Monday, January 14, 2019

கரும்பு சாப்பிடுவது எப்படி?


பொங்கல் சிறப்புப்பதிவு -2
இதன் முந்திய பதிவைப்படிக்க இங்கே சுட்டவும் 
http://paradesiatnewyork.blogspot.com/2019/01/blog-post_10.html

எச்சரிக்கை: நீங்கள் எழுபது வயதிற்கு மேற்பட்டவரா? செயற்கைப் பற்தொகுப்பைப் பயன்படுத்துபவரா? அல்லது மிகவும் இனிப்பானவரா? இந்தப்பதிவு உங்களுக்கானதல்ல. மீறிச்சாப்பிட்டு பல் விழுந்தாலோ, தாடை உடைந்தாலோ, சுகர் ஏறினாலோ அது கம்பெனியைச் சார்ந்ததல்ல என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
Add caption
கரும்புகளில் பலவகை உண்டு. ராமர் கரும்பு, பீச்சிக்கரும்பு அல்லது கருப்புக்கரும்பு, ஆலைக்கரும்பு, கம்பெனிக்கரும்பு ஆகியவை அவற்றுள் சில . ராமர் கரும்பு, ராமர் நாமம் போல கணுக்களைக் கொண்டு லேசான கிரே மற்றும் இளம்பச்சை நிறத்தில் இருக்கும். சாப்பிடுவதற்கு மிகவும் எளிது. அவ்வளவு இனிப்பாக இருக்காது. ஆனால் இவற்றை BJP ஆட்சி வந்தும் கூட இப்போதெல்லாம் பார்க்க முடிவதில்லை.
பீச்சிக்கரும்பு
ஆலைக்கரும்பு என்பது அதே வண்ணத்தில் சிறிது குட்டையாகவும், விட்டம் சிறிதாகவும் இருக்கும். இதனைக் கடித்துச்   சாப்பிடுவது கடினம். இளைஞர்களுக்குக் கூட பல் உடைந்துவிட வாய்ப்பிருக்கிறது. பெரும்பாலும் கரும்பு ஜூஸ் கடைகளில் இதனைத்தான் பயன்படுத்துவார்கள் .  இவற்றை வயலிலேயே தற்காலிக ஆலை அமைத்து வெல்லம் செய்வார்கள்.
ஆலைக்கரும்பு
கம்பெனிக் கரும்பு என்பது தமிழக மெங்கும் உள்ள சர்க்கரை ஆலைகளின் மேற்பார்வையில் அவர்களே கொடுத்த கரும்பை நட்டு விளைவித்து அவர்களுக்கே கொடுத்துவிடுவது. டன்னுக்கு இவ்வளவு என்று விலை கிடைக்கும். இந்தக் கரும்பையும் கடித்துச் சாப்பிடுவது கடினமான காரியம்தான்.
இதனை எல்லாவற்றையும் நான் அனுபவித்தவன் என்ற முறையில் என் பேச்சை கேட்பீர்கள் என்று நம்புகிறேன்.
இவற்றுள் கடித்துச் சாப்பிடுவதற்கெனவே விளைவிக்கப்படும் கரும்பு பீச்சிக்கரும்பு அல்லது கருப்புக் கரும்பு. பொங்கல் சமயத்தில் ஏராளமாக வரும் . கரும்பு சாப்பிடவில்லை என்றால் அது பொங்கலே கிடையாது.
முதலில் கரும்பை எப்படி வாங்க வேண்டும்? என்று பார்ப்போம்.
1)   கரும்பு நல்ல திடமானதாக திரமானதாக தரமானதாக இருக்க வேண்டும். அவைதான் நன்கு விளைந்தவையாகும்.
2)   கணுக்களின் இடைவெளி அகலமானதாக இருக்க வேண்டும்.
3)   கரும்பின் தோகைகள் புதிதாக, செழிப்பானதாக, பச்சைப் பசேல் என்று இருக்க வேண்டும்.
4)   நிறம் நல்ல அடர் கருப்பாக இருக்க வேண்டும். கருஞ்சிவப்பு நிறத்தை தவிர்க்கவும்.
5)   உடனே சாப்பிடுவதென்றால் மட்டுமே தோகைகளை நீக்கி வாங்க வேண்டும்.
6)   வெட்டித் துண்டுகளாக வாங்குவதையும் தவிர்க்க வேண்டும். உடனே சாப்பிடவில்லையென்றால் காய்ந்து விடும் அல்லது சிவப்பு பூத்து சுவை குன்றிவிடும்.
7)   தோகையின் உடன் கீழே இருக்கும் கொழுத்தாடையைச் சாப்பிடக் கூடாது.
8)   அடிக்கரும்பின் வேர் இருக்குமென்பதால் அதனை நீக்கி அடியின் ஒரு சிறு பகுதியை மட்டும் வெட்டிவிட வேண்டும். ஏனென்றால் கரும்பில் சுவை மிகுந்தது அடிக்கரும்பு தான்.
9)   கரும்பை வெட்டும்போதும் துண்டு போடும்போதும் இரு கணுக்களின் இடையே வெட்ட வேண்டும்.
10)               சிறு சிறு துண்டுகளாக வெட்டுவது சாப்பிடுவதற்கும், டயட்டிற்கு எளிதாகவும்  இருக்கும்.
கரும்பை எப்போது சாப்பிடலாம்?
1)   காலையில் காலை உணவுக்கும் மதிய உணவுக்கும் இடைப்பட்ட நேரத்திலோ அல்லது மதிய உணவிற்கும் இரவு உணவுக்கும் இடைப்பட்ட நேரத்திலோ சாப்பிடலாம்.
2)   சிறிய துண்டுகளாக வெட்டி வைத்துச் சாப்பிடலாம்.
3)   உணவு உண்பதற்கு சற்று முன்பதாகவோ  சற்று பின்பதாகவோ உடனேயே கரும்பு சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். உண்டு முடித்து சிறிது இடைவெளிவிட்டுச் சாப்பிட்டால் ஜீரணத்திற்கு மிகவும் நல்லது.
கரும்பை எப்படிச்சாப்பிட்ட வேண்டும் ?   
1)   கரும்பை ஜூஸ் பிழிந்து சாப்பிடுவதை விட , முடியுமென்றால் கடித்துச் சுவைத்துச் சாப்பிடுவதே சிறந்த முறை.
2)   கணுக்களில் நடுவிலே வெட்டியிருப்பதால் ஒரு முனையில் கடித்து தோலோடு உரித்து இழுத்து பற்களுக்குக்கிடையே வைத்து சாறு பிழிந்து சாப்பிடுவது நல்லது.
3)   இதன் மூலம் பற்கள் உறுதிப்படும், பற்கள் நாவு மற்றும் ஈறுகள் சுத்தமாகும். வாய் துர்நாற்றம் கூட போய்விடும்.
4)   தோலை நீக்கிவிட்டுச் சாப்பிடுவது ஆப்பிள் கொய்யா போன்ற பழங்களை தோல் நீக்கிச் சாப்பிடுவதற்கு சமம். அப்படிச்செய்யாதீர்கள்.
5)   கணுக்களில் பல்லால் கடிக்கும்போது கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். முடியவில்லையென்றால் கூச்சமோ வெட்கமோ படாது கணுப்பகுதியை வெட்டி எறிந்து விடுவது உத்தமம். பல் உடைந்து, ஈர் கிழிந்து வாய் ரத்த வெற்றிலை போடுவதை விட இது பரவாயில்லை.
6)   மென்று உறிஞ்சியவுடன் சக்கையைக் கவனமாகத் துப்பி விட வேண்டும். இல்லையெனில் தொண்டையில் மாட்டி சோக் ஆவது ஜோக் அல்ல.
7)   போட்டிக்குச் சாப்பிடுகிறேன் பேர்வழி என்று முழு சவளத்தையும் ஒரே மூச்சில் சாப்பிடக் கூடாது. வயிறு உப்பி , வாய் புண்ணாகிவிடும்.
8)   சிறிய துண்டுகளாக இடைவெளி விட்டுச் சாப்பிடுவது அவசியம்.
எப்படி சாப்பிடக்கூடாது?
1)   வாயில் ஏற்கனவே புண்களோ கொப்புளங்களோ இருந்தால் கரும்பு சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
2)   சாப்பிட்டபின் வாயில் உள்ள சிறு சக்கைத் துகள்களை எங்கிருந்தாலும் தோண்டியெடுத்து துப்பிவிடுதல் நலம். ஒன்றிரண்டு உள்ளே சென்றுவிட்டால் மரணபயம் தேவையில்லை. அது அடுத்த நாள் வந்துவிடும்.
3)   கரும்பு சாப்பிட்டபின் வாயைக் கழுவுகிறேன் பேர்வழி என்று தண்ணீரில் கொப்பளித்தால் வாய் வெந்து கொப்பளித்துவிடும் . ஜாக்கிரதை அதோடு கரும்பு சாப்பிட்டவுடன் மறந்து கூட தண்ணீர் குடிக்கக் கூடாது.
4)   லேசாக உதடுகளை நனைத்து துடைத்துக் கொள்ளலாம்.
5)   உடம்பிலோ ஆடையிலோ பட்டால் பிசுபிசுக்கும். தரையில் பட்டாலும் உடனே துடைத்து விடுவது நல்லது.
6)   கரும்பில் அஸ்கார் பிக் என்ற அமிலத்தன்மை இருப்பதால் இப்படி ஏற்படுகிறது.
7)   வெளிநாட்டுத் தமிழர்கள் டப்பாக்களில் அடைத்துவரும் கரும்பை பூஜைக்கு வேணுமென்றால் பயன்படுத்தலாம். சாப்பிட்டு விடாதீர்கள் தயவு செய்து கேவலமாய் இருக்கும்.
இன்னொரு இனிப்பான செய்தி, கரும்பு விளைவிப்பதில் இந்தியாவுக்கு உலகின் இரண்டாம் இடம். முதலிடத்தில் இருப்பது பிரேசில்.

நியூயார்க்கில் கரும்பு கிடைக்கும் இடங்கள்
1)   பெல்ரோஸ் அல்லது ஹிக்ஸ்வில்லில் இருக்கும் நமது தமிழ்க்கடையான மகாராஜாவில் கிடைக்கும் . இல்லையென்றால் அதன் உரிமையாளர் திருச்சிக்கார செந்திலிடம் முறையிடுங்கள். தேவைப்பட்டால் திட்டுங்கள்.
2)   நமது பிள்ளையார் கோவிலின் அருகேயுள்ள கிஸ்ஸனா புலவர்ட்டில் உள்ள கொரியன் கடையில் கருப்பு  கரும்பு கிடைக்கும். (அங்கே போய் கிஸ்ஸனா என்றால் என்ன என்று கேட்பதைத் தவிர்க்கவும். கொரியனும் மார்ஷியல் ஆர்ட்டில் சளைத்தவர்களல்ல. சிறிது கற்றுக் கொடுக்க வாய்ப்பிருக்கிறது.
3)   ஃபிளஷிங்  மெயின் ஸ்டிரீட்டின் அருகே இருக்கும் நூலகத்தின் அருகே மேலேறிச் செல்லும் சாலையில் உள்ள சீனக்கடையில் கரும்பு கிடைக்கும். வெட்டித் துண்டுகளாக வாங்கிச் செல்வது நல்லது. ஏனென்றால் முழுக்கரும்பையும் கொண்டு செல்கிறேன் பேர்வழி என்று சீனப் பெண்  அல்லது ஆணின் சப்பை மூக்கி மேலும் சப்பையாக்கும் முயற்சியில் ஈடுபட்டால் , உங்கள் முகம் சப்பையாவது உறுதி. கரும்பே பிரம்பாகிவிடும் அபாயமும் உண்டு. அதோடு வெட்டித்தரும் சீனாக்காரனுக்கோ அல்லது அங்கு வேலை செய்பவனுக்கோ குறைந்தபட்சம் ஒரு டாலர் தராவிட்டால், அவன் பார்க்கும் கீழ்த்தரமான பார்வையில் பொங்கல் மங்கலாகிவி விடும் .
4)   எவ்வளவு முயன்றும் கரும்பு கிடைக்காவிட்டால் யூ டியூப்பில் கரும்பு சாப்பிடுவதைப் பார்த்து வெர்ச்சுவலாக உண்ணத்தலைப்படலாம்.
நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.


14 comments:

  1. வாழ்த்துகளுக்கு நன்றி. வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. விளக்கம் அபாரம்... வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி திண்டுக்கல் தனபாலன்.

      Delete
  3. கரும்பின் சுவையை விட எழுத்தின் சுவை நன்றாக!

    ReplyDelete
  4. மிக்க நன்றி விமலன்.

    ReplyDelete
  5. விரும்பிக் கரும்பு சாப்பிட வழிகாட்டும் பதிவில் குறும்பு

    ReplyDelete
    Replies
    1. கவிதை ஆசையில் எழுந்த ஒரு சிறு அரும்பு கவிஞரே

      Delete
  6. இலவசமாகவே கிடைக்குதே இங்கு

    ReplyDelete
    Replies
    1. அன்பிருந்தால் கொஞ்சம் இங்கு அனுப்பி வைக்கவும் .

      Delete
  7. கரும்பை சுதந்திரமாய் கிராமங்களில் கடித்துச் சுவைத்ததை மனதில் அசைபோட்டபடி தற்போது கான்கிரீட் காடுகளில் ஃபிளாட் வீடுகளில்..சிறப்புப் பதிவு அருமை வாழ்த்துக்களுடன்

    ReplyDelete
  8. கரும்பை சுதந்திரமாய் கிராமங்களில் கடித்துச் சுவைத்ததை மனதில் அசைபோட்டபடி தற்போது கான்கிரீட் காடுகளில் ஃபிளாட் வீடுகளில்..சிறப்புப் பதிவு அருமை வாழ்த்துக்களுடன்

    ReplyDelete