Monday, August 22, 2016

சீனப்பேரரசியின் காம சூட்சுமங்கள் !!!!!!!!!!!

சீனாவில் பரதேசி-19

Empress Cixi

பேரரசிகள், பேரரசருடன் எவ்வளவு நெருக்கமாக இருக்க முடியுமோ அந்த அளவுக்கு முயல்வார்களாம். ஏனென்றால் பல மனைவிகள் மற்றும் ஏராளமான வைப்பாட்டிகள்  இருப்பதால், பேரரசர் ஒவ்வொரு நாளும் புதிசு  புதுசாகவும் தினுசு தினுசாகவும் தான் தேர்ந்தெடுப்பார்கள். அதோடு ஒவ்வொரு மூன்று வருடத்திற்கு ஒரு முறை புதிதுபுதிதாக வைப்பாட்டிகள் வந்து குவிவார்கள். மிகப்பெரிய நாடான சீன தேசம் முழுவதிலிருந்தும், கவர்னர்கள், ராணுவ அதிகாரிகள் அனைவரும், தங்கள் மகள்கள் அரண்மனையில் வாழ்க்கைப்பட விரும்பி, சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் காணிக்கையாக அனுப்பி வைப்பார்கள். அதுமட்டுமல்ல அவர்களுக்கு குழந்தை பிறந்தால் அவர்களின் மதிப்பும் செல்வாக்கும் உயரும்.  

எனவே விலக்கப்பட்ட நகரில் பேரரசரின் மனைவி மற்றும் வைப்பாட்டிகள் தவிர, அவரின் தந்தை, தாத்தா போன்றோரின் மனைவி, வைப்பாட்டிகளும் ஏராளமாக வாழ்ந்து வந்தனர்.

Empress Cixi with her Eunochs

இந்த ஒவ்வொரு மனைவிகளுக்கும் ஒரு அடையாள வில்லை இருக்கும். அரண்மனையின் தலைமை அரவான் அதனை ஒரு தங்கத் தட்டில் போட்டு பேரரசரிடம் எடுத்துச்செல்ல பேரரசர் அதில் ஒன்றை தேர்ந்தெடுப்பார் . தேர்ந்தெடுத்தவுடன் அந்தப் பேரரசியை அவரின் தோழிகள் நீராட்டி நறுமணத் தைலங்கள் பூசி முடித்து ரெடியானவுடன், அப்படியே நிர்வாணமாக கம்பளத்தில் சுற்றி வைக்க, அரவான்கள் வந்து அவரைத்தோளில் சுமந்து உள்ளே போய் பேரரசரின் படுக்கையில் உருட்டி விட்டு வந்துவிடுவார்கள்.

பேரரசரின் மூடைப் பொறுத்து கூடுவார் அல்லது மறுபுறம் திரும்பி குரட்டைவிட்டுத் தூங்குவார். பேரரசர்களுக்கு சுவாரஸ்யம் இல்லாமல் போவது இது அடுத்த வாரிசுக்காக ,ஆண்பிள்ளை பெறுவதற்காக நடக்கும் சடங்கு போல நடப்பதால் தான். ஆனால் பேரரசிகளுக்கு இது மிகவும் முக்கியம். ஏனென்றால் தப்பித்தவறி  இவர்கள் கர்ப்பமுற்று அதுவும் ஆண்பிள்ளையைப் பெற்றுவிட்டால் அவர்களுக்கு கூடுதல் மதிப்பும் மரியாதையும் வருவதோடு தன் மகன்  பேரரசராக அமர்ந்தால் அம்மாவின் ஆட்சியும் சேர்ந்தே நடக்கும்.

ஆனால் அதற்குள் எத்தனை பாடுகள். முதலில் பேரரசர்களின்  அம்மாவின் தயவு வேண்டும். இரண்டாவது, தலைமை அரவானின் தயவு வேண்டும். பேரரசர் தேர்ந்தெடுத்தாலும் அவர் கூட வேண்டும். கூடினாலும் கர்ப்பமாக வேண்டும். கர்ப்பம் தரித்தாலும் குழந்தை வளராதபடி மற்ற அரசிகள் செய்யும் பலவித சூழ்ச்சிகளிலிருந்து தப்பிக்க வேண்டும். அப்படியே பிறந்தாலும் அது ஆண்பிள்ளையாக இருக்க வேண்டும். பிறந்த குழந்தை பல்வேறு சூழ்ச்சிகள் மத்தியில் நலமாக வளர்ந்து, பல சகோதரர்களுடன் போட்டியிட்டு பேரரசர் ஆக வேண்டும். அரச வாழ்க்கை என்பது உண்மையிலேயே கஷ்டம்தான்.

இதில் இந்த வைப்பாட்டிகளின் நிலைமை இதைவிட மோசம். வருடம் ஒருமுறை, இல்லை இல்லை வாழ்க்கையில் ஒருமுறை கூட கூடுவதற்கு சந்தர்ப்பம் கிடைக்குமா? என்பது சந்தேகம்தான். தங்களின் இச்சைகளை ஓரினச் சேர்க்கை மூலம் மட்டுமே நிறைவேற்றிக் கொள்ள முடியும். ஏனென்றால் பரந்து விரிந்த ஆயிரக்கணக்காணோர் தங்கியிருக்கும் விலக்கப்பட்ட நகரில் ஆண் என்பது பேரரசர் ஒருவர் மட்டுமே. மற்றவர்கள் அனைவரும் பெண்கள் அல்லது அலிகள் மட்டும்தான். இயற்கையாகவோ அல்லது செயற்கையாகவோ விதை நீக்கம் செய்யப்பட்டவர்கள் மட்டுமே உள்ளே தங்க முடியும்.  அரண்மனையின் உள்ளே பாதுகாப்புக்கு உள்ள அனைவரும் அலிகள்தான். ஆண்மைதான்  நீக்கப்பட்டிருக்கிறதே தவிர திடமானவர்கள்.

Full length color image of Hsien-Feng Emperor aka. Xianfeng Emperor, by George Stuart.
Emperor Xianfeng
பேரரசி சிக்சி தம் கணவரான  சியான் ஃபெங் பேரரசருடன் ( Xianfeng) திருமணம் நடந்த பின் மிகுந்த திறமையுடன் திட்டமிட்டாள். யாருக்கும் தெரியாமல் மாறுவேடமிட்டு தன் நம்பிக்கைக்குகந்த அலியுடன் வெளியே சென்று அங்கிருந்த விலை மாதர் இல்லம் சென்று கூடல் முறைகளையும், ஆண்களுக்கு அதீத இன்பம் கொடுக்கும் இரகசியங்களையும் கற்றுத் திரும்பினாள். அதன்பின் லஞ்சம் கொடுத்து தலைமை அலியுடன் ஒரு டீல் பேசி, தான் பேரரசரின் படுக்கையறைக்கு செல்லும்படி ஏற்பாடு செய்தாள். ஒரே ஒரு முறை வாய்ப்பு கிடைத்ததும் படுக்கையில் கற்றுக்கொண்ட வித்தைகளைக் காண்பிக்க, அசந்துபோன பேரரசர் தினமும் அவளையே கேட்டார்.

அதுமட்டுமல்லாமல் நல்ல படிப்பும் அறிவும் இருந்ததால், பேரரசருக்கு அந்தரங்க ஆலோசகராகவும், தோழியாகவும் மாறிப்போனாள். தனக்கு எதிராக நடந்த அத்தனை சூழ்ச்சிகளையும் முறியடித்து பிள்ளைகள் பெற்றுக் கொண்டாள். முதல் குழந்தை எவ்வளவோ ஜாக்கிரதையாக இருந்தும் இறந்துவிட, இரண்டாவது குழந்தையை மிகவும் கவனமாக வளர்த்து அடுத்த பேரரசராக முடிசூட்டும் வரை அவள் ஓயவில்லை. சிறுவயதில் பேரரசராக  பட்டமேற்கொண்டாலும், அன்னையையே ஆட்சி செய்யவிட்டு எதிலும் அக்கறை இல்லாமல் நடந்து கொண்ட  டோங்சி  பேரரசர் (Tongzhi Emperor) மனைவிகள் வைப்பாட்டிகளுடன் சம்பிரதாய கூடுதலை வெறுத்து தெரியாமல் நண்பனுடன் அடிக்கடி வெளியே போய் பரத்தையருடன் கூடியதால் மேக நோய் தாக்கி சிறுவயதில் இறந்து போனான்.
Tongzhi Emperor
இடிந்து போன பேரரசி சிக்ஸிசுதாரித்துக் கொண்டு தன் உறவினரான குவாங்க்சுவை பேரரசராக்கிவிட்டு  வழக்கம் போல் தொடர்ந்து ஆட்சி செலுத்தினாள் .

அவளைப்பற்றி நான் படித்த புத்தகத்தின் மதிப்புரையை இங்கே சொடுக்கிப் படிக்கலாம். http://paradesiatnewyork.blogspot.com/2013/05/blog-post_1.html
Guangxu, Emperor 
அப்படி நடந்த ஆட்சியானது, பல பேரரசர்களின் ஆட்சியை விட சிறப்பாகவே இருந்தது என வரலாறு சொல்லுகிறது. பேரரசிக்கு அதீத அதிகாரங்கள் இருந்தன. உள்ளேயும் வெளியேயும் வந்த ஏராளமான பிரச்சனைகளை திறமையுடன் சமாளித்தாள். அப்படி அவள்  காலத்தில் அவளுடைய பிறந்த நாள் பரிசாகக் கட்டப் பட்ட முற்றிலும் சலவைக் கல்லால் அமைந்த பெரிய படகு அல்லது கப்பல் போன்ற அமைப்புதான் என்முன்னே பளபளவென்று ஜொலித்தது. கப்பற்படையைப் பெருக்க ஒதுக்கப்பட்ட பணத்தில் பெரும்பாலும் இந்த மார்பிள் படகுக்கு செலவழிக்கப்பட்டது என்று குற்றச்சாட்டும் உண்டு.

இந்த மார்பிள் படகைப்பற்றி பல தகவல்களை லீ சொன்னான். ஒவ்வொன்றும் ஆச்சரியமூட்டும் வரலாற்றுத் தகவல்கள். அதை அடுத்த வாரம் சொல்கிறேனே.


- தொடரும்.

6 comments:

  1. சீன அரண்மனை இரசியங்கள்
    கேள்விப்பட கேள்விப்பட
    வெகு வெகு ஆச்சரியம்
    படங்களுடன் சொல்லிப் போனவிதமும்
    வெகு வெகு சிறப்பு
    (அந்த ராணியின் பெயரே முதல்
    எழுத்தை மாற்றினால் கவர்ச்சியாகத்தானே இருக்கிறது )
    அடுத்த பயணப்பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து..

    ReplyDelete
    Replies
    1. தங்களின் தொடர்ந்த ஆதரவுக்கு நன்றிகள் பல ரமணி.

      Delete
  2. ஆச்சர்யமான, சுவாரஸ்யமான தகவல்கள்.

    ReplyDelete
  3. Replies
    1. வருகைக்கு நன்றி சிவாஜி

      Delete