Thursday, June 2, 2016

முதலமைச்சர் ஆக ஆசைப்படுபவர்களுக்கு சில கேள்விகள் ?


2016 தேர்தலில் எப்பொழுதும் இல்லாத அளவுக்கு ஏகப்பட்ட முதல் அமைச்சர் வேட்பாளர்கள்.
ஜெயலலிதா, கருணாநிதி தவிர்த்து, இலவுகாத்த கிளியாய் மு.க.ஸ்டாலின்,  சமீபத்திய உடல் நலக்குறைவால் பேசக்கூட முடியாத விஜயகாந்த், தன் ஜாதியினர் மத்தியில் கூட 100  சதவீத வாக்குகளை வாங்கமுடியாத அன்புமணி, புதிதாக வீரம்பேசும் சீமான் ஆகியோர் களத்தில் நேரடியாக நின்றனர்.

இதுதவிர இன்னும் அநேகர். சில திரைப்பட கதாநாயகர்கள் முதற்கொண்டு இதே கனவில் இருக்கிறார்கள். முதலமைச்சர் பதவி தங்களுக்கு அவ்வளவு சீக்கிரம் கிடைத்துவிடும் என்று  இவர்கள் நினைக்கிறார்கள் நம்புகிறார்கள் என்பது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது.  
இவர்களுக்கெல்லாம் சில கேள்விகளை வைக்கிறேன்.
Add caption
1.   முதலாவது தமிழ்நாடு முழுவதும் மக்கள் உங்களை அறிவார்களா?
2.   ஆம் என்றால் எப்படி அறிவார்கள்? யார் என்று அறிவார்கள்?
3.   மக்கள் தொண்டன் என்றோ, மக்களுக்காக உழைப்பவன் என்றோ, மக்களுக்கு ஒன்று என்றால் ஓடிவருவார் என்றோ நினைக்கிறார்களா?
4.   தலைவராக இருக்க விரும்புவதற்கு முன்னால் தொண்டனாக   இருந்திருக்கிறீர்களா ? அல்லது இருக்க நினைத்திருக்கிறீர்களா?
5.   உங்களுக்குத் தமிழ்மொழி பற்றித் தெரியுமா? அதன் பாரம்பரியம் தெரியுமா? தமிழை சரியாக உச்சரிக்கவாவது தெரியுமா?
6.   தமிழகத்தின்  சமூக, அரசியல், கலாச்சார வரலாறு தெரியுமா?
7.   லெமூரியா கண்டமும், தனுஷ்கோடியும் எப்படி ஏன் அழிந்தது என்று தெரியுமா?
8.   சேர, சோழ, பாண்டிய, பல்லவர்கள் ஏன் ஒற்றுமையில்லாமல் பிளவு பட்டிருந்தார்கள் என்று தெரியுமா?
9.   தமிழகத்தை ஆண்ட, வெளியிலிருந்து வந்த நாயக்க, மராட்டிய, முஸ்லீம் மன்னர்கள் பற்றித்தெரியுமா? எப்படி  அந்நிய ஆட்சி வந்தது? ஏன் வந்தது என்று தெரியுமா?
10.               தமிழகத்தில் தளைத்தோங்கிய சைவ, வைணவ மற்றும் சமண மதங்களும் அதனால் வந்த பிரிவினைகளும் பற்றித் தெரியுமா?
11.               தமிழகத்தின் இலக்கியங்கள், இதிகாசங்கள், காப்பியங்கள், புலவர் பெருமக்கள் ஆகியோர் பற்றித்தெரியுமா?
12.               இவற்றை எப்படி பராமரிப்பது, பாதுகாப்பது எப்படி அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வது பற்றித் தெரியுமா?
13.               சுதந்திரத்திற்குப் பிற்பட்ட அரசியல் வரலாறு பற்றித் தெரியுமா?
14.               சென்னை மாகாணம் எப்படி இருந்தது? அது தமிழகமாக மாறும்போது எவற்றை இழந்தோம்? எவற்றைப்பெற்றோம் என்று தெரியுமா?
15.               மொழிப்போர் பற்றியும், அதில் மடிந்த தியாகிகள் பற்றியும் தெரியுமா? மொழி பற்றிய இப்போதுள்ள மனநிலையும் இந்தியை  அறிந்து கொள்ளுதல் மற்ற இந்தியர்களோடு இணைக்கும் என்று உணர்ந்திருக்கிறீர்களா? இந்தி வராமலேயே தமிழ்மொழி அழிந்து கொண்டிருப்பது தெரியுமா?
16.               தமிழகத்தின் தற்கால இலக்கியங்கள் மற்றும் எழுத்தாளர்கள் யார் என்றும் அவர்களின் திறமைகளை எப்படி பயன்படுத்திக் கொள்வது என்றும் திட்டம் வைத்திருக்கிறீர்களா?
17.               தமிழ்நாட்டின் மக்கள் தொகை எந்த சதவீகத்தில் வளர்ந்து வருகிறது, அதன் பெருகி வரும் அடிப்படைத் தேவைகள் பற்றியும் அதற்கு எதிர்காலத்திட்டங்களை  எப்படி வகுக்க வேண்டும் என்று தெரியுமா?
18.               தமிழக மக்களின் சாதி மத விகிதாச்சாரங்கள் பற்றியும், அது ஏன் என்றும் தெரியுமா?
19.               தமிழ்நாட்டின் மொத்த வருமானம், செலவு, பற்றாக்குறை பற்றியும், அதனை எப்படித் தீர்ப்பதென்று தெரியுமா?
20.               ஒவ்வொரு பகுதியிலும் உள்ள மக்களின் அடிப்படைத் தேவைகள் பற்றித் தெரியுமா?
21.               தமிழ்நாட்டில் உள்ள பூர்வகுடி மற்றும் பழங்குடி மக்கள் யார் யார்? எங்கெல்லாம் இருக்கிறார்கள் என்று தெரியுமா?
22.               எத்தனை திட்டங்கள் போட்டாலும், சேரிகள் பெருகுவது ஏன்?
23.               தமிழ்நாட்டில் மாறும் தட்ப வெப்பநிலை எந்தெந்தப் பகுதியில் என்ன மாதிரி விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்று தெரியுமா?
24.               என்ன மாதிரியான விளைபொருள்கள் எங்கே விளைகிறது என்று தெரியுமா?
25.               நம் நாட்டில் இருக்கும் பாரம்பரிய தொழில்கள், சிறுதொழில்கள், குடிசைத்தொழில்கள் பற்றியும் அதன்மூலம் பயன்பெறும் பிழைக்கும் மக்கள் பற்றியும் அவர்களின் குறைகள் பற்றியும் தெரியுமா?
26.               நம் நாட்டிற்கு எந்த அளவு தண்ணீர், மின்சாரம் தேவை அதை எப்படி பெருக்குவது என்று தெரியுமா?
27.               தமிழகத்தில் ஏன் ஜீவ நதிகள் இல்லை? காணாமல் போன நதிகள் எவை? ஏன்? என்று தெரியுமா?
28.               தமிழ்நாட்டின் தொழிலதிபர்கள் யார்? அவர்கள் என்ன தொழில் மூலம் உயர்ந்தார்கள்? மேலும் புதிய தொழிலதிபர்களை   எப்படி உருவாக்குவது என்று தெரியுமா?
29.               தமிழ்நாட்டில் எத்தனை சதவீதம் விவசாயிகள், தொழிலாளிகள், அரசு அலுவலர்கள், என்று தெரியுமா? மீதியுள்ள படித்த வேலையில்லா இளைஞர்களுக்கு எப்படி வழிநடத்தப்போகிறீர்கள்.
30.               தமிழ்நாட்டின் காடுவளம், வனத்துறை அதன் குறைகள் பற்றாக்குறை, ஏன் காட்டுமிருகங்கள் காட்டுக்குள் நுழைகின்றன என்று சிந்தித்துப் பார்த்திருக்கிறீர்களா ?
31.               உணர்வு பூர்வமாக சிந்திக்கும் நம் மக்களை அறிவு பூர்வமாகவும் சிந்திக்க வைக்க உங்களிடத்தில் என்ன திட்டங்கள் இருக்கின்றன?

இப்படி நான் சொல்லிக்கொண்டே போகலாம். இதையெல்லாம் பற்றி அறியாமலோ, அறிந்து கொள்ளும் ஆர்வம் இல்லாமலோ, திறமை இல்லாமலோ நீங்கள் எப்படி ஒரு நல்ல முதல்வராக இருக்கமுடியும்?
முதல்வர் என்றால் என்ன விளையாட்டா?
இன்னும் எத்தனை நாள் நீங்கள் எங்களை ஏமாற்றமுடியும்?

முற்றும்.

14 comments:

  1. இத்தனைக் கேள்விகளையும் படிக்க எனக்கே பொறுமை இல்லையே... ஆர்களுக்கு எப்படி இருக்கும்!!!!

    ReplyDelete
    Replies
    1. எழுதி முடிப்பதற்குள் நானும் பொறுமையை இழந்துவிட்டேன் ஸ்ரீராம்.

      Delete
  2. ஒவ்வொரு பிரச்னையையும் தீர்க்க அவரவர்களிடம் தீர்வுகள் இருக்கிறதாம். ஆனால், அவர்கள் ஆட்சிக்கு வந்தால்தான் சொல்வார்களாம் / செய்வார்களாம். இதுதான் அவர்கள் தமிழக மக்களுக்குச் செய்யும் இடியாப்பம்! ச்சே.. சேவை! பாவம் தமிழக மக்கள்!

    ReplyDelete
    Replies
    1. காசுக்கு விலை போகும் மக்களை வைத்துக்கொண்டு என்ன செய்வது ஸ்ரீராம் ?

      Delete
  3. என் பணிவான கருத்து:
    78 ஆண்டுக்கால தமிழ்ச்சினிமாவின் கிஞ்சித்தும் ரசனை இல்லாத, தரம் தாழ்ந்த, இன்னும் trendy ஆ சொல்லணும்னா மொக்கைப் படங்களைப் பட்டியலிட்டால், சீமான் அவர்களின் அத்தனைப் படங்களும் முதல் 10 இடங்களைப் பிடித்துவிடும்.
    தன் ஆக்கங்களில் ஆகச் சிறந்ததாக அவரேக் கருதும் "தம்பி" படத்தில் கூட அந்தச் சாதித் தலைவரின் படத்துடனே படம் ஆரம்பிக்கும். ராஜபக்க்ஷே இனக் கதாநாயகியுடன்.
    தன்னை முன்னிலைப் படுத்த ஏதேகினும் செய்தே ஆக வேண்டியக் கட்டாயத்தில்
    திடீர்ப் போராளியாக அவதாரம் எடுக்கிறார். அரிதாரம் பூசும் கலைத்துறையிலிருந்து அரிதாரம் பூசாமல் முழு நேர நடிகனாக களம் இறங்குகிறார். அன்று புடைக்க ஆரம்பித்த அண்ணனின் நரம்புகள் இன்றும் தளர்வடையாமல் இருக்கின்றன.
    இவரது பயணம் "சேகுவாரா" மேலாடையுடன் (T-Shirt) துவங்குகிறது. சேகுவாராவை, அரியலூர், ஜெயங்கொண்டம் பகுதி முந்திரி தோப்புகளில் ரகசியக் கூட்டம் நடத்தும் தமிழத்தேசியப் போராளி என்று நினைத்தாரோ என்னவோ.
    கொஞ்சம் நாட்களிலேயே, சட்டையை லாவகமாக கழற்றிவிட்டு, கருஞ்சட்டை அணிய ஆரம்பித்தார். அதையும் கழற்றிவிட்டு பச்சை சட்டை அணிந்து பவனி வருகிறார். நரம்பு மட்டும் இன்னும்ம்ம்……

    பிரபாகரனைக் கொண்டு வந்து இங்குத் தூக்கிலிடவேண்டும் என்று முழங்கியத் தலைவிக்காகப் பிரச்சாரம் செய்த அண்ணனின் chameleonic தன்மையைப் புகழச் சொற்களின்றித் தடுமாறித்தான் போகின்றேன். இலை மலர்ந்து ஈழமும் மலர்ந்ததை நாம் கண் கூடாகப் பார்த்துக்கொண்டுதான் இருந்தோம்.

    பிரபாகரனை இவர் சந்தித்தது ஒரே ஒரு முறை, அதுவும் 15 நிமிடங்கள்...அதை வைத்து அண்ணன் எழுதிய நீண்ட, நெடிய திரைக்கதையைப் படமாக எடுத்திருந்தால் நல்ல படமாவது கிடைத்திருக்கும்.

    "என் வாழ்வில் திருமணம் என்று ஒன்று நடந்தால், தமிழ் ஈழப் பெண்ணைத்தான் மணப்பேன்" என்று மைக் உடைய உரக்கக் கத்தியவர், கட்சி மாறிகளின் பிதாமகன், ராபின் ஹூட் ஊழல் வழக்கில் தண்டனைப் பெற்ற காளிமுத்து அவர்களின் செல்ல மகள் எப்படி/எப்போது ஈழப் பெண்ணானார் என்பது அண்ணனுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.
    “If I were” என்ற hypothetical phrase அண்ணனுக்காகவே இருக்கிறது. அதனால் தான் அள்ளி விடுகிறார் அறிக்கைகளை. "அனைத்து மேம்பாலங்களையும் உடைத்து சுரங்கப் பாதைகளாக மாற்றுவேன்" சமீபத்திய “If I were” கூற்று.... கூத்துன்னு சொன்னாக்கூட பொருத்தமாகத்தான் இருக்கிறது.
    "முருகேசா....நடக்கவே முடியலையாம்..." என்ற வசனம்தான் ஞாபகத்தில் வந்துத் தொலைக்கின்றது.
    ஒன்று மட்டும் அண்ணனுக்கு நன்றாக வருகிறது. எழுதிக் கொடுத்த வசனங்களை மனப்பாடம் செய்து ஏற்ற இறக்கத்துடன் ஹை டெசிபலில் பேசுவது. என்ன இருந்தாலும் அண்ணன் 15 ஆண்டுகளாக கலைத் துறையில் இருந்தவர் அல்லவா!!!
    அவர் தீவிரமாக எதிர்க்கப்பட வேண்டியவர் அல்ல. தீவிர என்ன...அவர் எதிர்க்கப்படவேண்டியவரே அல்ல...
    பின்??? புறந்தள்ளப் படவேண்டியவர்!

    ReplyDelete
    Replies
    1. இவரை மக்கள் ஏற்கனவே புறந்தள்ளி விட்டார்கள் .இவரின் பின்னால் இருந்து செயல்படுவது யார்? எங்கிருந்து இவருக்கு பணம் வருகிறது என்பதெல்லாம் விடை தெரியாத கேள்விகள்.

      Delete
  4. இந்தக் கேள்விகளை வைத்து பரீட்சை நடத்தினால் இதுவரை முதல்வர்களாக இருந்தவர்கள், இருக்கின்றவர்கள், இனிமேல் இருக்க ஆசைப்படுபவர்கள் அனைவரும் பெயில் மார்க் தான் எடுப்பார்கள் என்பதில் சந்தேகமே இல்லை!!!!!. எனவே இந்தப் பரீட்சை அவசியமா என சிந்தித்துப் பார்க்கவும்!!!!

    ReplyDelete
    Replies
    1. அவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதுதான் நம் எல்லோருடைய
      நப்பாசை , அது தப்பாசைன்னு நாம நினைக்கக்கூடாது செல்வதுரை.

      Delete
  5. ஆல்பி அவர்களே!

    நீங்கள் கேட்ட எல்லா கேள்விகளுக்கும் பதில் தெரிந்த ஒரு மஹான் தேர்தலில் நின்றாலும் தமிழ் நாட்டு கூமுட்டைகள் அவருக்கு ஒட்டு போடமாட்டார்கள் என்பது தான் நிஜம்.

    Sorry for the harsh words.

    ReplyDelete
  6. நெத்தியடி கேள்விகள் ?

    ReplyDelete
    Replies
    1. புத்தியில் உறைக்கணுமே ?

      Delete
  7. எல்லாவற்றிற்கும் ஓரு தொடக்கப்புள்ளி இருக்கிறது. மற்ற முதலவர்களுக்கு இருந்த பின்புலம் அனைவருக்கும் வாய்ப்பதில்லை

    ReplyDelete
    Replies
    1. அந்தப்புள்ளியைத்தான் பல புள்ளிகள் தேடிக்கொண்டு இருக்கிறார்கள் பாஸ்கர் .

      Delete