீழ்ச்சி உள்ளது. இங்கு கோடைகாலங்களில் நீர்வரத்து அதிகமாக இருக்கும். கொடைக்கானல் பகுதியில் தோன்றி பல இடங்களைக் கடந்து கும்பக்கரை அருவியாக வருகிறது. இந்த அருவியில் பாண்டிய மன்னர்களின் தலவிருட்சமான மருதமரங்கள் அதிகமாக உள்ளது என கூறப்படுகிறது.  மருதமரங்களின் வேர்களை தாண்டி  இந்த அருவி வருவதால் மூலிகை குணமுடையது. இதனால்அருவியில் குளித்தால் வாதநோய் உண்டாகாது என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ளது. 
இந்த அருவியின் அருகே வனதெய்வக் கோயில்கள் உள்ளன. பூம்பறையாண்டி வைரன், கிண்டன், கிடாயன் உள்ளிட்ட வனதெய்வங்கள் இந்த கும்பகரை அருவியில் இருப்பதாக மக்களால் நம்பப்படுகிறது. இந்த அருவியில் வேறு எங்கும் இல்லாத அளவிற்கு கஜம் என அழைக்கப்படும் இடங்கள் அதிக உள்ளன. அந்த கஜங்கள் அதனுடைய வடிவமைப்பிற்கு ஏற்றவாறு உள்ளது. அண்டா கஜம், யானை கஜம், குதிரை கஜம் என பல கஜங்கள் உள்ளன. இதில் யானை கஜம் பகுதி மிகவும் ஆபத்தான பகுதி என வனத்துறையினர் தெரிவிக்கின்றனர். 
நன்றி தினகரன்

ஆண்டுதோறும் நீர் வற்றாமல் இந்த அருவியில் தண்ணீர் வருவது சிறப்பான ஒன்றாகும். இந்த அருவி வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு உள்ள நீர்வீழ்ச்சிகளுக்கு பல கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த கும்பக்கரை அருவியில் தங்கும் விடுதிகளோ, உணவகங்களோ இல்லை.
வனப்பகுதிக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் பாலிதீன் பயன்படுத்தக் கூடாது. சோப்பு, ஷாம்பு, எண்ணெய் வகைகளை உபயோகப்படுத்தக் கூடாது. மது பானங்களை கொண்டு செல்லக்கூடாது என்பது உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளை வனத்துறையினர் விதித்துள்ளனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு போதிய அடிப்படை வசதிகள் மற்றும் போதிய பாதுகாப்பு வழங்கினால் சுற்றுலா வரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. 

மேற்புறத்தில் ஒரு சிறிய அருவி இருக்கிறது. பாறையில் வழுக்காமல் கீழிறங்கினால் மேலிருக்கும் நீர் மேலும் வேகமெடுத்து கொட்டத்துவங்குகிறது. அங்கே குளித்து எழுந்தால் தலைமுடி பஞ்சு ஆகி உடலின் நஞ்சு அனைத்தும் நீங்கி கபகபவென்று பசிக்கும். கட்டுச் சோறு இல்லையென்றால் நீங்கள் காலி. என் வீட்டுக்கு நண்பர்களோ உறவினர்களோ வந்தால் முதலில் வைகை அணை, அப்புறம் மஞ்சளாறு, பின்னர் கும்பக்கரை மற்றும்  காமாட்சியம்மன் கோவில் நிச்சயம் பார்க்க வேண்டிய லிஸ்ட்டில் இடம்பெறுபவை.
தொடரும்




Thursday, February 7, 2019

தீவிரவாதப்படையில் சேர்க்கப்பட்ட ஐந்து வயது பெண் !!!!!!!!!


பார்த்ததில் பிடித்தது   
 ஃபர்ஸ்ட் தே கில்டு மை ஃபாதர்
            First they killed my Father

          
நெட் பிலிக்சில்  கிடைத்த  இன்னொரு அற்புதப்படம் இது. அமெரிக்காவுக்கும் வியட்நாமுக்கும் முடிவில்லாத உக்கிரப் போர் நடந்து கொண்டிருந்தது. கொரில்லாப்போரை எந்த ராணுவம் வெல்ல முடியும்? இருபுறமும் கடுமையான சேதம். அதே சமயத்தில் பக்கத்து நாடான கம்போடியாவில் ஒரு கம்யூனிய தீவிரவாத இயக்கமான கெமர் ரூஜ்-ன் (Khmer Rouge) போல் பாட்டின் (Pol pot)  படைகள் நாட்டை ஆக்கிரமிக்க துடித்துக் கொண்டிருந்தனர். கம்போடியாவின் ஜனநாயக அரசுக்குச்சாதகமாக அமெரிக்க ராணுவம் உதவிவந்தது.
Pol Pot
          இதற்கிடையில் வியட்நாமின் போரை நிறுத்த அமெரிக்காவில் பல போராட்டங்கள் நடத்த இந்த முடிவில்லாத போரை அப்போது அதிபராக இருந்த லிண்டன் ஜான்சன்  நிறுத்தி ராணுவத்தை தாய் நாட்டுக்கு வரவழைத்தார். அதே சமயத்தில் கம்போடியாவில் இருந்த அமெரிக்கப்படையும் வாபஸ் பெற்றதோடு தன்னுடைய கான்சுலேட்டையும் காலி செய்தது.
Loung ung
          அதன்பின் அரசுப் படைகள், கெமர் ரூஜின் தாக்குதலுக்கு தாக்குப்  பிடிக்க முடியாது ஒளிந்து ஓடினர். இது நடந்தது 1975ல். இந்தப் போராட்டத்தில் சிக்கிக் கொண்ட ஐந்துவயது இளம் பெண் தான் பட்ட கஷ்டங்களை பின்னாளில் 2000ல் ஒரு புத்தகமாக எழுதி வெளியிட்டார்.  அவர் பெயர் லுங் உங் (Loung ung) அப்புத்தகத்தின் பெயர்தான் "First they killed my Father?" அந்தக் கதைதான் 2017ல் திரைப்படமாக எடுக்கப்பட்டது.

          தீவிரவாதிகளின் ராணுவம் ஃபுனோம் பென் (Phnom Penh) என்ற கம்போடியாவின் தலை நகரில் நுழைவதிலிருந்து படம் துவங்குகிறது. அந்த ஐந்து வயதுச் சிறுமி கம்போடிய அரசின் ராணுவ உயர் அதிகாரியான ஒருவரின் ஐந்து குழந்தைகளின் கடைசிக் குழந்தை. ராணுவ கேப்டன் என்பதால் தீவிரவாத ராணுவம் நிச்சயம் சுட்டுக் கொன்றுவிடும் என்பதால் தன் அடையாளங்களையும் பாஸ்போர்ட்டையும் நீக்கிவிடுகிறான்.
          தீவிரவாத ராணுவம், யாரும் நகருள் வாழக்கூடாது எல்லோருக்கும் பொதுவான விவசாயத்தில் ஈடுபட்டு பலனை பகிர்ந்து உண்ண வேண்டும் என்ற நினைப்பில் நகர் வாழ் மக்கள் அனைவரையும் வெளியேற்றுகிறார்கள். தங்கள் சொத்து  சுகமிழந்த மக்கள் அப்படியே நடந்தே வெளியேறுகிறார்கள். போகிற வழியிலேயே பசியினாலும் தொத்து வியாதியாலும் பலர் இறந்துவிடுகின்றனர். ஒரு முகாமில் அடைக்கப்படும் அவர்கள், பகலில் கடுமையான வேலை செய்தாலும் சரியான உணவு இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள். ஏனென்றால் விளைச்சல் முழுவதும் தீவிரவாதிகளின் படைகளுக்கே சென்று விடுகின்றன.
          முகாமில் எப்படியோ தந்தையைப் பற்றி அறிந்து கொண்ட தீவிரவாதிகள் அவரைக் கொன்றுவிடுகின்றனர். மற்ற பிள்ளைகளைக் காப்பாற்ற அவளின் தாய் முடிவெடுத்து அவர்களை வெவ்வேறு திசைகளில் அனுப்பிவிடுகிறாள். அதில் 5 வயதுப் பெண்ணாகிய அவளும் 9 வயது பெண்ணான அவள் அக்காவையும் படையில் சேர்த்து கடுமையான பயிற்சியில் ஈடுபடுத்துகிறார்கள்.
          இறுதியில் மீண்டும் வியட்நாம் ராணுவம் உள்ளே நுழைந்து தீவிரவாத இயக்கத்துடன் போர் புரிகிறது. அதற்குள் கெமர் ரூஜ் இயக்கத்தின் தவறான கொள்கைகளால் 20  லட்சம் பேர் மடிந்து போயினர். இதில் யார் யார் தப்பித்தார்கள்? இந்தக் குழந்தை எப்படித்தப்பித்தது? தன்னுடைய சகோதர சகோதரர்களை கண்டுபிடித்ததா என்பதை சின்னத்திரையில் காண்க.

          இதனை இயக்கியது ஏஞ்சலினா ஜோலி என்ற ஏஞ்சல் என்பது படம் முடிந்து வந்த டைட்டிலைப் பார்த்துத்தான் தெரிந்து கொண்டேன். இது நெட்பிலிக்சின் ஒரிஜினல் படம். கம்போடிய மொழியில் தயாரிக்கப்பட்ட இந்தப்படத்தில் ஏஞ்சலினா கம்போடிய நடிகர்களை மட்டுமே நடிக்க வைத்திருக்கிறார். அதோடு இந்தச் சமயத்தில் சிக்கி உயிர் பிழைத்த பலரையும் அவர்களுடைய குழந்தைகளையும் இப்படத்தில் பயன்படுத்தியிருக்கிறார். கம்போடியாவில் ரிலீஸ் செய்யப்பட இந்தப்படம் மிகவும்  தத்ரூபமாக எடுக்கப்பட்டிருக்கிறது. சில சமயங்களில் திரைப்படமா அல்லது டாக்குமென்டரியா என்று சந்தேகம் வருமளவிற்கு படம் இருக்கிறது.

          குறிப்பாக அந்த ஐந்து வயதுக் குழந்தையாக நடித்த பெண் தன் உணர்ச்சிகளை இயல்பாகப் காட்டி லைக்ஸ்களை அள்ளிக் குவிக்கிறார். அந்தக் குழந்தைக்காகவும் ஏஞ்சலினாவுக்காகவும் இப்படத்தை அவசியம் பார்க்க வேண்டும்
-முற்றும்.
முக்கிய அறிவிப்பு: 

அலுவலகப்  பணி நிமித்தமாக மெக்ஸிகோவில் உள்ள குவடாலாஹாராவுக்கு  செல்வதால் வரும் வாரத்தில் (பெப்ருவரி 9 முதல் 16 வரை )  பதிவுகள் எதுவும் வராது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் .உங்களின்  தொடர்ந்த ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றிகள்

Tuesday, February 5, 2019

சிவாஜிக்குப்பாடிய எஸ் பி பி !!!!



இளையராஜா 75 பிறந்த நாள் சிறப்புப் பதிவு
எழுபதுகளில் இளையராஜா பாடல் எண்: 42
எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்

          இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்
https://paradesiatnewyork.blogspot.com/2018/12/blog-post.html

பட்டாக்கத்தி பைரவன் (LOL) என்ற படத்திற்காக 1979ல் இளையராஜா இசையமைத்து வெளிவந்த பாடல் இது.
நடிகர் திலகம் நடித்து வெளிவந்த இந்தப் பாடலில் அவர் டூயட் பாடி நடித்த இந்தப்பாடலைக் கேளுங்கள்.

 நடிகர் திலகத்தின் நடிப்பு எனக்கு மிகவும் பிடித்ததுதான். அவருடைய பழைய படங்களை ஒரு காலத்தில் தேடித் தேடி போய் பார்த்து அழுதுவிட்டு வந்திருக்கிறேன். ஆனாலும் நீண்ட காலத்திற்குப்பிறகு இந்தப் பாடலின் வீடியோவைப் பார்க்கும் போது அதுவும் டூயட் பாடலைப் பார்க்கும்போது கொஞ்சம் ஓவர் என்று தோன்றியது. ஆனால் பாடல் மிகவும் காதுக்கினிய மெல்லிசைப் பாடல்.
இசையமைப்பு:

பாடலின் முன்னிசையாக கிடாரின் நிரடலில் இசையால் பேச ஆரம்பிக்கிறார்  இளையராஜா. அந்த பாஷை விளங்காத ஓசையில் ஒளிந்து  கண்களை மூடிக் கேட்டால், வயலின் குழுமம் அப்படியே ஆர்ப்பரித்து, ஆரவாரித்து இசைக்க, புல்லாங்குழல் இசை வந்து தழுவிச் செல்ல, டிரம்ஸ் இசை கூட்ட, ஆண்குரலில் "எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்”. பல்லவி இனிதே முடிந்து முதல் BGM ல்  வயலினும், கீபோர்டும் கேள்விகேட்டு பதில் சொல்லி களைத்துப் போன ஒரு நொடியில் பெண்குரலில் "ஹா என்ற ஹம்மிங்குடன் தொடங்கி "நான் காண்பது" என்று ஆரம்பிக்கிறது. இரண்டாவது  BGM -ல் கீபோர்டு, வயலின், கிடார், புல்லாங்குழல் ஆகியவை புதுமையாக இணைந்து விளையாட, திறமையான இசைக் கலைஞர்கள் உட்கார்ந்து ஜாம் செய்து முடிக்க இரண்டாவது சரணம் முடிய ஆண்குரலில் அதே ஹம்மிங்குடன் ஆரம்பித்து, “கல்லானவன்”, என்று ஆரம்பித்து மறுபடியும் பல்லவி பாடி பாடல் நிறைவு பெறுகிறது. ரயில் பயணம், பைக் அல்லது சைக்கிள் பயணம், அல்லது ஜாக்கிங் ஆகியவற்றின் போது பாடுவதற்குப் பொருத்தமான பாடல் இது.
            இந்தப் பாடலைக் கேட்கும்போது இளையராஜாவின் இன்னொரு பாடலான "ஓ மானே மானே மானே உன்னைத்தானே", என்ற பாடல் ஞாபகத்திற்கு வருகிறது. இந்தப்பல்லவியையும் அந்தப் பாடலின் சரணத்தையும் சேர்த்து பாடிப்பாருங்கள். அப்படியே பொருந்தும். இப்படி இளையராஜா இசையில் நிறைய இரட்டைப் பாடல்கள் இருக்கின்றன. இளையராஜாவின் பாடலில் அவருடைய சொந்தப் பாடல்களின் சாயல் தெரிவதில் வியப்பேதுமில்லை. விவகாரம் என்பது மற்றவரின் பாடலின் சாயலில் தெரிந்தால்தானே.
பாடலின் வரிகள்:
எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்
இங்கேதான் கண்டேன் பொன் வண்ணங்கள்
என் வாழ்க்கை வானில்
நிலாவே நிலாவே..

ஹா
நான் காண்பது....உன் கோலமே
அங்கும்...
இங்கும்....
எங்கும்....!
என் நெஞ்சிலே.... உன் எண்ணமே
அன்றும்....
இன்றும்....
என்றும்...
உள்ளத்தில் தேவன்
உள்ளே என் ஜீவன்
நீ....நீ......நீ......!


ஹா
கல்லானவன் பூவாகிறேன்
கண்ணே உன்னை எண்ணி
பூவாசமும் பொன்மஞ்சமும்
என்றோ எங்கோ ராஜா
எதற்காக வாழ்ந்தேன்
உனக்காக வாழ்வேன்
நான்...
நீ.....
நாம்..
            

     
       பாடலை எழுதியவர் கவியரசு கண்ணதாசன் அவர்கள். கவிஞரின்  பொன்வரிகள் என்று ஒன்றும் சொல்லமுடியவில்லை. ஆனாலும் பாடலின் சந்தத்திற்கு எழுதுவதில் அவருக்கு இணை அவரே. வரிகள் முழுவதும் அப்படியே இசையில் உட்கார்கின்றன. "கண்ணே உன்னை எண்ணி கல்லானவன் பூவாகிறேன்" என்று சொன்னதில் கவிஞர் எட்டிப்பார்க்கிறார். அதே போல் “பூவாசமும் பொன் மஞ்சமும்”, என்று சொல்லும்போது திருமணததையும் முதலிரவையும் சுட்டிக்காட்டும்போது ஆஹா இது கண்ணதாசன் என்று தோன்றுகிறது.
பாடலைப்பாடியவர்கள்:

SPB with Ilayaraja 
சிவாஜிக்கு SPB பாலுவின் குரலும் நன்றாகவே இருக்கிறது. SPB க்கு ஜோடியாக ஜானகி கேட்கவே வேண்டாம். இருவரும் பிச்சு உதறியிருக்கிறார்கள். இது ஒரு மாதிரியான எதிரொலிப்பாடல் என்பதால் பாடுவது கொஞ்சம் சிரமம். ஆனால் இருவருமே அநாயசமாக பாடி அசத்தியிருக்கிறார்கள். இளையராஜாவின் புதிது புதிதான முயற்சியுள்ள பாடல்களில் இதுவும் ஒன்று என்று சொல்லலாம்.
இளையராஜா இசையால் ( மட்டும்) இன்னும் அதிகம் பேசவேண்டும் என விரும்பும் ஒரு ரசிகனின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் .
தொடரும்