Thursday, April 30, 2015

பரதேசி, தொழில் அதிபர் ஆன கதை: பகுதி 2


அது ஆறாவது வகுப்புப்பசங்க தங்கியிருந்த ரூம். "தம்பிகளா முருக்கு கடலைமிட்டாய் வேணுமா",ன்னு கேட்டான், “ஆமா வேணும் வேணும்”ட்டு எல்லாப் பசங்களும் வந்து சூழ்ந்திட்டாய்ங்க.
அப்புறம் பாத்தா ஓசின்னு நெனச்சுட்டாய்ங்க. “ஓசி இல்லடா காசுன்னு”, சொன்னதும் எல்லாப்பயலுகளும் போய்ட்டாய்ங்க. எனக்கு ரொம்ப அழுகை வந்துரிச்சு. "என்னடா கருப்பையா இப்படி ஆயிருச்சு, இப்ப என்ன செய்றதுன்னு", கேட்டேன்.
"கொஞ்சம் சும்மா இருடா, அதுக்குள்ள மனசை விட்டுட்ட, தொழிலதிபர்னா கொஞ்சம் தைரியம் வேணும்டான்னு" சொன்னான்.
Curious George Tin Keepsake Box

அதுக்கு அடுத்த ரூமில் 10 பைசாவுக்கு வியாபாரம் ஆச்சு. என்னடா விலை அதிகமாக இருக்குன்னு பலர் கேட்டதற்கு, "கடையில வாங்கி ரூம் சப்ளை செய்றம்ல எங்களுக்கு லாபம் வேணாமான்னு” கேட்டு கருப்பையா அதை நல்லாவே சமாளிச்சிட்டான். சில பசங்க கடன் கேட்டாய்ங்க, அதெல்லாம் முடியாது, 'கடன் அன்பை முறிக்கும்' னு கருப்பையா சொல்லிட்டான்.
மூணாவது ரூம் எட்டாவது பசங்க தங்கியிருந்த இடம். அதுல மடமடன்னு வித்து 5 ரூபாய்க்கு வித்துருச்சு. 9-ஆவது ரூமுல மிச்சம் எல்லாமே வித்துப் போச்சு. எனக்கு ஆச்சரியமாப் போச்சு. இந்தக்கருப்பையா கில்லாடிதான்னு நினைச்சேன். அப்புறம் கருப்பையா ரூமுக்கு போய் காசை எண்ணிப் பார்த்தோம்.
மொத்தம் 14.50 காசு இருந்துச்சு. முதல் போட்டது 10.50 அப்ப 4 ரூபாய் லாபம். ஆஹா நமக்கு 2 ரூபா கிடைக்கும்னு காஞ்சு போயிருந்த நான் கணக்குப் போட்டேன்.
 "சர்ரா லாபத்தில என் பங்கக் கொடு”,ன்னேன். “போடா கூறுகெட்டவனே, பாத்தியில்ல நம்ம சரக்குக்கு எவ்வளவு டிமாண்டுன்னு, இப்பவே லாபத்தை பிரிக்கக்கூடாது. சனிக்கிழமை போய் இந்த மொத்த ரூபாய்க்கும் சரக்கு வாங்கனும்”,னு சொன்னான். எனக்கு அது ஞாயமாய் பட்டதால விட்டுட்டேன். அதுக்குள்ள கருப்பையாவைத் தேடி சில பெரிய பசங்க வந்து பண்டம் கேட்டாங்க.
கருப்பையா சொன்னான், "திரும்ப சரக்கு கொள்முதல் பண்ணனும்னு". தம்பித்தோட்டம் பக்கத்துல கடையே கிடையாது, ஒன்னு காந்திகிராமம் கூட்டு ரோட்டுக்கு போகனும் இல்லேன்னா சின்னாபட்டி போகனும். ஒரு சோன் பப்டிகாரன் ஞாயிற்றுக் கிழமை மதியம் வருவான் அம்புட்டுதேன்.
 என் ரூமுக்குப் போய் ஆறுமுகத்துட்ட இந்த விஷயமெல்லாம் சொன்னேன். அதுக்குள்ள கருப்பையா பெட்டிக்கடை பத்தி எல்லாத்துக்கும் தெரிஞ்சு போச்சு. ஆனா நான்தான் அதுல பார்ட்னருன்னு ஒருத்தருக்கும் தெரியாது. அவனும் சொல்லல. அப்பதான் ஆறுமுகம் கேட்டான்.
"யார் முதல் போட்டது"
"நான் தான் போட்டேன்"
“ஓ அதான் காசில்லாம என்ட்ட  5 பைசா கடன் கேட்டயா?அதுசரி கருப்பையா எவ்வளவு போட்டான்?"
அவன் கேட்டவுடனேதான் கருப்பையா ஒன்னும் முதலே போடலேன்னு எனக்கு புரிஞ்சது.
நான் உடனே கருப்பையா ரூமுக்குப்போய் கேட்டேன். “என்னடா ஆல்ஃபி நீ காசு போட்ட, நான் பொருள் போட்டேன்ல”ன்னு ,சொல்லிட்டான்.
“என்ன பொருள்னு கேட்டதுக்கு, “டேய் பெட்டி நான்தானே போட்டேன்”,னு சொன்னான். அது கூட சரிதான்னு விட்டுட்டேன்.
இப்படியே வியாபாரம் சூடுபிடிச்சு, லாபம் மட்டும் எழுபது ரூபா வரைக்கும் போயிருச்சு.நான் ரொம்ப நச்சரிச்சதால நான் கொடுத்த முதல் ரூ.10.50 எனக்குத் திரும்ப கொடுத்துட்டான். ஆஹா போட்ட முதலும்  வந்துரிச்சு .கொள்ள லாபம் வரப்போறதை   நினைச்சு எனக்கு ராத்திரியெல்லாம் தூக்கம் வரல.அப்டியே அசந்து தூங்கினாலும் கலர் கலரா கனவு வந்துச்சு . சொளையா நூறு ரூவாவுக்கு மேல்  வரப்போவுதே அதை எப்படியெல்லாம் செலவளிக்கலாம்னு திட்டம் போட்டுக்கொண்டிருந்தேன்
சும்மா சொல்லக்கூடாது இந்தகருப்பையா பேருதான் கருப்பு மனசு வெள்ளைதான்னு நினைச்சு சந்தோஷப்பட்டேன் .
என் பார்ட்னர் ஆனதால, அவனை திண்டுக்கல் மாமா வீட்டுக்கு கூப்பிட்டுப் போய் அத்தை கையால மட்டன் குழம்பு செஞ்சு கொடுத்தேன். நல்லா உறிஞ்சி  உறிஞ்சி   சாப்பிட்டான். எங்க பிரின்சஸ் அத்தை வைக்கிற மட்டன் குழம்பு சாப்பிட்டா, கை மணம் இரண்டு மூனு நாளைக்கு இருக்கும்.
பெட்டிக்கடையைப் பத்தி கேள்விப்பட்ட வார்டன், ஒரு நாள் சாயங்கால பிரேயர் வச்சு கருப்பையாவை ரொம்ப பாராட்டினார். ஆனா நான்தான்  முதல் போட்ட பார்ட்னருன்னு அவன் சொல்வேயில்லை.
ஒரு நாள் எனக்கு ஸ்பெஷல் கிளாஸ் இருந்ததால, சரக்கு வாங்க அவனே போனான். அப்ப பசங்க கேட்டாங்கன்னு கத்தரியும் தொப்பி போலிஸ் சிகரட்டும் வாங்கிட்டு வந்துட்டான். தற்செயலாய் அதைப் பார்த்த நான், "டேய் இது தப்புறான்னு”, சொன்னேன். “பேசாமா இரு சிகரெட்டு வித்தா பாதிக்குப்பாதி லாபம்னு",சொன்னான். அதிலிருந்து என்னக் கூப்பிடுறதேயில்லை கணக்கும் காண்பிக்கிறதில்ல. லாபம் கொழிச்சது. வியாபாரத்துக்கும் என்னைக் கூப்பிட்டு போறதில்ல.
ஒரு நாள் சாயந்திரம் பிரேயர் முடிஞ்சவுடன் ஸ்டடி டைம்ல வார்டன் என்னைக் கூப்பிட்டனுப்பினார்.அவர் ரூமுக்குள்ள கருப்பையாவும் கைகட்டி நின்னுக்கிட்டிருந்தான்.
"நீதான் இவனுக்கு பார்ட்னராமே", என்றார் வார்டன் சவரிமுத்து. எனக்கு ஏதோ சிக்கல் ஆயிருச்சுன்னு தெரிஞ்சு போயி  பேசாமலிருந்தேன்.
"சிகரெட் விக்குமளவிற்கு நீங்கள்லாம் பெரிய ஆளா ஆயிட்டிங்களோ" ன்னு வார்டன் என்னைப் பார்த்துக் கத்த, நான் கருப்பையாவை முறைத்தேன்.
“யாராவது சிகரெட் குடிச்சா, ஹாஸ்டலைவிட்டு டிஸ்மிஸ் பண்ணிடுவோம்னு தெரியும்ல. இங்கே உள்ளேயே வந்து நீங்களே சிகரெட் வித்து மாணவர்களை கெடுப்பதற்கு உங்களுக்கு என்ன தண்டணை தர்றதுன்னு" ,சொன்னவுடன். நான் பயந்து போய் வார்டனிடம் மன்னிப்புக்கேட்டேன். ஆனா கருப்பையா தெனாவட்டா நின்னுக்கிட்டிருந்தான். அந்த சூழ்நிலையிலும் அவன்தான் சிகரெட் விக்கிற ஐடியா சொன்னான்னு நான் காட்டிக் கொடுக்கல.
“சரிசரி இதான் கடைசி வார்னிங்னு”, சொல்லி பெட்டியில் இருந்த சிகரெட்டு பாக்கெட்டுகளை எடுத்து குப்பையில் போட்டார். “பெட்டியில் இருந்த மத்த பொருட்களை சீக்கிரம் வித்துட்டு இதோட இந்த வேலையை ஓறங்கட்டுங்க”ன்னு சொன்னார்.
கருப்பையா கோவமா வெளியே போயிட்டன். நானும் வெளியே வந்து அவனைச் சத்தம் போட, ரெண்டு பேருக்கும் ஒரே சண்டையாய்ப் போச்சு. பேச்சு வார்த்தையும் நின்னு போச்சு.
ஒரு வாரம் கழிச்சு ஆறுமுகத்துட்ட சொல்லி லாபத்துல என்னோட பங்கைக் கேட்டனுப்பினேன். “அதுதான் ஏற்கனவே அவன் போட்ட முதல திரும்பிக் கொடுத்தேட்டேன்ல, மத்தது எல்லாம் நஷ்டமாப் போச்சு”ன்னு சொல்லி அனுப்பிட்டான். என் பங்குக்கு குறைஞ்ச பச்சம் நூறு ரூபாயாவது வந்திருக்க வேண்டியது. கருப்பையா ஏமாத்திட்டான்.
“கையில இருந்து எந்தக்காசும் போடாம ஒன் காசை வைச்சே லாபம் பாத்து சம்பாதிச்சுட்டான். நீதாண்டா ஏமாந்த சோணகிரி”ன்னு சொன்னான் ஆறுமுகம். அவன் சொல்லவும் தான் நான் ஏமாந்துபோனது முழுசா விளங்குச்சு. அவ்வளவு தெறமை இருந்தா நான் ஏன் இன்னும் பரதேசியாய் இருக்கேன்.சரி விர்ரா  நாம எப்படியாவது அவனை பழி வாங்கிருவோம்னு”, சொன்னார்கள்  ஆறுமுகமும்  ஜோசப்பும் .வேணாம்னு   சொன்னேன் .
அதுக்கு அடுத்த மாசம் ஹாஸ்டல் டேக்கு மொட்ட மாடி மேல ஏறி தோரணம் கட்டிக்கிட்டிருந்த போது, மூனாவது மாடியிலிருந்து விழுந்து கருப்பையாவுக்கு கை ஒடிஞ்சு போயிருச்சு. 

அப்ப பக்கத்தில நானும்தான் இருந்தேன். ஆனா சத்தியமா சொல்றேன், அதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமில்ல.

இதன்  முதல் பகுதியைப் படிக்க இங்கே சுட்டவும் http://paradesiatnewyork.blogspot.com/2015/04/1.html


முற்றும்

பின்குறிப்பு ;

சிறிது சிறிதாக நலம் அடைந்து வருகிறேன் .இப்பவும் வீட்டில்தான் இருக்கிறேன் .ஒற்றைக்கைதான்.நேரிலும் அலைபேசியிலும் வந்து நலம் விசாரித்த அணைத்து நண்பர்களுக்கும் ஏன் மனமார்ந்த நன்றிகள்.

14 comments:

  1. Sir,

    You are a master story teller!!!. Glad to see you back. Take care!

    ReplyDelete
  2. எப்படி அண்ணே ஒரு கையிலே ஓசை எழுப்பி சுவர் இல்லாமலே சித்திரம் வரையிரிங்க.... அருமை .. அருமை .... கத்திரி... தொப்பி... அடேங்கப்பா.. என்ன ஒரு நினைவு சக்தி ...

    ReplyDelete
    Replies
    1. "சுவர் இல்லாமலே சித்திரம் வரையிரிங்க"வச்சுக்கிட்டா வஞ்சகம் செய்றேன்.அது என்னமோ தெரியலை தேவை இல்லாததெல்லாம்தான் நியாபகத்தில் நிற்கிறது என்ன செய்ய தம்பி விசு

      Delete
  3. ***“சரி விர்ரா நாம எப்படியாவது அவனை பழி வாங்கிருவோம்னு”, ***

    :-)))))

    கதை ரொம்ப நல்லாயிருந்துச்சு. ஆனா ஒண்ணு கதையில் கருப்பையாதான் ரஜினி, நீங்க கமல். வில்லனாக வந்தே கிளப்பிட்டான், கருப்பையா! :)))

    கருப்பையாவை புகழ்ந்துட்டான் வருண்னு என்னையும் பழி வாங்கிடாதேள் alfy அங்கிள்! :))

    ReplyDelete
    Replies
    1. கருப்பையாவை பாராட்டாம இருக்க முடியுமா தம்பி வருண்

      Delete
  4. கதை நல்லாத்தான் இருக்கு ஜி...!

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நன்றிஜி திண்டுக்கல்ஜி

      Delete
  5. ஆஹா கதை அருமையாய் இருக்கே.... சார் நானும் பிஸினஸ் ஆரம்பிக்கலாம் என்று நினைக்கிறேன் எவ்வளவு முதலீடு செய்யப் போறீங்க

    ReplyDelete
    Replies
    1. ஒஹ் தாராளமா, ஆனா இந்தத்தடவை பெட்டி நான் தரேன்

      Delete
  6. அட இது நல்ல கதையா இருக்கே?!!!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கு நன்றி நிஜாமுத்தீன்.

      Delete
  7. இரண்டு பகுதிகளையும் ஒன்றாகப் படித்தேன். நன்றாக எழுதி இருக்கீங்க! பாராட்டுகள்.

    விரைவில் நலம் பெற வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கு நன்றி வெங்கட் நாகராஜ்.

      Delete