Thursday, November 14, 2013

பாண்டியராஜனுடன் பரதேசி !!!!!!!!!!


        தீபாவளித்திருநாளான நவம்பர் 2, 2013 சனிக்கிழமையன்று, நியூஜெர்சி தமிழ்ச்சங்கத்தின் சிந்தனை வட்டம் நடத்திய “சிரிப்போம் சிந்திப்போம்” நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக, இயக்குநரும்  நடிகருமான R.பாண்டியராஜன் கலந்து கொண்டார். இது ஒரு பொது நிகழ்ச்சியாக இல்லாமல், ஏற்கனவே இன்விட்டேஷன்   அனுப்பப்பட்டவர்களில்,முன்பதிவு செய்த சிலருக்கு மட்டும் நடந்தது. பாக்கியராஜின் பட்டறையில் உருவான 'பா' வரிசை இயக்குநரான இவர், பாக்கியராஜின் அதே வெற்றி ஃபார்முலாவான, அப்பாவித்தனம் கலந்த நகைச்சுவையில் கால் பதித்து பல வெற்றிப்படங்களை இயக்கியவர்.
        பல்லவன் பஸ் டிரைவருக்கு மகனாக எளிய குடும்பத்தில் பிறந்த இவர், (ஓட்டுநரின் மகன் இயக்குநர்) தன்னுடைய குட்டையான உருவம், முட்டைக்கண் போன்ற எல்லா நெகட்டிவ் காரியங்களையும் பாஸிட்டிவ்வாக மாற்றி வெற்றி பெற்றவர். 54 வயதிலும் இளமையாகவே தோன்றினார்.அன்றைய சந்திப்பிலும் எளிமையாகவே பேசி வந்திருந்த அனைவரையும் கவர்ந்து கொண்டார்.
        அவர் இயக்கிய பானை (The Pot) என்ற குறும்படம் முதலில் திரையிடப்பட்டது. அவர் இயக்கிய குறும்படங்கள், உலக அளவில் திரையிடப்பட்டு பரிசுகளை அள்ளியிருக்கிறது. நியூஜெர்சியின் “பிஸ்காட்டவே” என்ற நகரில் உள்ள நூலகத்தின் ஒரு அறையில் வைத்து இந்த சந்திப்பு நடந்தது.
        முன்னதாக, பெங்களூர்  தீபா அக்காடமியைச் சேர்ந்த பார்வைத்திறன் குன்றிய மாற்றுத் திறனாளிகளான, ஆறு இளம் பெண்கள் பரத நாட்டியம் ஆடி உருக்கினார்கள். அவர்களுடைய 'ஸ்பேஸ்  சென்ஸ்' மிகவும் ஆச்சரியமூட்டியது.
        தமிழ்ச்சங்கத்தலைவர் கவிதா ராமசாமி (கவிமாமணி இலந்தை ராமசாமியின் மகள்) வழங்கிய சம்பிரதாய அறிமுக நிகழ்ச்சியில்,அவருடைய “ஆண்பாவம்” படத்தில் வரும் கார் பார்க்கிங் செய்யும் போது முட்டுதா முட்டுதா முட்டிருச்சு என்ற காட்சியை சொல்லி “ஒவ்வொரு முறை பார்க்கிங் செய்யும்போதும் அது ஞாபகம் வரும்”, என்றார். அது உண்மைதான்.
        பாண்டியராஜனின் நகைச்சுவை உணர்ச்சியும் (Sense of humor) பிரசன்ஸ் ஆஃப் மைண்டும் அநேக இடங்களில் வெளிப்பட்டது. தன் முன்னேற்றத்திற்கு சினிமா உலகில் பட்ட கஷ்டங்களை, நகைச்சுவையோடு சிறிது நேரம் பேசியபின் வந்திருந்தவர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லும் கலந்துரையாடல் நடந்தது.
        கீழே நின்று பேசிக் கொண்டிருந்தவரை, கவிதா மேடைக்குச் செல்லும்படி சொல்ல, "ஏன் உயரம் கம்மியா இருக்குன்னு சொல்லாம சொல்றீங்களா" என்று கேட்டு கலகலப்பூட்டியபடி மேடை ஏறினார். நடுவில் ஒருவர் தண்ணீர் கொடுக்க, "நான் அந்தளவுக்கு எதுவும் பேசலைன்னு சொல்லி சிரிப்பில் ஆழ்த்தினார்".
நீங்கள் இயக்கிய படங்களில் உங்களுக்கு மிகவும் பிடித்தபடம் என்ன என்ற கேள்விக்கு, "அதை இனிமேல்தான் எடுக்க வேண்டும்" என்று சொல்லி கைதட்டல்களை அள்ளினார்.
        அரசியலில் நுழைந்து முதலமைச்சர் ஆவீர்களா? என்ற கேள்விக்கு, "CM ஆசையெல்லாம் இல்லீங்க நேரா PM ஆசைதான்" என்று  சொல்ல சபை ஆரவாரித்தது.
        கடந்த கால சாதனைகளைப்பற்றிக் கேட்டதற்கு அவர் சொன்ன பதில் என்னை மிகவும் கவர்ந்தது. “Yesterday's Newspaper is todays wastepaper எனவே பழைய சாதனைகளை நினைக்காமல் புதிய சாதனைகளில் ஈடுபடுவதே எனது விருப்பம்”, என்றார்.
        பாக்கியராஜ் உங்களுக்கு வழங்கிய அறிவுரை என்ன என்ற கேள்விக்கு, அவர் சொன்ன பதில், "டைரக்ட் பண்ணு, பண்ற மாதிரி நடிக்காதே" என்பது.

பாண்டியராஜன் பற்றிய சில குறிப்புகள்:
பிறந்த தேதி : 2 அக்டோபர் 1959, (54 வயது)
பிறந்த இடம்: சைதாப்பேட்டை, சென்னை .
படிப்பு : 10th std  - இயக்குனராவதற்கு முன்.
தமிழிசைக் கல்லூரி : இசைச் செல்வம் (டிப்ளமோ இன் வயலின்)
தற்போது - MA., M.Phil., (PHD)
இயக்கியவை : 9 படங்கள்
நடித்தவை : 90 படங்கள் (தமிழ்) ஒருபடம் - மலையாளம்
இசையமைத்த படம் : நெத்தியடி
குறும்படங்கள் : மகள், இருதுளிகள், குடம், Help
அறிமுகப்படுத்திய நடிகர்கள் : சீதா, கொல்லங்குடி கருப்பாயி, மயில்சாமி, தேப ஸ்ரீ ராய்.
அறிமுகப்படுத்திய இசையமைப்பாளர் : ஸ்ரீகாந்த் தேவா
அறிமுகப்படுத்திய ஆர்ட் டைரக்டர் : தோட்டா பானு,
மனைவி பெயர் :வாசுகி (இயக்குநர், தயாரிப்பாளர் புலவர் அவினாசிமணியின் மகள்).
        சந்தித்து வாழ்த்துக்களை சொல்லிவிட்டு, வழங்கிய தீபாவளி இனிப்பையும் காரத்தையும் சுவைத்தபடி வீடு திரும்பினேன்.
        பாண்டியராஜனுடன் எடுத்துக் கொண்ட போட்டாவை பார்த்த என் மனைவி "ஓ இவர்களை எனக்குத் தெரியும்" என்றாள். "பாண்டியராஜனை எல்லோருக்கும் தெரியும்" என்றேன். இல்லை இல்லை, அவரின் மனைவி வாசுகியை எனக்கு நல்லாத் தெரியும்" என்றாள்.
        "அவர்களுக்கு உன்னைத் தெரியுமா? என்றேன். "தெரியும் தெரியும் நான் படித்த மோனகன் பள்ளியில் வாசுகி என் சீனியர். பின்னர் நான் செயின்ட் எப்பாசில் படிக்கும் போதும் அங்கேயும் படித்தார்கள். அதன்பின் நான் எப்பாசில் டீச்சராக சேர்ந்தபின்னரும், சில விழாக்களுக்கு வந்திருக்கிறார்கள். ப்ளீஸ் ப்ளீஸ் அவர்களோடு பேச வேண்டும்", என்றாள். "நீயும் வந்திருக்கலாமே", என்று அலுத்தபடி, அவர்களை போனில் பிடித்தேன்.

        போனில் குலவிய இருவரும் இறுதியாக முடிவெடுத்தது, அடுத்த தடவை அவர்கள் அமெரிக்கா வரும் போது, நியூயார்க்கில் என் வீட்டில் தங்குவதாக.

9 comments:

  1. மனைவியை விட்டு விட்டு காமெடி நடிகரை சந்திக்க சென்றீர்களோ? ஒரு வேளை மனைவியை கூட்டிச் சென்றால் உங்களை அவர் காமெடி பீஸ் ஆக்கிவிடுவாரோ என்ற பயமா?

    ReplyDelete
    Replies
    1. நான் இன்னும் காமெடி பீஸ் ஆகவில்லை என்று நம்பிக்கொண்டிருக்கும், மதுரைத்தமிழன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி .

      Delete
  2. தமிழ்ச் சங்க நிகழ்ச்சிகள் எல்லாம் தவறாமல் நீங்கள் கலந்து கொள்வதால் உங்களை அமெரிக்க வலைதள சங்க தலைவராக நியமிக்கிறேன் .

    ReplyDelete
    Replies
    1. இந்த விருது வழங்கும் விழா எப்போது?, எங்கே? என்று முன்னரே அறிவித்தால் நலமாயிருக்கும் .

      Delete
  3. அடடா உங்கள் மனைவியையும் அழைத்துச் சென்றிருந்தால் ஒரு இனிய சந்திப்பு நிகழ்ந்திருக்குமே.....

    ReplyDelete
    Replies
    1. பின்னர்தான் தெரிந்தது வெங்கட் நாகராஜ்.

      Delete
  4. பாண்டியராஜன் அவர்கள் சிறப்பான குறும்படங்கள்
    எடுத்திருக்கிற விவரமும், இசை அமைத்துள்ள
    விவரமும் தங்கள் பதிவின் மூலமே அறிந்தேன்

    வாழ்த்துக்களுடன்

    ReplyDelete