Monday, October 28, 2013

பழமுதிர்ச்சோலை எனக்காகத்தான்...


ஆப்பிள் பிக்கிங்



        தொழிலாளர் தினம் (Labor Day) செப்டம்பர் 2, 2013 திங்களன்று வந்தது. மூன்று நாளில் லீவில், அங்கே இங்கே போகலாம் என்று யோசித்து எங்கும் போகாமல் 2 நாட்கள் ஓடிவிட்டது. திடீரென்று ஞாயிறு இரவுதான்  ஆப்பிள் பிக்கிங் ஞாபகம் வந்து, காலையில் எழுந்து கிளம்பினோம்.
        முழுக்குடும்பமும் 2 வண்டிகளில். இந்த சமயம் நான் என் பெரிய ரதத்தை எடுத்துக்கொண்டேன். (மதுரைத்தமிழனுக்கு மட்டும்தான் ரதம் எடுக்க முடியுமா? நாங்களும் எடுப்போம்ல).

        லாரன்ஸ் ஃபார்ம் என்ற அந்த பழத்தோட்டம் நகருக்கு வெளியில் அப்ஸ்டேட்டில் ஒருமணி நேரத்தொலைவில் இருக்கிறது. ஜார்ஜ் வாஷிங்டன் பாலத்தை தாண்டி, நியூஜெர்சி மாநிலத்தின் ஒரு பகுதியை கிராஸ் செய்து பயணம் செய்தால், ஒரு குன்றுகள் சூழ்ந்த பகுதியில் வந்தது.
        ஏற்கனவே பலசமயம் அங்கு வந்திருந்தாலும், எங்களில் சிலருக்கு அதுதான் முதல் தடவை. பார்க்கிங் செய்துவிட்டு பழவேட்டைக்குக் கிளம்பினோம்.நாங்கள் வருவது முன்னரே தெரிந்ததோ என்னவோ, "பழங்களில் ஒன்றிரண்டு சாம்பிள் மட்டும் சாப்பிடவும். வாங்கப்போவதில்லை என்றால் பறிக்க வேண்டாம்" என புதிதாக போர்டு ஒன்று முளைத்திருந்தது.
        மேப்பை எடுத்துக்கொண்டு சென்றபோது முதலில் வந்தது, “மெக்கின்டோஷ்” ஆப்பிள் தோட்டம். செவ்வரி ஓடிய பச்சை நிறத்தில் காய்த்துத்தொங்கியது. எல்லாமே குட்டை மரங்கள்.

 பறிக்காமலே மரத்திலேயே ருசிபார்க்கும் அளவுக்கு பக்கத்தில் தொங்கின. கடித்தால் புளிப்பு உச்சிக்கு ஏறியது. என்னடாது நமக்கு வயசாயிப் போச்சா, பல் இவ்வளவு கூசுகிறதே என்று கவலையில் "ஙே" (நன்றி ராஜேந்திரகுமார்) என்று முழித்துக் கொண்டு நின்றேன். அப்போது தற்செயலாய் சிறிய சக்கர வாகனத்தில் ரோந்து வந்த இளைஞன், அவை இன்னும் பழுக்கவில்லை என்று சொன்னான். அப்பாடா இது பல் பிரச்னையில்லை என்று தெரிந்து மகிழ்ச்சியுடன் கடந்து சென்றேன்.

        அடுத்து வந்தது திராட்சைத் தோட்டம். நான்கைந்து வகைகள் இருப்பதாக மேப் சொன்னது. அபிஷா  உள்ளே சென்று மறைந்திருந்த திராட்சைக் கொத்துகளை கிள்ளி வந்தாள்.

 பச்சை மற்றும் கறுப்பு நிறத்திராட்சைகள், லேசாக சாம்பல் பூத்து இருந்ததை, துடைத்துவிட்டு உண்டேன். விதை இல்லேன்னா இன்னும் நல்லாருக்கும் என நினைத்துக் கொண்டேன். இந்த விவசாய விஞ்ஞானிகள்  எப்படியெல்லாம் நம்மை சுகவாசிகளாக ஆக்கிவிட்டார்கள் பாருங்கள்.

        அதற்கடுத்த பகுதியில் வரிசை வரிசையாக காய்கறித்தோட்டம் இருந்தது. லாரன்சில் மட்டுமே காய்கறித்தோட்டம் உண்டு. வெள்ளை, பச்சை மற்றும் ஊதா நிற முட்டைக்கோஸ்கள், ராட்சத கத்தரிக்காய்கள், காலிஃபிளவர்கள், லேட்டூஸ்  மற்றும் பிராக்கோலி இருந்தன. இதில் கத்தரிக்காய் தவிர எல்லாவற்றையும் பச்சையாக சாப்பிடலாம் என்றாலும், பிராக்கோலி மட்டும் கிள்ளிச்சாப்பிட்டேன்.

        அதன் பக்கத்தில் எனக்கு மிகவும் பிடித்த பீச் மரங்கள். விரைந்து சென்றால் மரத்தில் மருந்துக்குக் கூட ஒரு பழம் இல்லை. எல்லாமே உதிர்ந்து போயிருந்தது. ஒவ்வொரு குட்டை மரத்தின் அடியிலும் ஐம்பதுக்கும் மேல் கொட்டிக்கிடந்தன.

 என்னடா இது, இலையுதிர்க்காலம் என்றுதான் நினைத்தேன் இது பழமுதிர்க்காலம் என்று அப்போதுதான் தெரிந்தது. கீழே இருந்த பழங்களும், ஃபிரெஸ்ஸாக இருப்பது போல் தெரிந்து எடுக்கலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது, அங்கு விரைந்து வந்த ரூத், "பேசாம வாங்க அது வேணாம்" என்றாள். இந்த இருபது வருட மணவாழ்க்கையில், என் இல்லத்தில் நடப்பது மட்டுமின்றி, உள்ளத்தில் இருப்பதையும் கண்டு பிடித்து விடுகிறாள் என் மனைவி. விடுதலை வேட்கையில் என் தோள்கள் தினவெடுத்தாலும், “கனவோடு நிறுத்திக்கொள் கணவா”, என்பதைப்போல் என் மனைவி பார்க்க, ஒரு சிங்கம் ஆடாக மாறி பிராக்கோலி மேயச் சென்றது.

        பிராக்கோலி தோட்டத்தின் முடிவில் மக்காச்சோளத் தோட்டம் (Sweet Corn) இருந்தது. நன்கு விளைந்த ஒன்றிரண்டினை என் மனைவி சோகை நீக்கித்திர, கடித்தால் பால் இறங்கியது. வயிற்றில் திராட்சைச்சாறில் பிராக்கோலி மிதக்க, சோளச்சாறு இனிப்பாய் இறங்கிக் கலந்து வயிற்றை நிரப்பியது. மறுபுறம் புடுங்கினால்   என்ன செய்வது என்ற பயமும் அவ்வப்போது  வந்து சென்றது.

        மறுபகுதியில் ஏசியன் பேர் (Asian Pear) என்று சொல்லக்கூடிய நம்மூர் பேரிக்காய்கள் இருந்தன. தவ்விப்பார்த்தேன். ம்ஹூம் எட்டவில்லை. மறுபடியும் முயற்சி செய்ய குதிங்காலில் மளுக்கென்றது. "சீச்சி இந்தப்பழம் புளிக்கும்" என்று வந்துவிட்டேன்.

        அதன் பக்கத்தில் வகை வகையான தக்காளி, பீன்ஸ், நம்ம ஊர் கத்தரிக்காய், குடைமிளகாய், ஸ்குவாஷ், பச்சை மிளகாய், பஜ்ஜி மிளகாய் (பேர் தெரியலை) ஆகியவை இருந்தன.
        ஸ்ட்ராபெர்ரி சீசன் முடிந்துவிட, ராஸ்பெர்ரி இருந்தது. ஆனால் என்னைப்போன்ற நரிகள் வருமென்பதால், வேலி போட்டு வைத்திருந்தார்கள். விலை அதிகமல்லவா, செர்ரிப்பழங்களும் அப்படியே.
        கடந்துபோனால், இன்னும் பலவித ஆப்பிள்கள் இருந்தன. மனமிருந்தாலும் வயிற்றில் இடமில்லை. அந்த வகைகள் ரெட் டெலிசியஸ், ரெட் ஜானத்தன், கோல்டன் டெலிசியஸ் கேலா (Gala), எம்ப்பயர், ஃபியுஜி (Fuji), கிரானிஸ்மித் etc.

     ஒரு சுற்று முடித்து அழகிய தடாகத்திற்கு வந்து சேர்ந்தோம். அழகிய வெள்ளை அன்னங்களும் வாத்துகளும் மிதக்க, கரையில் சிறு சிறு கூண்டுகளில், கோழிகள், வான்கோழிகள், ஒரு மயில், ஆடுகள் ஆகியவை இருந்தன.

கரையிலே பெட்ஷீட்டை விரித்து, “வாங்க சாப்பிடலாம்” என்று சொன்னார்கள். கட்டுச்சோறின் மணம் நாசியைத் துளைத்தாலும், வயிறு கும்மென்று இருந்ததால் கம்மென்று இருந்துவிட்டேன்.

        குதிரை வண்டியில் ஒரு ரைட் போய்விட்டு, வாங்கிய காய்கறி பழங்களுக்கு பணம் செலுத்திவிட்டு மாலை ஐந்து மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்து விட்டோம். சில நிமிடங்களில் மிளகாய் பஜ்ஜி சூடாக வந்து சேர்ந்தது. ஆஹா ஆஹாஹாஹாஹா.

22 comments:

  1. ஆதம் ஏவாள் போல ஆப்பிளை பறித்து நீங்க தின்னதோட நீப்பாட்டிடீங்க அதை மட்டும் உங்கள் மனைவியிடம் கொடுத்து சுவைக்க வைத்திருந்த பெரிய கலவரமே ஏற்பட்டிருக்கும். உங்க நேரம் நல்ல நேரம் அதனால தப்பிச்சுட்டீங்க

    ReplyDelete
    Replies
    1. ஏவாள் கொடுத்து ஆதாமைக்கெடுத்தாள் என்பதுதான் வரலாறு..
      ஆதாம் கொடுத்து ஏவாள் கெட்டதாக சரித்திரம் இல்லை . சரிதானே
      தலைவா ?

      Delete
    2. நீங்க சொல்வது வரலாறு, நான் சொல்வது இந்த கால ரீமிக்ஸ் ஹீ.ஹீ என் மீசையிலே இப்ப மண் ஒட்டல இப்போ ஹீ.ஹீ.ஹீ

      Delete
  2. அழகிய பூங்கொடியில் (அபிஷா கையில்) திராட்சை பழங்கள். அதிசயம் இங்குதான் கண்டேன்

    ReplyDelete
    Replies
    1. அடா அடா கவிதை கவிதை .

      Delete

    2. கவிதை போல அழகாக இருக்கும் அபிஷாவைப்பற்றி எது சொன்னாலும் அது கவிதையாக மாறிவிடுகிறதோ

      Delete
    3. ஆசு கவிக்கு பாடுபொருள் ஒரு பொருட்டல்ல

      Delete
  3. ///ரூத், "பேசாம வாங்க///
    அட அங்கயும் மீனாட்சி ஆட்சிதானா?

    ReplyDelete
    Replies
    1. மதுரைக்காரைங்க வீட்டிலே எல்லாம் மீனாட்சி ஆட்சிதான பாஸ்.
      அங்கேயும் அதுதானே

      Delete
    2. இதுக்கு பதில் சொல்ல முதலில் எங்க வூட்டு அம்மாவிடம் அனுமதி வாங்கணும். இப்படி எல்லாம் பொதுவுல கேட்டு என்னை வம்பில் மாட்டி வீடாதீங்க சாமி

      Delete
    3. இதுதான் சிதம்பர ரகசியமோ ?

      Delete
  4. //மிளகாய் பஜ்ஜி//
    என்னைவிட்டு சாப்பிட்டதுன்னலா உங்களுக்கு நல்ல வயிரு வலிச்சுருக்குமே வலிக்கலைன்னா இன்ரூ கண்டிப்பா வலிக்கும்

    ReplyDelete
    Replies
    1. அய்யய்யோ வயிற்று வலி ஆரம்பிச்சிரிச்சே >>>>>>>>>

      Delete
    2. ஒரே சமயத்தில் அதிரடியாய் நான்கு கமெண்ட்ஸ் கொடுத்து இன்ப அதிர்ச்சியை
      கொடுத்த நண்பருக்கு நன்றி

      Delete
  5. // கனவோடு நிறுத்திக்கொள் கணவா // என்னவொரு ஆலோசனை...!

    ReplyDelete
    Replies
    1. இது எல்லா கணவர்களுக்கும் இலவசமாய் கிடைக்கும் ஆலோசனைதான்
      திண்டுக்கல் தனபாலன்.

      Delete
  6. படங்கள் அனைத்தும் அருமை... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி திண்டுக்கல் தனபாலன்.

      Delete
  7. படங்கள் அருமை......

    எங்களுக்கும் ஆப்பிள் பிக்கிங் செய்ய ஆசை தான்... உடனே காஷ்மீர் செல்லத்தான் வேண்டும்.... :)

    ReplyDelete
    Replies
    1. வேண்டாம் நண்பரே. காஷ்மிர்க்கு ஆப்பிள் பிக்கிங் வேண்டாம். அதை பிக் பண்ண போய் உங்களை பிக் பண்ணிவிடபோகிறார்கள். வேண்டும் என்றால் நம்ம ஊரிலேயே வெங்காயமோ இல்லை தக்காளியோ பிக் பண்ணுங்க.

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. ஆமாம் ஆமாம் அங்கே பழம் கொய்வதில்லை தலை கொய்வதாய் கேள்வி
      வேண்டுமென்றால் இங்கே வாருங்கள் நண்பரே.

      Delete