Monday, December 23, 2013

போர்ட்டரிக்கோ பயணம், பகுதி 8: தந்திரமும் மந்திரமும்!!!!!!!!

Sir. Ralph Abercromby

மீண்டும் ஆங்கிலேயர்
        ஒரு முறை தோற்றாலே ஆங்கிலேயர் விடமாட்டார்கள். இதில் இருமுறை முயன்றும் முடியாமல் போனதால், மூன்றாம் முறை பெரும்படையுடன் வந்தனர். ஃபிரெஞ்சு புரட்சி நடைபெற்ற சமயம், சந்தில் சிந்துபாட, கி.பி.1797-ல் சர் ரால்ஃப் அபர்கிரம்பி (Sir. Ralph Abercromby) தலைமையில் வந்தது படை. முதலில் டிரினிடாடை (Trinidad) வென்றுவிட்டு உற்சாகத்துடன் சேன் வானை முற்றுகையிட்ட ஆங்கிலப்படை, நாட்கள் செல்லச் செல்ல, சேன் வானைப் பிடிப்பது அவ்வளவு எளிதான விஷயமல்ல என்று தெரிந்து கொண்டார்கள். பொறுமையை இழந்த அபர்கிரம்பி ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றார்.
        அதன்பின் கி.பி.1815-ல் ஸ்பெயின் அரசரால் வெளியிடப்பட்ட அரசாணையின்படி (Royal Decree of  Graces) புலம் பெயர்ந்து வாழ விருப்பும் மக்களுக்காக போர்ட்டரிக்கோ திறந்து விடப்பட்டது. ஜனத்தொகையும் பெருகியது. ஆனாலும் தீவு ஸ்பெயின் அரசின் நேரடிக் கண்காணிப்பில், அரசரால் நியமிக்கப்படும் ஆளுநர்களால் தொடர்ந்து ஆளப்பட்டது.

அமெரிக்க ஆக்ரமிப்பு  (Spanish - American War)

        சுமார் நூறு வருடங்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லாமல், கோட்டைப் பாதுகாவலர் சற்றே ஓய்ந்திருக்கும் சமயத்தில் வந்தது அமெரிக்க கப்பற்படை. கி.பி.1896-ல் மே 8 ஆம் தேதி, யு எஸ் எஸ் டெட்ராய்ட் (USS  Detroit) யுஎஸ்எஸ் நியூயார்க், யுஎஸ் எஸ் ஆம்ஃபிடிரைட் (USS Amphitrite), யுஎஸ்எஸ் டெரர் (USS Terror), யுஎஸ்எஸ் மாண்ட்கோமரி (USS Mantgomery) யுஎஸ் எஸ் யேல் (USS  Yale) ஆகிய பல அமெரிக்கக் கப்பல்கள்,
Admiral William T.Samson

 அட்மிரல் வில்லியம் T. சாம்சன் (Admiral William T.Samson) அவர்கள் தலைமையில் சேன் வான் வளைகுடாவுக்கு வந்தன. அப்போது அங்கு வந்த ஸ்பானிய வாணிபக் கப்பலான "ரீட்டா"வை, யு.எஸ்எஸ் யேல் கைப்பற்றிக் கொண்டது. மே மாதம் 10-ம் தேதி கோட்டையை நெருங்கிய யு.எஸ்.எஸ் யேலை நோக்கி பீரங்கித்தாக்குதல் நடத்த ஆணையிட்டார் ,
Captain Angel Rivero Mendez
கேப்டன் ஏஞ்சல் ரிவரோ மெண்டெஸ் (Captain Angel Rivero Mendez) அவர்தான் சான் கிறிஸ்டோபல் கோட்டையின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டவர். அதற்காக ஸ்பானிய அரசு அவருக்கு "குருஸ் டி லா ஆர்டர்  டி மெரிட்டோ மிலிட்டரி" (The cross of the Order of the Military Merit) என்ற பட்டத்தைக் கொடுத்து கெளரவித்தது. கொஞ்சம் அவசரப்பட்டிருப்பாங்க போல இருக்கு. எதிரியோட பலம் தெரியாம விளையாடலாமா?
        ஆனால் போர்ட்டரிக்கோ மக்கள் ரிவரோவை திட்டி சபித்தனர். ஏனென்றால் அதன்பின் அமெரிக்க கப்பல்கள் தமது சக்தி வாய்ந்த குண்டுகள் மூலம் தீவைத் தாக்கி பெருத்த அழிவை ஏற்படுத்தினர். கடைசியில் ரிவரோ தலைகுனிந்து வணங்கி கோட்டையின் சாவிகளை அமெரிக்க கேப்டன் ஹென்ரியிடம் ஒப்படைத்தார்.
General Nelson A.Miles
 அதே ஆண்டு ஜூலை மாதம், தீவின் மறுபக்கம் வோனிகா என்ற இடத்தில் 3300 படை வீரர்களுடன்  கரையிறங்கிய அமெரிக்க ஜெனரல் நெல்சன் ஏ .மைல்ஸ் (General Nelson A.Miles) எதிர்ப்புகளை முறியடித்து பல இடங்களை கைப்பற்றினார். 1898, ஆகஸ்ட் 13-ல் அமெரிக்க அதிபர் வில்லியம் மெக்கின்லி (President William Mckinley) யும், ஸ்பானிஸ் அரசு சார்பாக, ஃபிரெஞ்ச் தூதர் யூல்ஸ் கேம்போன் (Jules Camber) அவர்களும் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். பின்னர் கையெழுத்தான "பாரிஸ் ஒப்பந்தம்" படி ஸ்பானிஸ் அரசர் போர்ட்டரிக்கோ தீவை அமெரிக்காவுக்கு முழுமையாக விட்டுக்கொடுத்தார்.
        அதன்பின் நடந்த முதலாம் மற்றும் இரண்டாம் உலகப்போரில் அமெரிக்காவின் முக்கிய தளமாக "போர்ட்டரிக்கோ" குறிப்பாக சேன் வான் விளங்கியது. போர்ட்டரிக்கோ மக்கள் அமெரிக்கப்படையில் சேர்ந்து அமெரிக்காவுக்காக போரிட்டனர். அன்றிலிருந்து இன்று வரை போர்ட்டரிக்கோ, அமெரிக்க பகுதியாக (Territory) விளங்கி வருகிறது. 
        கோட்டையின் பலபகுதிகளை சுற்றிப்பார்த்தேன். மேற்பகுதியில் இருந்த கலங்கரை விளக்கம், பீரங்கிகள், படை வீரர்கள் தங்கிய இடம், அவர்களின் தளவாடங்கள், டஞ்சன் என்று அழைக்கப்பட்ட சிறைப் பகுதிகள், பேட்டரி என்று சொல்லப்படும் வெடிமருந்துக்கிடங்குகள். ஆகியவற்றைப் பார்த்து முடித்தேன். வந்து பார்த்தால் என் மனைவி பிள்ளைகளைக் காணவில்லை.
        அப்புறம் தேடினால், குறும்படம் காண்பிக்கும் ஏசி அறையில் பலர் படத்தை உன்னிப்பாக பார்த்துக் கொண்டிருக்க இவர்கள் மூவரும் "ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து" தூங்கிக்கொண்டிருந்தனர். அவர்களை எழுப்பி, வாங்க சாப்பிடப் போகலாம் என்றேன். உடனே கிளம்பி  வெளியே வந்தோம். டிராலி ஒன்று கிளம்பும் நிலையில் இருக்க, ஓடிப்போய் ஏறி, கீழே வந்தோம்.

Add caption
        “தந்த்ரா”  உணவகத்திற்கு வந்து சேர்ந்தோம். மணி மதியம் 2.00 உள்ளே ஒருவரும் இல்லை. ஹலோ ஹலோ என இருமுறை கூவியபின், ஒரு போர்ட்டரிக்கோ பெண்ணொருத்தி அதீத புன்னகையுடன் வரவேற்றாள். அவள் குரலில் இருந்த ஆச்சரியத்தில் அவள் அங்கு யாரையும் எதிர்பார்க்கவில்லை போலும். ஐயையோ இந்திய உணவு என்று மறுபடியும் மாட்டிக்கொள்வோமோ என்று தயக்கமாக இருந்தது. சரி வந்தது வந்துவிட்டோம், செஃப் ரமேஷ் பிள்ளைக்கே வெளிச்சம் என்று நினைத்துக் கொண்டு மெனுவை மேய்ந்தோம். மெனுவைப் பார்த்து முடிவு செய்யமுடியாமல் அந்தப் பெண் தொண தொணத்துக் கொண்டிருந்தாள். ஒருவழியாக ஆர்டர் செய்து, சீக்கிரமாக கொண்டுவரச் சொன்னேன். அப்போதைக்கு சமோசாவை முதலில் கொண்டு வரச்சொன்னேன். போய் ஒரு 5 நிமிடத்தில் எல்லாவற்றையும் கொண்டு வந்து விட்டாள். “என்ன ஆச்சரியம்? என்ன ஒரு தந்த்ரா? என்ன ஒரு மந்த்ரா ?” என்று, என் மனைவி கேட்டாள். ஏனென்றால் அவள்தான் உலகத்திலேயே மிகவேகமாக சமையலை முடிப்பவள் என்று நினைத்துக் கொண்டிருந்தாள். இதுதான் இவர்கள் “தந்த்ரா”வா என்று நினைத்து சிரித்தபடி "ஃபிரிட்ஜிலிருந்து எடுத்து சூடுபண்ண எவ்வளவு நேரம் ஆகப்போகிறது", என்று மனைவியிடம் சொன்னேன். "ஐயையோ எல்லாமே பழசா" என்றாள். "பேசாம கடவுளுக்கு நன்றி சொல்லி சாப்பிடு " என்றேன்.

        "பசி வந்தால் பழசும் மறக்கும்" என மடமடவென்று சாப்பிட்டு முடித்தோம். கூட்டு போலிருந்த சாம்பார், சூடு பண்ணியதால் விறைத்துக் கொண்ட அரிசி, சிக்கன் ஃபிரை என்று பாதகமில்லை. “ரமேஷ் பிள்ளை எந்த ஊர்?”, என்று அந்த வெயிட்டரஸிடம் கேட்டேன். ஏதோ நேடு என்று வருமென்றாள். "தமிழ் நாடா?" என்று கேட்டபோது கண்களை விரித்து ஆமென்றாள். அட தமிழன்தானா, அவர் இருக்கிறரா? என்று கேட்டேன். வெளியே போயிருக்கிறார் என்றாள். ஆமாமாம் சூடு பண்ணிக் கொடுப்பதற்கு செஃப் எதற்கு என்று நினைத்துக் கொண்டேன்.
        பக்கத்தில் பார் பலநிற, வடிவங்களில் திரவங்கள் நிரம்ப யாருக்கோ காத்துக் கொண்டிருந்தது. வெயிட்ரஸ், பார்டென்டர் மற்றும் கிச்சன் எங்கு எல்லாமே இவள்தான் போலிருக்கிறது. உண்டு முடித்து வெளியே வந்து சில தப்படிகள் நடந்திருப்போம். அவள் வெளியே வந்து கூவிஅழைத்தாள். சமோசோ ரெடியாகிவிட்டதாம். அப்படைசர் என்றால், நம்மூரில் முதலில் கொடுப்பார்கள் என்றுதானே அர்த்தம். கைகளில் வாங்கிக் கொண்டு கிளம்பினோம்.
        பிள்ளைகள் பீச்சுக்கு போக வேண்டும் என்று சொல்ல, "பக்கத்தில் உள்ள கதீட்ரல் மற்றும் பார்த்துவிட்டுப் போகலாம்" என்றேன்.பக்கத்தில் போனவுடன், என் மனைவி ஒரே ஓட்டமாய் தெரு அதிர ஓடினாள். 

பயணம் தொடரும்
  

நண்பர்கள் அனைவருக்கும் என்னுடைய இனிய கிறிஸ்துமஸ் நல் வாழ்த்துக்கள்.பெத்தலையின்  பாலன், இறைமகன் இயேசு உங்கள் அனைவரையும் காத்து வழி நடத்துவாராக.
  

5 comments:

  1. உங்களுக்கும் , உங்கள் குடும்பத்தினர்க்கும் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள் அண்ணே ..!

    ReplyDelete
  2. நல்ல பகிர்வு......

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்....

    ReplyDelete
  3. தீவு அமெரிக்கர்கள் வசமான கதையை
    சொல்லிச் சென்றவிதம் அருமை
    அதிலும் ஒருமுறை தோற்றாலே
    விடமாட்டார்கள் என எழுத்தில்
    அழுத்தம் கொடுத்திருந்ததை மிகவும் இரசித்தேன்
    வாழ்த்துக்கள்டன்...

    ReplyDelete