Thursday, January 28, 2016

பதிவர்களோடு பரதேசி !!!!!!!!!!!!!

Pudukkottai Meet

என்  எழுத்துக்குப் பெருமையா? என் எழுத்தின் வலிமையா? என் எழுத்துக்கு இத்தனை வரவேற்பா? என்று கேட்டு அதற்கு நானே 'ஆம் ஆம் ஆம்"  என்று சொன்னேன் என்றால்  என்னை விட முட்டாள் வேறு யாரும் இல்லை.
பின்னர் எதற்கு இத்தனை வரவேற்பு ?, இத்தனை அன்பு? இத்தனை கொண்டாட்டம்? என்று  எண்ணிப்பார்த்தால், அது தமிழின் மேல் உள்ள ஆர்வம், காதல், தோழமை என்றுதான் சொல்ல முடியும்.
விடுமுறைக்கு சீனா, இலங்கை மற்றும் இந்தியாவில் சில வாரங்கள் செலவிட நினைத்து, கிளம்பும் முன்பதாக இரு மாதங்களாக இருண்டு கிடக்கும் என் பிளாக்கில் அறிவித்தேன்.
ஜனவரி 8ஆம் தேசி மாலை சென்னை  வந்து சேர்ந்து ,எக்மோரில் உள்ள பாண்டியனில் அறையெடுத்தேன். வெளியே போய் மண்ணின் மத்தையும் புழுதியையும் சுவாசித்து சற்றே இருமலுடன் திரும்பி வந்து ஓய்வெடுத்தும் எடுக்காமலும் காலையில் எழுந்து ரெடியாகும் போது லித்தது அலைபேசி. அவர் செல்வா என்ற செல்வக்குமார் (நான் ஒன்று சொல்வேன்.....www.naanselva.blogspot.com )லிப்ட்டில் இறங்கியவாறே, "எங்கேயிருந்து பேசுகிறீர்கள் ?", என்று கேட்டேன்.  "இங்கேயிருந்து தான்", என்று என் முன்னால் வந்தார்.  
முன்பின் பேசியதில்லை, பழகியதில்லை. ஆனால் ரொம்ப நாள் பழகியது போல் ஒரு தோழமை. ஆஹா ஆரம்பமே  அமர்க்களமாக இருக்கிறதே என்று நினைத்தேன். அவருடன் காலைச்சிற்றுண்டி சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது, சில நிமிடங்களில் இன்னொரு ஃபோன், "நான்தான் கார்த்திக் பேசுகிறேன்", என்று. அவர் வேறு யாருமில்லை நம்ம ஸ்கூல் பையன் கார்த்திக்தான் (www.schoolpaiyan.com). மாலை சந்திப்பதாக முடிவெடுத்து நான் என் அலுவலகம் சென்றேன்.  துணைக்கு செல்வாவும் வந்தார்.

Karthik( School Paiyan), Selvakumar and myself

மாலையில் சொல்லிவைத்தது போல் கார்த்திக் வந்து சேர,  செல்வாவும் வந்துவிட, ரூமில் உட்கார்ந்து பலநாள் தோழர்கள் போல அளவளாவி மகிழ்ந்தோம். பார்ப்பதற்கும் ஸ்கூல் பையன் மாதிரி வெகு இளமையாக இருந்தார்.
செல்வா சொன்னார், "புதுக்கோட்டையில் நிறைய பதிவர்கள் உங்களைச் சந்திக்க ஆவலாய் இருக்கிறார்கள். நீங்கள் அவசியம் வரவேண்டும்" என்று. "என்னைச் சந்திக்கவா? நான் என்ன அவ்வளவு பெரிய ஆளா?”, வெட்கத்துடன் தப்பிக்கப்பார்த்தேன். அப்போது அலைபேசி ஒலித்தது. பேசியவர் கவிஞர் முத்து நிலவன். யார் முத்து நிலவனா, சிறந்த தமிழ் ஆசிரியரும், எழுத்தாளரும், பட்டிமன்ற பேச்சாளரும் பல இளைஞர்களின் ஆதர்ஷ வழிகாட்டியுமான முத்து நிலவன் ஐயாவா பேசுவது என்னால் நம்ப முடியவில்லை. அவரும் அதையே சொல்ல, ஐயாவின் வார்த்தைக்கு மறுப்புச் சொல்லாமல் வருவதாகச் சொன்னேன்.  
சாப்பிடப் போகலாம் என்று சொல்லி மூவரும் கிளம்பி வெளியே வந்தோம். அஞ்சப்பர், புகாரி, காரைக்குடி, பொன்னுசாமி  ஆகிய அருகிலிருந்த அசைவ உணவங்களில் காரைக்குடியை தேர்வு செய்து உள்ளே சென்றால் ஒருவரையும் காணோம். அதையும் மீறி ஆர்டர் செய்து சாப்பிட்டோம். சுமாராகவே இருந்தது. வெளியே வந்து பார்த்தால் அது பிரபலமான காரைக்குடி உணவகம் அல்ல. அய்யனார் காரைக்குடியாம். இனிமேல் ஒரு தடவைக்கு இரண்டு தடவை பேரைப் பார்த்துவிட்டுத்தான் செல்ல வேண்டும் என்று முடிவு செய்தேன்.
.
மதுரையில் இருந்த சில நாட்களில், இந்தத் தடவை பிறந்த மண்ணையும், பூர்வீக வீட்டையும்  பார்த்துவிட திண்டுக்கல் செல்ல முடிவு செய்தேன். ஜனவரி 12ஆம் தேதி சென்ட்ரல் எக்சைஸில் சூப்பிரண்டென்டன்ட் ஆக இருக்கும் நண்பன் சாம் தன் காரில் அழைத்துச் சென்றான்.
திண்டுக்கல் என்றதும் பிரபல பதிவர் திண்டுக்கல் தனபாலன் ஞாபகம் வர, தொடர்பு கொண்டேன். பூர்வீக வீட்டையும் மாமா அத்தை அவர்களையும் பார்த்துவிட்டு, திரும்ப வரும்போது, நாகல் நகரில் தனபாலனை சந்தித்து அப்படியே வேணு பிரியாணி உணவகம் சென்றோம். புகைப்படத்தில் பார்த்ததை விட நேரில் இன்னும் அழகாக இருந்தார். பிரியாணியும் தாழ்ச்சாவும்  அமிர்தமாக இருந்தது. அதன் பின்னர் அவர் வீட்டுக்குச் சென்று அவரது அருமை மனைவியையும் சந்தித்தோம். தனபாலனுக்கு இணையான சுவாரஸ்யமானவர் அவர் மனைவி. மிகவும் சரளமாகவும் சகஜமாகவும் பழகினார்.
With Dindugal Dhanapalan  and his wife

அவருடைய பரம்பரைத் தொழிலான புடவைகள் மொத்தவிலை வியாபாரத்தை மீண்டும் ஆரம்பித்திருக்கிறார். சிறப்பான சேலைகளில் ஒரு ஐந்தை வாங்கிக் கொண்டு கிளம்பினோம். தனபாலன் அவர்களின் வியாபாரம் சிறந்து விளங்க பரதேசியின் வாழ்த்துக்கள்.

ஜனவரி 13ஆம் தேதி காலை அமெரிக்கன் கல்லூரியின் MSW -விலும் அழகர்கோவில் அருகில் இருக்கும் MBA மாணவர்களுக்கும் என்னுடைய கெஸ்ட் லெக்சரை முடித்துக் கொண்டு, நண்பர் பேராசிரியர் பிரபாகர் அவர்கள் துணைக்கு வர அவருடைய காரிலேயே புதுக்கோட்டை சென்றோம்.
போகும் வழியில், மறுமுறை வரும் போது ஓவியம் முற்றிலுமாக மறைந்துவிட்டால் என்ன செய்வது என்ற பயத்தில், சித்தன்ன வாசலையும் அதின் சிதிலமடைந்த ஓவியத்தையும் மீண்டுமொருமுறை பார்த்துவிட்டு மாலை 5.30 மணியளவில் புதுக்கோட்டை சென்றோம். .
அங்கே கவிஞர் முத்துநிலவன் அவர்கள் தலைமையில்  ஆர்வத்துடன் அநேகர் குடியிருந்தனர். அன்பர்கள் வந்தவண்ணம் இருக்க, எனக்கு பதட்டம் கூடிக் கொண்டே இருந்தது.
எனக்கு முன்னால் பேசிய தமிழ்ப்பேராசிரியர் நண்பர் பிரபாகரும், தமிழ் எப்படி வளர்கிறது என்றும் அது என்றும் அழியாது என்றும் சொல்லி விளக்கினார்.
"ஒரு பேச்சாளன் என்று என்னைச் சொல்ல முடியாது, ஒரு எழுத்தளான் என்றும் என்னைப்பற்றி சொல்லமுடியாது.  நான் யார் என்று கேட்டால், பஞ்சம் பிழைக்க பிறதேசம் போன பரதேசி எனக்கெதற்கு இத்தனை பெரிய வரவேற்பு", என்று என் பேச்சை ஆரம்பித்தேன்.  
with Muthu Nilavan and Prabahar

அங்கு பல தமிழாசிரியர்கள், கவிஞர்கள், பதிவர்கள் மென்பொருள் பொறியாளர்கள் கூடியிருந்தனர். மறக்க முடியாத ஒரு மாலைப் பொழுதாக அது அமைந்தது.

இதனை ஏற்பாடு செய்த கவிஞர் முத்துநிலவன் ஐயா, மற்றும் செல்வா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். வந்திருந்த அனைவருக்கும் மீண்டும் என் வணக்கங்கள். 

Monday, January 25, 2016

சகாயத்துடன் பரதேசி !!!!!!!!!!!!

சகாயத்துடன் பரதேசி !!!!!!!!!!!!

இடம் சென்னை விமான நிலையம் , டொமெஸ்டிக் டெர்மினல் , ஜனவரி 9ஆம் தேதி , 2016. ஒரு சிறு கைப்பெட்டியுடன்நடந்துவருவது உற்றுப்பார்த்தால் அட சகாயம். என்னை அறியாமலேயே என் பொருட்களை விட்டுவிட்டு விரைந்து சென்று கைகுலுக்கினேன். ஒரு நிமிடம் என்ன பேசுவது என்றே தெரியவில்லை, உரையாடலை ஆரம்பித்தது அவரே.  
உங்கள் பெயர் என்ன? எங்கே இருக்கிறீர்கள், என்ன செய்கிறீர்கள்? என்ற கேள்விகள் சம்பிரதாய முறையில் இருந்தாலும், அவர் சம்பிரதாயத்திற்காக கேட்ட மாதிரி தெரியவில்லை. னென்றால் அவரைப்பார்க்க வந்த அனைவரையும் அவர் இதே கேள்விகளைக் கேட்கத்தவறவில்லை.  
"யார் இவர்? எதற்கு அவர் வந்ததும் எல்லோரும் அவரை நோக்கி ஓடுகிறீர்கள்", கேட்டாள் அந்த வெள்ளைக்காரி, அவரிடம் பேசி முடித்து வந்த என்னிடம். இந்தக் கேள்விக்கு நான் என்ன பதில் சொல்ல முடியும்?
ஒரு அரசு அலுவலர் என்ன சொன்னால், அதில் என்ன சிறப்பு?
இவர் ஒரு IAS  அதிகாரி என்று சொன்னால், அதில் என்ன தனித்துவம் இருக்க முடியும் ?. அதிகாரிகள் தான் ஆயிரம் பேர் இருக்கிறார்களே.
ஒரு நேர்மையான மனிதன் என்று சொன்னால், அவ்வளவுதானா? அதுமட்டும்தானா என்று என் மனமே எதிர்க்கேள்வி கேட்கும்.
அப்படியென்றால் சகாயம் என்பவர் யார்? பின்னர் அவரை என்னவென்றுதான் சொல்வது?
Sagayam IAS
Sahayam IAS
'லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து' என்ற வரிகளுக்கு மட்டுமல்ல, அந்த தவ வாழ்க்கைக்குச் சொந்தக்காரர். சுயநலத்தை, குடும்ப நலத்தைப் பின்னுக்குத்தள்ளி, பொது நலனில் நாட்டு நலனுக்காக மட்டுமே தொடர்ந்து செயல்படும் ஒரு போராளி.
அவருடைய முதல் அதிரடி வெளிப்பட்டது, மாபெரும் வெளிநாட்டு கம்பெனியான பெப்சி கோலாவுக்கு எதிராக பெப்சி பானத்தில் தூசி மிதந்ததை அவரிடம் சிலர் காண்பிக்க, லேப் சோதனையில் அது குடிக்கத் தகுந்த பானம் இல்லை என்று தெரிய பூட்டுகளோடு சென்று தொழிற்சாலைக்குப் பூட்டுப்போட்டார். அந்தச் சமயத்தில் என்னுடைய மாமா மகன் அங்கு Personnel Officer ஆக இருந்தான். அவனிடம் நான் பேசும்போது, அவன் சொன்னான், "எல்லோருக்கும் ஒரு விலை இருக்கிறது" என்று. ஆனால் தலைமைச்செயலாளர், மந்திரிகள் முயன்றும் அவர் சம்மதிக்காதலால், அவரை மாற்றம் செய்தபின்தான், தொழிற்சாலையை திறக்க முடிந்தது. அந்த வீறு கொண்ட நேர்மை இந்நாள் வரை கொஞ்சம் கூட குறையக் காணோம்.
அவர் பணி செய்த வருடங்களை விட அதிகமுறை பணிமாற்றம் செய்யப்பட்டாலும், மனமாற்றம் அடையாமல் எந்த சோர்வுமின்றி, சென்ற இடங்களில் எல்லாம் முத்திரை பதிப்பவர்.
அரசாங்கத்தின் பிரதிநிதியாய் செயல்பட்ட காலம் போய், நீதியின் பிரதிநிதியாய் செயல் படத்துவங்கியிருக்கிறார். நமக்கு இன்னும் கொஞ்சம் நம்பிக்கை ஒட்டிக் கொண்டிருக்கிறது என்றால் அது நீதித்துறையும் நீதிமன்றமும் இருப்பதால்தானே.  
ஆமாம் ஆயிரக்கணக்கானவர்கள் தன்னிச்சையாக அவர் மேல் மதிப்பு கொண்டு, அவரை அரசியலுக்கு வரச் சொல்லும் பேரணிகள் தமிழ்நாடு முழுதும் நடைபெறுகின்றன. வெறும் காசுக்காக கூடுகின்ற உன்மத்தர்களின் கூட்டமல்ல அது. நாட்டு முன்னேற்றத்திற்காக கனவுகளைத் தாங்கி நிற்கும் மக்கள். யாராவது ஒரு மேசியா வந்துவிடமாட்டாரா என ஏங்கித்தவிக்கும் தானாகக் கூடிய மக்கள்.
தனிமனிதர்கள் சரித்திரம் படைக்க முடியுமா என்றால் முடியும் என்பதை சரித்திரம் படித்தவர்கள் ஒப்புக்கொள்வார்கள்.
 அவருடன் நடந்த உரையாடல் இன்னும் என் நினைவில்.
நான் முதலில் சொன்னேன். "கடவுள் உங்களுக்குத் துணை நிற்கிறார் "என்று. சிறுபுன்னைகையுடன் அதனை அங்கீகரித்த அவர் "இல்லாவிட்டால் எனக்கு எப்படி இவ்வளவு தைரியம் வரும்"?, என்றார்
"வெகுகாலமாக தங்களை உய்விக்க ஒருவர் வரமாட்டாரா என்று மக்கள் ஏங்கித்தவித்து காத்துக்கொண்டிருக்கிறார்கள். அது ஏன்  நீங்களாக இருக்கக்கூடாது" என்றேன். ஒரு சிறுபுன்னகை மட்டுமே பதிலாக வந்தது. 
"உங்களால் கவரப்பட்டவர்கள் வெளிநாட்டில் நாங்கள் அநேகர் இருக்கிறோம். நாங்கள் உங்களுக்குத்துணையாக நிற்கவும் தாய் நாட்டுக்குத் திரும்பவும் ஆயத்தமாக இருக்கிறோம்",  என்றேன். வெறும் உணர்ச்சி வசப்பட்ட வார்த்தைகள் இல்லை இவை.
நியூயார்க்கிற்கு அவரை அழைத்தேன். சிகாகோ தமிழ்ச்சங்கம் அழைத்ததையும் அதற்கு அரசு அனுமதி கிடைக்காததையும் சொன்னார். அதற்குள் கூட்டம் கூடிவிட, தன் தொலைபேசி எண்ணைக் கொடுத்து அவசியம் தொடர்பில் இருங்கள் என்றார். விடைபெற்று வெளியே வர சிறிது சிரமப்பட்டேன்.
. சகாயம் அவர்களே பத்திரமாக இருங்கள். சீக்கிரம் வெளியில் வந்து மக்களுக்கு சகாயம் செய்யுங்கள். இன்றைய இளைஞர்கள் மட்டுமல்ல எல்லா வயதிலும் உங்களுக்கு ஆதரவாளர்கள் இருக்கிறோம்.

அவரை ஒரு வார்த்தையில் அழைக்கமுடியுமென்றால் அவர் ஒரு மாபெரும் புரட்சியாளர். ஆமாம். பக்கத்தில் இருந்த வெள்ளைக் காரப் பெண்மணியிடம் சொன்னேன், "He is a great Revolutionist " என்று. அந்தப் பெண் கூட்டத்திற்குள் புன்னகைத்து நின்ற சகாயத்தைப் பார்த்துவிட்டு என்னை  நம்பமுடியாமல் பார்த்தாள்.
ஆம், எளிமையில் உள்ள வலிமை வெறும் தோற்றத்தில் தெரிவதில்லை. ஆனால் அவர் கொண்டு வரப்போகும் மாற்றத்தில் தெரியும். விடிவெள்ளி விரைவில் வெளிப்படும்.
முற்றும்