Tuesday, January 31, 2017

வானத்தில் வட்டமிட்ட நள்ளிரவு தேவதைகள் !!!!!!!!!!

Image result for Tamil Air hostess in Srilankan airlines
Add caption
இலங்கையில் பரதேசி பகுதி -1
‘வணக்கம்' என்ற சொல் என் காதில் தேனாகப் பாய்ந்தது. நிமிர்ந்து பார்த்தால் அந்த தமிழச்சியின் வரவேற்கும் புன்னகையால் உதடுகள் மட்டுமல்லாது கண்களும் புன்னகையைச் சிந்தின. என் நெற்றியிலும் தமிழன் என்று எழுதியிருக்கிறதை நன்றாக படித்துவிட்டாள் போலும்  அந்தப் பெண். வணக்கம் என்ற சொல் இவ்வளவு இனிப்பாக இருக்குமா? ஒரு வேளை அழகிய தமிழ்ப்பெண் சொன்னதாலோ? என்று யோசித்தேன். அதுமட்டுமல்ல சீனா போன்ற நாட்டில் சுற்றுப்பயணம் செய்துவிட்டுத் திரும்பும் போது விமானத்தில் சற்றும் எதிர்பாராத 'வணக்கம்' என்ற செந்தமிழ் ஒலித்ததால் என்றுதான் நினைக்கிறேன். மட்டுமில்லாது கொஞ்ச நாட்களாய் மஞ்சள் நிற சப்பை மூக்கு ஆண்களையும் பெண்களையும் பார்த்துச் சலித்துப் போய் இருந்ததால், மினுமினுக்கும் திராவிட நிற தமிழ்ப்பெண் சொன்ன வணக்கம் இனித்திருக்கலாம்.
 ஏனென்றால் தமிழ்நாட்டில் அதுவும் மதுரைக்குப்போகும் விமானத்தில் இந்தியும் ஆங்கிலமும் தவிர தமிழைக் காணோம். வைகோ உட்பட்ட எல்லா அரசியல் வியாதிகளும் அதில்தான் பயணம் செய்கிறார்கள். அதனைப்பற்றி யாரும் சொல்லக்காணோம். ஆனால் இவர்கள் எதிரியாகக் கருதும் இலங்கையின் சிங்கள அரசாங்கம் நடத்தும் விமான சேவையில் எங்கும் தமிழ் எதிலும் தமிழ். பாராட்டப் படக்கூடிய ,பெருமைப் படக்கூடிய விடயம்தானே.   

பதிலுக்கு நானும் கையெடுத்து வணக்கம் சொல்ல, சீட் பெல்ட்டை சரிசெய்யச் சொல்லிவிட்டு நகர்ந்தாள் அந்தப்பெண். இலங்கையின் விமான சேவையான 'ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்" போயிங் விமானம் மிகவும் பெரியதாகவே இருந்தது. விமான பணிப்பெண்கள் அனைவரும் சேலைதான் கட்டியிருந்தனர். ஆனால் முந்தானையை இடதுபுறத்தோளில் இழுத்து  பின்னால் கொசுவம் வைத்துக் கட்டியிருந்தார்கள். எல்லாரும் தமிழ் அல்ல, சிங்களப் பெண்களும் இருந்தனர். ஆனால் நம் தமிழ் பெண்களின் முக லட்சணம் அவர்களிடத்தில் மிஸ்ஸிங். நள்ளிரவிலும் நன்றாக உடுத்தி புன்னகை சிந்திய வானத்துத் தேவதைகள் வளைய வந்து  எங்கள் தேவைகளைக் கேட்டுக் கேட்டு செய்தனர்.


இன்னொரு ஆச்சர்யம் என்னவென்றால் சீட்டின் முன்னால் உள்ள நெறிமுறைகள் தமிழில் எழுதியிருந்தது. அதோடு அறிவிப்பும் ஆங்கிலம், சிங்களம் மற்றும் தமிழிலும் வந்தது. அதற்கெனவே தமிழ்ப்பெண்கள் அமர்த்தப்பட்டிருக்க வேண்டும் என நினைக்கிறேன்.

சுற்றிலும் பார்த்தேன். முக்கால்வாசி சீன மூஞ்சிகள்தான் இருந்தன. இவர்கள் எங்கே இலங்கைக்குப் போகிறார்கள் என்று ஆச்சரியமாக இருந்தது. பயணிகளில் தமிழ் மூஞ்சிகளில் இந்தப் பரதேசி தவிர வேறு ஒருவரையும் நான் பார்க்கவில்லை. அதுசரி சீனாவிலிருந்து எந்தத் தமிழ் இலங்கைக்கு வரக்கூடும்?.  அது ஒரு அபூர்வ நிகழ்வுதானே.

அந்தப்பக்கம் திரும்பவும் வந்த தமிழச்சியிடம்," சாப்பிட இட்லி தோசை கிடைக்குமா?” என்றேன்.மீண்டும் முகமெங்கும் விரிந்த செயற்கைத்தனம் கொஞ்சம் கூட இல்லாத புன்னகையுடன் , “அதெல்லாம் கிடைக்காது” என்று  அன்புடன் சொன்னதை,அன்புக்கு நான் அடிமை  என்பதால் ஏற்றுக்கொண்டு கொஞ்ச நேரத்தில் கொடுத்த உணவினை சாப்பிட்டேன்.  ஹும் இட்லி தோசை சாப்பிட்டு எத்தனை நாளாயிற்று என்று பெருமூச்சுடனும் மெலிதான ஏப்பத்துடனும் வலிதான ஏக்கத்துடனும் அப்படியே தூங்கிவிட்டேன்.
Image result for chinese travellers in Srilankan airlines

முதலில் இந்தியப் பயணத்தைத் திட்டமிடும் போது இலங்கை போக எந்த எண்ணமும் இல்லை. சீனா வழியாக இந்தியா போவதுதான் திட்டம். சீனாவில் கடுங்குளிர் என்பது அதன்பின்தான் தெரிய வந்தது. கேன்சல்  பண்ணினால் நஷ்டமாகும் என்பதால் சரியென்று சொன்னேன். நியூயார் க்கிலிருந்து கத்தார் ஏர்லைன்சின் மூலம் பெய்ஜிங் சென்று அங்கிருந்து சிறிலங்கன் ஏர்லைன்ஸ் மூலம் சென்னை என்பது என்னுடைய ஐட்டினரியில் தெரிந்தது. சிறிலங்கன் ஏர்லைன்ஸ் கொழும்பு வழியாகச் செல்கிறது என்பதால் மறுபடியும் ஜானியிடம் கேட்டேன், "கொழும்பில் சிலநாட்கள் தங்கிச் செல்ல முடியுமா" என்று. ஜானி என்பது ஜானகிராமன் என்பதன் சுருக்கம். அவர்தான் என்னுடைய ஆஸ்தான டிராவல்  ஏஜென்ட்.
சில நிமிடங்களில் அவர் திரும்பக் கூப்பிட்டு, "முடியும் சிறிதளவு அதிகமாகும்” என்றார். எவ்வளவு என்று கேட்டபோது 50 டாலர்கள் தான் என்றதும் சிரித்துக் கொண்டே உடனே பயணத்திட்டத்தை மாற்றியமைத்ததில் சேர்ந்து கொண்டதுதான் இலங்கைப் பயணம்.
கடைசி நிமிடத்தில் உருவான திட்ட மென்பதால் முன்னரே நன்கு திட்டமிடவில்லை. அடுத்த தடவை போகும்போது யாழ்ப்பாணம் போய்க் கொள்ளலாம். தற்சமயம் கொழும்பைச் சுற்றிப் பார்த்தால் போதும் என்று நினைத்துக் கொண்டேன். யாழ்ப் பாணம் போகவில்லை என்பதற்காக கோபித்துக் கொண்ட இலங்கை நண்பர்களும்  உண்டு. அவர்களுக்கு நான் சொல்லுவதெல்லாம் அடுத்தமுறை யாழ்ப்பாணத்திற்கு கண்டிப்பாய் சென்று யாழ் தமிழ்ச் சங்கத்து மக்களை சந்திப்பேன் என்று உறுதி கூறுகிறேன்.
கொழும்பு வந்து சேர்ந்துவிட்டதாக மறுபடியும் அறிவிப்பு வர திடுக்கென்று எழுந்தேன். திடீரென்று ஒரு கணம் நான் எங்கே இருக்கேனென்று தெரிந்து கொள்ள சில நிமிடங்கள் ஆயிற்று. சுற்றுப் பயணம் செய்யும்போது இப்படித் தோன்றுவது உண்டு. இது எனக்கு மட்டும்தானா அல்லது எல்லோருக்கும் தோன்றுமா என்று யாராவது சொன்னால் நலமாயிருக்கும். இல்லையென்றால் ஒரு நல்ல மனநல மருத்துவரைப் பார்க்கவேண்டும்.
Related image

நான் இருப்பது நியூயார்க்கிலா, பெய்ஜிங்கிலா, சென்னையிலா அல்லது தேவதானப் பட்டியிலா என்று தெரியாமல் ஒரு கணம் முழிக்கும்போது, சிங்கள அறிவிப்பு முடிந்து மறுபடியும் தமிழ் அறிவிப்பு வரும்போதுதான் தெரிந்தது விமானம் கொழும்புவுக்கு வந்துவிட்டது என்று.
அமெரிக்க வாழ் குடிமக்களும், பச்சை அட்டை தாரர்களும் நியூயார்க்கில் உள்ள இலங்கையின் கான்சுலர் வலைத்தளத்தில் விசாவைப் பெற்றுக் கொள்ளலாம். இலங்கையிலுள்ள மதத்தலைவர்களையோ, பத்திரிக்கைக் காரர்களையோ சந்திக்க முயலக் கூடாது என்ற நிபந்தனையுடன் தான் விசாவைக்  கொடுத்தார்கள். அதனை எடுத்து கையில் வைத்துக்கொண்டேன்.
தமிழில் அறிவிப்புகளைப் படித்துக் கொண்டே குடியுரிமை அலுவலரை வரிசையில் நின்று சந்தித்தேன். அவரின் சிங்கள முகம் கடுகடுவென்று இருந்தது.
நியூயார்க்கில் வசிக்கும் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் உன்னை இங்கு அனுப்பினார்களா? என்று கேட்ட கேள்வியில் எனக்கு விதிர் விதித்துவிட்டது.
- தொடரும்.


15 comments:

  1. நல்ல தொடக்கம்... தொடர்கிறேன்....

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் வெங்கட் இலங்கைக்குக்குப்போகலாம்.

      Delete
  2. அழகான முகப்பு படத்தை போட்டு என்னை உள்லே இழுத்துவிட்டுவீட்டீர்களே இதில் இருந்து எப்படி வெளியே போவது என்று தெரியாமல் தவிக்கிறேன் நான் சந்நியாசியாக போகலாம் என்று நினைக்கையில் இப்படி ஒரு சோசதனையா? ஹூம்

    இலங்கை எனக்கு பிடிக்கும் பார்க்க வேண்டும் ஒரு நாள் நான் இணியய்த்தில் பார்த்து படித்தவரை அது தமிழ்நாட்டைவிட மிக சுத்தமாக இருக்கும் என்பதை அறிந்தேன் அது உண்மைதானே?

    ReplyDelete
    Replies
    1. தமிழா. இலங்கை ரொம்ப அழகான ஊர்..அதுவும், கண்டி, திருகோணமலை, மற்றும் இலங்கை கடற்கரை..வெள்ளவத்தை. ..கடல் ஓட்டிடி இருப்புப் பாதை...இப்பவும் இருக்கா தெரியாது...கேரளா போன்று இருக்கும்...நான் சிறு வயதில் அங்குதான் இருந்தேன்...பார்த்து விட்டு வாருங்கள்...எனக்கு மிகவும் பிடித்த ஊர்...அங்கு இடியாப்பம் சொதி சூப்பரா இருக்கும்...இன்னும் சொல்லலாம்

      கீதா

      Delete
    2. என்ன பண்றது,மதுரைத்தமிழா இல்லாட்டி யாரும் இந்தப்பக்கமே வர்ரதில்லை
      , இலங்கை அழகான இடம் .அங்கு போவதற்கு முன்னால் நம் பதிவைப்படித்துவிட்டு போனால் நீங்கள் நன்றாக திட்டமிட்டுவிடலாம் .

      Delete
  3. வாழ்த்துகள் 'ப(ற)ரதேசி' ஐயா,

    பறப்பதிலும் இனிது உங்கள் எழுத்து .....,

    ReplyDelete
  4. Replies
    1. அப்பவாச்சும் எல்லாரும் படிக்க வருவாங்கன்னுதான் தனபாலன்.

      Delete
  5. அருமையான பயணம் இலங்கையில் இறங்கியாச்சு

    கீதா : மீண்டும் என்னை இலங்கை அழைத்து சென்று நினைவுகளை மீட்டியதற்கு நன்றி...ஆர்வம் மேலிடுகிறது...தொடர்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. பதிவுத்தம்பதிகள் துளசிக்கும் கீதாவுக்கும் நன்றி

      Delete
    2. இப்பதான் உங்கள் பதிலைப் பார்த்தேன்....

      ஐயோ நாங்கள் தம்பதிகள் அல்ல ஆல்ஃப்ரெட்....

      நண்பர்கள். துளசி அவரது குடும்பத்துடன் கேரளத்தில்...

      நான் எனது குடும்பத்துடன் சென்னையில்...

      கீதா

      Delete
    3. தவறுக்கு மன்னிக்கவும்.

      Delete
  6. எல்லாம் சரிதான் சார். போட்டோவெல்லாம் யாரு எடுத்தது ?
    அத முதல்ல சொல்லுங்க :)

    ReplyDelete
    Replies
    1. வேற யாரு நம்ம கூகிள் பையன்தான் , கெட்ட பய பாஸ்கர் அவன் .

      Delete