Tuesday, January 22, 2019

ராமனாக வாழ்ந்து அனுமாரான குரங்கு !!!!!!




வேர்களைத்தேடி பகுதி 34
இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும். 
https://paradesiatnewyork.blogspot.com/2018/11/blog-post_26.html

தேவதானப்பட்டியில் பொதுவாக குரங்குகள் இல்லை. இதை இங்கு நான் சொல்லும்போது என்னைப்போன்று அங்கிருந்த குரங்குகளைப் பற்றிச் சொல்லவில்லை. ஆனால் தேவதானப்பட்டி,  வனப்பகுதிகளின் பக்கத்தில் இருப்பதால் மான், நரி, குரங்கு, கழுதைப்புலி, சிறுத்தை, முயல், பன்றி, காட்டெருமை , கேளையாடு, ஓநாய் போன்ற பல மிருகங்கள் பக்கத்து வனங்களில் இருந்தன. மஞ்சளாறு வனம், முருகமலை, கும்பக்கரை மலைப்பகுதி, கொடைக்கானல், காட்ரோடு என்ற பல பகுதிகளில்  அவை இருந்தன.
கூட்டமாக வாழும் குரங்கு, யானை ஆகியவற்றில் சில கட்டுப்பாடுகள் இருக்குமாம். அவற்றை மீறுபவைகளுக்கு தண்டனை என்னவென்றால் கூட்டத்திலிருந்து தனித்து விடப்படுமாம். அப்படி தனிமைப் படுத்தப்பட்ட ஒற்றை யானை எப்போதும் கோபமாக இருக்கும் . குரங்கும் அப்படித்தான்.
அப்படி ஒரு குரங்கு துரத்தப்பட்ட நிலையிலோ அல்லது வழி தவறியோ தேவதானப்பட்டிக்கு வந்து சேர்ந்தது. ஆனால் அது கோபமாக இருக்கவில்லை, யாருக்கும் பயப்படவுமில்லை, யாரையும் பயமுறுத்தவும் இல்லை. அப்படி சகஜமாக எல்லோருடனும் பழகி கலந்துவிட்டது. அதற்குப் பொருத்தமாக யாரோ ராமன் என்ற பெயரும் சூட்டினார்கள். இந்தப் பெயரைக் கேட்டதும் மூன்றாம் பிறையில் 'ஆடுறா ராமா ஆடுறா ராமா' என்ற காட்சி உங்களுக்கு வரத்தவறினால் நீங்கள் அந்தப்படத்தை இதுவரையில் பார்க்கவில்லை  என்ற மாபெரும் குற்றத்தைச் செய்திருக்கிறீர்கள்.
தேவதானப்பட்டி மெயின்ட்ரோட்டில் காவல் நிலையம் அருகிலிருந்த பிள்ளையார் கோவிலிலும் அதன் எதிரே இருந்த அரச மரத்தடியிலும் தான் அதன் வாசம். முதலில் அதனைப் பார்த்துத் தயக்கமும் பயமும் அடைந்த என்னை மாதிரி சிறுவர்களும் அப்புறம் அதனிடம் பழகி விட்டோம். பிள்ளையார் கோவிலில் கிடைக்கும் தேங்காய், வாழைப்பழம், பிரசாதம் என்று உணவுக்கு எந்தப்பஞ்சமும் இல்லாமல் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக ராமன் வளர்ந்து வந்தான். பெயர் ராமன் என்று வைத்ததால் அது ஆண் குரங்குதான் என்று தெள்ளத் தெளிவாக உங்களுக்குத் தெரிந்திருக்கும் என நினைக்கிறேன். ஹிஹி.
Thanks Reutrs
கோவிலில் பூஜை புனஸ்காரங்கள் இல்லாத சமயத்தில் பசி எடுத்தால் பெட்டிக்கடைக்குச் செல்வான்,  நிற்பான். கடைக்காரர் உடனே ஒரு வாழைப்பழத்தை தாரிலிருந்து பிய்த்துத்தருவார். அதனை நன்றியுடன் வாங்கிக் கொண்டு நகர்ந்து விடுவான்.  முறுக்கு  போன்ற எந்த தின்பண்டங்கள் கொடுத்தாலும் தட்ட மாட்டான் .அதோடு எவர் கையில் இருப்பதையும்  தட்டிப்பறிக்கமாட்டான் , ஒருபோதும் திருடவும் மாட்டான் . பசியெடுத்தால் தவிர இப்படி கடைக்குப் போவதில்லை. திரும்பத்திரும்ப ஒரே கடைக்கும்   போவதில்லை என அவனுக்கு சில நல்ல பழக்கங்களும் இருந்தன. கடைக்காரர்களும் அன்புடனே கவனித்தார்கள்.
பெயர் ராமன் என்றும் ராமனுக்கு உதவிய அனுமான் என்றும் கதைகள் சொன்னாலும், இந்த ராமனுக்கு பிள்ளையார், முத்தாளம்மன், கொண்டைத்தாத்தா, கிருஷ்ணன் மற்றும் அய்யப்பன் என்ற எந்த வித்தியாசமும் இல்லை. பெட்டிக்கடை வைத்திருக்கும் முஸ்லிம்  கடைகளிலும் அவனுக்கு அன்பும் அனுசரணையும் உண்டு. எங்கள் கிறித்தவ ஆலயத்திற்கும் ஓரிறு முறை வந்து தலை காட்டியிருக்கிறான்.
எனவே அவனுக்கு ராமன் என்ற பெயர் மட்டுமல்ல ரஹீம் மற்றும் ராபர்ட் என்று எந்தப்பெயர் வைத்தாலும் பொருத்தம் தான். மிருகங்களுக்கு ஏது சாதியும் சமயமும் எல்லாம். எல்லோருடனும் பிரியமுடனே பழகி வந்தான்.
சில சமயங்களில் அவனுக்கு யாராவது நாமம் போடுவது உண்டு. அது அவனுக்கு அழகாகவும் பொருத்தமாகவும் இருந்தது. அவன் சாதுவாகவே இருந்து எல்லோரின் அன்பைப் பெற்றவனானான்.
வாழைப்பழம் மட்டுமல்ல அந்தந்த சீசனுக்குத் தகுந்தாற்போல் கொய்யாப்பழம், மாங்கனி, சப்போட்டா,  பிளம்ஸ் என்று பல பழங்கள் அவனுக்கு கிடைக்கும்.  மேலும் வேர்க்கடலை, கப்பக்கிழங்கு, சர்க்கரை வள்ளி போன்றவையும் அவனுக்கு விருப்பமான உணவுகள் தான். இதுதவிர அவனுக்கு யாரோ காப்பி வாங்கிக்  கொடுக்க அதனையும் பழகிவிட்டான். அவனுக்கென்று சிரட்டைகளை ரெடி பண்ணி டீக்கடைகளில் வைத்திருப்பார்கள். பதமாக ஆற்றித்தருவார்கள். அதனை அவன் நன்கு உட்கார்ந்து ருசி பார்த்து உறிஞ்சிக்குடிக்கும் அழகே தனிதான். யாரோ அவனுக்கு சட்டை தைத்தும் போட்டுவிட்டார்கள். அவன் அழகு அதனால் கூடிப்போனது.
Thanks Google 
           
இது தவிர யாரோ சில மோசக்காரர்கள் அவனுக்கு சாராயத்தை பழக்கிக் கொடுத்துவிட்டார்கள். அதிலிருந்து மாலையானால் கொஞ்சம் மயக்கத்துடன் சுருண்டு படுத்துவிடுவான். நாங்கள் கூட  உடம்பு சரியில்லை யென நினைத்தோம் . ஆனால் இந்த விஷயம் பல நாட்கள் கழித்துத்தான் எங்களுக்குத் தெரிந்தது. ஓரிருமுறை பீடி குடித்தும் பார்த்திருக்கிறேன் . இப்படி நல்ல குணங்களுடன் இருந்த குரங்கை சில மானிட மிருகங்கள் மாற்றி விட்டன .
இப்படி ஊர் மக்களோடு ஒன்றாக இணைத்து அவன் வாழ்க்கை ஓடிக் கொண்டிருந்த போதுதான் அந்த சம்பவம் நிகழ்ந்தது.
இரவில் கண்மண் தெரியாமல் வந்த லாரியொன்றில் அடிபட்டுச் செத்துப்போனான் ராமன் . குடி மயக்கத்தில் லாரியில் அடிபட்டிருக்கலாம் என்றும் சிலர் சொன்னார்கள்.
ஊரெங்கும்  இதே பேச்சு, ஊரே சோகமாகி விட்டது.  அதன்பின்னர் கிருஷ்ணன் கோவில் மக்கள் அதனை நன்கு அலங்கரித்து பொதுமக்களின் பார்வைக்கு வைத்து சிறிய பாடை ஒன்று செய்து ஊர்வலமாக எடுத்துச் சென்று குளக்கரையில் இருந்த அய்யப்பன் கோவிலின் எதிரே புதைத்தார்கள். மூன்றாம் நாள் பால் கூட ஊற்றினார்கள் என்று கேள்விப்பட்டேன்.
சிறிது நாட்கள் கழித்து ஊரில் எல்லோரிடமும் வசூல் செய்து சதுரமாக இடுப்பளவு உயரத்தில் ஒரு கல்லறையையும் கட்டி இப்போது அதனை வழிபடுகிறார்கள்.
அய்யப்பன் கோவில் முன்னால் அந்த அனுமார் கோவில் இன்னும் இருக்கிறது. நீங்கள் தேவதானப்பட்டிக்குப்போனால் அங்கு இந்தக்கோவிலைப்  பார்க்கலாம். ராமனை இன்று நினைத்தாலும் கண்கள் குளமாகிவிடுகிறது.
 அடுத்த வாரம் வாருங்கள் கும்பக்கரைக்குப் போவோம்.

-தொடரும்.

8 comments:

  1. அடப்பாவமே.... ஆஞ்சியை இப்படிக் கெடுத்த மானிடப்பதர்களை என்னன்னு சொல்ல.... ப்ச்.....

    ReplyDelete
    Replies
    1. பாருங்க மிருகங்கள் மனிதர்களை விட எவ்வளவோ பரவாயில்லை , நன்றி துளசி கோபால் .

      Delete
  2. தகாத செயல் செய்வதை செய்து விட்டு, வழிபாடு...

    ReplyDelete
  3. ப்ச் என்ன சொல்றது தனபாலன்.

    ReplyDelete
  4. இப்படியும் சில வக்கிரம் பிடித்தவர்கள் இருக்கிறார்கள்... நெகிழ்ச்சியான வரலாறு.

    ReplyDelete
    Replies
    1. மனித மனமும் ஒரு குரங்குதானே ஸ்ரீராம்

      Delete
  5. ராமன் ராமதூதன் ஆன கதை சுவாரஸ்யமாக உள்ளது.

    ReplyDelete
    Replies

    1. ஆஹா இதை அப்படியும் சொல்லலாம், நன்றி முத்துசாமி.

      Delete